Lekha Books

A+ A A-

எதிர்பாராதது - Page 3

பேருந்து நிறுத்தத்தின் மூலையில் கங்காதரனுக்கு ஆட்டோ கிடைத்தது.. அங்கிருந்து அதிக தூரம் போக வேண்டியதிருக்காது என்றாலும், அந்த அளவிற்காவது நேரத்தை மிச்சப்படுத்தலாமே என்று கருதி, அவன் ஆட்டோவில் ஏறினான். ஆனால் ஏறி முடித்த சில நிமிடங்களிலேயே வண்டிக்கு வேகம் போதாது என்று அவனுக்குத் தோன்றியது. அதனால் அதிகமான வேகத்தில் வண்டியைச் செலுத்தும்படி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை அவன் கூறினான். முதலில் அதை கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லையென்றாலும், இறுதியில் அந்த ஆள் வெறுப்புடன் கேட்டான்:

'ஏன்?'

அதைக் கேட்டு கங்காதரன் அதிர்ச்சியடைந்தாலும், எதுவும் கூறவில்லை. அப்போது ஓட்டுநர் மீண்டும் கூறினான்:

'ஆட்டோவின் வேகத்திற்கு ஒரு வரைமுறை இல்லையா?'

வாஷிங்மெஷினுக்கு என்ன கேடு இருக்கும், அதைச் சரி செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்ற கணக்குப் போடல்களில் இருந்தான் கங்காதரன். அதனால் அவன் அதைக் காதில் வாங்கவில்லை.

ஓட்டுநர் மீண்டும் கூறினான்.

'உங்களுடைய இடம் வந்துருச்சு...'

சாயங்காலம் ஆவதற்கு இன்னும் நேரமிருந்தாலும், இருட்டு பரவ ஆரம்பித்திருந்தது. முன்பு பெய்த மழையின் ஈரத்தைக் கொண்டிருந்த வானம் நன்கு கறுத்து காணப்பட்டது. உயரமான மரங்கள் நின்றிருந்த நிலப் பகுதியும், பழமையாகி சிதிலமடைய ஆரம்பித்திருந்த பெரிய கட்டிடமும், பயமுறுத்தக் கூடிய ஒரு காட்சியாக அவனுக்கு அப்போது தோன்றியது. நகரத்திற்கு நடுவில் இப்படிப்பட்ட ஒரு வீடா என்று அவன் ஆச்சரியத்துடன் நினைக்கவும் செய்தான். வீட்டில் வெளிச்சம் இல்லை. அங்கு ஆட்கள் வசிப்பதற்கான அறிகுறியும் இல்லை. அதனால் சற்று சந்தேகத்துடன்தான் கங்காதரன் வாசலிலே கால் வைத்து, அழைப்பு மணியை அழுத்தினான்.

மணியின் சத்தம் ஒலித்து முடிந்தவுடன், உள்ளேயிருந்த அறையிலும் வாசலிலும் வெளிச்சம் பரவ, வயதான ஒரு மனிதர் கதவைத் திறந்து வெளியே வந்தார்.

வெள்ளை நிற, கழுத்து இல்லாத சட்டையையும் பேன்ட்டையும் அணிந்திருந்த அவர் திடகாத்திரமான தோற்றத்துடன் இருந்தார்.

தான் யார் என்பதையும், எதற்காக அங்கு வந்திருக்கிறோம் என்பதையும் விளக்கிக் கூறியபோது, கங்காதரனின் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு அவர் சொன்னார்:

'உங்களுடைய அடையாள அட்டை...?'

அடையாள அட்டையைக் காட்டியபோது, மனதிலிருந்து பழைய ஒரு நினைவைத் தேடி எடுத்தவாறு அவர் சொன்னார்:

'நீங்கள் இதற்கு முன்பு இங்கே வந்திருக்கீங்க.'

கங்காதரனின் வார்த்தைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் அவர் சொன்னார்:

'வாங்க.'

பெரிய மேற்கூரைகளைக் கொண்ட விசாலமான அறைகள்... உயரமான கதவுகள்... தரையில் கால ஓட்டத்தின் காரணமாக ஓரங்கள் ஆங்காங்கே விலக ஆரம்பித்திருந்த தரையோடுகள்... மிகவும் பழமையான நாற்காலிகள்...

வீடு முழுமையான பேரமைதியில் இருந்தது.

வாஷிங்மெஷினின் மூடிகளைத் திறந்து பார்த்துவிட்டு, ஒரு நிமிடம் அவன் திகைப்படைந்து நின்று விட்டான்.

கங்காதரனின் அசைவுகளை மிகவும் கூர்ந்து கவனித்தாறு அவனுக்கு மிகவும் அருகில் வாஷிங்மெஷினின் உரிமையாளரான இல்லத்துச் சொந்தக்காரரும் நின்று கொண்டிருந்தார்.

அவர் கேட்டார்:

'என்ன?'

ஒரு நிமிட நேர அமைதிக்குப் பிறகு கங்காதரன் மெதுவான குரலில் கூறினான்:

'இது முழுவதையும் எலிகள் தாறுமாறாக ஆக்கி விட்டிருக்கு. அவை இதற்குள் கூடு கட்டியிருக்குன்னு தோணுது.'

வீட்டின் உரிமையாளர் அப்போது கோபத்துடன் கூறினார்:

'என்ன? எலிகள் தாறுமாறாக ஆக்கி விட்டிருக்குதா? அதற்கு... இங்கே எலிகள் இல்லையே!'

ஆனால், அவர் கூறி முடிப்பதற்கு முன்பு, இரண்டு சிறிய எலிகள் வாஷிங்மெஷினுக்கு அடியிலிருந்து வெளியே வந்து, வீட்டிற்கு வெளியே ஓடின.

அவை சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர் ஆச்சரியத்துடன் நின்று கொண்டிருந்தார்.

'எனக்கு புரியல... எங்கிருந்து இவ்வளவு வேகமாக இவை...'

கங்காதரன் எதுவும் கூறவில்லை. முறிந்து கிடந்த வயர்களை ஒன்றிற்குப் பிறகு இன்னொன்றாகச் சேர்த்து இணைத்து வைக்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டிருந்தான். அவன் கொஞ்சம் செய்து முடிக்கவும் செய்தான். ஆனால், ஒரு கட்டத்தில் அவன் வேலையை நிறுத்தினான். அங்கு நிலவிக் கொண்டிருந்த மங்கலான வெளிச்சத்தில் அதற்கு மேல் செய்வதற்கு அவனால் முடியவில்லை.

கங்காதரன் நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே வெறுப்புடன் கூறினான்:

'எதையும் பார்க்க முடியலை...'

வீட்டின் உரிமையாளர் எதுவும் கூறாமல் நின்றிருந்ததும், கங்காரன் கேட்டான்:

'இங்கு ஸ்டெப்பப் வைக்கலையா? இந்த வோல்ட்டேஜில்... இனி.. இதை சரியாக்கினால் கூட, சோதித்துப் பார்க்கவும் முடியாது...'

வீட்டின் உரிமையாளர் திடீரென்று கோபத்துடன் கூறினார்:

'இல்லை... இங்கு ஸ்டெப்பப் எதுவும் வாங்கி வைக்கல. அதற்கு தேவைப்படும் பணமும் என்கிட்ட இல்ல.'

அவருடைய குரல் மிகவும் பெரிதாக இருந்தது. அதைக் கேட்டு கங்காதரன் அதிர்ச்சியடைந்து விட்டான்.

அவர் அப்போது கோபத்துடன் மீண்டும் கூறினார்:

'வோல்ட்டேஜிக்குப் பதிலாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ட்ரான்ஸ்ஃபார்மர் இல்லையா? இல்லை... வெறுமனே தந்தாலும், நான் அதை வைக்க மாட்டேன். எனக்கு அது தேவையில்லை. பார்க்குறேன்... எவ்வளவு காலம் இப்படி வோல்ட்டேஜ் இல்லாமல்...'

அவர் திடீரென்று கங்காதரனின் முகத்தை நோக்கி விரலை நீட்டியவாறு உரத்த குரலில் கேட்டார்:

'இந்த சாயங்கால வேளையில் என் வீட்டிற்கு வரச் சொல்லி உங்களிடம் யார் சொன்னது? உங்களுக்கு பகல்ல நேரம் கிடைக்கலையா? உங்களோட மேனேஜர்கிட்ட சொல்ல ஆரம்பிச்சு, இரண்டு நாட்களாச்சு. அப்போதெல்லாம் ஆளை அனுப்பி வைக்கிறேன்... அனுப்பி வைக்கிறேன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு. கடைசியாக, இந்த சாயங்கால வேளையில... இல்லை... இல்லை... நான் இதை எந்தச் சமயத்திலும்...'

அவர் கோபத்துடன் கூறிக் கொண்டிருந்தார். பொறுப்புணர்ச்சி இல்லாத மின்சார வாரியத்தைப் பற்றி, அரசாங்கத்தைப் பற்றி, வர்த்தகர்களைப் பற்றி... இவ்வாறு...

ஆனால், திடீரென்று அவருடைய குரல் புகை வண்டியின் விஷில் சத்தத்தில் கரைந்து போய் விட்டது.

புகைவண்டி தண்டவாளத்திற்கு அருகில் இருந்தது வீடு. ஆனால் வண்டியின் விஷில் சத்தம் மட்டுமல்ல- அதன் பலமான ஓசைகள் கூட அங்கு நீண்ட நேரம் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

கங்காதரன் அமைதியாக நின்றிருந்தான்.

கடிகாரத்தைப் பார்த்ததும், அவனுடைய முகம் வெளிறிப் போய் விட்டது.

மிகவும் மெதுவாக, மிகவும் சிரமப்பட்டவாறு அவன் கேட்டான்:

'அது வடக்குப் பக்கம் போகும் பாஸஞ்சர்தானே?'

கங்காதரனிடம் உண்டான மாற்றம் வீட்டின் உரிமையாளரை பயமுறுத்தியது.

அவர் கூறினார்:

'ஆமாம்.. அது வடக்குப் பக்கம் போகும் பாஸஞ்சர்தான்...'

கங்காதரன் எதுவும் கூறாமல் நின்றதும், வீட்டின் உரிமையாளர் கேட்டார்:

'என்ன?... என்ன விஷயம்?'

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel