Lekha Books

A+ A A-

எதிர்பாராதது - Page 4

கங்காதரன் எதுவும் கூறாமல் நின்றதும், வீட்டின் உரிமையாளர் கூறினார்:

'சொல்லுங்க... என்ன விஷயம்?'

இந்த முறை அவருடைய குரல் மிகவும் மென்மையாக இருந்தது. பரிதாப உணர்வு கலந்ததாக இருந்தது.

வேதனையுடனும், பயத்துடனும் கங்காதரன் நின்றிருந்தான். அவன் என்னவோ சிந்தித்துக் கொண்டிருந்தான். தொடர்ந்து அவன் கூற ஆரம்பித்தான். ஆனால், எங்கிருந்து ஆரம்பிப்பது, எதையெதையெல்லாம் கூற வேண்டியது, எங்கு முடிக்க வேண்டியது என்பதைப் பற்றியெல்லாம் அவனுக்கு எந்தவொரு வடிவமும் இல்லை. வார்த்தைகள் எப்படியோ வெளியே வந்து விழுந்தன. சில நேரங்களில் மிகவும் சத்தமாக... சில நேரங்களில் ஒரு ரகசியத்தைக் கூறுவதைப் போல மிகவும் மெதுவாக... ஒரு நீண்ட பெருமூச்சில் மூழ்கி தாழ்ந்தவாறு... கடந்த இரண்டு நாட்களாக மானந்தவாடியிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் இருப்பவர்களின் டெலிவிஷன்களைச் சீர் செய்து கொண்டு அலைந்து திரிந்தது, 'இன்னைக்கு வேண்டாம் அப்பா' என்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகன் அழுது கொண்டே கூறியது, ஒரு நாள் நூற்று நான்கு டிகிரி காய்ச்சல் அடித்தபோது, அவனையும் தூக்கிக் கொண்டு... ஒவ்வொரு டெலிவிஷனையும் சீர் செய்யும் போது மனதிற்குள் இருந்தவன் அவன்தானே! இப்போது இந்த வாஷிங் மெஷினைத் திறந்த போதும்... அவன் அழுது கொண்டு... எல்லாவற்றையும் சரி பண்ணி விட்டு, மானந்தவாடியிலிருந்து திரும்பி வரும்போது பேருந்து கேடாகி விட்டது... அதற்குப் பிறகு அடுத்த பேருந்திற்காகக் காத்திருக்காமல் ஓடி, லாரியில் ஏறி, இறுதியில் பேருந்து கிடைத்ததும்... வேண்டுமென்றால், அங்கேயே தங்கியிருந்து நாளைக்கு வந்திருக்கலாமே! அதைச் செய்யாமல் அதற்குப் பிறகும் தாமதமாக வந்ததைப் பற்றி மேனேஜர் கேட்டார். இந்த வேலையையும் முடித்து விட்டு, வீட்டிற்குச் சென்றால் போதும் என்று சொன்னார். குழந்தைக்கு பிரச்னை எதுவும் உண்டாகாது என்று சொன்னார். அவர் எப்படி அதை கூற முடியும்? யாராலாவது அப்படி கூற முடியுமா? எனினும், மேனேஜர் க்ளப்பிற்கு காரில் சென்றதும், அவன் நடந்தும் ஓடியும் இறுதியில் ஆட்டோ பிடித்து... எப்படியாவது வேலையை முடித்து, கடைசி வண்டிக்கு...

அவனுடைய வார்த்தைகள் இறுதியில் ஒரு தேம்பித் தேம்பி அழுவதில் முடிந்தன.

வீட்டின் உரிமையாளர் எதுவும் கூறாமல், கேட்டுக் கொண்டு நின்றிருக்க மட்டும் செய்தார்.

அவருடைய நெற்றி இடையில் அவ்வப்போது சுருங்கிக் கொண்டிருந்தது.

தொடர்ந்து தன்னுடைய பொருட்களை எடுத்து 'கிட்'டில் போட்டவாறு, கங்காதரன் கூறினான்:

'நாளை ஞாயிறு... நாளை மறுநாள் நான் வருவதாக இருந்தால், காலையிலேயே...'

வீட்டின் உரிமையாளர் மெதுவான குரலில் கேட்டார்:

'நீங்க எப்படி போவீங்க? இனி பேருந்து இருக்காதே!'

கங்காரன் கூறினான்:

'அது பரவாயில்ல... நான் எப்படியாவது போயிடுவேன். ஒரு வேளை வழியில் ஏதாவது லாரி கிடைச்சாலும் கிடைக்கலாம்.'

வீட்டின் உரிமையாளரால் அதை நம்ப முடியவில்லை. அவர் கேட்டார்:

'இந்த இரவு வேளையில் நீங்கள் முப்பது கிலோ மீட்டர் நடக்க போறீங்களா?'

கங்காதரன் எதுவும் கூறாமல் நிற்கவே, அவர் மெதுவான குரலில் சொன்னார்:

'உங்களுக்கு சம்மதம் என்றால், இன்று இரவு இங்கேயே படுத்துக் கொள்ளுங்கள். எனக்கு எந்தவொரு சிரமமுமில்லை. சந்தோஷம்தான். பிறகு... நாளை காலையில்...'

அப்போது கங்காதரன் கூறினான்:

'நான் போய் ஆகணும். முழு தூரத்தையும் ஒரு வேளை நடக்க வேண்டியது இருக்காது. இனி நடக்க வேண்டிய சூழ்நிலை உண்டானாலும்...'

கங்காதரன் வாசலுக்கு வந்து விட்டிருந்தான்.

வீட்டின் உரிமையாளர் அப்போது ஏதோ சிந்தித்தவாறு கூறினார்:

'உங்களுக்கு ட்ரைவிங் தெரியுமா?'

கங்காதரன் பதைபதைப்புடன் 'தெரியாது' என்று தலையை ஆட்டினான்.

வீட்டின் உரிமையாளர் கூறினார்:

'எனக்கு தெரியும். நான் நன்றாக ஓட்டவும் செய்வேன். என் கார், கன்டிஷன்லயும் இருக்கு. ஆனால், இரவு... வேண்டாம்... அது சரியாக இருக்காது. என் வயதையும் நினைக்க வேண்டுமல்லவா? எது எப்படியிருந்தாலும், ஒரு காரியம் செய்வோம். நீங்க நில்லுங்க. நான் வீட்டைப் பூட்டி விட்டு, ஒரு நிமிடத்துல வர்றேன்...'

கங்காரன் ஏதாவது கூற முயற்சிப்பதற்கு முன்பு, அவர் வீட்டிற்குள் சென்று திரும்பி வந்தார்.

'வாங்க... புகை வண்டி நிலையத்திற்கு முன்னால் இருக்கும் நிறுத்தத்தில் எனக்குத் தெரிந்த வாடகைக்கார் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாரிடமாவது சொல்லி...'

கங்காரன் என்னவோ கூற முயற்சித்தபோது, உரத்த குரலில் அவர் தடுத்தார்:

'இது என்னுடைய பணம். என் சொந்த பணம்... கைக்கூலி வாங்கியதோ கொள்ளையடிச்சதோ எதுவுமில்ல...'

கங்காரனின் பதிலுக்குக் காத்து நின்று கொண்டிருக்காமல் அவர் கூறினார்:

'வாங்க...'

தூரத்தில் மழை வந்து கொண்டிருந்தது. அப்போது அவர்களுக்கிடையே மவுனத்தின் சப்தம் மட்டுமே இருந்தது.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel