
"நீ எங்கேயும் போக வேணாம். நீ இங்கே இருக்கிறதுனால எனக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. என்கூட பிறந்தவளா இருந்தா வெளியே அனுப்பிடுவேனா? இனிமேல் ஹாஸ்டலுக்கு போறதைப் பத்தின பேச்சையே எடுக்காதே. சொல்லிட்டேன்."
ராகினியின் அன்பும், பாசமும் சுதாவின் கண்களில் நீரை நிறைத்தது.
ஞாயிற்றுக் கிழமைகளில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டனர். வெளியே எங்கே போனாலும் சுதாவையும் கூடவே அழைத்துக் கொண்டு போனார்கள். குழந்தைகளுடன் கலகலப்பாக சிரித்துப் பேசி மகிழ்ந்த சுதா வெறுமையான, வெறித்த பார்வையை மறந்திருந்தாள். மாறுதலான சந்தோஷமான சூழ்நிலையில், அவளது கண்களை சுற்றிய கருவளையம் காணாமல் போனது.
இரவின் மடியில் நிலவு அமைதியான நித்திரையில் ஆழ்ந்திருந்தது. ராகினியின் மீது கைகளைப் போட்டபடி காதோரமாய் கிசு கிசுத்தான் மதன்.
"ராக்கம்மா"
"என்ன, ஐயாவுக்கு தூக்கம் வரல்லியாக்கும்?"
"ம்... புரிஞ்சா சரி" மேலும் இறுக்கமாக அணைத்தவனுடன் இணக்கமாக தன்னைக் கொடுத்தாள் ராகினி. விடிவதற்கு முன்பாகவே விழித்துக் கொண்டவள், அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் மதனை எழுப்பினாள்.
"என்னம்மா?"
"நான் ஒரு விஷயம் சொன்னேன். அதைப் பத்தி நீங்க எதுவுமே சொல்லலியே?"
"எதைப் பத்தி?"
"சுதாவுக்கு மாப்பிள்ளை விசாரிக்க சொன்னேனே?"
"ஓ. அதுவா? அதுக்கா இந்த விடியக்காத்தால எழுப்பினே? நல்ல பொண்ணும்மா நீ. என் ஃப்ரெண்டு செந்தில் குமாரை உனக்கு தெரியுமில்ல?"
"யாருங்க? சினிமா டைரக்டர் செந்தில் குமாரா? உங்க கூட காலேஜ்ல படிச்சதா சொல்லுவீங்களே அவர்தானே?"
"ஆமாம். அவனோட சொந்தக்காரப் பையன் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுட்டு அமெரிக்காவுல நல்ல வேளையில இருக்கானாம். 32 வயசு ஆகுதாம். செந்தில் குமார் கிட்ட சுதாவைப் பத்தி சொல்லி அந்த பையனுக்கு கேட்க சொல்லியிருக்கேன். என்ன பதில் வருதுன்னு பார்க்கலாம்."
"ஜாதகத்தைப் பத்தி ஏதாவது கேட்டாங்களாமா?"
"இது வரைக்கும் கேட்கலை. இனிமேல் கேட்டாலும் கேட்கலாம்."
"ஜாதகம் கேட்டாங்கன்னா கஷ்டம்தான். இல்லீங்க?"
"பார்க்கலாம். இந்த மாப்பிள்ளை இல்லைன்னா வேற மாப்பிள்ளை விசாரிக்கலாம்."
"சுதாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்சு, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்ங்க."
"எல்லாம் நல்லபடியா அமையும். நீ கவலைப்படாதே. இன்னும் விடியறதுக்கு நேரம் இருக்கு. இப்ப நிம்மதியா தூங்கு." அவளது தலையை தன் தோள் மீது சாய்த்துக் கொண்டான் மதன்.
ஆபீஸில் பொறுப்பாக பணிபுரிந்து மதனின் வேலைகளில் பாதியை சுதா ஏற்றுக் கொண்டாள். நாளடைவில் அவள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டாகி பணப் பொறுப்புகளையும் அவளிடம் ஒப்படைக்க ஆரம்பித்தான் மதன்.
இதற்கிடையே, சுதாவிற்கு பார்த்து விசாரித்த வரன்கள் எல்லாம் தட்டிப் போனது. பெரும்பாலும் ஜாதகம் காரணமாகவே சுதாவை பெண் கொள்ள மறுத்தனர்.
ஞாயிற்றுக் கிழமை இந்து, மங்கையர் மலர், தினமலர் என்று எல்லா பத்திரிகைகளிலும் மணமகள் தேவை விளம்பரம் பார்த்து பொறுமையாய் எழுதிப் போட்டாள் ராகினி. பலன் பூஜ்யமாக இருந்தது.
ஒரு நாள், ஆபீஸில் மதிய உணவு இடைவேளை, வீட்டிலிருந்து வந்திருந்த டிபன் கேரியரை எடுத்து மேஜை மீது வைத்தாள் சுதா. மதனின் பிளேட், டம்ளர், ஸ்பூன் எடுத்து வைத்தாள். ஃபிரிட்ஜில் இருந்து ஐஸ் வாட்டர் பாட்டிலை எடுத்து டம்ளரில் ஊற்ற முற்பட்டாள். கை தவறி தண்ணீர் கொட்டியது. நாற்காலியில் உட்கார்ந்திருந்த மதனின் ஷர்ட் மீது தண்ணீர் தெறித்தது.
பதறிய சுதா, தன் கர்சீப்பால் அவன் ஷர்ட்டை துடைத்தாள்.
"ஸாரி, ஸாரி" என்றபடியே துடைத்தவளின் இதயத்தில் மின்சார அலைகள் பாய்ந்தது போன்ற உணர்வு. முதல் முதலாக ஒரு ஆடவனின் ஸ்பரிசம் பட்ட புதுமையான அனுபவத்தில் தன்னை மறந்தாள். தன் சூழ்நிலையை மறந்தாள். மதன் அணிந்திருந்த ஷர்ட்டின் மேல் பட்டன் போடப்படாமல் இருந்த படியால் அவனது மார்பு முடிகளின் மீது அவள் கை பட்டது. பட்ட கையை எடுக்க மனமின்றி தவித்தாள்.
"சுதா" மதன் கூப்பிட்ட பிறகுதான் தன் உணர்வுக்கு வந்தாள். ஒரு கணம் தடுமாறிவிட்ட தன் புத்தியை மனதிற்குள் நொந்துக் கொண்டபடி அவனுக்கு பரிமாறினாள். வழக்கமாய் லஞ்ச் நேரத்தில் கூட ஆபீஸ் விஷயங்களை அலசிப் பேசும் அவர்கள் இருவரும் அன்று எதுவும் பேசாமல் சாப்பிட்டு எழுந்தனர்.
சுதாவின் படுக்கை அறை. இரவு விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் நினைவலைகளால் தாக்கப்பட்டு தூக்கம் இழந்து தவித்துக் கொண்டிருந்தாள் சுதா.
'இனி விளக்கை அணைத்தாலாவது தூக்கம் வருகிறதா பார்ப்போமே எண்ணமிட்டபடி எழுந்தாள். கட்டிலின் அருகே மேஜை மீதிருந்த தண்ணீர் ஜக் அவளது கை பட்டு சரிந்தது. தண்ணீர் வழிந்தது. உடனே அன்று மதிய உணவு இடைவேளையில் மதன் மீது தண்ணீர் கொட்டி விட்ட சம்பவம் நெஞ்சில் நிழலாடியது.
மதனின் ஸ்பரிஸ உணர்வு அவளுக்குள் இன்ப வீணையை மீட்டியது. ஆனால்... ஆனால்... இது தப்பு. மதன் ராகினியின் சொத்து. ராகினியின் உயிர். வாழ்க்கைக்கு உயிர் கொடுத்தவளின் உயிரை என் மனம் நாடக் கூடாது. உப்பிட்டவளை உள்ளளவும் நன்றியுடன் நினைத்து வாழ வேண்டும். மனசாட்சி இடித்தது. மறு நிமிடமே மதனின் மார்பில் பட்ட கைகளில் ஏற்பட்ட சுகம் அவளது உள்ளத்தை தடுமாற வைத்தது.
மதன் ஷேவ் பண்ணிக் கொண்டிருந்தான்.
"என்னங்க, பிள்ளைங்களுக்கு நாலு நாள் லீவு வருது. நம்ப தோட்ட வீட்டுக்கு போய் இருந்துட்டு வரலாமா?"
"லீவு என்னைக்கும்மா?"
"வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு நாலு நாள் லீவாம்."
"வியாழக் கிழமை நான் பெங்களூர் போகணும். காலையில போயிட்டு ராத்திரி வந்துடுவேன். வெள்ளிக் கிழமை காலையில் தோட்ட வீட்டுக்கு போகலாமா?"
"ஒண்ணு செய்யலாங்க. நானும், சுதாவும் குழந்தைகளை கூட்டிக்கிட்டு வியாழக்கிழமையே போயிடறோம். நீங்க பெங்களூர்ல இருந்து நேரா தோட்ட வீட்டுக்கு வந்துடுங்க."
"சுதாவும் என்கூட பெங்களூர் வர்றா. அவளுக்குத்தான் புது ப்ராஜெக்ட் பத்தின எல்லா டீடெயில்சும் தெரியும்."
"சரிங்க. நீங்க வந்தப்புறம் எல்லாரும் சேர்ந்து போகலாம்."
"ஓ.கே." ஷேவ் செய்து முடித்த மதன் குளிக்கப் போனான்.
காலை உணவு தயாரித்து எடுத்து வருவதற்காக சமையலறைக்கு சென்றாள் ராகினி. இதற்குள் பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளம்ப தயாராக்கி வைத்திருந்தாள் சுதா.
"என் வேலையில பாதியை குறைச்சுட்ட சுதா. இதுங்க ரெண்டு பேரையும் ஸ்கூலுக்கு கிளப்பறது ரொம்ப கஷ்டம்."
"நோ... நோ.. என் கிட்ட சமர்த்தா கிளம்பிடறாங்க. தொந்தரவு குடுக்கறதே இல்லை."
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook