Lekha Books

A+ A A-

தோழி - Page 2

thozhi

எதைக் கேட்டாலும் கள்ளங்கபடமில்லாமல் சிரிப்பது அவளின் இயல்பு. அப்படிச் சிரிக்கும் போது அவளின் கண்கள் இலேசாகச் சுருங்கும். கன்னங்களில் குழி விழும். பவளத்தைப் போல அப்போது அவள் முகம் சிவந்து காணப்படும். குறும்புத்தனங்கள் எதுவும் செய்யத் தெரியாது என்றாலும், சிறிய அளவிலாவது அவற்றில் எதையாவது காட்ட வேண்டும் என்று மனதிற்குள் ஆசைப்படக் கூடியவள் பிரபா. சிறு வருத்தம், ஏற்பட்டாலும் கூட, அவளின் சிறிய கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடும். எவ்வளவு பெரிய விஷயத்தையும் ஒரு நொடியில் மறந்து விடக் கூடிய மந்த புத்திக்குச் சொந்தக்காரி அவள். அன்பு செலுத்துவது என்ற ஒன்றைத் தவிர பிரபாவிற்கு வேறு எதுவுமே தெரியாது.

அவளின் அடர்ந்து காணப்படும் தலைமுடியை சுதந்திரமாக அவிழ்த்துவிட்டால், அவளையே முழுமையாக மூடிவிடக் கூடிய அளவிற்கு அது நீளமாக இருந்தது. சாதாரணமாக அவளின் தலைமுடி இளம் நீல நிறத்தில்தான் இருந்தது. எண்ணெய் தேய்க்கப்பட்டு விட்டால், அந்தக் கூந்தலே கறுப்பாக மாறிவிடும். எண்ணெய் இல்லாமல் இருக்கும்போது பொன் துகள்களைச் சிதறவிட்டதைப் போல் ஒருவித மினுமினுப்பு அந்தக் கூந்தலில் இருந்து கொண்டே இருக்கும். தன் கூந்தலை முழுமையாக அவிழ்த்துவிட்டவாறு அவள் ஓடி விளையாடிக் கொண்டிருப்பதை யாராவது பார்த்தார்களேயானால், அவளை மனிதக் குழந்தையாக எண்ண மாட்டார்கள். சிவப்பு வண்ணத்தில் பட்டுப் பாவாடையை அணிந்து இளம் வெயிலில் வயல் வரப்பில் நடந்து போகும் அந்தச் சிறுமியைப் பார்க்கும் மனிதர்கள் தங்களுக்குள் கூறிக் கொள்வார்கள். "இந்தப் பொண்ணு தங்க விக்கிரகம் மாதிரியே இருக்கு. தேவகியம்மா என்ன அழகான ஒரு பொண்ணைப் பெத்துருக்காங்க" என்று.

பிரபாவின் தந்தை கோவிந்தமேனன் ஒரு பென்ஷன் பதிவாளர். சமுதாயத்தில் அவ்வப்போது உண்டாகும் மாறுதல்களுக்கு தான் எதிரான மனிதரில்லை என்று அடிக்கடி அவர் கூறிக் கொள்வதுண்டு. ஆனால், தன்னுடைய கடவுள் பக்தியையும், ஜாதி வித்தியாசம் பார்ப்பதையும், மாமூல் வாங்குவதில் இருக்கும் விருப்பத்தையும் அவர் கைவிட எப்போதுமே தயாராக இருந்ததில்லை. சமுதாய மாற்றத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருப்பவர்களிடம் அவருக்கு எப்போதுமே ஒருவித மதிப்பு இருந்தது. "நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனால், இது என்னோட நம்பிக்கை" என்பார் அவர்.

இப்படிப்பட்ட குணத்தைக் கொண்டவர்களைச் சிறிது கூட துன்பப்படுத்தாமல், அமைதியாக மரணத்தைத் தழுவ விடுவதுதான் சரியான செயல் என்று பொதுவாக சிந்திக்கத் தெரிந்தவர்கள் நினைத்தார்கள்.

பிரபாவின் தாய் தேவகியம்மா, பிரபாவிற்கு ஐந்து வயது நடக்கும் போது இறந்து போனாள். கோவிந்தமேனன் தன்னுடைய வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு எதுவென்றால் தன்னுடைய வயதான காலத்தில் ஒரு இளம் பெண்ணை இரண்டாம் தாரமாக அவர் திருமணம் செய்து கொண்டதுதான். அவரின் இரண்டாவது மனைவி மாதவியம்மாவிற்கு இருபது வயதுதான். பிரபா மாதவியம்மாவை 'அம்மா' என்றுதான் அழைப்பாள்.

3

ஜூன் மாத ஆரம்பத்தில் மழைக்காலம் ஆரம்பித்தது.

பிரபாவும் காளியும் நான்காம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஐந்தாம் வகுப்பிற்குள் நுழைந்தார்கள்.

பள்ளிக் கூடத்தில் புது வருடத்தின் தொடக்கம். பிள்ளைகள் மகிழ்ச்சியுடனும் மனதில் உற்சாகத்துடனும் அதை வரவேற்றார்கள். புதிய வகுப்பு, புதிய ஆசிரியர், புதிய புத்தகங்கள், புதிய பாட விஷயங்கள்- மொத்தத்தில் எல்லாமே மகிழ்ச்சி உண்டாக்கக் கூடிய அம்சங்கள். ஒரு மாறுதலின் ஆரம்பம்; ஒரு புதுமையின் இனிமை.

ஆசிரியர் மற்ற பிள்ளைகளுக்குக் கொடுத்ததைப் போல பிரபாவிடமும் புதிய புத்தகங்களுக்கான ஒரு பட்டியலைத் தந்தார்.

மறுநாள் காலையில் அவள் புதிய புத்தகங்களின் ஒரு கட்டைத் தூக்கியவாறு காளியின் குடிசையைத் தேடிச் சென்றாள்.

"இந்தப் புத்தகங்களுக்கு நல்லா அட்டை போட்டு வெளியே ‘ஜெ.பிரபாவதி. ஐந்தாம் வகுப்பு' ன்னு அச்சடிச்சது மாதிரி எழுதித் தா, காளி" என்று அவள் தன் தோழியிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.

பிரபாவின் புதிய புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பிரித்துப் பார்த்து அவற்றை முகர்ந்து பார்த்த காளி சொன்னாள்: "ஹா...! என்ன மணம்!"

புத்தகத்தின் தாள்களில் இருந்த இனிய வாசனையை முகர்ந்து இன்பம் கண்ட காளி ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டாள். அவளால் இந்த மாதிரி புதிய புத்தங்களை வாங்க முடியாது. ஏற்கனவே ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்பிற்குப் போன ஒரு மாணவனின் பழைய புத்தகங்களை அவள் எட்டணா கொடுத்து வாங்கி வைத்திருந்தாள். அந்தப் பழைய புத்தகங்களில் மனதைக் குமட்டக்கூடிய வாசனைதான் இருந்தது.

குடிசையின் வாசலில் பாயை விரித்துப் போட்டு உட்கார்ந்த காளி தன் கால்களை நீட்டி வைத்துக் கொண்டு புத்தகங்களுக்கு அட்டை போட ஆரம்பித்தாள். குடிசையின் மேற்கூரை நிழல் அந்தப் பாயில் விழுந்து கருப்புப் பட்டை ஒன்றை உண்டாக்கியது.

காளி பிரபாவின் புத்தகங்கள் எல்லாவற்றுக்கும் அட்டை போட்டு முடித்து, வெளியே அழகாக அவள் பெயரை எழுதினாள். அதற்கு பரிசாக பிரபா அவளுக்கு இரண்டு மயிலிறகுகளைத் தந்தாள். "அடுத்த வருஷம் வர்றப்போ இது பெருகி நூறு இறகுகளா ஆகணும்" என்ற தன்னுடைய விருப்பத்தையும் தன்னுடைய தோழியிடம் அவள் சொன்னாள். மயிலிறகு புத்தகத்தில் இருக்கும் போது பெருகி எண்ணிக்கையில் அதிகமாகும் என்று இந்தச் சிறுமிகள் உண்மையாகவே நம்பினார்கள்.

ஆனால், காளியைப் பொறுத்தவரை வாழ்க்கை நிலையில் தான் பிரபாவை விட எவ்வளவோ மடங்கு கீழே இருப்பதை அவள் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறாள். பிரபாவிற்கு அவளின் தந்தை ஒரு பட்டுக்குடை வாங்கிக் கொடுத்தார். ஆனால், காளியோ கால் ஒடிந்த ஓலைக்குடையைக் கையிலெடுத்துக் கொண்டு பள்ளிக்கூடம் போக வேண்டி இருந்தது. பிரபா புதிய சில்க் ஆடை அணிந்திருந்தாள். காளியோ முழங்காலை மறைக்காத ஒரு சிறு முண்டையும் புள்ளிபோட்ட ஒரு ப்ளவ்ஸையும் அணிந்திருந்தாள். பிரபாவின் கழுத்திலும் கையிலும் காதிலும் கல் வைத்த பொன் நகைகள் அலங்கரித்தன. காளியிடம் சாதாரண கண்ணாடி வளையல்கள் மட்டுமே இருந்தன. நகைகளையும் விலையுயர்ந்த ஆடைகளையும் அணிந்து பள்ளிக்கு வரும் பிரபாவைப் பார்த்து 'பிரபா உண்மையிலேயே கொடுத்து வச்சவ!' என்று காளி தனக்குள் சொல்லிக் கொள்வாள்.

ஆனால் பிரபாவிற்கு தான் அணிந்திருக்கும் பொன்னால் ஆன நகைகள் மீதோ மற்ற அலங்காரப் பொருட்கள் மீதோ சிறிதுகூட விருப்பமில்லை. தன்னுடைய தாய்க்கு அவள் பயந்தாள். இல்லாவிட்டால் தன்னிடம் இருக்கும் நகைகளை எப்போதோ கழற்றி காளியின் கையில் அவள் தந்திருப்பாள். பிரபாவிற்கு மலர்கள் கிடைத்தால் போதும்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel