Lekha Books

A+ A A-

மழை வந்தது

mazhai vanthathu

வெளிவாசலுக்கு மிகவும் தூரத்தில் தலைவர் வந்து கொண்டிருக்கும்போதே, அவருடைய மகள் ஒகான்டா அவரைப் பார்த்துவிட்டாள்.

அவரைச் சந்திப்பதற்காக அவள் ஓடினாள். மூச்சுவிட முடியாமல் அவள் தன் தந்தையிடம், “என்ன செய்தி, தலைவரே?'' என்று கேட்டாள். மழை எப்போது பெய்யும் என்ற தகவலைத் தெரிந்து கொள்வதற்காக கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார்கள். லபாங்'ஓ மகளைத் தொடுவதற்காக தன் கைகளை நீட்டினாரே தவிர, ஒருவார்த்தைகூட வாய் திறந்து பேசவில்லை. தந்தை எதுவும் கூறாமல் மிகவும் அமைதியாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஒகான்டா, அவர் திரும்பி வந்துவிட்டார் என்ற செய்தியைக் கூறுவதற்காக கிராமத்தை நோக்கி திரும்பி ஓடினாள்.

கிராமத்தின் சூழ்நிலை மிகவும் இறுக்கமானதாகவும், குழப்பங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. அங்கிருந்த ஒவ்வொருவரும் எந்தவித நோக்கமும் இல்லாமல் நடந்து கொண்டும், குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு எந்தவொரு வேலையையும் செய்யாமல் வெறுமனே மன நிம்மதி இல்லாமல் திறந்த வெளியில் அலைந்து கொண்டும் இருந்தனர். ஒரு இளம்பெண் அங்கிருந்த இன்னொரு பெண்ணிடம், “இன்னைக்கு இந்த மழை சம்பந்தப்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரலைன்னா, தலைவர் ஒரேயடியாக நொறுங்கிப் போயிடுவாரு'' என்று கூறினாள். மக்கள் அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க... பார்த்துக் கொண்டிருக்க, அவர் மிகவும் மெலிந்து மெலிந்து போய்க்கொண்டிருப்பதை அவர்களே கண்கூடாகப் பார்த்தார்கள். “நம்மோட கால்நடைகள் வயல்களில் செத்துக் கிடக்கின்றன'' என்று அவர்கள் கூறினார்கள். “வெகு சீக்கிரமே நம்முடைய பிள்ளைகள்... பிறகு நாம்... தலைவரே! நம்மோட வாழ்க்கைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன செய்யணும்னு எங்களுக்குச் சொல்லுங்க'' என்றார்கள்

அவர்கள். அதனால் தினந்தோறும் தலைவர் தன்னுடைய முன்னோர்களின் மூலம் கடவுளிடம், மக்களின் தாங்கமுடியாத சிரமங்களிலிருந்து அவர்கள் விடுபடுவதற்கான வழியைக் காட்டும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

குடும்பத்திலுள்ள எல்லாரையும் ஒரே நேரத்தில் அழைத்து, அவர்களிடம் உடனடியாக செய்தியைக் கூறுவதற்கு பதிலாக, லபாங்'ஓ தன்னுடைய குடிலுக்குச் சென்றார். அதன்மூலம், தான் தொந்தரவு செய்யப்படுவதை விரும்பவில்லை என்று காட்டிக்கொண்டார். கதவை மூடிவிட்டு, மங்கலான விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து சிந்தனையில் மூழ்கினார்.

பசியில் சிக்கிக்கிடக்கும் மக்களின் தலைவர் என்பதற்காக லபாங்'ஓ வின் இதயம் மிகுந்த கவலையில் மூழ்கியிருக்கிறது என்று இனியும் கூறிக்கொண்டிருப்பதற்கில்லை. அவருடைய ஒரே மகளின் வாழ்க்கை இப்போது பிரச்சினைக்குள்ளாகி விட்டிருந்தது. ஒகான்டா தன்னைச் சந்திப்பதற்காக வந்தபோது, அவள் இடுப்பைச் சுற்றிப் பிரகாசித்துக் கொண்டிருந்த சங்கிலியை அவர் பார்த்தார். எது நடக்கவேண்டியது என்ற விஷயம் முடிவு செய்யப்பட்டுவிட்டது. "என்னுடைய ஒரே மகள் ஒகான்டா... ஒகான்டா... இந்த இளம் வயதில், அவள் மரணத்தைத் தழுவியே ஆகவேண்டும்... லபாங்'ஓ தன்னுடைய வார்த்தைகளைக் கூறி முடிப்பதற்கு முன்பே, அடக்க முடியாமல் வெடித்து கண்ணீர் விட்டார். தலைவர் அழக்கூடாது. மனிதர்கள் மத்தியிலேயே அவர் மிகவும் தைரியசாலியான மனிதர் என்று மக்கள் தீர்மானமான குரலில் கூறினார்கள். ஆனால் அதையெல்லாம் இப்போது பார்ப்பதற்கு லபாங்'ஓ தயாராக இல்லை. அவர் ஒரு சாதாரண தந்தையாக இருந்ததால், கசப்பு மேலோங்க அழுதார். "லுவோ' என்று அழைக்கப்படும் தன்னுடைய மக்கள்மீது அவர் நிறைய அன்பு வைத்திருந்தார். அதே நேரத்தில் அவரைப் பொறுத்தவரையில் ஒகான்டாவைவிட "லுவோ' என்ற அந்த மக்கள் பெரியவர்களா என்ன? லபாங்'ஓவின் உலகத்திற்கு அவள் ஒரு புதிய வாழ்க்கையைக் கொண்டு வந்தாள். அதைத் தொடர்ந்து தான் மனதில் நினைத்ததைவிட அவர் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்தார். அந்த கிராமத்தின் ஆவி அவருடைய அழகான மகளை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? "இங்கு ஏராளமான வீடுகள் இருக்கு. மகள்களை வைத்திருக்கக்கூடிய பெற்றோர்களும் நிறைய இருக்காங்க. இந்த என் மகளை ஏன் தேர்வு செய்யவேண்டும்? எனக்கென்று இருப்பவளே அவள் ஒருத்திதான்...' ஏதோ தன்னுடைய முன்னோர்கள் அந்தக் குடிலில் இருப்பதைப்போலவும், அவர்களை முகத்தோடு முகம் பார்த்துக் கொண்டிருப்பதைப்போலவும் லபாங்'ஓ பேசிக்கொண்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால்- அவர்கள் அங்கு இருக்கத்தான் செய்தார்கள். பதவியை ஏற்று அரியாசனத்தில் அமர்ந்த நாளன்று, பெரியவர்களுக்கு முன்னால் உரத்த குரலில், "தேவைப்பட்டால், எதிரியின் கைகளிலிருந்து இந்த பழங்குடி மக்களைக் காப்பாற்றுவதற்காக என்னுடைய வாழ்க்கையையும், என் குடும்பத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையையும்கூட அர்ப்பணிப்பேன்' என்று உறுதி மொழி அளித்ததை நினைத்துப் பார்க்கும்படி அவர்கள் கூறினார்கள். "மறுக்கிறாய்! மறுக்கிறாய்!' தன்னுடைய முன்னோர்கள் தன்னைப் பார்த்து கேலி செய்யும் குரலை அவர் கேட்டார்.

லபாங்'ஓ தலைவராக ஆக்கப்பட்டபோது, அவர் ஒரு இளைஞனாக இருந்தார். தன்னுடைய தந்தையைப்போல இல்லாமல், அவர் ஒரே ஒரு மனைவியுடன் நிறைய வருடங்கள் ஆட்சி செய்தார். ஆனால், அவருடைய ஒரே மனைவி அவருக்கு ஒரு மகளைப் பெற்றுத் தராததால், அந்த கிராமத்து மக்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவரைக் கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர் ஒரு இரண்டாவது மனைவியை, ஒரு மூன்றாவது மனைவியை, ஒரு நான்காவது மனைவியைத் திருமணம் செய்தார். ஆனால், அவர்கள் எல்லாருமே ஆண் பிள்ளைகளைத்தான் பெற்றெடுத்தார்கள். லபாங்'ஓ ஐந்தாவதாக ஒரு மனைவியைத் திருமணம் செய்தபோது, அவள் ஒரு மகளைப் பெற்றெடுத்தாள். அவளை அவர்கள் ஒகான்டா என்று பெயரிட்டு அழைத்தார்கள். அதற்கு "அவரை' என்று அர்த்தம். ஏனென்றால், அவளுடைய தோல் அந்த அளவிற்கு மிகவும் மென்மைத்தன்மை கொண்டதாக இருந்தது. லபாங்'ஓ விற்கு இருந்த இருபது குழந்தைகளில், ஒகான்டா மட்டும்தான் பெண்ணாகப் பிறந்தவள் தலைவரின் பாசத்திற்குரியவளாக அவள் இருந்தாலும், அவளுடைய மற்ற அம்மாக்கள் தங்களுடைய பொறாமை உணர்வுகளையும் மனதிற்குள் மூழ்கடிக்கச் செய்துகொண்டு, அவள் மீது அன்பு மழை பொழிந்தார்கள். அந்த உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒகான்டா என்ற அந்த இளம்பெண்ணின் நாட்களே எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன என்று அவர்களே கூறினார்கள். அவள் தன்னுடைய இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டு, பொறாமைப்படும் நிலையில் இருக்கும் இடத்தை வேறு யாருக்காவது விட்டுத்தர வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

இந்த அளவிற்கு முடிவே எடுக்க முடியாத ஒரு சூழ்நிலை அவருடைய வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும் வந்ததில்லை. மழையை வரச் செய்வது யாரோ, அவருடைய விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுவது என்பது அந்த கிராமத்து மக்களை முழுமையாக கைகழுவி விடுவதற்கு நிகரானது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel