Lekha Books

A+ A A-

பாத்தும்மாவின் ஆடு - Page 10

paathummaavin aadu

அவனுடைய வலது காலின் பாதத்தை மற்றவர்கள் முகர்ந்து பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் அடிப்பான். பிள்ளைகள் தூரத்தில் விலகி நின்றிருந்தால் அவன் தன்னைத்தானே நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுவான். அவனுடைய அந்த ஊனமான கால் காரணமாக பொது மக்களுக்கு அவன்மீது ஒரு அனுதாபம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு அவன் தாறுமாறாக நடப்பான். அவன் எது செய்தாலும், குற்றம் மற்றவர்கள் மீதுதான் போய் விழும். பிள்ளைகள் அவனிடம் அடி வாங்குவதற்குத் தயாராக இருப்பார்கள். நானும் அவனிடம் நிறைய அடிகள் வாங்கியிருக்கிறேன். நான் வாங்கிய அடிகளுக்குக் கணக்கே இல்லை. அவனுடைய சிலேட்டையும் புத்தகங்களையும் நான் சுமக்க வேண்டும். நான் மூத்தவனாயிற்றே! நியாயமாகப் பார்த்தால் தம்பிமார்கள்தான் அண்ணன்மார்களின் சிலேட்டையும் புத்தகங்களையும் சுமக்க வேண்டும். மாறாக, நான் அவனுடைய பொருட்களைச் சுமந்தேன். இல்லாவிட்டால் அடி, உதை!

ஏராளமாக அடிகள் வாங்கினேன். நான் சிலேட்டையும் புத்தகங்களையும் நிறைய சுமந்திருக்கிறேன். எதிர்க்க வேண்டும் என்று வெறி உள்ளுக்குள் இருந்தது. ஆனால், என்ன செய்வது? அவன் சிலேட்டையும் புத்தகங்களையும் சாலையில் வைத்துவிட்டு கையைச் சுருட்டி விட்டுக்கொண்டு எனக்கருகில் நின்றுகொண்டு கூறுவான்.

“என் சிலேட்டையும் புத்தகங்களையும் எடுக்கணும்.”

“எடுக்க முடியாது” என்றுதான் ஒவ்வொரு நாளும் கூறுவேன். அதற்கு நியாயமான காரணங்களை அவனிடம் நான் கூறுவேன்.

“டேய், நான் உன்னோட அண்ணன்டா!”

“அதை எடுக்க முடியுமா? முடியாதா?”

“முடியாது.”

அப்போது ஒற்றைக்காலில் நின்றுகொண்டு இன்னொரு காலில் என் நெஞ்சில் ஓங்கி மிதிப்பான். அவ்வளவுதான். நான் தலைச் சுற்றி கீழே விழுந்து அப்படியே கிடப்பேன். அவன் சற்று தள்ளி நின்று கொண்டு உரத்த குரலில் கட்டளையிடுவான்.

“ம்... எந்திரிச்சு சிலேட்டையும், புத்தகங்களையும் எடு. தாமதமா போனா சார் அடிப்பாரு.”

நான் தரையில் கிடந்தவாறு மனவருத்தத்துடன் சிந்திப்பேன். இது எங்கிருக்கும் நியாயம்? தம்பி அடிப்பான். அண்ணன் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு புத்தகங்களையும் சிலேட்டையும் சுமக்க வேண்டும். நான் அப்படியே கிடப்பேன். அவன் என்னுடைய நெஞ்சின்மீது உட்காருவான். பிறகு கேட்பான்: “அடி வேணுமா?”

நான் உண்மையைச் சொல்லுவேன்: “வேண்டாம். நான் சுமக்கறேன்.”

அந்த நிமிடமே எழுந்து அவனுடைய சிலேட்டையும் புத்தகங்களையும் நான் சுமந்துகொண்டு நடப்பேன். எவ்வளவு நாட்கள் எத்தனை அடிகள்!

இப்படி நடந்து கொண்டிருக்கும்பொழுது எனக்கு ஒருநாள் ஒரு எண்ணம் தோன்றியது. அறிவின் உதயம்! அடிப்பதற்காக அவன் கையை வீசுவதற்கு முன்பு நான் என் காலால் ஒரு உதை கொடுத்தேன்; அவனுடைய நன்றாக இருக்கும் காலில்!

அடுத்த நிமிடம் அப்துல்காதர் ‘சுளுக்கோ பிளுக்கோ’ என்று தரையில் விழுந்து கிடந்தான் மல்லாக்க!

நான் உடனே அவனுடைய நெஞ்சின்மீது போய் உட்கார்ந்தேன். நான் ஏதோ தவறாக நடந்துவிட்டதைப் போல் கவலை தோய்ந்த குரலில் அவன் கேட்டான்.

“இது என்ன? நான் சின்னப் பையன்தானே? என் நெஞ்சுல ஏறி உட்காரலாமா?”

அவனை அடிப்பதற்காக நான் கையைச் சுருட்டினேன். அவன் அழ ஆரம்பித்துவிட்டான். கண்ணீர்!

“என்னை அடிக்க வேண்டாம். நான் யாரு? தம்பி இல்லியா?”

தம்பி! அடடா...!

“உனக்கு இந்த உண்மை இதுக்கு முன்னாடி தெரியாதா?”

“நான் இனிமேல் இதை ஞாபகத்துல வச்சிருப்பேன்.”

“டேய்...” -நான் கேட்டேன்: “நாயைப் பார்த்ததும் முன்னாடி கல்லை விட்டு எறியிறது யாரு?”

“அண்ணன் நீங்கதான்”

"ஆற்றுல குளிக்கிறப்போ தண்ணியில மூழ்கிக்கிட்டே முன்னாடி அந்தக் கரைக்குப் போறது யாரு?"

“அண்ணன் நீங்கதான்.”

“வீட்டுல எதையாவது திருடினா முன்னாடியே உனக்குத் தர்றது யாரு?”

“அண்ணன் நீங்கதான்.”

“நாராயணப் பிள்ளை சாராட மேஜையில இருந்து சாக்பீஸை எடுத்து உனக்குத் தர்றது யாரு?”

“அண்ணன் நீங்கதான்.”

“பிறகு என்ன?”

அவன் சொன்னான்:

“அண்ணே... உங்க சிலேட்டையும் புத்தகங்களையும் நான் சுமக்குறேன்.”

“நான் சொன்னேன்: உன் சிலேட்டையும், புத்தகங்களையும் நீ சும.”

“அப்படின்னா முன்னாடி நடக்கறது யாரு?”

“நான்!”

அன்று முதல் அப்துல்காதர் தம்பியானான். அவன்தான் இவன்.

போக்கிரி!

“டேய்” -நான் சொன்னேன்: “அந்த இன்ஸ்பெக்டர்கிட்ட இடத்தை ஒதுக்கித் தரும்படி நீ சொல்லக்கூடாதா? நான் இந்த வீட்டுல நடக்குற ஆர்ப்பாட்டத்துல சிக்கிக்கிட்டு அவதிப்படுறேன். உனக்கு அது புரியாது.”

“அண்ணே அந்த ஆளு வேற இடம் பார்த்துக்கிட்டு இருக்காரு. எக்ஸைஸ்காரர்களும் இடம் பார்த்துக்கிட்டு இருக்காங்க. கொஞ்ச நாட்கள் பொறுமையா இங்கேயே இருங்க!”

அவன் இரும்பு ஊன்றுகோலை இறுகப் பற்றியவாறு தன்னுடைய கடையை நோக்கி விந்தி விந்தி நடந்தான்.

நான் ஒரு அன்னாசிப் பழத்தின் பாதியை அறுத்து மேற்தோலைச் செதுக்கிக் கொண்டிருக்கும்பொழுது பாத்தும்மாவின் ஆடு ஜன்னலுக்குப் பக்கத்திலும், குழந்தைகள் கதவுக்குப் பக்கத்திலும் வந்து நின்றார்கள். நேந்திர வாழைப் பழத்தையும், கண்ணன் பழத்தையும் நெய்யையும் புட்டில் சேர்த்துக் குழைத்து பிள்ளைகளுக்கு நான் ஒவ்வொரு உருண்டையாக தருவேன். அன்னாசிப் பழத்தின் ஒவ்வொரு துண்டையும்தான். அது கிடைத்துவிட்டால் பிள்ளைகளுக்கு உண்டாகும் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே!

சில நேரங்களில் அபி, பாத்துக்குட்டி, லைலா, ஆரீஃபா, கதீஜா ஆகியோர் இல்லாமல் ஆனும்மாவின் மகன் ஸையதுமுஹம்மது எனக்கு முன்னால் வந்தும் வராதது மாதிரி மெதுவாகச் சிணுங்கிக்கொண்டே தூணைப் பிடித்துக் கொண்டு நின்றவாறு தன்னுடைய முகத்தைக் காட்டுவான். அவனுக்கு ஒரு ஸ்பெஷல் உருண்டையை நான் தருவேன். பலகாரத்தைச் சாப்பிட்டு முடித்து பழத்தோலை பாத்தும்மாவின் ஆட்டிற்குத் தருவேன். பிறகு கையைக் கழுவிவிட்டு தேநீருடன் வராந்தாவில் போடப் பட்டிருக்கும் நாற்காலியில் வந்து அமர்வேன். அப்போது பள்ளிக் குழந்தைகள் போய்க் கொண்டிருப்பார்கள். வழக்கம்போல பெண் பிள்ளைகள் தங்களின் பிரகாசமான கண்களால் என்னைப் பார்ப்பார்கள்.

பெண் பிள்ளைகளின் அந்த அழகான பார்வையில் மறைந்திருக்கும் அந்தப் புனித ரகசியத்தைப் பிறகுதான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதைப் பிறகு கூறுகிறேன்.

அன்று அபியும் பாத்துக்குட்டியும் எப்போதும் போல பள்ளிக் கூடத்திற்குப் புறப்பட்டார்கள். சிறிது நேரம் சென்றதும் அபி, பாத்து இருவரும் சாலையில் ஒளிந்துகொண்டு கையைக் காட்டி என்னை அழைத்தார்கள்.

என்ன நடந்தது?

நான் வெளியே சென்றேன். பாத்துக்குட்டி ஒரு தென்னை மரத்திற்குக் கீழே ஒளிந்திருந்தாள். நான் சென்றவுடன் அபி சொன்னான்:

“பெரியப்பா... வாப்பா சிலேட் குச்சி வாங்கத் தந்த அரை அணா...”

“அரை அணா?”

“ட்ரவுசர் பாக்கெட்ல இருந்துச்சு...”

“நீ என்னடா சொல்ற?”

“ஆடு தின்ன பாக்கெட்ல இருந்துச்சு...”

 

+Novels

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

தாபம்

தாபம்

June 14, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel