Lekha Books

A+ A A-

எதிர்பாராதது

எதிர்பாராதது

டி.பத்மநாபன்

தமிழில் : சுரா

வானத்திலிருந்து சிதறி விழுந்ததைப் போல கங்காதரன் வாசலில் வந்து நின்றான். உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- மழையிலிருந்து தப்பிப்பதற்காக அவன் ஓடி வந்து கொண்டிருந்தான். அப்போது நேரம் அந்த அளவிற்கு எதுவுமே இல்லையென்றாலும், பேருந்திலிருந்து இறங்கும்போது வானத்தின் முகம் கறுத்து விட்டிருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் அவனுக்கு ஒரு ஆட்டோ கிடைக்கவில்லை. அதனால் அவன் மிகவும் சிரமப்பட்டு நடந்தான். பிறகு மழைத் துளிகள் விழ ஆரம்பித்ததும், ஓடவும் செய்தான்.

இரண்டு நாட்கள் 'டூர்' சென்ற தகவல்களை மேனேஜரிடம் கூறிவிட்டு, தாள்கள் முழுவதையும் அவரிடம் ஒப்படைத்த பிறகு, சாயங்காலத்திற்கு முன்பு இருக்கக் கூடிய வண்டியில் வீட்டிற்குச் செல்லக் கூடிய அவசரத்தில் அவன் இருந்தான்.

சாலையிலிருந்து கடையின் வாசலுக்கு வேகமாக தாவி வந்த கங்காதரன் 'டூல்கிட்டைக் கீழே வைத்து விட்டு, கையால் தலையிலும் முகத்திலும் இருந்த நீர்த் துளிகளைத் துடைத்து விட்டான். பிறகு நிம்மதிப் பெருமூச்சுடன் கடைக்குள் நுழைய ஆரம்பிக்கும்போது, வாசலின் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த மேனேஜரின் மீது அவனுடைய கண்கள் பதிந்தன.

கங்காதரன் ஓடி வந்ததை முதலில் மேனேஜர் பார்க்கவில்லை. நீண்ட நேரமாக அவர் கங்காதரனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். மிகவும் முக்கியமான ஒரு தேவைக்காகத்தான் அது. அதனால் இடையில் வாசலுக்கு வந்து சாலையில் பார்த்துக் கொண்டும், மீண்டும் கடைக்குள் நுழைந்து கொண்டும், திரும்பவும் உடனே வாசலுக்கு வந்து கொண்டு என்றும் நிலையற்ற மனதுடன் அவர் இதுவரை நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தார். எனினும், இப்போது கங்காதரனைப் பார்த்ததும், அவருடைய முகத்தில் முதலில் உண்டான வெளிப்பாடு கடுமையான எரிச்சல் உள்ளதாக இருந்தது. ஆனால், அவர் உடனடியாக அதை மறைத்து வைத்தார். பிறகு கங்காதரனை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அப்போது உள்ளேயிருந்து ஒரு பணியாள் வந்து க்ளப் செக்ரட்டரி அவரை மீண்டும் அழைப்பதாக கூறினான்.

மேனேஜர் வேகமாக உள்ளே சென்றபோது, கங்காதரனும் சென்றான். ஆனால், அவன் மேனேஜரின் அறைக்கு வெளியிலேயே நின்று கொண்டான்.

ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி., மிக்ஸி போன்ற பொருட்களை விற்பனை செய்யவும், தேவைப்பட்டால் வாங்கியவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவற்றின் கேடுகளைச் சீர்செய்து கொடுத்துக் கொண்டும் இருக்கக் கூடிய பெரிய ஒரு நிறுவனம் அது.

பொருட்களைப் பார்க்க வந்தவர்கள், வாங்க வந்தவர்கள் ஆகியோரின் கூட்டம் கடையில் நிறைய இருந்தது. அந்த கூட்டத்திலிருந்து விலகி, ஒரு அறிமுகமற்ற மனிதனைப் போல கங்காதரன் மேனேஜரின் அறைக்கு வெளியே நின்றிருந்தான். அவனுடைய முகத்தில் ஒரு வித செயலற்ற நிலை வெளிப்பட்டாலும், உண்மையிலேயே அவன் மிகவும் பொறுமையற்ற நிலையில் இருந்தான். மேனேஜரிடம் கொடுக்க வேண்டிய தாள்களை கையில் வைத்துக் கொண்டுதான் அவன் நின்றிருந்தான். கடந்த இரண்டு நாட்களாக தான் எங்கெங்கெல்லாம் போனோம், யாரையெல்லாம் பார்த்தோம், எந்தெந்த கருவிகளின் கேடுகளைச் சீர் செய்து கொடுத்தோம், சீர் செய்து கொடுக்க இயலாதவர்களுக்கு என்ன உதிரி பாகங்கள் தேவைப்படுகின்றன என்பதைப் பற்றிய ரிப்போர்ட்டே அது. ரிப்போர்ட்டை மேனேஜரிடம் ஒப்படைத்து விட்டு, சாயங்காலத்திற்கு முன்பு இருக்கக் கூடிய கடைசி வண்டிக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் அவன் இருந்தான். முடியுமானால் கொஞ்சம் ஆப்பிளோ முந்திரியோ வாங்க வேண்டும் என்றும் நினைத்தான்.

உண்மையிலேயே கடந்த இரண்டு நாட்களும் அவனுடைய மனதில் வீடு மட்டுமே இருந்தது. மானந்தவாடியின் மலைப் பகுதிகளிலும் வயல்கள் வழியாகவும் பயணம் செய்து யார் யாராருடைய டி.வி. செட்களையும், மிக்ஸிகளையும் சரி பண்ணி கொடுக்கும்போது அவனுடைய மனதில் இருந்தது தன்னுடைய வீடு மட்டும்தான். 'வீடு' என்று கூறினால்... மகன். என்ன காரணமோ தெரியவில்லை- அவனுக்கு இப்போது அடிக்கடி காய்ச்சல் வருகிறது. காட்டிய டாக்டர்கள் அனைவரும் கூறுவது 'ஏய்... பரவாயில்லை... குழந்தைகள்தானே! அவங்களுக்கு இடையில் அவ்வப்போது காய்ச்சல் வரும்' என்பதுதான். ஆனால், அப்படி நினைத்து அமைதியாக இருக்க முடியுமா? டாக்டர்மார்கள் கூறுவார்கள்... அவர்களுடைய குழந்தை இல்லையே...!

அப்படிக் கூறிய ஒரு டாக்டரிடம்தானே ஒருமுறை 104 டிகிரி காய்ச்சல் இருந்த அவனையும் தூக்கிக் கொண்டு... அப்போதும் டாக்டர் கூறினார்: 'நல்லது... இப்போது கொண்டு வந்தது நல்லது.... இன்னும் கொஞ்ச நேரம் ஆகியிருந்தால்...!'

சுட்டெரிக்கும் ஒரு நினைவாக அது எப்போதும் ஆனது. மூன்று நாட்களுக்கு முன்பே வீட்டிலிருந்து கிளம்பும்போது, அவனுடைய கையை பலமாகப் பற்றியவாறு, அவன் சொன்னான்:

'வேண்டாம் அப்பா. நீங்க இன்னைக்குப் போக வேண்டாம், அப்பா. நீங்க என் கூடவே இருந்து... நாம இரண்டு பேரும் சேர்ந்து....'

அப்போது அவன் சிரிப்பதற்காக அல்லவா முயற்சித்தான்?

'என்ன உண்ணி அது? நான் இங்கேயே இருந்து என்ன பிரயோஜனம்?'

உண்ணியின் சோர்வடைந்த கண்களில் சந்தோஷத்தின் பிரகாசம்.

'அப்பா, நான் உங்ககூட விளையாடுவேன்.'

விளையாடுவதா? எப்படி? எப்போது?

அறைக்கு வெளியில் அவன் வெறுப்புடனும் வேதனையுடனும் நின்று கொண்டிருந்தான்.

அப்போதும் மேனேஜர் க்ளப்பின் செக்ரட்டரியுடன் உரையாடிக் கொண்டிருந்ததை நிறுத்தவில்லை. மிகவும் தாழ்ந்த குரலில் அந்த உரையாடல் இருந்தாலும், அவருடைய வார்த்தைகள் கங்காதரனின் செவியிலும் விழுந்து கொண்டிருந்தன.

'இல்லை... இல்லை... நீங்கள் நினைப்பதைப் போல எதுவுமில்லை. நான் இப்போதே புறப்படுகிறேன். அந்த ஆள் வந்தாச்சு. இதோ... இங்கே இருக்கிறார். நான் வெறுமனே கூறவில்லை. அவரிடம் விவரங்களைக் கூறி விட்டு…. அதிகபட்சம் போனால், ஐந்து நிமிடங்கள். அதற்குப் பிறகு நான் புறப்படுகிறேன். எனக்காக அதுவரை காத்திருங்க. உங்களுடைய எந்த தீர்மானமும் என்னுடைய தீர்மானமும் கூட. அது உண்மை. பிறகு... நானும் இந்த க்ளப்பின் பொறுப்பாளராக இருந்தேனல்லவா? எனக்கும் சில கடமைகள் இருக்கின்றன அல்லவா? இப்போதும்... பிறகு... என்னுடைய அபிப்ராயம்... இந்த வருட குடியரசு நாளை க்ளப்பின் வரலாற்றிலேயே மிகப் பெரிய கொண்டாட்டமாக ஆக்க வேண்டும் என்பதுதான். அதற்காக எப்படிப்பட்ட சிரமங்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டானாலும்- நாம் கவர்னரைக் கொண்டு வர வேண்டும். என்ன? குடியரசு தினமல்ல... சுதந்திர தினம் என்று கூறுகிறீர்களா? அப்படி இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும். இல்லாவிட்டால்... அவற்றுக்கிடையே என்ன வித்தியாசம்? எல்லாம் ஒன்றுதானே?'

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel