Lekha Books

A+ A A-

தோழி - Page 4

thozhi

ஒருநாள் தன் தாய் அருகில் இல்லாத நேரம் பார்த்து அவள் தன் தந்தையின் முகத்தையே பார்த்தாள். அவள் என்னவோ சொல்ல விருப்பப்படுவதைப் போல் இருந்தது.

"பிரபா, உனக்கு என்ன வேணும்?"- தன் மகளின் நெற்றியைத் தடவியவாறு கோவிந்தமேனன் கேட்டார்.

"அப்பா, எனக்கு காளியைப் பார்க்கணும் போல இருக்கு. அவளை நான் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆயிடுச்சு."

அதைக் கேட்டு என்னவோ சிந்தனையில் ஆழ்ந்தார் கோவிந்தமேனன். ஒரு புலைய ஜாதியைச் சேர்ந்த பெண் தன்னுடைய வீட்டிற்குள் வருவதா என்று அவர் யோசிக்கலானார்.

கடைசியில் வெற்றி பெற்றதென்னவோ மகள் பாசம்தான். கோவிந்தமேனன் வேலைக்காரனை அழைத்துச் சொன்னார்: "நீ உடனடியா பிரபா படிக்குற பள்ளிக்கூடத்துக்குப் போ. அங்கே கண்ணன்குட்டியோட மகள் காளி இருப்பா. பள்ளிக்கூடம் முடிஞ்சதும் இங்கே அவளை வரச் சொல்லிட்டு வா."

அன்று மாலை நேரத்தில் காளி வந்து அந்த வீட்டிற்கு வெளியே நின்றாள். அருகில் யாரும் இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. சிறிது நேரம் சென்றதும் மாதவியம்மா பசுவிடம் பால் கறப்பதற்காக தொழுவம் இருக்கும் பக்கம் வந்தாள்.

காளி ஒருவித பதைபதைப்பு மனதில் தோன்ற அவளைப் பார்த்து கேட்டாள்: "பிரபாவோட உடம்பு இப்போ எப்படி இருக்கு?"

"பிரபாவா?"- மாதவியம்மா காளியை எரித்துவிடுவதைப் போல பார்த்தாள். தொடர்ந்து அவள் சொன்னாள்: "என்னடி சொன்ன? பிரபாவா? இனிமேல் அந்தமாதிரி பேர் சொல்லி கூப்பிட்டே அவ்வளவுதான். நீ ஒரு தாழ்ந்த ஜாதி பொண்ணுதானடி? இத்தினியூண்டு இருந்துக்கிட்டு நீ என்ன திமிர்தனமா பேசற? உடனே இந்த இடத்தை விட்டு போறியா இல்லியா?"

இப்படி சில கடும் சொற்கள் தன் மீது வந்து விழும் என்பதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காத காளி மனக்கவலையுடன் அதற்கு மேலும் அங்கு நின்று கொண்டிருக்காமல், அந்த நிமிடத்திலேயே அந்த இடத்தை விட்டு தன் குடிசையை நோக்கி நடந்தாள்.

அன்று சாயங்காலம் காளியைப் பார்க்க முடியவில்லையே என்றெண்ணி பிரபா மனதிற்குள் மிகவும் கவலைப்பட்டாள். அடுத்த நாள் காளியைக் கையோடு அழைத்து வரும்படி வேலைக்காரனை அனுப்பி வைத்தார் கோவிந்தமேனன்.

காளி வேலைக்காரனுடன் வந்து வாசலில் நின்றிருந்தாள். சலவைக்கல் பதிக்கப்பட்ட அந்த வீட்டிற்குள் நுழைவதற்கான மன தைரியம் அவளுக்கு இல்லை.

வேலைக்காரன் அவளின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டு போனான்.

அவள் வீட்டிற்குள் நுழைந்து நான்கு பக்கங்களிலும் கண்களால் பேந்தப் பேந்த விழித்தவாறு பார்த்தாள்.

கோவிந்தமேனன் அவளை உள்ளேயிருந்தவாறு அழைத்தார்.

சமையலறையின் ஜன்னல் வழியாக நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருந்த மாதவியம்மா தனக்குள் முணுமுணுத்தாள். "காய்ச்சல் வந்து கண்டபடி உளறிக்கிட்டு இருக்குற ஒரு சின்னப் பொண்ணு சொல்றான்றதுக்காக இந்த மனுசன் என்ன காரியமெல்லாம் செஞ்சிக்கிட்டு இருக்காரு. ஒரு தாழ்ந்த ஜாதிப் பொண்ணை வீட்டுக்குள்ள வர வைக்குறதா? என்ன இது ஒரே பைத்தியக்காரத்தனமா இருக்கு."

4

ந்த இரண்டு இளம் தோழிகளுக்கிடையே உண்டான சந்திப்பு மனதைத் தொடக்கூடிய ஒன்றாக இருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபா முதல் தடவையாக சிறிது சிரித்தாள். அவள் காளிக்கு நேராக தன் கையை நீட்டினாள்.

ஆனால், காளியிடம் குடிகொண்டிருந்த பயமும், பதைபதைப்பும் இன்னும் அவளை விட்டு போகாமலே இருந்தன. அவள் ஒருவித கலக்கத்துடன் தன்னைச் சுற்றிப் பார்த்தாள்.

பிரபா அவளின் கையைப் பற்றினாள். மெதுவாக அவளின் கையைத் தொட்டு அவளை படுக்கைமேல் அமரும்படி சொன்னாள். காளி அவள் சொன்னபடி நடக்கவில்லை. மாறாக அவள் சொன்னாள்: "வேண்டாம்... உங்க அம்மா பார்த்தா..."

"அம்மா இங்கே வரமாட்டாங்க. உட்காரு."

கோவிந்தமேனன் அந்தத் தோழிகளைத் தனியாக இருக்கும்படி செய்துவிட்டு வெளியே போனார். பிரபா காளியின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு கேட்டாள்: "காளி... நீ என்னை ஒரேயடியா மறந்துட்ட இல்ல?"

அதைச் சொல்லும்போது பிரபாவின் கண்கள் குளமாகி விட்டன. காளிக்கும் அழுகை வரும்போல் இருந்தது. அவள் சொன்னாள்: "பிரபா, நான் உங்களை எப்பவும் நினைச்சுக்கிட்டே தான் இருப்பேன். நான் நேற்று சாயங்காலம் இங்கே வந்தேன். உங்க அம்மா என்னை வாய்க்கு வந்தபடி திட்டிட்டாங்க."

இரண்டு நிமிடங்களில் அவர்கள் இருவரும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டார்கள். காளி நகைச்சுவையாக பல விஷயங்களைச் சொல்ல, அதைக் கேட்டு பிரபா குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற எத்தனையோ சம்பவங்களையும், ஊருக்குள் நடந்த பல நிகழ்ச்சிகளையும் நேரம் போவதே தெரியாமல் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். வகுப்பில் பாடமெடுப்பதற்காக புதிதாக வந்திருக்கும் ஒரு சாய்வான பார்வையைக் கொண்ட ஆசிரியை எப்படி பாடம் சொல்லித் தருவாள் என்பதை காளி நடித்துக் காட்டியதைப் பார்த்த பிரபா அடக்க முடியாமல் சிரித்தாள். காளி சொன்னாள்: "பொம்பளைப் பசங்களுக்கு தையல் பாடம் கத்துத் தர்றதுக்கு சினேகம்னு ஒரு புது டீச்சர் வந்திருக்காங்க. அந்த டீச்சருக்கு எங்க மேல எவ்வளவு பிரியம் தெரியுமா?"

சினேகம் டீச்சரின் வயது என்ன? அவள் என்ன நிறம் அவள் தடியாக இருப்பாளா இல்லாவிட்டால் ஒல்லியாக இருப்பாளா, எந்த மாதிரியான புடவையை அவள் கட்டியிருப்பாள் போன்ற பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தாள் பிரபா.

காளி எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினாள். சினேகம் டீச்சர் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு வரும்போது ஒவ்வொரு வண்ணத்தில் புடவை கட்டிக் கொண்டு வருவாள் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் குலுங்கிக் குலுங்கி சிரித்தவாறு பிரபா காளியைப் பார்த்து கேட்டாள்: "டீச்சர் பசங்களுக்கு புடவை கட்டுறதையும் சொல்லித் தர்றாங்களோ என்னவோ?"

வகுப்பில் அச்சுதன் தலையில் கல் விழுந்தது, நாராயணன் மாஸ்டரின் கண் புருவத்துக்கு அருகில் ஒரு பரு வந்தது- இவையெல்லாம் பொய் சொன்னதற்காக வந்திருக்கும் என்று சொன்னாள் பிரபா. கமலாவும் ஜானுவும் சண்டை போட்டுக் கொண்டது, சாரதாவின் அக்கா திருமணம், வகுப்பிற்குள் ஒரு பைத்தியம் பிடித்த நாய் நுழைந்தது, கேளப்பன் அதை அடித்துக் கொன்றது...

இப்படிப் பல வகைப்பட்ட விஷயங்களையும் பேசி முடித்த பிறகு காளி வகுப்பில் சொல்லித்தந்த புதிய கவிதையை பிரபாவிடம் சொன்னாள்.

பிரபா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு சொன்னாள்: "கடவுளே, நான் இதையெல்லாம் எப்போ படிக்கிறது?"

காளி பிரபாவைத் தேற்றும் விதத்தில் சொன்னாள்: "ரெண்டு நாட்கள்ல நிச்சயமா உங்க உடல் நிலை தேறிடும்."

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel