Lekha Books

A+ A A-

நான் நடிகன் ஆன கதை - Page 27

naan nadigan aana kathai

வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒரு கட்டத்தை நெருங்கி விட்டிருக்கிறேன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இனிமேல் எந்தச் சமயத்திலும் நான் வறுமையின் குழந்தை அல்ல. மாறாக, அரங்கத்தின் கதாபாத்திரம்... எனக்கு தேம்பித் தேம்பி அழவேண்டும்போல் இருந்தது.

நடந்தவை ஒவ்வொன்றையும் கேட்டபோது சிட்னிக்கு ஆச்சரியம்தான் உண்டானது. அவன் சிறிது நேரம் அமைதியாக எதுவும் பேசாமல் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவாறு தலையை ஆட்டிக் கொண்டிருந்தான். பிறகு மிடுக்கான குரலில் சொன்னான்: ‘இது நம் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. நம்முடன் கூட நம் அம்மாவும் இப்போ இருந்திருந்தா...?’

‘நீ சிந்திச்சுப் பாரு. ரெண்டு டாலர் பத்து ஷில்லிங் வீதம் நாற்பது வாரங்களுக்கு... பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை நீ பேசிக்குவேன்னு நான் திரு.ஹாமில்ட்டனிடம் சொல்லிட்டேன். ஒரு வேளை நமக்கு கொஞ்சம் அதிகமா கூட இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், இந்த வருடம் அறுபது டாலர்களாவது நாம மிச்சம் பிடிக்கலாம்’- நான் உற்சாகத்துடன் சொன்னேன்.

சிறிது நேரம் பேசிய பிறகு இவ்வளவு பெரிய கதாபாத்திரத்திற்கு இரண்டு டாலர் பத்து ஷில்லிங் போதாது என்று நாங்கள் நினைத்தோம். சற்று அதிகமாக வேண்டும் என்று சிட்னி முயற்சித்தான். ஆனால், ஹாமில்ட்டன் தான் நின்ற இடத்திலேயே நின்றார். இரண்டு டாலர் பத்து ஷில்லிங் நல்ல ஒரு தொகை என்று அவர் சொன்னார். எது எப்படியிருந்தாலும், நாங்கள் மிகவும் சந்தோஷத்தில் இருந்தோம்.

என்னுடைய வசனப் பகுதியைப் படிக்கவும், பார்க்காமல் கூறுவதற்கும் சிட்னி எனக்கு உதவினான். முப்பத்தைந்து பக்கங்கள் வரை நீண்டிருக்கும் ஒரு பெரிய கதாபாத்திரம் அது. எனினும், மூன்றே நாட்களில் நான் அதை மனப்பாடமாக்கினேன். சிட்னி மிகவும் நனறாக எனக்குச் சொல்லித் தந்ததால் ரிகர்சல் நேரத்தில் வசனங்களை மிகவும் அருமையாகப் பேச என்னால் முடிந்தது. சில சொற்களின் உச்சரிப்பை ஸெயின்ட்ஸ்பரி திருத்தினார். முதல் ரிகர்சல் என்னுடைய திறமையை வெளிப்படுத்திக் காட்ட நல்ல ஒரு வாய்ப்பாக இருந்தது. அது நாடகக் கலை என்னும் புதிய உலகத்தை எனக்கு திறந்து தந்தது. நடிப்புத் திறமை, நேர உணர்வு, நிற்பது, திரும்பும்போதும் அமரும்போதும் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்- இப்படி பல அம்சங்கள் இருக்கின்றன என்பதை நான் தெரிந்து வைத்திருக்கவில்லை. நான் அவற்றையெல்லாம் என் இயல்புப்படி செய்து கொண்டிருந்தேன். என்னிடமிருந்த இன்னொரு தவறையும் ஸெயின்ட்ஸ்பரி திருத்தினார். வசனம் பேசும்போது நான் தலையை ஆட்டுவதும், தேவையில்லாமல் அலட்டிக் கொண்டும் இருந்தேன். அதைத்தான் அவர் திருத்தினார்.

சில காட்சிகளில் ரிகர்சல் முடிந்தவுடன் நான் இதற்கு முன்பு நடித்திருக்கிறேனா என்று ஸெயின்ட்ஸ்பரி ஆச்சரியத்துடன் கேட்டார். என்னுடைய நடிப்பு விஷயத்தில் அவரும் உடனிருந்தவர்களும் முழுமையான திருப்தியில் இருந்தார்கள்.

‘ஜிம்’ நாடகம் ஒரு வாரம் கிங்ஸ்டன் தியேட்டரிலும் இன்னொரு வாரம் ஃபுல்ஹாமிலும் நடந்தது. ஞாபக சக்தி இல்லாத ஒரு பணக்காரனின் மகன், ஒரு பூக்காரி, ஒரு பத்திரிகையாளன் பையன்- இவர்களின் கதைதான் அது. பத்திரிகையாளன் ஸாம்மியின் கதாபாத்திரத்தைத்தான் நான் ஏற்று நடித்தேன். நான் பேசிய வசனம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

‘ஜிம்’ அந்த அளவிற்கு பெரிதாக வெற்றி பெறவில்லை. விமர்சகர்கள் கடுமையாக அதற்கு விமர்சனம் எழுதினார்கள். எனினும், நான் கவனிக்கப்பட்டேன். எங்கள் கம்பெனியின் உறுப்பினரான சால்ஸ்ராக் நாடகத்தைப் பற்றிய ஒரு விமர்சனத்தை என்னிடம் காட்டியவாறு சொன்னார்: ‘டேய், பையா... இதைப் படிச்சிட்டு நீ அளவுக்கு அதிகமா துள்ளிடாதே.’ பிறகு அடக்கம், கடவுள் அருள் போன்ற விஷயங்களைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்திய பிறகு, ‘லண்டன் ட்ராபிக்கல் டைம்ஸ்’ பத்திரிகையில் வந்திருந்த அந்த விமர்சனத்தை எனக்கு அவர் படித்துக் காட்டினார். அதிலிருந்த ஒவ்வொரு வாரத்தையையும் நான் இப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன்.

நாடகத்தைப் பற்றி மோசமாக நிறைய கருத்துக்களைக் கூறிய பிறகு, அந்த விமர்சனம் இப்படி தொடர்கிறது: ‘எனினும், அதில் பத்திரிகையாளன் ஸாம்மி கதாபாத்திரம் மிகவும் நன்றாக இருந்தது. ஏற்கெனவே பல நாடகங்களில் நாம் பார்த்த பழமையான கதாபாத்திரமாக அது இருந்தாலும், துடிப்பும் திறமையும் கொண்ட மாஸ்டர் சார்லி சாப்ளின் அந்த கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக செய்திருந்தார். இந்த குழந்தை நட்சத்திரத்தைப் பற்றி முன்பு ஒரு முறை கூட நாம் கேள்விப்பட்டதில்லை. எனினும், குறுகிய எதிர்காலத்தில் சார்லி சாப்ளின் மகத்தான சாதனைகளைச் செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை என்னால் உறுதிபட கூற முடியும்.’ சிட்னி அந்தப் பத்திரிகையின் ஒரு டஜன் பிரதிகளை வாங்கினான்.

‘ஜிம்’ இரண்டு வாரங்கள் நடித்த பிறகு, ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ நாடகத்தின் ரிகர்சல் ஆரம்பமானது. பொருளாதார ரீதியாக நாங்கள் குறிப்பிட்டுக் கூறும் வகையில் சிறப்பான ஒரு நிலையில் இல்லாததால் நானும் சிட்னியும் அப்போது பெளனல் டெரஸ்ஸில்தான் இருந்தோம்.

ரிகர்சலுக்கு மத்தியில் ஒரு நாள் நான் சிட்னியுடன் சேர்ந்து கெய்ன்ஹில்லிற்குச் சென்றேன். என் தாய்க்கு அன்று அந்த அளவிற்கு உடல் நலம் சரியாக இல்லையென்று நர்ஸ் எங்களிடம் சொன்னாள். பிறகு சிட்னியை ஒரு பக்கம் அழைத்து குரலைத் தாழ்த்திக் கொண்டு என்னவோ சொன்னாள். ‘அவனால் அது முடியும்னு நான் நினைக்கல’- சிட்னி கூறுவதை நான் கேட்டேன்.

சிட்னி மிகுந்த கவலையுடன் எனக்கருகில் வந்தான். அவன் மெதுவாக என்னிடம் கேட்டான்: ‘அடைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் இருக்கும் அம்மாவைப் பார்க்க உன்னால் முடியுமா?’

‘வேண்டாம்... வேண்டாம்.... என்னால் அப்படிப் பார்க்க முடியாது’- நான் பின்னால் போய் நின்றேன்.

சிட்னி மட்டும் தனியே போனான். என் தாயைப் பார்த்தான். அவர் அவனை அடையாளம் கண்டு கொண்டார். சிறிது நேரம் கழித்து நர்ஸ் வந்து என் தாய் இப்போது சுகமாக இருக்கிறார் என்றும், பார்க்க விருப்பப்பட்டால் போய் பார்க்கலாமென்றும் என்னிடம் சொன்னாள். நாங்கள் மூன்று பேரும் என் தாயின் அறையில் இருந்தோம். திரும்பும் நேரத்தில் என் தாய் என்னை அருகில் அழைத்து சொன்னார்:

‘எந்தச் சமயத்திலும் பாதை மாறிவிடக் கூடாது. காரணம் அது உன்னை இங்கே கொண்டு வந்துவிடும்.’

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel