
"உனக்கும் காலா காலத்துல கல்யாணம் ஆகி இருந்தா, இவங்க மாதிரி ரெண்டு குழந்தைங்க இருந்திருக்கும். உனக்காக முயற்சி எடுக்கற வரன்கள் எதுவுமே ஒத்துவர மாட்டேங்குது. எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு சுதா."
"த்சு... என் தலை விதி எப்படியோ அதுவே நடக்கும் ராகி. உனக்கு கிச்சன்ல ஏதாவது ஹெல்ப் பண்ணணுமா?"
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ போய் குளிச்சுட்டு ஆபீசுக்கு புறப்படு. வியாழக்கிழமை பெங்களூர் போறீங்களாமே? வந்தபிறகு நாம்ப எல்லாரும் தோட்ட வீட்டுக்கு போகலாம்."
"தோட்ட வீடா?"
"உன் கிட்ட தோட்ட வீடு பத்தி சொல்லவே இல்லையோ? மகாபலிபுரம் போற வழியில, நீலாங்கரையில இவர் ஒரு இடம் வாங்கி, அங்க ஒரு குட்டி பங்களா கட்டியிருக்கார். பங்களாவை சுற்றி தோட்டம். ரொம்ப சூப்பரா இருக்கும். அமைதியான ஏரியா. பிள்ளைங்களுக்கு லீவு விட்டு, அவரும் ஃப்ரீயா இருந்தா, அப்பப்ப அங்கே போயிடுவோம். ஸ்விம்மிங்பூல் கூட அங்க இருக்கு. குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். நாமதான் வெள்ளிக்கிழமை போப்போறோமே, உனக்கு அந்த இடம் ரொம்ப பிடிக்கும் பாரேன்."
"சரி ராகி, நான் போய் குளிச்சு ரெடியாகறேன்."
பெங்களூர் ஹைவேஸ் சாலையில் மதனின் சென்னை ஃபோர்ட்டு கார் விமானம் பறப்பது போல் ஜிம்மென்று சாலையில் வழுக்கி சென்று கொண்டிருந்தது. லாவகமாக காரை ஓட்டிக் கொண்டிருந்த மதனை தன்னையும் அறியாமல் ரசித்தபடி உட்கார்ந்திருந்தாள் சுதா.
இடுப்பில் அவள் செருகி இருந்த கர்சீப் நழுவி விழுந்தது. அதை எடுப்பதற்காக குனிந்தாள். அதே சமயம் கியர் மாற்றுவதற்காக கியரின் மீது மதன் கை வைத்தான். சுதாவின் மீது மதனின் கைகள் பட்டது.
"சாரி.."
மதன் 'சாரி சொன்னது கூட சுதாவின் காதில் விழவில்லை. அவளது உணர்வுகள் எங்கோ மிதந்தன. மதனின் மனதிலும் ஒரு புரட்சி. ராகினியைத் தவிர வேறு பெண்ணைத் தொட்டு அறியாத அவனுக்கு அந்நியப் பெண்ணான சுதாவின் தொடு உணர்வு ஒரு புதுமையான உணர்வை அளித்தது. முதிர் கன்னி என்றாலும் கன்னி அல்லவா? கன்னிப் போகாமல் கனிந்திருந்தாள்.
"சுதா, உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நானும், ராகினியும் எடுத்த முயற்சி எல்லாம் தோல்வி ஆயிடுச்சு. உன்னைப் பத்தி ராகினி ரொம்ப கவலைப்படறா."
"எனக்காக கவலைப்பட சில ஜீவன்கள் இருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனால் மதன்.. எனக்கே எனக்குன்னு யாருமே இல்லையேன்னு உள் மனசுக்குள்ள ஆழமா நினைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு." திடீரென்று மடை திறந்த வெள்ளம் போல கண்ணீர் பொங்கி வர குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள் சுதா.
"சுதா... சுதா.. என் ஆச்சு?" பதறிய மதன் காரை ஒரு ஓரமாக நிறுத்தினான்.
"ஏன் சுதா? இப்படி அழற?" முகத்தை மூடியுள்ள அவளது கைகளை தன் கைகளால் விடுவித்தான். அவளது கண்ணீரைத் துடைத்தான். அந்த பரிவில் உள்ளம் நெகிழ்ந்து போன சுதா அவன் மடியில் முகம் புதைத்து மேலும் அழுதாள். அவளது அழுகையை அடக்குவதற்காக அவளை அணைத்தான் மதன். அந்த அணைப்பில் சிலிர்த்துப் போன சுதா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"இப்பவே, இந்த நிமிஷமே என் உயிர் போயிடணும் மதன்."
"நீ... நீ.. ஏன்... இப்படி பேசற சுதா...?"
"எனக்கும் ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழணும்னு கனவு இருந்துச்சு... ஆனால் இதோ இப்ப உங்க அணைப்பிலே இருந்த அந்த சில நிமிடங்கள் போதும்னு ஃபீல் பண்றேன் மதன். ஐ லவ் யூ."
"சுதா...?"
"என்ன மதன் யோசிக்கறீங்க? நான் சொன்னது தப்பா?"
"அது... அது... வந்து..."
"தெரியும் மதன். கல்யாணம் ஆகி மனைவி, குழந்தைகள்னு இருக்கிற நீங்க எப்படி என்னை 'ஐ லவ் யூ சொல்ல முடியும்னு தானே யோசிக்கறீங்க. நீங்க ஐ லவ் யூன்னு சொல்லாட்டாலும் பரவாயில்லை, நான் உங்களைக் காதலிக்கிறேன். மனப்பூர்வமா விரும்பறேன்."
பதில் ஏதும் கூறாமல் மதன் காரை, ஸ்டார்ட் செய்தான்.
கார் பெங்களூரை நோக்கி விரைந்தது.
பெங்களூருக்கு வந்து சேர்ந்ததும் அவர்கள் சந்திக்க வேண்டிய பசவப்பாவின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு பேசி முடித்தாள் சுதா.
"என்ன சுதா? பசவப்பா மீட்டிங் ப்ளேஸ்ல ரெடியா இருக்காரா?"
"இல்லை மதன், அவரோட அம்மாவுக்கு திடீர்னு சீரியஸாகி நர்ஸிங் ஹோம்ல அட்மிட் பண்ணி இருக்காராம். நம்பளுக்கு ஆட்சேபனை இல்லைன்னா நாளைக்கு சந்திக்கறதா சொன்னாராம். அவரோட செக்ரட்டரிதான் சொல்றா."
"நாளைக்கா? இன்னிக்கு அவரைப் பார்த்ததும் மெட்ராஸ் புறப்படறதா நம்ப ப்ரோக்ராம். நாளைக்கு பார்க்கறதா இருந்தா... ம்.. என்ன.. செய்யலாம்? சரி, ஒண்ணு செய்யலாம். நமக்கு பெங்களூர்ல பசவப்பாபை பார்க்கறதைத் தவிர வேற வேலை இல்லை. அதனால, இன்னிக்கு பெங்களூரை சுத்தி ஒரு விஸிட் அடிக்கலாம். சாயங்காலம் பசவப்பாவோட செக்ரட்டரிக்கு போன் அடிச்சு பார்க்கலாம். நாளைக்கு ஷ்யூரா நம்பளை பசவப்பா மீட் பண்றாருன்னா அவரைப் பார்த்துட்டு போகலாம்."
பல முறை பிஸினஸ் விஷயமாக பெங்களூர் வந்திருந்தாலும் முக்கியமான சுற்றுலா இடங்களை மதன் பார்த்ததே இல்லை. வந்ததும் வேலை முடிந்ததும் கிளம்பி விடுவான். இந்த முறை தானாக வாய்ப்பு நேரிட்டபடியால் சுதாவுடன் முக்கியமான எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தான். பசவப்பாவின் செக்ரட்டரிக்கு போன் செய்தாள் சுதா.
"என்ன சுதா? என்ன ஆச்சு? செக்ரட்டரி என்ன சொன்னார்?"
"பசவப்பா நாளைக்கு காலையில நம்பளை மீட் பண்றாராம்."
"அப்பிடின்னா அவரை மீட் பண்ணிட்டு நாளைக்கு மெட்ராஸ் புறப்படலாம்."
"நான் மாத்து ஸாரி எதுவும் கொண்டு வரலையே...?"
"அதுக்கென்ன? 'பிக் கிட்ஸ் கெம்ப் போய் ஸாரி, இன்டீரியர் ஐட்டம் எல்லாம் வாங்கிடலாம்."
'பிக் கிட்ஸ் கெம்ப் வாசலில் கார் நின்றது. சிறுவர் சிறுமிகளை கவரும் விதமாக முயல், கிளி, குதிரை வடிவத்தில் வேஷமிட்ட மனிதர்கள் முன் பக்கம் நின்று வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். கடை மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. ஒரு பக்கம் அழகிய பெண்கள் கவர்ச்சிகரமான விதவிதமான உடைகளை அணிந்தபடி மினி ஃபேஷன் பரேட் நடத்திக் கொண்டிருந்தனர்.
அளவுக்கு மீறிய மேக்கப்புடனும், ஆடை அலங்காரத்துடனும் காணப்பட்ட சிகப்பு நிற பெண்கள் புடவை விற்பனை பகுதியில் இவர்கள் இருவரையும் வசீகர சிரிப்பினால் வரவேற்றார்கள். சேலைகளைத் தேர்ந்தெடுத்தான் மதன்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook