Lekha Books

A+ A A-

பாத்தும்மாவின் ஆடு - Page 9

paathummaavin aadu

விஷயம் தெரிந்ததும் பாத்தும்மாவின் ஆட்டைக் குற்றவாளி என்று எண்ண முடியவில்லை. அபியின் அரைக்கால் ட்ரவுசர் பாக்கெட்டில் வெள்ளை அப்பம் இருந்திருக்கிறது. அந்த அப்பத்தில் கொஞ்சத்தை அவன் ஆட்டிற்குக் கொடுத்தான். மீதி இருந்ததை ட்ரவுசரின் முன் பக்கத்தில் மறைத்து வைத்துக்கொண்டு ஆட்டின் முன்னால் போய் நின்றுகொண்டு தின்னும்படி கூறியிருக்கிறான். ஆடு அப்பத்தையும் அரைக்கால் ட்ரவுசரின் முன் பகுதியையும் தின்றுவிட்டது. பாக்கெட்டில் இருந்ததை பாக்கெட்டுடன் தின்று முடித்தது. அபி சொன்னான்: “வாப்பா அடிச்சு உதைப்பாரு”

“அதை முன்னாடியே நினைச்சுப் பார்க்க வேண்டாமா? நல்லா அடிச்சு உதைக்கட்டும்” - சிறிது நேரம் சென்றதும் நான் சொன்னேன்: “பயப்படாதடா. யாரும் சொல்லமாட்டாங்க.”

பாத்துக்குட்டி, லைலா, ஸையதுமுஹம்மது ஆகியோரிடம் ரகசியத்தைக் காப்பாற்றும்படி சொன்னேன். லைலாவிடம் இனிமேல் யாரையும் ‘உள்ளாடத்திப்பாரு’ என்று அழைக்கக்கூடாது என்றும் சொன்னேன்.

நான் இப்போது குளிப்பதற்காக நதியைத் தேடிப் புறப்பட்டேன். ஸையது முஹம்மதையும் பாத்துக்குட்டியையும் அழைத்தேன். அப்போதும் அபியும் லைலாவும் கூட சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் வாப்பாவுடன் குளிக்கப் போகவில்லை. என்னுடன் குளிப்பதற்காகக் காத்து நின்றிருந்தார்கள். இதற்குச் சிறப்பு காரணம் எதுவும் இல்லை. அபியின் சிலேட் குச்சியை லைலா எடுத்து ஒடித்து துண்டுகளாக ஆக்கிவிட்டாள். இந்த குற்றச் செயலுக்காக அபியையும் லைலாவையும் வாப்பா குளிப்பதற்கு அழைத்துச் செல்லவில்லை. பாத்துக்குட்டிக்கும் அபிக்கும் சிலேட் குச்சி வாங்க ஹனீஃபா அரையணா (8 பைசா) கொடுத்தான்.

நான் எல்லாரையும் மூவாற்றுப் புழை ஆற்றிற்கு அழைத்துக்கொண்டு சென்றேன். குளிக்க வைத்து எல்லாரையும் கரையில் நிற்க வைத்தேன். பிறகு நீருக்குள் மூழ்கி மூழ்கி நான் குளித்துக் கொண்டிருந்தேன்.

“பெரியப்பா!”

நான் திரும்பிப் பார்த்தேன். யாரும் நீரில் இழுத்துச் செல்லப்படவில்லை. நான் நீந்தி போய் கேட்டேன்: “என்னடா?”

அபி சொன்னான்:

“எனக்கு ட்ரவுசர் இல்ல.”

அவன் உண்மையைச் சொன்னான். வெட்கத்தை மறைக்க அவனிடம் எதுவும் இல்லை. முழு நிர்வாண கோலத்தில் அவன் தெரு வழியே எப்படிப் போவான்?

நான் கேட்டேன்: “நீ இப்படித்தானே வந்தே?”

அதெல்லாம் சரிதான். அது அப்போது இப்போது அபி தன்னுடைய பள்ளியில் படிக்கும் ஒருவனை படகில் இருக்கப் பார்த்துவிட்டான். அவன் இடுப்பில் வேஷ்டியைச் சுற்றியிருக்கிறான்.

அதனால் அபியின் வெட்கத்தை மறைக்க நான் ஒரு துண்டைத் தந்தேன். அப்போது பாத்துக்குட்டிக்கும் வெட்கம் சம்பந்தமான தேவை வந்தது. அவளுக்கும் மறைப்பதற்கு துணி வேண்டும்!

நான் குளித்து முடித்து வேஷ்டியை எடுத்து அணிந்து, இடுப்பில் கட்டியிருந்த துண்டை நனைத்துப் பிழிந்து, தலையைத் துடைத்துவிட்டு, துண்டை நீரில் முக்கிப் பிழிந்து பாத்துக்குட்டிக்கு அணியக் கொடுத்தேன்.

லைலாவிற்கும் ஸையது முஹம்மதுவிற்கும் வெட்கம் என்ற ஒன்று இன்னும் உண்டாகவில்லை. அவர்களுக்கும் தோன்றியிருந்தால் என்ன செய்திருப்பேன்? என்னிடம் இரண்டே துண்டுகள்தான் இருந்தன. வெள்ளை மணல் பரவியிருந்த சாலை வழியாக நாங்கள் நடந்தோம்.

நாங்கள் போகும்போது வீட்டில் அப்துல்காதரும் ஹனீஃபாவும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். சண்டைக்குக் காரணம் குறிப்பிட்டுக் கூறும்படியாக ஒன்றுமில்லை. நேற்று வீட்டில் ரேஷன் வாங்குவதற்கு ஹனீஃபா எதுவும் தரவில்லை என்பதை அப்துல்காதர் தெரிந்து கொண்டான். அதை ஹனீஃபா விரும்பவில்லை. அதனால் அவனும் குடும்பமும் வீட்டைவிட்டு போவதாக இருக்கிறார்கள்.

“புறப்படு அய்ஸோம்மா!” ஹனீஃபா சொன்னான்: “பிள்ளைங்களையும் கூப்பிடு.”

அவனும் அவனுடைய குடும்பமும் அவர்களின் வாழைத் தோட்டத்தில் போய் வசிக்கப் போகிறார்கள். நான் பார்த்தபோது அவன் என்னுடைய வேஷ்டியைக் கட்டியிருந்தான். யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டதுதான். நான் அருகில் சென்று கேட்ட போது, “பேசுறதுக்க நேரமில்லை எனக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கு” என்று சொல்லிவிட்டு அவன் நடந்தான். படியின் அருகில் சென்றபோது அவன் சொன்னான்: “எனக்கு இந்த வீட்டுல எந்த உரிமையும் இல்லாமப் போச்சு.”

ஹனீஃபா தன்னுடைய தையல் கடையை நோக்கிப் போனான்.

நான் அப்துல் காதரைப் பார்த்துக் கேட்டேன்: “டேய், என்னை இந்த ஆர்ப்பாட்டங்கள்ல இருந்து கொஞ்சம் காப்பாற்றக் கூடாதா? அந்த இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லி அறையை எனக்கு ஒதுக்கித் தரும்படி இன்னொரு தடவை சொல்லக் கூடாதா?”

அப்துல் காதர் சொன்னான்: “அண்ணே, உங்களுக்கு இங்கே என்ன குறை? எண்ணெய், நெய், பால், தேநீர், தீப்பெட்டி, நேந்திர வாழைப்பழம், தக்காளி, அன்னாசிப்பழம், பூவன் பழம், கண்ணன்பழம், பலாப்பழம், சாப்பாடு கூட படுக்குறதுக்கு உம்மா, நான்,அபு, கொச்சுண்ணி- இதுக்கு மேல என்ன வேணும்?”

அப்துல் காதர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தவன். எதையும் பெரிய அளவில் விளக்கிப் பேசுவான். முன்பொரு முறை அவன் உம்மாவிடம் சொன்னான்: “மாதாவே, எனக்குக் கொஞ்சம் தூய நீர் வேண்டும்.” அன்று உம்மா சாதம் பரிமாறும் பெரிய கரண்டியால் அவனை அடித்து விட்டாள். வாப்பா அவனைத் தேற்றினார்.

“நீ அப்படிச் சொன்னதுனால ஒண்ணுமில்லடா. என்னை எப்படிடா கூப்பிடுவே!”

“பிதான்னு.”

அதைக் கேட்டதும் கரண்டியால் உம்மா மீண்டும் அவனை அடித்தாள். அதற்குப் பிறகு அவன் உம்மா என்றும் வாப்பா என்றும் அழைக்க ஆரம்பித்தான்.

சரியான வாய்ச் சவடால்காரன்!

அவனையும் என்னையும் ஒரே நாளில் பள்ளிக் கூடத்தில் சேர்த்தார்கள். அப்போது அது ‘முகமதியர் பள்ளிக்கூட’மாக இருந்தது. உம்பியண்ணன் என்ற பெயரைக் கொண்ட ஒரு பக்தர் அந்தப் பள்ளிக்கூடத்தை உண்டாக்கினார்.

புதுஸ்ஸேரி நாராயண பிள்ளை சார் (இந்த நாராயண பிள்ளை ஸார் மரணமடையும் வரையில் என்னைத் தேடி வருவார். நான் எழுதியவற்றைப் படித்து என்னைப் பாராட்டுவார். அவர் இந்த உலகை விட்டு நீங்கிவிட்டார். அவருக்குச் சாந்தி கிடைக்க வேண்டுகிறேன்- பஷீர்)தான் அப்போது முதல் வகுப்பிற்கு ஆசிரியர் அவர்தான் எனக்கும் அப்துல்காதருக்கும் ‘அ... ஆ...’ எழுதித் தந்தவர்.

அப்துல்காதர் பள்ளிக்கூடத்திலும் வெளியிலும் நிறைய சேட்டைகள் செய்வான். வீட்டில் அவன் செல்லப்பிள்ளை. நான் பள்ளிக்கூடத்தில் மரியாதையுடன் நடந்து கொள்வேன். நாராயண பிள்ளை சார் அவனைப் பலமுறை அடித்திருக்கிறார்.

அப்துல்காதர் இடது காலில் நின்றுகொண்டு வலது காலை சுற்றிலும் வீசி படிக்கும் பிள்ளைகளை உதைப்பான். அப்படி என்னையும் உதைத்திருக்கிறான். பிறகு தன்னுடைய வலதுகால் பாதத்தை மூக்கிற்கு நேராக காட்டியவாறு கேட்பான்: “இப்படிக் காட்ட முடியுமா?”

நிச்சயமாக முடியாது! எப்படி முடியும்? மற்றவர்களின் கால் இப்படியா தொங்கிக் கொண்டிருக்கும்? மற்ற யாராலும் இப்படிக் காட்ட முடியாது.

“அப்படின்னா மோந்து பாருங்க” - அவன் கூறுவான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel