Lekha Books

A+ A A-

நிர்வாண நிஜம் - Page 18

சம்பாதித்த பணத்தை எங்கோ விட்ட கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும், மலேஷியா வாசுதேவனும்!

சுரா

சொந்தத்தில் படத்தைத் தயாரிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அது ஒரு சர்க்கஸ் கம்பெனியை நடத்துவதைப் போல மிகவும் தலைவலி பிடித்த வேலை. படத் தயாரிப்பில் வெற்றி பெற்றவர்கள் இருபத்தைந்து சதவிகிதம் என்றால், தோல்வியைத் தழுவியவர்கள் எழுபத்தைந்து சதவிகிதம் பேர். என்னதான் கவனமாக இருந்தாலும், ஒரு படத் தயாரிப்பாளர் எப்போது கால் சறுக்கி கீழே விழுவார் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

பல வெற்றிப் படங்களை எடுத்த தயாரிப்பாளர்கள்கூட பின்னர் படவுலகில் இல்லாமலே போயிருக்கிறார்கள். அவர்கள் எப்படி காணாமல் போனார்கள் என்று நம்மாலேயே கண்டு பிடிக்க முடியாது. எந்த அளவிற்கு வெற்றி பெற்று பணத்தைச் சம்பாதித்தார்களோ, அதே வேகத்தில் சம்பாதித்த முழுப் பணத்தையும் விட்டுவிட்டு, ஒன்றுமே இல்லாமல் ஊர் போய்ச் சேர்ந்த மனிதர்களும் நிறைய இருக்கிறார்கள்.

தயாரிப்பாளர்களின் நிலைதான் இப்படி என்றால், சொந்தத்தில் படத்தைத் தயாரிக்கிறோம் என்று இறங்கிய பல நடிகர்- நடிகைகள் எவ்வளவு கோடிகளை இழந்திருக்கிறார்கள் தெரியுமா? உதாரணத்திற்கு சிலரைப் பற்றி மட்டும் இங்கு பார்ப்போம்.

கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் படவுலகில் தொடர்ந்து நடித்து தனக்கென நடிப்பில் ஒரு அருமையான பெயரைச் சம்பாதித்து வைத்திருந்தவர் சாவித்திரி. 'நடிகையர் திலகம்' என்ற பெயருக்குப் பொருத்தமான நடிகையாக அவர் இருந்தார். அவர் படங்களில் நடித்துக் கொண்டு மட்டும் இருந்திருக்கலாம். அப்படி இல்லாமல் படத்தைச் சொந்தத்தில் தயாரிக்கப் போகிறேன், இயக்கப் போகிறேன் என்று களத்தில் இறங்கினார். சிவாஜியைக் கதாநாயகனாகப் போட்டு 'பிராப்தம்' என்ற படத்தைத் தயாரித்து, சாவித்திரியே இயக்கவும் செய்தார். அது முற்பிறவியைப் பற்றிய கதை. நல்ல கதைதான். ஆனால், முற்பிறவி என்ற விஷயம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதன் விளைவாக படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும், அந்தப் படத்தில் இடம் பெற்ற 'நேத்து பறிச்ச ரோஜா', 'சொந்தம் எப்போதும் தொடர் கதைதான்', 'சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து', ‘இது மார்கழி மாதம் முன்பனிக் காலம்’ போன்ற பாடல்களை எந்தக் காலத்திலும் நம்மால் மறக்கவே முடியாது. 'பிராப்தம்' தோல்வி அடைந்ததால், சாவித்திரியின் வாழ்க்கையே திசை மாறியது. அவர் பல லட்சம் ரூபாய்களுக்கு கடனாளியாக ஆனார். கவலையை மறப்பதற்கு மதுவின் துணையை அவர் நாடினார். அவரின் வாழ்க்கை தாறுமாறானது. ஒரு நாள் சாவித்திரி இந்த உலகத்தை விட்டே போய்விட்டார். சொந்தமாக படம் எடுத்ததன் விளைவு இது.

எஸ்.வி.சஹஸ்ரநாமம் 'நாலு வேலி நிலம்' என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். 'படம் பிரமாதமாக வந்திருக்கு. யாருக்கும் விற்காதீங்க. சொந்தத்தில் நீங்களே படத்தை ரிலீஸ் பண்ணுங்க' என்று எல்லோரும் கூறியிருக்கிறார்கள். சஹஸ்ரநாமம், மற்றவர்கள் கூறியதை நம்பி, படத்தை தானே வெளியிட்டார். படம் படு தோல்வி... கடைசியில் தனக்குச் சொந்தமாக ராயப்பேட்டையில் இருந்த இரண்டு வீடுகளை விற்பனை செய்து, படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு சம்பளப் பாக்கியை அவர் தந்திருக்கிறார். கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்த பணத்தில் கட்டிய வீடு, சொந்தத்தில் படத்தைத் தயாரித்ததில் காணாமல் போனது.

பி.எஸ்.வீரப்பா சிவாஜியைக் கதாநாயகனாகப் போட்டு ஆலயமணி, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தயாரித்தார். இரண்டுமே மிகப் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. எம்.ஜி.ஆரை வைத்து 'ஆனந்த ஜோதி' என்ற படத்தைத் தயாரித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயகாந்தை வைத்து சாட்சி, வெற்றி, சபாஷ் ஆகிய படங்களைத் தயாரித்தார். அந்தப் படங்களில் கூட கணிசமாக அவருக்கு லாபம் கிடைத்தது. கார்த்திக்கை வைத்து 'நட்பு' என்ற படம் எடுத்தார். அமீர்ஜான் இயக்கிய அந்தப் படத்தில்கூட லாபமே. ஆனால பின்னர் அவர் தயாரித்த ஓடங்கள், துளசி என்ற இரண்டு படங்களும் மிகப் பெரிய தோல்விகளைச் சந்தித்தன. கடைசியில் கையில் இருந்த பணத்தையெல்லாம் இழந்து, பட்டினப்பாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து, தன்னுடைய இறுதி மூச்சை அவர் விட்டார். மரணமடையும் போது அவரின் கையில் சம்பாத்தியம் என்று எதுவுமே இல்லை.

வி.கே.ராமசாமி வடிவுக்கு வளைகாப்பு, செல்வம், ருத்ரதாண்டவம் என்று பல படங்களைச் சொந்தத்தில் தயாரித்தார். அந்தப் படங்களால் அவருக்கு லாபமே. தன் மகன் வி.கே.ஆர்.ரகுவை கதாநாயகனாகப் போட்டு 'ஜோடிப் புறா' என்ற பெயரில் ஒரு படத்தை அவர் தயாரித்தார். அதில் பயங்கர அடி. அதற்குப் பிறகு பல வருடங்களுக்குப் பிறகு கார்த்திக்கைக் கதாநாயகனாகப் போட்டு 'சுந்தரபாண்டியன்' என்றொரு படத்தைத் தயாரித்தார். இன்று வரை அந்தப் படம் திரைக்கு வரவேயில்லை. இந்த இடத்தில் ஒரு தமாஷான, பரிதாபமான தகவலைக் கூறவேண்டியதிருக்கிறது. ரஜினிகாந்த் ‘அருணாச்சலம்’ படத்தின் மூலம் வி.கே.ராமசாமிக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் அளித்தார். அந்தப் பணத்தை பத்திரப்படுத்தி வைக்காமல், வி.கே.ராமசாமி தன் மகன் இயக்கிய ‘சுந்தரபாண்டியன்’ படத்தை திரைக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக முழு பணத்தையும் அதற்காக செலவிட்டார். அதாவது, மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் முதலீடு செய்தார்.  போட்ட பணம் முழுவதும் இருந்த இடம் தெரியாமல் கரைந்து போனது. வி.கே.ராமசாமியை நினைத்து நம்மால் பரிதாபப்பட முடியாமல் எப்படி இருக்க முடியும்?

 50 வருடங்களாக எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், சிவகுமார், ஏவி.எம்.ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று தொடங்கி பின்னர் வந்த எத்தனையோ கதாநாயகர்கள் நடித்த படங்களிலெல்லாம் இணைந்து நடித்து முத்திரை பதித்த வி.கே.ராமசாமி சொந்தத்தில் படங்களைத் தயாரித்து, பெரிய அளவில் பணத்தை இழந்ததன் காரணமாக தி.நகரில் இருந்த தன்னுடைய சொந்த வீட்டை விற்றுவிட்டு, அதே தெருவில் இருந்த ஒரு ஃப்ளாட்டில் வாடகைக்கு குடியிருந்தார். அவரை அந்த வீட்டில் நான் ஒருமுறை சந்தித்து பேசியிருக்கிறேன். அவருடைய சொந்த வீட்டிலும் அதற்கு முன்பு நான் சென்று பார்த்திருக்கிறேன். அவருடைய இரண்டு நிலைகளையும் நினைத்துப் பார்த்த போது மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

எத்தனையோ வருடங்களாக படவுலகில் இருந்தும், இறுதி காலத்தில் சேமிப்பு என்று எதுவும் இல்லாமலே, வி.கே.ஆர். இவ்வுலகை விட்டு நீங்கினார்.

ஜே.பி.சந்திரபாபு எம்.ஜி.ஆரைக் கதாநாயகனாகவும், சாவித்திரியைக் கதாநாயகியாகவும் போட்டு 'மாடி வீட்டு ஏழை' என்ற பெயரில் படமொன்றைத் தயாரித்தார். படத்தை இயக்கியவரும் அவரே. இரண்டு நாட்கள்தான் படப்பிடிப்பே நடந்தது. எம்.ஜி.ஆர். மொத்தமே ஒன்றரை நாட்கள்தான் அந்தப் படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு என்ன காரணத்தாலோ, அவர் படப்பிடிப்பிற்கே வரவில்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel