Lekha Books

A+ A A-

பைத்தியக்காரன் - Page 9

paithiyakkaraan

கடற்கரையில்

நானும் என் ஆத்மாவும் சேர்ந்து பரந்து கிடக்கும் கடலில் குளிப்பதற்காகப் புறப்பட்டோம். கடற்கரையை அடைந்த நாங்கள் யாரும் இல்லாமல், மிகவும் அமைதியாக இருந்த ஒரு இடத்தைத் தேடிச் சென்றோம். ஒரு மனிதன் பாறையில் அமர்ந்து கொண்டு உப்பை எடுத்து நீருக்குள் எறிந்து கொண்டிருந்தான்.

‘இந்த மனிதன் மிகவும் கவலையில் இருப்பவன்.’ என் ஆத்மா சொன்னது: ‘நாம் இங்கு குளிக்க வேண்டாம். வாருங்கள். இங்கிருந்து கிளம்பலாம்.’

நாங்கள் இன்னொரு இடத்திற்குச் சென்றோம். அங்கு ஒரு மனிதன் கருங்கல் பாறையில் ஏறி நின்றிருந்தான். அவன் தன் கையிலிருந்த பாத்திரத்திலிருந்து சர்க்கரையை எடுத்து கடலுக்குள் எறிந்து கொண்டிருந்தான்.

‘இவன் ஒரு கற்பனைவாதி’ - என் ஆத்மா சொன்னது: ‘நம்முடைய நிர்வாண உடம்புகளை இவனிடம் காட்ட வேண்டாம்.’

மீண்டும் நாங்கள் நடந்தோம். கடற்கரையில், அங்கு ஒரு மனிதன் நின்றிருந்தான். அவன் இறந்துபோன மீன்களை இரக்கத்துடன் பொறுக்கி கடலுக்குள் எறிந்து கொண்டிருந்தான்.

‘இவனுக்கு முன்பும் குளிக்க முடியாது’ - என் ஆத்மா சொன்னது: ‘இவன் உலக பிணைப்பும் இரக்க குணமும் கொண்டவன்.’

நாங்கள் முன்னோக்கி மீண்டும் நடந்தோம். அங்கு மணலில் ஒரு மனிதன் படம் வரைந்து கொண்டிருந்தான். கடலின் அலைகள் அதை அழித்துக் கொண்டிருந்தன. எனினும், அவன் தன் வேலையில் மூழ்கிப் போயிருந்தான்.

‘இவன் ஒரு ரகசிய மனிதன்’ - என் ஆத்மா சொன்னது: ‘இவன் என் நிர்வாண உடலை எந்தச் சமயத்திலும் பார்க்கக் கூடாது.’

நாங்கள் அதற்குப் பின்பும் முன்னோக்கிச் சென்றோம். திடீரென்று யாரோ கூறும் சத்தம் கேட்டது: ‘இது ஆழமான கடல். பரந்து கிடக்கும் கடல்.’

நாங்கள் குரல் கேட்ட இடத்திற்குச் சென்றபோது, ஒரு மனிதன் கடலுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்றவாறு ஒரு முத்துச்சிப்பியை எடுத்து தன் காதோடு சேர்த்து வைத்துக் கொண்டு அதன் ஓசையைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

‘முன்னால் நட’ என் ஆத்மா சொன்னது.... ‘இந்த மனிதன் ஒரு யதார்த்தபவாதி. இவன் எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல், அதற்கு முதுகைக் காட்டிக் கொண்டு அதன் ஏதாவதொரு பகுதியை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பவன்.

நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அப்போது சிறிது தூரத்தில் ஒரு மனிதன் பாறைகளுக்கு மத்தியில் இருந்த மணலில் தலையை வைத்துக் கொண்டிருந்தான்.’

‘சந்தேகப்பட வேண்டாம்’- நான் ஆத்மாவிடம் சொன்னேன்:

‘நாம் இங்கு குளிக்கலாம். இந்த மனிதன் நம்மைப் பார்க்க மாட்டான்.’

‘இல்லை...’ ஆத்மா சொன்னது: ‘இவன் மற்ற எல்லாரையும்விட ஆபத்தானவன்; தியாகியும் கூட.’

என் ஆத்மாவின் முகத்தில் வெறுப்பின் நிழல் படர்ந்தது. அது சாந்தமான குரலில் சொன்னது: ‘நாம் இங்கிருந்து கிளம்பலாம். நிம்மதியாக குளிப்பதற்கு ஏற்ற ஆள் அரவமற்ற ஒரு இடம் இங்கு இல்லை. நான் என்னுடைய பொன் நிற தலைமுடிகளை காற்றில் பறக்க விடவில்லை. நான் என்னுடைய மார்பை காற்றுக்குத் திறந்து விடவில்லை. என் நிர்வாணத்தை ஒளிரச் செய்ய வெளிச்சத்தை அனுமதிக்க வில்லை.’

நாங்கள் அந்தப் பெரிய கடலை விட்டு வேறொரு பரந்த கடலைத் தேடி நடந்தோம்.

தூக்கு மரம்

‘என்னைத் தூக்கில் போடுங்கள்’ - நான் மக்களைப் பார்த்துச் சொன்னேன்.

அவர்கள் கேட்டார்கள்: ‘நாங்கள் எதற்கு உன்னுடைய கொலைக் குற்றத்தைத் தலையில் போட்டுக் கொள்ள வேண்டும்?’

நான் அதற்குப் பதில் சொன்னேன்: ‘பைத்தியக்காரர்களைத் தூக்கில் போடாமல் உலகத்திற்கு எப்படி வளர்ச்சி உண்டாகும்?’

அவர்கள் நான் கூறியபடி என்னை தூக்கு மரத்தில் ஏற்றினார்கள். எனக்கு அதன் மூலம் மரணம் கிடைத்தது.

பூமிக்கும் வானத்திற்கும் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த என்னைப் பார்ப்பதற்காக அவர்கள் தலையை உயர்த்தினார்கள். அவர்கள் அப்படி தலையை உயர்த்தி பெரியவர்கள் ஆனார்கள். இதற்கு முன்பு அவர்கள் தலையை உயர்த்தியதை நான் அறிந்ததில்லை.

அவர்கள் என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோது ஒருவன் கேட்டான்: ‘எந்த பாவத்திற்காக நீங்கள் பிராயச்சித்தம் செய்கிறீர்கள்?’

மற்றொருவன் கேட்டான்: ‘இப்படி தூக்கில் தொங்கியதன் நோக்கம் என்ன?’

மற்றொருவன் கேட்டான்: ‘நீங்கள் இறந்ததன் மூலம் உலகத்தில் புகழ் பெற்ற மனிதனாக ஆகலாம் என்று நினைத்தீர்களா?’

நான்காவது மனிதன் சொன்னான்: ‘பாருங்கள்... என்ன புன்சிரிப்பு! இவ்வளவு பெரிய தண்டனைக்கு யாராவது மன்னிப்பு கொடுப்பார்களா?’

நான் எல்லோருக்குமாக பதில் சொன்னேன்: ‘நான் புன்னனை புரிவதாக நீங்கள் புரிந்து கொண்டால் போதும். குற்றத்திற்காகவோ, விடுதலைக்காகவோ நான் எந்தவொரு பிராயச்சித்தமும் செய்யவில்லை. என்னிடமிருந்து மன்னிப்பு கேட்கக் கூடிய அளவிற்கு எந்தவொரு குற்றத்தையும் நீங்கள் செய்யவில்லை. நான் மிகுந்த தாகம் கொண்ட மனிதனாக ஆகிவிட்டதால், என் இரத்தத்தைக் குடிக்க வாய்ப்பளிக்க வேண்டுமென்று உங்களிடம் நான் கேட்டுக் கொண்டேன். தன்னுடைய சொந்த குருதியைத் தவிர, வேறு எதைக் கொண்டு ஒரு பைத்தியக்காரனின் தாகத்தைத் தீர்க்க முடியும்? நான் ஒரு ஊமை. அதனால் என் வாயைக் கிழிக்க ஆசைப்பட்டேன். மரண உலகத்தின் இரவு பகல்களில் நான் கைதியாக இருந்தேன். அதனால் அதை விட பெரிய இரவு பகல்களின் வாசல்களைத் தேடிக்கொண்டு பிடித்தேன்.

இதற்கு முன்பு தூக்கு மரத்தில் ஏற்றப்பட்டவர்களுக்குப் பின்னால், நான் இதோ போகிறேன். தூக்கு மரத்தில் ஏறுவதை நாங்கள் வெறுக்கிறோம் என்று நினைக்காதீர்கள்.

நாங்கள் பெரிய இடங்களில், வீட்டில், வடிவங்களில் மக்கள் கடலிலிருந்து நிரந்தரமாக தூக்கில் ஏறிக் கொண்டுதான் இருக்கிறோம்.’ 

வானவியல் ஆராய்ச்சியாளன்

நானும் நண்பனும் சேர்ந்து போகும்போது நிழலில் ஒரு குருடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தோம்.

என் நண்பன் சொன்னான்: ‘இவன் நம் நாட்டிலேயே மிகப் பெரிய அறிவாளி.’

நண்பனிடமிருந்து விலகி நான் அந்த மனிதனின் அருகில் சென்று வணங்கினேன். பேச்சுக்கு மத்தியில் நான் கேட்டேன்: ‘‘மன்னிக்க வேண்டும். நீங்கள் எப்போதிலிருந்து குருடனாக ஆனீர்கள்?’’

அவன் சொன்னான்: ‘‘நான் பிறப்பிலேயே அப்படித்தான் இருந்தேன்.’’

‘‘நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்?’’

‘‘நான் ஒரு வானவியல் ஆராய்ச்சியாளன்-’’ அவன் தன் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு சொன்னான்: ‘‘நான் வானத்தில் இருக்கும் நவகிரகங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.’’

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel