Lekha Books

A+ A A-

வீடு

Veedu

வீடு

உறூப்

தமிழில் : சுரா

ண்ணம்மா பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

தெரு முழுவதும் ஆரவாரமாக இருந்தது. இந்தப் பகுதியில் இருப்பவர்கள் அந்தப் பகுதிக்கும், அங்கு இருப்பவர்கள் இந்தப் பக்கமும் ஓடிக் கொண்டிருந்தார்கள். சிலர் தேம்பி அழுதார்கள். சிலர் அமைதியாக, கூர்மையான கண்களுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

'எல்லாம் முடியட்டும்.'

'தெரு நாய்கள்...'

'என்னடீ சொன்னே?'- போலீஸ்காரன் லத்தியை ஓங்கினான்.

'இனியும் சாயங்காலம் முடிகிற நேரத்துல நீங்கள் என்னைத் தேடுவீங்க. அப்போ நாங்கள் இங்கே இருக்க மாட்டோம்'- ரங்காயியின் வார்த்தைகளைக் கேட்டபோது, கண்ணம்மா அவளையே வெறித்துப் பார்த்தாள். ஆனால், அசையவில்லை.

வயதானவர்கள் நரைத்த தாடியைச் சொறிந்து கொண்டே, மேலே பார்த்தவாறு சிறிது நேரம் நின்றிருந்தார்கள். மேலே இருந்து வந்து கொண்டிருந்த, குத்தக் கூடிய ஒளிக் கீற்றுகளை ஏற்று அவர்கள் தலையைக் குனிந்து கொண்டார்கள். நாற்றமெடுத்த போர்வைகளை தலைப்பக்கம் இழுத்து விட்டு, சுமைகளுடன் நடந்தார்கள்.

ஊன்றுகோலை நடைப்பாதையில் வேக வேகமாக ஊன்றி, ஒரு கிழவி ஆலமரத்திற்குக் கீழே இருந்த கணபதியின் சிலைக்கு முன்னால் போய் நின்று ஞாபகப் படுத்தினாள்: 'பிள்ளையாரே, நீ எல்லாத்தையும் பார்த்துட்டே!'

கணபதி விக்கிரகத்தில் யாரோ வைத்துப் பூசிய செந்தூரம் பிரகாசித்தது. இரத்தம் வழிந்து கொண்டிருக்கும் முகத்துடன் அந்த விக்கிரகம் முழுமையான வெயிலை ஏற்று, கோபத்துடன் நின்று கொண்டிருந்தது.

பெட்டிக் கடைகளை உடைத்து பிரித்தார்கள். குடிசைகளை பலவந்தமாக அகற்றினார்கள். பாத்திரங்கள், கிழிந்த துணிகள், நெளிந்த தகரப் பெட்டிகள், குடைகள், இணைப்புகள் விட்ட கிழிந்த பாய்கள், எண்ணெய்யும் அழுக்கும் சேர்ந்து படர்ந்து யானைப் பிண்டத்தைப் போல காணப்பட்ட தலையணைகள், ஆபாசமான மாத இதழ்கள், உடலுறவு சம்பந்தப்பட்ட படங்கள் - அனைத்தும் தெருவில் சிதறிக் கிடக்கின்றன.

அவற்றைப் பெருக்கி ஒன்று சேர்த்து நகராட்சியின் லாரியில் கொண்டு போய் போடுவதில் சுறுசுறுப்பாக இருந்தார்கள். அவர்கள் நகரத்தை அழகாக்கிறார்கள்.

'சுற்றுலா பயணிகள் வருவார்கள். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வருவார்கள். மாநிலத்தின் மற்றும் மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் அரசாங்கத்தின் பெருமையைக் காப்பாற்ற வேண்டும்'- இப்படி யாரோ கூறிக் கொண்டிருப்பதும் காதில் விழுந்தது. கண்ணம்மாவிற்கு அர்த்தம் புரியவில்லை. அவள் அப்போதும் கண்களை அகல திறந்து வைத்து பார்த்தவாறு, வளைவைப் போல உயர்ந்து நின்று கொண்டிருக்கும் ஆலமரத்தின் வேரின் மீது அமர்ந்திருந்தாள்.

காவிக் கரை பூசப்பட்டிருந்த கோவிலின் வெளிச் சுவரில் சாய்ந்து அவள் அமர்ந்திருந்தாள். மேலே இருந்த கல் விளக்கிலிருந்து வழிந்து கொண்டிருந்த எண்ணெய் பட்டு, அவளுடைய சிதறிய தலை முடிகள் ஒன்று சேர்ந்திருந்தன.

அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதாவது தெரிகிறதா? மெதுவாக கண்கள் மனதிற்குள் விழுந்து கிடந்தன.

'கண்ணம்மா!'

அந்த அழைப்பு தூரத்திலிருந்து கேட்பதைப் போல தோன்றியது. தன்னைத்தான் அழைக்கிறார்களா என்றும் தோன்றவில்லை.

'அடியே கண்ணம்மா.'

அவள் தலையை உயர்த்தி பார்த்தாள். அந்தப் பெரிய கண்கள் தங்கப்பனின் முகத்திலும் உடலிலும் பயணித்தன. அவனுடைய தோளில் சுமையும், கையில் பையும் இருந்தன.

அவளுடைய கண்கள் தாழ்ந்தன.

தங்கப்பன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சாந்துப் பொட்டு அணிந்த, உயர்தர பலா மரத்தால் செய்யப்பட்ட சிலையைப் போல அவள் இருந்தாள். அவன் உற்சாகத்துடன் கேட்டான்:

'நீ வர்றியாடீ, கண்ணம்மா. அரண்மனை இடிஞ்சிருச்சே!'

தங்கப்பன் தன் கேள்வியை மீண்டும் கேட்டதும், அவள் தலையை உயர்த்தி பார்த்தாள். அப்போது அந்த முகம் பிள்ளையாரின் முகத்தைப் போல சிவந்திருந்தது. மனதில் ஒரு அதிர்ச்சி. எனினும், அவன் கேள்வியை மீண்டும் கேட்டான்:

'வர்றியாடீ?'

'த்தூ...'- ஒரு நீட்டித் துப்பல்தான் பதிலாக இருந்தது. ஒரு சிறிய குலுங்கல். அந்த நீட்டித் துப்பும் சத்தம் பல தடவைகள் கேட்டதுதான். எந்தச் சமயத்திலும் இந்த அளவிற்கு கோபத்துடன் இருந்தது இல்லை. தோளில் இருந்த சுமையைப் பிடித்து தூக்கியவாறு, அவன் நான்கடிகள் நடந்தான். மீண்டும் திரும்பி வந்தான். அவளுடைய முகத்தைப் பார்க்காமலே கூறினான்: 'நான் உனக்காக... தூரத்தில் ஒரு வீட்டை உண்டாக்குவேன்.'

கண்ணம்மா அதை காதில் வாங்கிக் கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

'வீட்டை உண்டாக்குவேன்.'

'அதில் உன்னுடைய பிணத்தை எடுடா. குள்ள எருமையே!'

அதற்குப் பிறகு நிற்கவில்லை. திரும்பிப் பார்த்தவாறு தங்கப்பன் நடந்து சென்றான்.

பிள்ளையார் கோவிலின் ஆலமரத்திலிருந்து இலைகள் உதிர்ந்து விழுந்து கொண்டிருப்பதை மிகவும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணம்மா. பிறகு சுற்றிலும் பார்த்தாள்.

கையில் கிடைத்த பொருட்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு, பெட்டிக் கடைக்காரர்கள் மைதானத்தின் எதிர் பக்கத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள்.

தெரு காலியாகிக் கொண்டு வந்தது.

'உனக்கு இது வேணுமாடீ?'

கண்ணம்மா பார்த்தாள். ஒரு மயிலிறகு விசிறியைப் பிடித்தவாறு இளைஞனான போலீஸ்காரன் முன்னால் நின்று கொண்டிருக்கிறான். முதல் பார்வையிலேயே அவனுக்கு மீசை இல்லை என்பதைத் தெரிந்து கொண்டாள். எனினும், பெண் போலீஸ் அல்ல.

'வேணுமாடீ?'

கண்ணம்மா பதில் கூறவில்லை.

சிறு வயதில் சம்பாதித்து, அப்போதும் நெளிந்து போன தகரப் பெட்டிக்குள் கவனமாக பத்திரப்படுத்தி வைத்திருக்கும் மயிலிறகையைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். மயிலிறகு விசிறியை அவளுடைய மடியின் மீது போட்டு விட்டு நடந்து சென்று கொண்டே, அவன் சொன்னான்:

'உனக்கு இது தேவைதான்.'

கண்ணம்மா வாய் திறக்கவில்லை.

சுப்பய்யனின் பெட்டிக் கடையில் இப்படிப்பட்ட விசிறிகள் ஒரு நாள் தொங்கிக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தாள். ஏதோ சுல்த்தான்மார்கள் வீசுவதற்கு பயன்படுத்தக் கூடிய விசிறிகள் அவை என்று அவன் சத்தம் போட்டு கூறியதையும் அவள் கேட்டிருக்கிறாள்.

போலீஸ்காரன் பார்வையாலேயே அவளை ஒரு இறகால் வருடியவாறு கடந்து சென்றான்.

ஏராளமான நீல கண்கள் மடியில் இருக்கின்றன. அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, மனதில் தோன்றியவை இரண்டு கண்கள்தாம். முருகச்சாமியின் தளர்ந்து போன கண்கள்...

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பூனை

பூனை

November 1, 2012

பார்

பார்

February 15, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel