Lekha Books

A+ A A-

தோழி - Page 5

thozhi

அப்போது பிரபா சொன்னாள்: "என் உடல்நிலை சரியான பிறகு எனக்கு ஒரு ஆர்மோனியம் வாங்கித் தர்றதா அப்பா சொல்லியிருக்காரு. ஆமா... சினேகம் டீச்சருக்கு ஆர்மோனியம் வாசிக்கத் தெரியுமா?"

"அது எனக்குத் தெரியாது. ஆனா, அவங்களுக்கு நல்லா பாடத்தெரியும்."

பிரபா காளியின் தொடை மீது தன்னுடைய கை விரல்களால் ஆர்மோனியம் வாசிப்பதைப் போல் சில நிமிடங்கள் நடித்தாள். கோவிந்தமேனன் அறைக்குள் வந்தார். தன் மகளின் முகத்தில் இருந்த பிரகாசத்தைப் பார்த்து, அவர் சந்தோஷப்பட்டார்.

5

பிரபாவிற்கு காய்ச்சல் வந்து இரண்டு மாதங்களாகி விட்டன. அவள் மிகவும் தளர்ந்து, வெளிறிப் போய் காணப்பட்டாள்.

அந்த வீடும், சுற்றுப்புறமும் மிகவும் அமைதியாக இருந்தன. அப்படி அமைதியாக இருப்பதைத்தான் அவள் விரும்பினாள். அவள் பக்கத்திலிருக்கும் ஜன்னல் வழியாக பரந்து கிடக்கும் ஆகாயத்தையே நீண்ட நேரம் பார்த்தவாறு படுத்திருப்பாள். அந்த நீலக் கடலின் மீன்களைப் போல அவளின் கண்கள் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும். உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் ஒரு பருந்தும், அதற்கும் உயரத்தில் அப்பருந்தை மூட முயற்சித்துக் கொண்டிருக்கும் மேகக்கூட்டமும் அவளின் தனிமையைச் சில வேளைகளில் அபகரிக்க முயற்சி செய்யும். சாயங்கால நேரத்தில், ஆகாயம் சிவப்பு நிறத்தில் காணப்படுவதையும் அந்த மேற்கு திசையில் இருக்கும் மலைக்குப் பின்னால் ஒரு பெரிய பொன் நாணயத்தைப் போல சூரியன் கீழே இறங்கி சிறிது சிறிதாக மறைவதையும் கண் கொட்டாது ஆர்வத்துடன் பார்த்தவாறு அவள் படுக்கையில் படுத்திருப்பாள். திடீரென்று மாலை நேரத்து மேகக் கூட்டம் பொன்னால் ஆன ரதங்களாக மாறி வானத்தையே அழகு மயமாக்கிக் கொண்டிருக்கும். அவள் அந்த உயரத்தை நோக்கி சிறிது சிறிதாக உயர்ந்து கொண்டே போவாள். அதைத் தொடர்ந்து அந்த நெல் வயல்களும், அவற்றுக்கு மத்தியில் இருக்கும் அவள் வீடும், அவள் தந்தையும், காளியும், பூமியும் கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு தூரத்தில் போய்க் கொண்டிருப்பார்கள். தான் பூமியை விட்டு விலகி ஏதோ ஒரு வேற்று உலகத்தில் இருப்பதாக அப்போது அவளுக்குத் தெரியவரும். இனம் தெரியாத ஒருவகை பயமும் தனிமையுணர்வும் அவளை வந்து ஆக்கிரமிக்கத் தொடங்கும். ஒருவகை மறதி, தொடர்ந்து வரும் உறக்கம்- இரண்டும் சேர்ந்து வந்து அவளை இறுக அணைத்துக் கொள்ளும். சிரிப்பதற்கோ, அழுவதற்கோ பேசுவதற்கோ முடியாமல் ஒரு வகையான மரத்துப் போன உணர்வுடன் அவள் இருட்டையே பார்த்துக் கொண்டிருப்பாள்.

தன் மகளின் முகத்தில் தெரியும் உணர்ச்சி மாற்றங்களைப் பார்த்தவாறு அமர்ந்திருக்கும் கோவிந்தமேனன் பதைபதைப்பு மேலோங்க அவளை மெதுவாக குலுக்கி அழைப்பார். அப்போது அதே உணர்ச்சிப் பிரவாகத்துடன் அவள் தன் தந்தையின் முகத்தையே வெறித்துப் பார்ப்பாள்.

அன்று காலையில் பிரபா தன் தந்தையிடம் சொன்னாள்: "என் நகைகளையெல்லாம் எனக்குக் கொண்டு வந்து போடுங்க."

கோவிந்தமேனன் பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்த அவளின் நகைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்து அவளுக்கு அணிவித்தார். சிறிதுநேரம் சென்றதும் அவள் சொன்னாள்: "அப்பா என்னோட ஆடைகளையெல்லாம் இங்கே கொண்டு வாங்க."

பிரபாவின் குரலில் எப்போதுமில்லாத அளவிற்கு ஒரு கட்டளைத்தன்மை இருந்தது. அவள் முகத்தில் ஒரு வித கம்பீரம் அப்போது தெரிந்தது. அவள் ஆடைகள் எல்லாவற்றையும் மேஜை மேல் கொண்டு வந்து வைத்த கோவிந்தமேனன் அவளைப் பார்த்துக் கேட்டார்: "மகளே, எதுக்கு இந்த ஆடைகளை இங்கே கொண்டு வரச் சொன்னே?"

அதற்கு பிரபா எந்த பதிலும் கூறவில்லை. சிறிது நேரம் சென்றதும் அவள் சொன்னாள்: "அப்பா, எனக்கு பசிக்குது..."

"கஞ்சி கொண்டு வரட்டுமா?"

"ம்..."

மாதவியம்மா கஞ்சி கொண்டு வந்தாள். அவள் படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்து வெள்ளை பீங்கான் பாத்திரத்தில் இருந்த கஞ்சி முழுவதையும் குடித்தாள்.

"அம்மா நார்த்தங்காய் இல்லியா?"

மாதவியம்மா நார்த்தங்காய் ஊறுகாயைக் கொண்டு வந்து அவளின் வாயில் தடவினாள்.

"அப்பா, என்னை விட்டு நீங்க போகாதீங்க."

"மகளே, நான் வேற எங்கேயும் போகல."

பன்னிரண்டு மணிக்கு ஒரு டாக்டர் வந்து அவளைப் பார்த்தார். காய்ச்சல் இப்போது பரவாயில்லை என்று கோவிந்தமேனன் மன மகிழச்சியுடன் டாக்டரைப் பார்த்து சொன்னார். டாக்டரும் முன்பிருந்ததைவிட இப்போது பிரபாவின் நிலை பரவாயில்லை என்று சொன்னார். மாதவியம்மா அவ்வப்போது மிகுந்த பிரியத்துடன் அவளின் அருகில் வந்து போய்க் கொண்டிருந்தாள்.

பிற்பகல் மூன்று மணி ஆனது. பிரபா மெதுவான குரலில் சொன்னாள்: "காளியை எனக்கு பார்க்கணும் போல இருக்கு."

அடுத்த நிமிடம் காளியை அழைத்து வரும் படி ஆளை அனுப்பினார் கோவிந்தமேனன். உடல் முழுவதும் நகைகள் அணிந்த கோலத்துடன் மெத்தையில் படுத்திருந்த பிரபாவைப் பார்த்து ஒரு மாதிரியாக ஆகிவிட்டாள் காளி. எப்போதுமிருக்கும் புன்சிரிப்புடன் பிரபா தன் தோழியை அப்போது வரவேற்கவில்லை.

"காளி, இங்கே வந்து உட்காரு."- பிரபா அவளைத் தன் படுக்கையில் வந்து அமரும்படி அழைத்தாள்.

"காளி, இனிமேல் நீ கண்ணாடி வளையல்களை அணியக் கூடாது. இந்தா, என்னோட தங்க வளையல்கள்."

பிரபா தன்னுடைய கைகளில் இருந்த தங்க வளையல்களைக் கழற்றி காளியின் மெலிந்து போன கைகளில் அவற்றை அணிவித்தாள்.

காளி ஒருவித பயத்துடன் கோவிந்தமேனனின் முகத்தையே பார்த்தாள்.

"நீ அப்பா முகத்தைப் பார்க்க வேண்டாம். இந்த நகைகள் எல்லாமே எனக்குச் சொந்தம். அப்பா ஒண்ணும் சொல்லமாட்டாரு"- தன்னுடைய கழுத்தில் இருந்த தங்கத்தால் ஆன மாலையைக் கழற்றி காளியின் கழுத்தில் அணிவித்தவாறு பிரபா சொன்னாள். தொடர்ந்து தன்னுடைய நகைகள் ஒவ்வொன்றையும் கழற்றி அவள் காளிக்கு அணிவித்தாள். காளி, கோவிலில் இருக்கும் சிலையைப் போல நின்றிருந்தாள்.

"காளி, எனக்கு இந்த நகைகள் எதுவும் வேண்டாம். நான்தான் போகப் போகிறேனே. இந்தா... என்னோட ஆடைகள். இதையும் எடுத்துக்கோ."

பிரபா தன்னுடைய ஆடைகள் அனைத்தையும் எடுத்தாள். காளியின் கைகளில் அவை முழுவதையும் தந்தாள்.

கோவிந்தமேனன் நடக்கும் ஒவ்வொன்றையும் பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.

அடுத்த நிமிடம் பிரபா மேஜையைத் திறந்து புத்தகங்களையும் தன்னுடைய அட்டைப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு வரும்படி தந்தையிடம் சொன்னாள்.

அந்த அருமையான வாசனை வந்து கொண்டிருந்த புதிய புத்தகங்கள் எல்லாவற்றையும் அவள் காளிக்குப் பரிசாகத் தந்தாள். தொடர்ந்து அவள் அந்த அட்டைப் பெட்டியைக் கையிலெடுத்தாள். அந்தச் சிறுமி தன் வாழ்க்கையில் மிகவும் மதித்த பொருட்கள் அந்தப் பெட்டிக்குள் இருந்தன.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel