Lekha Books

A+ A A-

சதையின் நமைச்சல்களுக்கு நடுவில்... - Page 7

Sadhaiyin Namaichalkalukku Naduvil...

 

சுரேந்திரன் ஒரு மருந்தை பயன்படுத்த ஆரம்பிக்கிறான். கடுமையாக இரண்டு மாதங்களுக்கு பத்தியம் இருக்க வேண்டும். அந்த விஷயம் மாலதிக்கு அந்த அளவிற்குப் பிடிக்கவில்லை. ஆனால், உடல் நலத்தைச் சீராக வைத்திருப்பதற்கு அது அவசியமான விஷயம். மருந்து பயன்படுத்துவதற்கு முந்தைய நாள் இரவு வேளையில் அவனுடைய மார்பில் தலையை வைத்து கொண்டு அவள் விரக வேதனையில் இருப்பதைப்போல சொன்னாள்:

'இரண்டு மாதங்கள்! என்னால முடியாது.'

அவனுக்கும் கூறுவதற்கு விஷயம் இருந்தது:

'நான் எந்த ஒரு மருந்தையும் பயன்படுத்தியவன் அல்ல. நான் மருந்து பயன்படுத்துவதற்குக் காரணமே நீதான்.'

'பிறகு எதற்காக என்னைக் கல்யாணம் பண்ணினீங்க?'

அதற்கு பதில் கூறுவது என்பது அவ்வளவு நல்லதாக இருக்காது. அவன் அவளை வருடிக் கொண்டே சொன்னான்:

'நீ என்னுடைய பொக்கிஷமாச்சே! ஆனால்... இருந்தாலும்... இரண்டு மாதங்களுக்காவது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க முடியுமா என்று பார்க்க வேண்டாமா?'

'என்னால முடியாது. எனக்குச் சரியா வராது' என்று கையற்ற நிலையில் அவள் சொன்னாள்.

சுரேந்திரன் கேட்டான்:

'பிறகு நீ என்ன செய்வே? வேற யாராவது...'

அவன் அவ்வளவுதான் கூறியிருப்பான். அவள் வேகமாக எழுந்து கோபத்துடன் கேட்டாள்:

'என்ன சொன்னீங்க?'

அவனுடைய கை அவளுடைய கையில் சிக்கி படாத பாடு பட்டது. அவன் சிரித்துக் கொண்டே சொன்னான்:

'என் கையை நசுக்காதே. நான் சும்மா சொன்னேன்.'

'சும்மா இதைச் சொல்லலாமா?'

தொடர்ந்து அவள் கூற ஆரம்பித்தாள்:

'நான் மோசமானவள். என்னைக் கல்யாணம் பண்ணினதுனால, உடல் நலம் போயிடுச்சு. நான் அடக்க முடியாதவள். எல்லாம் சரி... அதற்காக என்னை அப்படியா நினைக்கிறது?'

சுரேந்திரன் சற்று வருத்தப்பட்டான்.

'அப்படி நான் சொன்னேனா? உனக்கு தமாஷ் என்றால் என்னன்னு தெரியாதா?'

அவள் ஒரு தீர்மானம் எடுத்தாள்.

'எனக்கு முடியவே முடியாமப் போச்சுன்னா, நான் பத்தியத்தை முடக்கிடுவேன்.'

சுரேந்திரன் அதற்கு சம்மதித்தான்.

* * *

பிரபாகரனின் மனைவி எங்கோ விருந்திற்காகச் சென்றிருந்தாள். அவனுக்கு அங்கிருந்து உயரத்தில் வடக்குப் பக்க வீட்டைப் பார்ப்பதற்கு சம்மதமும் சுதந்திரமும் கிடைத்தன. அப்படி பார்த்துப் பார்த்து அவன் மாலதியை அவளுடைய வீட்டின் தெற்குப் பக்கத்திலிருந்த சுவருக்குக் கொண்டு வந்து விட்டான். அவன் சுவருக்கு அருகில் சென்றான். தலையை உயர்த்தி அவன் கேட்டான்:

'இப்போ பயம் இருக்குதா?'

பதில் இல்லை. மாலதி மறைந்து போய் விட்டாள். மேலும் சிறிது நேரம் அதே இடத்தில் நின்றிருந்து விட்டு, பிரபாகரன் திரும்பி நடந்தான். சிறிது தூரம் போய் விட்டு அவன் திரும்பிப் பார்த்தான். பழைய இடத்தில் மாலதி நின்று கொண்டிருந்தாள். அவள் கையால் அசைத்து அவனை அழைத்தாள். தொடர்ந்து சுவரின் மறைவில் அமர்ந்து கொண்டாள்.

பிரபாகரனால் அதை நம்ப முடியவில்லை. அது ஒரு தோணலாக இருக்குமோ? அவன் மேலும் சிறிது தூரம் மீண்டும் நடந்தான். அதற்குப் பிறகு திரும்பிப் பார்த்தான்.

அவள் அங்கு நின்றிருந்தாள். அவள் அப்போதும் கையால் அசைத்து அழைத்தாள். இந்த முறை தன் கண்கள் தன்னை ஏமாற்றவில்லை என்பது அவனுக்கு உறுதியாக தெரிந்து விட்டது. அவன் கேட்டான்:

'நான் வரட்டுமா?'

அவள் சம்மதிப்பதைப் போல தலையை ஆட்டினாள்.

* * *

சாளரத்தின் அருகில் பிரபாகரனின் வீட்டையே பார்த்துக் கொண்டு மாலதி நின்றிருந்தாள். அவளுக்குப் பின்னால் திறந்து கிடந்த கதவிற்கு அருகில் பிரபாகரன் சற்று தயங்கிக் கொண்டே நின்றிருந்தான். அவள் மெல்லிய ஒற்றை மடிப்பு துணியொன்றை அணிந்திருந்தாள். அவள் கையால் அசைத்து அழைத்தது மட்டும் ஞாபகத்தில் இருந்தது. அவள் நின்று கொண்டிருந்த விதம் அவனை பைத்தியம் பிடிக்கச் செய்தது.

பிரபாகரன் தன்னையே மறந்து விட்டவனைப் போல கையை நீட்டியவாறு அவளை நோக்கி பாய்ந்து வந்தான். அவன் சுய உணர்வு இல்லாதவனைப் போல அவளைக் கட்டிப் பிடித்தான்.

'அய்யோ!'

அவளுடைய அதிகபட்ச உரத்த குரலில் கூச்சல்...

பிரபாகரனை அவள் பலத்தை பயன்படுத்தி தள்ளி விட்டாள். அவன் எதிர் திசையிலிருந்த சுவரில் மோதி நின்றான்.

உரத்த குரலில் கத்தியவாறு அவள் ஓடிக் கொண்டிருந்தாள்.

ஒரே நிமிடத்தில் பிரபாகரன் சுய உணர்வு நிலைக்கு வந்து விட்டான். இனிமேலும் அங்கு நின்று கொண்டிருப்பது சரியல்ல என்று அவன் நினைத்தான். ஒருவேளை அப்படிச் சென்று கட்டிப் பிடித்தது தவறாக இருந்திருக்கலாம். அவன் அங்கிருந்து வெளியேறி தப்பித்தான்.

சுரேந்திரன் வந்தபோது, கோபத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு நின்று கொண்டிருந்த மாலதி சொன்னாள்:

'கீழே வசிக்கிறவனை இன்னைக்கு... இப்போதே அங்கிருந்து வெளியேற்றணும்...'

சுரேந்திரனுக்கு என்ன விஷயம் என்று புரியவில்லை.

அவள் சொன்னாள்:

'அவன் வந்து என்னை கட்டிப் பிடிச்சான். கற்பழிக்க முயற்சி பண்ணினான்.'

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel