Lekha Books

A+ A A-

எதிர்பாராதது - Page 2

அறையின் வாசலைத் திறந்து மேனேஜர் உள்ளே அழைத்தபோது, கங்காதரன் முதலில் கவனிக்கவில்லை. அவன் அப்போதும் எதையெதையோ நினைத்துக் கொண்டு... மானந்தவாடியின் மழை பெய்து ஈரமான வயல் வரப்பின் வழியாக... மகனையும் அழைத்துக் கொண்டு... அவனிடம் ஒவ்வொன்றையும் கூறிக் கொண்டு....

பிறகு அறைக்குள் நுழைந்து மேனேஜரின் மேஜையின் மீது தாள்களை விரித்து வைத்தபோது...

அவன் பேசியவை அனைத்தும் மிகவும் வேகத்தில் இருந்தது. சாயங்காலத்திற்கு முன்பு செல்லக் கூடிய கடைசி பாசஞ்சர் வண்டிக்கு... வாய்ப்பு இருந்தால், கொஞ்சம் ஆப்பிளோ முந்திரிப் பழமோ வாங்கிக் கொண்டு...

அப்போது மனதில் அவைதாம் இருந்தன.

ஆனால், மேனேஜர் அவனை விலக்கிக் கொண்டு கேட்டார்:

'ஏன் இவ்வளவு தாமதம்? கடந்த சில மணி நேரங்களாக நான் உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். நீங்கள் எனக்கு தேவைப்பட்டீர்கள்.'

கங்காதரனால் முதலில் அதை நம்ப முடியவில்லை.

தாமதம் என்றா கூறுகிறார்?

எவ்வளவு தாமதமாகி விட்டது?

எவ்வளவு மணிகள்?

பேருந்து 'ப்ரேக் டவுன்' ஆனவுடன், தயங்கி நின்று கொண்டிருக்காமல், மரங்களை ஏற்றி வந்து கொண்டிருந்த ஒரு லாரியில் எப்படியோ ஏறி... பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் மாறி ஏறி... சாயங்காலத்திற்கு முன்பே வந்து சேர்ந்தபோது...

எங்கே தாமதம் உண்டானது?

மிகவும் வெறுப்புடன் கங்காதரன் அவை அனைத்தையும் கூறினான். ஆனால், முழுமையாக கூறி முடிக்க அவனை அனுமதிக்காமல், மேனேஜர் சொன்னார்:

'சரி... சரி...'

மேனேஜருக்கு முன்னால் தாள்களை மீண்டுமொரு முறை நகர்த்தி வைத்து விட்டு, கங்காதரன் கூறினான்:

'நான் இன்னைக்கு வண்டியில்...'

அப்போது மேனேஜர் பொறுமையை இழந்து கூறினார்.

'அதற்கு இன்னும் நேரம் இருக்கிறதே! அதற்கு முன்பு கங்காதரன்...'

அப்போது மேனேஜர் கூறிக் கொண்டிருப்பதற்கு நடுவில் புகுந்து அவன் கூறினான்:

'நான் வர்றப்போ மகனுக்கு...'

மேனேஜர் சிரிக்க ஆரம்பித்தார்.

'அதற்கு இப்படியெல்லாம் பதைபதைப்பு அடையணுமா கங்காதரன்? குழந்தைகள்தானே! அவர்களுக்கு சில நேரங்களில் காய்ச்சல் வரத்தான் செய்யும். பிறகு... குழந்தைக்கு எந்தவொரு கஷ்டமும் வராது. சொல்றது நான்தானே? ஒரு கஷ்டமும் வராது... பிறகு...வண்டியில் போவதற்கு இன்னும் தேவையான அளவிற்கு நேரம் இருக்கிறது. அதற்கு முன்பு... கங்காதரன், நீங்க இன்னொரு வேலையையும் செய்ய வேண்டியதிருக்கு. அதைக் கூறி ஒப்படைப்பதற்குத்தான் நான் இவ்வளவு நேரம் இங்கு உங்களை எதிர்பார்த்துக் கொண்டு... க்ளப்பில் மிகவும் முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கிறது. எனினும், நான்... இல்லை... அதிக தூரமொண்ணும் இல்ல. நகரத்தில்தான். கங்காதரன், ஒரு முறை நீங்கள் அங்கே போயிருக்குறீங்க. கோவிலுக்குப் பக்கத்துல இருக்குற அந்த பழைய வீட்டில் தனியாளாக வசித்துக் கொண்டிருக்கும் அந்த வயசான ஆள் ஞாபகத்துல இருக்குறார்ல? அந்தக் காலத்தில் என்னென்னவோ நிறுவனங்களில் பெரிய பதவிகளில் இருந்த மனிதர் அவர். ஆனால், இப்போது எந்தவொரு ஆளுடனும் உறவே இல்லாமல்... எங்களுடைய க்ளப்பில் கூட உறுப்பினராக இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் கறாரான ஒரு மனிதர்! அவர் சமீபத்தில் இங்கே வாங்கிய வாஷிங் மெஷின் கேடாகி விட்டது. கடந்த இரண்டு நாட்களாக அவர் அடிக்கொருதரம் அழைத்துக் கொண்டே இருக்கிறார். வேறு யாராவது இருந்தால்... ஆனால், இந்த ஆளை வெறுப்படைய வைக்க முடியல. இப்போது மேல் மட்டத்தில் மிகவும் செல்வாக்கு உள்ள மனிதர். பெரிய பிடிவாத குணம் கொண்டவரும் கூட. கங்காதரன், அதனால்தான் நான் உங்களுக்காக காத்துக் கொண்டு நின்றிருந்தேன். கங்காதரன், நீங்க அங்கே போய்... ஸ்டேஷனுக்குப் போகும் வழியில்தானே! அதிகபட்சம் அரை மணி நேரம் வேலை வரும். சில நேரங்களில் அதுவும் கூட தேவைப்படாது. அவருக்கு வெறுமனே கூட தோன்றியிருக்கலாம். ஆள் அப்படிப்பட்டவர்தானே? நான் அவரிடம் நேரம் கூறியிருப்பது...'

முற்றிலும் நம்ப முடியாத ஏதோ ஒன்றை கேட்டுக் கொண்டு நின்றிருப்பதைப் போல கங்காதரன் அவை அனைத்தையும் கேட்டான்.

அவன் பதைபதைப்புடன் கூறினான்.

'ஆனால், எனக்கு...'

அப்போது மேனேஜர் அறைக்குள்ளிருந்து வெளியேறி விட்டிருந்தார். வெளியே தன்னுடைய கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அவர் வேகமாக நடந்தபோது, கங்காதரனும் அவருக்குப் பின்னால் இருந்தான். பரிதாபமான குரலில் கங்காதரன் அவரிடம் என்னென்னவோ கூறினான்.

காரின் கதவைத் திறந்து ஒரு காலை உள்ளே வைத்து விட்டு, ஒரு இரண்டாவது சிந்தனை என்பதைப் போல மேனேஜர் கங்காதரனிடம் கூறினார்:

'பாருங்க. இது மிகவும் கவனமாக செய்ய வேண்டிய ஒரு காரியம். அந்த மனிதருக்கு அதிருப்தி உண்டாவது மாதிரியான சூழ்நிலையை உண்டாக்கி விடாதீர்கள். வேலையைச் சீக்கிரமாக முடித்து விட்டால், நீங்கள் கடைசி வண்டியில் வீட்டிற்குப் போகலாம். இல்லாவிட்டால், அதை முடிச்சிட்டு மட்டுமே... புரியுதுல்ல? பிறகு... வேலை முடிந்து விட்டால், க்ளப்பிற்கு ஃபோன் போட்டு, என்னிடம்...'

மழைக் காலத்தின் ஆரம்பத்தில் சற்று முன்பே வந்து சேர்ந்த மழை அப்போது முயற்சித்துக் கொண்டிருந்தாலும், எந்த நேரத்திலும் மீண்டும் அது பெய்யலாம் என்ற நிலையில் இருந்தது ஆகாயம்.

கங்காதரன் மேனேஜரின் கார் சென்ற பாதையையே பார்த்தவாறு சாலையிலேயே நின்று கொண்டிருந்தான். பிறகு அவன் உள்ளே சென்று 'டூல் கிட்'டை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

அவன் அப்போது நடந்து கொண்டது ஒரு கனவில் என்பதைப் போல இருந்தது.

சாலை வளைவுகளோ திருப்பங்களோ எதுவுமில்லாமல் நீண்ட தூரம் நேராக செல்லக் கூடியதாக இருந்தது.

வானத்தின் விளிம்பில் ஒரு கார் பார்வையிலிருந்து மறைந்து கொண்டிருந்தது. அது மேனேஜரின் காராகத்தான் இருக்கும் என்று கங்காதரன் நினைத்தான். அந்த கார் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டிருந்தான் கங்காதரன்.

கோவிலுக்குப் பக்கத்திலிருக்கும் பழைய, பெரிய வீட்டிற்குச் செல்ல வேண்டியதும் அதே வழியில்தான்...

'ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவாவது வந்தால், நன்றாக இருக்கும்!' என்று கங்காதரன் மனதிற்குள் நினைத்தான். ஆனால், கண்ணில் தெரியக் கூடிய தூரம் வரை ஆட்டோ ரிக்‌ஷா இல்லை.

பிறகு கங்காதரன் வேகமாக நடந்தான்.

அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்- அப்போது மழை இல்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel