Lekha Books

A+ A A-

நான் நடிகன் ஆன கதை - Page 33

naan nadigan aana kathai

பெல்ஃபாஸ்ட்டில் விமர்சகர்கள் வெல்டனை நிறைய விமர்சித்தும், என்னைப் புகழ்ந்தும் எழுதியதை வெல்டனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அன்று இரவு மேடையில் இருக்கும்போது அவர் எனக்கு பலமான ஒரு அடியைத் தந்தார். என் மூக்கிலிருந்து இரத்தம் கொட்டியது. இன்னொரு முறை அவர் அப்படி நடந்தால், மேடையில் இருக்கும் பொருட்களை எடுத்து அவருடைய தலையை அடித்து உடைத்து விடுவேன் என்று நான் அவருக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்தேன்.

சிட்னி திரும்ப வந்தபோது நாங்கள் ப்ரிக்ஸ்டன் சாலையில் ஒரு ஃப்ளாட் வாடகைக்கு எடுத்தோம். சில பழைய வீட்டுச் சாமான்களையும் வாங்கினோம். நன்றாக அலங்கரிக்கப்பட்ட அந்த வீடு எங்களின் கனவாக இருந்தது.

தாத்தாவிற்கு உதவும் அளவிற்கு பொருளாதார வசதி எங்களுக்கு இருந்தது. அதனால் வாரத்திற்கு பத்து ஷில்லிங் தாத்தாவிற்குத் தருவதை நாங்கள் வழக்கமாக்கி விட்டிருந்தோம். வாரத்திற்கு இரண்டு தடவைகள் ஃப்ளாட்டைச் சுத்தம் செய்ய ஒரு வேலைக்காரியையும் நியமித்தோம்.

எனக்கு பத்தொன்பது வயதானது. கார்னோ கம்பெனியின் நகைச்சுவை நடிகர் என்ற முறையில் நான் புகழ் பெற்றவனாக இருந்தேன்.

1909-இல் கார்னோ கம்பெனியுடன் நான் பாரீஸிற்கு நாடகம் நடிக்கச் சென்றிருந்தேன். அங்கு எங்களின் நாடகம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. பிறகு இங்க்லாண்டிற்குத் திரும்பி வந்தோம். சில மாதங்கள் கடந்த பிறகு ‘ஃபுட்பால் மேட்ச்’ நாடகத்தில் ஹாரிவெல்டனுக்கு பதிலாக நடிக்கும்படி கார்னோ என்னைக் கேட்டுக் கொண்டார். அதைக் கேட்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டானது. ஆனால், முதல் ரிகர்சலிலேயே மூச்சு பிரச்னை காரணமாக என்னுடைய குரல் வெளியே வரவில்லை. நாடகம் ஆரம்பமாகி இரண்டு நாட்கள் ஆனபிறகும் பார்வையாளர்கள் கேட்கிற மாதிரி என்னுடைய குரல் உரத்து ஒலிக்கவில்லை. அந்த நாடகத்தில் தொடர்ந்து நடிக்க என்னால் முடியவில்லை.

அந்த உடல் நல பாதிப்பு குணமாக ஒரு மாதமானது. மீண்டும் கார்னோவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். இந்த முறை சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். மக்களிடம் எனக்கு இருக்கும் செல்வாக்கை நன்கு அறிந்திருந்த கார்னோ அதற்கு சம்மதித்தார்.

கார்னோவின் அமெரிக்கன் கம்பெனியின் மேனேஜர் ஆல்ஃப் ரீவ்ஸ் இங்க்லாண்டிற்குத் திரும்பி வந்தார். அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல நல்ல ஒரு நகைச்சுவை நடிகர் வேண்டும் என்பதற்காகத்தான் அவர் இங்கு வந்திருந்தார். அமெரிக்காவிற்குச் செல்வதற்கு நான் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். அன்று நாங்கள் நடித்துக் கொண்டிருந்த ‘ஸ்கேட்டிங்’ என்ற நாடகத்தில் முக்கிய நகைச்சுவை நடிகர் நான்தான். என்னுடைய நடிப்பு ரீவ்ஸுக்கு மிகவும் பிடித்திருந்தது. தான் நினைத்த நகைச்சுவை நடிகரைக் கண்டுபிடித்து விட்டதாக ரீவ்ஸ் கார்னோவிடம் கூறினார். ஆனால், கார்னோ பெரிய அளவில் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டிக் கொள்ளவில்லை. இறுதியில் கார்னோ எழுதிய ‘வவ்வவ்ஸ்’ என்ற நாடகத்துடன் அமெரிக்காவிற்குப் போவது என்று தீர்மானித்தோம். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அமெரிக்காவில் நல்ல ஒரு எதிர்காலம் அமையும் என்று நான் உறுதியாக நம்பினேன்.

1910ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அது நடந்தது. புறப்படுவதற்கு முதல் நாள் இரவு நான் லண்டன் வெஸ்ட் என்ட் தெருக்களில் அலைந்து திரிந்தேன். இனி நான் லண்டனுக்குத் திரும்பி வரவேமாட்டேன் என்று நினைத்தேன். அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கிவிட வேண்டுமென்று நான் மனதில் திட்டம் போட்டிருந்தேன். இரவு இரண்டு மணி ஆகும் வரை நான் நடந்து கொண்டேயிருந்தேன்.

காலையில் சீக்கிரமாக படுக்கையை விட்டு எழுந்தேன். சிட்னியை எழுப்பாமல் மேஜை மீது ஒரு குறிப்பை எழுதி வைத்தேன்:

‘அமெரிக்காவிற்குப் பயணமாகிறேன். உனக்கு எழுதுகிறேன். அன்புடன், சார்லி.’

Page Divider

சார்லி சாப்ளினின் பிற்கால வாழ்க்கை

கார்னோவின் நாடகமும் சாப்ளினின் நடிப்பும் அமெரிக்காவில் மக்களால் கவனிக்கப்பட்டன. சிக்காகோ, நியூயார்க், சான் ஃப்ரான்சிஸ்கோ, கலிஃபோர்னியா, டெக்சாஸ் ஆகிய இடங்களில் நாடகங்களில் நடித்து விட்டு சாப்ளின் மீண்டும் இங்க்லாண்டிற்குத் திரும்பினார்.

அந்தச் சமயத்தில் அவருடைய தாய்க்கு உடல் நலம் பலமாக பாதிக்கப்பட்டிருந்தது. சாப்ளின் தன் தாயை ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார். சிட்னி திருமணமாகி வேறொரு இடத்தில் வசித்துக் கொண்டிருந்தார். ப்ரிக்ஸ்டன் சாலையிலிருந்த ஒரு அறையில் தனியாக வசித்தபோது சாப்ளினுக்கு தனிமை உணர்வு உண்டானது. அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்தது. கார்னோ கம்பெனியுடன் மீண்டும் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அமெரிக்காவில் தங்கியிருந்தபோது, சாப்ளின் ஏராளமான நூல்களைப் படித்து அறிவைப் பெற்றார். நாடகங்களில் சாப்ளினின் நகைச்சுவை நடிப்பைப் பார்த்து கீஸ்டோன் காமெடி ஃபிலிம் கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவரான சால்ஸ் கெஸ்ஸல் அவரை திரைப்படத்தில் நடிக்க அழைத்தார்.

கார்னோ கம்பெனி இங்க்லாண்டிற்குத் திரும்பி வந்தபோது, சாப்ளின் அமெரிக்காவிலேயே தங்கி விட்டார். தொளதொள காற்சட்டை, வட்ட தொப்பி, பெரிய ஷூ, பிரம்பு என்றிருக்கும் சாப்ளினின் தோற்றம் கீஸ்டோன் கம்பெனியில் அவர் உருவாக்கியதுதான். அங்குதான் சார்லி சாப்ளினின் திரையுலக வாழ்க்கை ஆரம்பமானது. பிறகு சிட்னியும் அந்த கம்பெனியில் சேர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஹென்றிலெஹர்மான், மாக்ஸென்னட் ஆகியோரின் இயக்கத்தில்தான் சாப்ளின் நடித்தார். முதலில் கதையும் பிறகு இயக்கமும் கூட அவரே செய்ய ஆரம்பித்தார். கீஸ்டோன் கம்பெனியுடன் போட்ட ஒப்பந்தம் முழுமை பெற்றவுடன் சாப்ளின் எஸ்ஸனே கம்பெனியுடன் சிக்காகோவிற்குச் சென்றார். ‘ஹிஸ் நியூ ஜாப்’ (1915) தான் அங்கு சாப்ளினின் முதல் படம். தொடர்ந்து உள்ள திரைப் படங்களுக்காக நல்ல ஒரு கதாநாயகியைத் தேடி சான் ஃப்ரான்சிஸ்கோவிற்கு வந்தார். அங்குதான் சாப்ளினின் பல திரைப்படங்களிலும் நாயகியாக நடித்த எட்னா பர்வ்யன்ஸை அவர் பார்த்தார். தொடர்ந்து நைல்ஸிலும் லாஸ் ஏஞ்சலீஸிலும் நிறைய திரைப்படங்களைத் தயாரித்தார். ஒவ்வொரு திரைப்படம் வெளியே வரும்போதும், சாப்ளினின் புகழும் வருமானமும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அவருடைய எல்லா வர்த்தகங்களையும் கவனித்துக் கொண்டிருந்தது சிட்னிதான். பிறகு ம்யூச்சுவல் ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். திரைப்படம் தயாரிப்பதற்காக ஹாலிவுட்டின் இதய பகுதியில் ஒரு ஸ்டூடியோவை வாடகைக்கு எடுத்தார். ‘தி ஃப்ளோர் வாக்கர்’ (1916) தான் அங்கு உருவான முதல் திரைப்படம். தொடர்ந்து பதினொரு காமெடிகள் அங்கு தயாரிக்கப்பட்டன.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel