Lekha Books

A+ A A-

ராதா, ராதா மட்டும் - Page 4

radha,radha matum

லீலாவுடன் தான் கொண்டிருக்கும் உறவால் தனக்குக் கிடைத்த ஆத்ம திருப்தியை சோதித்துப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்தப் புதிய காம விஷயத்தை அவன் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டான். கருணனுக்கு இதைத் தவிர வேறு வழியே தோன்றவில்லை. காரணம்- லீலாவின் தோழியான ராதாமீதும் அவன் காதல் கொண்டிருந்தான். இரண்டு தோழிகளையும் ஒரே நேரத்தில் காதலித்தான்- ஒருத்தியைப் பற்றி இன்னொருத்திக்குத் தெரியாமலே. தான் உண்டாக்கியிருக்கும் இந்தக் காதல் உறவை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கே இனம் புரியாத மகிழ்ச்சி உண்டானது. இந்த உறவுகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்தை அவன் மவுனமாக ஏற்று மனதில் இருத்திக் கொண் டான். கருணன், சொல்லப்போனால்- உலகத்தில் உள்ள எல்லாப் பெண்களையும் காதலிக்கிறான். இந்த தாகத்தை அவனால் அடக்கவோ, தூக்கி எறியவோ முடியவில்லை என்பதுதான் உண்மை. அவனின் பகல்களிலும் இரவுகளிலும் கனவுகளிலும் ஆட்சி செய்து எதற்குமே அடங்காமல் இருந்த காம வேட்கை, பெண்களின் உடலைப் பற்றிய சதா நினைப்பு, அவனை ஒரு பூதத்தைப்போல விடாமல் பின்தொடர்ந்தது. இப்போது கருணன் படுவேகமாக ராதா இருக்கக்கூடிய இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ஒரு இரவில் லீலாவின் அறையை விட்டுக் கிளம்பிய ராதாவுக்கு கருணன்தான் துணையாகப் போனான். வீட்டுப் படியில் கால் வைக்கிறபோது, கருணனின் ஆசைகளுக்கு நீரூற்றுவது மாதிரி, அவள் அவனை அறைக்குள் வரும்படி

அழைத்தாள். திருவிழாக்கோலம் பூண்டு கொண்டாடிக் கொண்டிருந்த மனதுடன், உலர்ந்துபோன உதடுகளுடன், அவன் ராதாவின் அறைக்குள் நுழைந்து சுற்றிலும் பார்த்தான். இதோ, அவன் இப்போது இன்னொரு பெண்ணின் படுக்கையறையில்!

அவன் சங்கிலி போட்டுக் கட்டப்பட்ட மிருகத்தைப்போல் ஒரு இடத்தில் அமர்ந்தவாறு நகத்தைக் கடித்தான். தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த ராதாவின் ஒவ்வொரு அசைவையும் கண்களைக் குறுக்கிக் கொண்டு ஒருவித ஆர்வத்துடன் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். டாய்லெட்டில் இருந்தவாறு அவள் உண்டாக் கிய சத்தங்கள் அடைக்கப்பட்டிருக்கும் கதவைத் தாண்டி அவன் காதுகளில் பெரிதாக வந்து மோதின. டாய்லெட்டுக்குள் தானும் நுழைந்தால் என்ன என்று தோன்றிய மன ஆசையை மிகவும் கட்டுப்படுத்தி அவன் அடக்கிக்கொண்டான். ராதாவுடன் கொஞ்சமும் காரணமே இல்லாமல் குரலை உயர்த்தியவாறு அவன் என்னவோ பேசினான். தான் வீட்டுக்குள் நுழைந்து நீண்ட நேரம் ஆகிவிட்டது என்ற உணர்வு மனதில் தோன்றிய வுடன், ராதாவின் முகத்தில் கேள்விக் குறியாக ஓடிக்கொண்டி ருந்த பல பார்வைகளையும் பார்த்த அவன், அவளிடம் விடைபெற்றுக் கொண்டு இரண்டு மூன்று படிகளை ஒரே தாவாகத் தாவி வீட்டுக்கு வெளியே வந்து, அவளின் ஒவ்வொரு அசைவையும் பார்வையையும் முக பாவத்தையும் மனதிற்குள் மீண்டும் பலமுறை வலம் வரச் செய்து, தன்னுடைய செயலின் வெற்றி தோல்வியைக் கணக்குப் போட்டு, தன்னுடைய கோழைத்தனத்தின்மேல் கோபம் கொண்டு, எழுந்து வெறுப்பில் இருட்டையும் காற்றையும் மழைத் துளிகளை விழச் செய்யத் தொடங்கியிருந்த ஆகாயத்தையும் சபித்தவாறு அவன் நடந்து சென்றான்.

கருணனுக்கு ராதாவின் வீட்டைப் பற்றி அந்த அளவுக்குத் தான் ஞாபகத்தில் இருந்தது. இப்போது ஆகாயத்தில் திரண்டிருந்த மேகங்களில் இருந்து மழைத்துளிகள் விழ ஆரம்பித்தன. கருணனுக்கு என்ன காரணத்தாலோ வெறுப்பு தட்டியது. முன்பு பலமுறை தான் அனுபவித்திருக்கும் நிராசை யான சம்பவங்களை நினைத்துப் பார்த்து, கொஞ்சமும் எதிர்பார்க்காமல் வந்த இந்த மழையை ஒரு கெட்ட சகுனமென பார்த்தான் அவன். என்ன நடக்கிறது? அவன் கவலையில் மூழ்கினான். ஒருவேளை ராதா வீட்டில் இல்லாமல் இருக்கலாம். இல்லாவிட்டால் தன்னை அவள் உள்ளே அனுமதிக்காமல் வெளியே துரத்திவிடலாம். இல்லாவிட்டால் தன்னைப் பற்றி லீலாவிடம் புகார் பண்ணலாம். அதுவும் இல்லாவிட்டால் மீண்டும் ஒரு படுக்கையறையில் மாறி மாறி நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு மூச்சுவிடாமல் பல மணி நேரங்கள் எதையாவது பேசிக்கொண்டு வெறுமனே திரும்பிவர வேண்டும். ராதாவின் உடலுக்குள் மறைந்திருக்கும் ரகசியங்கள் கருணனின் மனதில் ஆட்சி செய்துகொண்டிருந்த ஆவலைத் தீ மூட்டி எரிய விட்டு, அவன் நடையை வேகப்படுத்தச் செய்தன. அவன் மனதில் லீலாவைப் பற்றிய நினைவு ஒன்றிரண்டு முறை தலையை நீட்டியபோது, அதைக் கண்டும் காணாதது மாதிரி அவன் நடித்தான். "யாருக்குத் தெரியும்?' அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்: "மழையே எனக்கு ஒரு சாதகமான விஷயமாக இருக்கலாம். வெளியே பெய்த மழையோட சத்தம் லீலாவைப் புதிய ஆசைகளால் நிரப்பலியா? அதே மாதிரி இந்த மழை இன்னைக்கு எனக்கொரு வரப்பிரசாதமா இருக்கட்டும்...'

இப்படிப் பல விஷயங்களையும் மனதில் அசை போட்டவாறு கருணன் ராதாவின் வீட்டைத் தேடி நடந்து கொண்டே இருந் தான். வீட்டின் முகவரி தனக்குத் தெரியாது என்றாலும், வீடு இருக்கும் இடம் தனக்கு நன்றாகத் தெரியுமே என்ற எண்ணத்து டன் அவன் நடந்தான். வீட்டுக்கு முன்னால் ஒரு பாலா மரம் இருந்தது. கீழே ஒரு மோட்டார் சைக்கிள், கார் ரிப்பேர் பார்க்கும் கடை. மாடியில் இருந்த அவுட் ஹவுஸ்தான் ராதாவின் வீடு. அதன் ஜன்னல்களில் சிவப்பு நிறத்தில் திரைச்சீலையைப் பார்த்தது கருணனின் ஞாபகத்தில் இருந்தது. அந்த வீட்டின் பிரதான வாசலில் இரண்டு பெரிய நாய்கள் இருந்ததையும் அவன் நினைத்துப் பார்த்தான். அந்த நாய்கள் ராட்சசத்தனமாக அன்று நின்றிருந்தன. வெறும் தோற்றம்தான். ஆனால் ரொம்ப ரொம்ப சாது.

அவன் அவற்றைப் பார்த்து பயந்து நடுங்கிக் கொண்டிருக்க, அவை அவனுக்குப் பக்கத்தில் போய் நின்று விசிறிகளைப் போன்ற வால்களை ஆட்டி கொட்டாவி விட்டவாறு அவனின் கைகளை நக்க ஆரம்பித்தன. இதை நினைத்துப் பார்த்த கருணன் "ஹா... ஹா... ஹா...' என்ற வாய்விட்டுச் சிரித்தான். இப்போது கருணன் ஏ-ப்ளாக்கிலிருந்து பி-ப்ளாக்கிற்கும் அங்கேயிருந்து டி-ப்ளாக்கிற்கும்  அங்கேயிருந்து ஒரு சுற்று சுற்றி சி-ப்ளாக்கிற் கும், பிறகு வழி தவறி எஃப்-ப்ளாக்கிற்கும் என்று போய்க் கொண்டிருந்தான். ஆங்காங்கே மனிதர்கள் உலாத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களிடம் விசாரிக்கலாம் என்றால், வீட்டின் முகவரி தெரியவில்லை. அந்த முட்டாள் நாய்களைத் தவிர அவனைப் பொறுத்தவரை அந்த வீட்டைப் பற்றிய எந்த அடையாளமும் அவனிடம் இல்லை. பாலா மரங்கள் என்று பார்த்தால் ஏகப்பட்ட பாலா மரங்களை அவன் கடந்து வந்துவிட்டான். எத்தனையோ சிவப்பு திரைச் சீலைகளை யும் பார்த்தாகிவிட்டது. தான் இப்போது தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு கருணனுக்கு ஏறக் குறைய உண்டாகிவிட்டது. அவன் கால்கள் வலிக்க ஆரம்பித்தன.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel