Lekha Books

A+ A A-

பாத்தும்மாவின் ஆடு - Page 4

paathummaavin aadu

அது எதற்கு என்னுடைய மடிமீது ஏறி உட்கார வேண்டும்? எங்களுக்குள் முன்பின் அறிமுகமும் கிடையாது. எனினும், பார்த்தவுடன் என்மீது அதற்கு விருப்பம் உண்டாகி இருக்க வேண்டும். சரி, இருக்கட்டும்... அப்படியே சாலையைப் பார்த்தால் சில இளம்பெண்கள் அங்கு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் உயர்நிலைப் பள்ளியில் படிப்பவர்கள். எல்லாரும் என்னைப் பார்க்கிறார்கள். அழகிகள்! கூர்மையான பார்வை!

என்ன காரணம்?

பாத்தும்மாவின் ஆட்டின்மீது ஒரு காகம் வந்து உட்காருகிறது. காகத்தையும் சுமந்துகொண்டு ஆடு எனக்குப் பக்கத்தில் வருகிறது. “பார்த்த ஞாபகம் இல்லையே!” என்பது மாதிரி காகம் என்னைத் தலையைச் சாய்த்து பார்த்தது.

எனக்கு அருகில் சிமெண்ட் திண்ணையில் கோழிகள் எதையெதையோ கொத்திக் கொண்டிருந்தன. அந்தக் கூட்டத்தின் எல்லையில் காகம் பறந்து வந்து உட்கார்ந்தது.

‘இங்கே என்ன இதுக்கு அதிகாரம்?’ என்பது மாதிரி கோழிகள் பார்த்தன. காகம் எந்தவித கூச்சத்தையும் வெளிப்படுத்தவில்லை. ‘நான்தான் இந்த இடத்துக்கு உரிமையாளன்’ என்பதைப் போல் காகம் தரையைக் கொத்தியது.

அந்தக் கூட்டத்திற்கு ஒரு வெள்ளைப் பூனை வந்தது. கூட்டத்தில் இருந்த கறுப்புக் கோழிக்கு அதை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அது பூனையின் தலையைப் பார்த்து ஒரு கொத்து கொத்தியது. பூனை சீறியது. தொடர்ந்து வாலைத் தூக்கிக் கொண்டு முடியைச் சிலிர்க்க வைத்துக்கொண்டு ‘எங்களுக்கு இந்த வீட்டுல உரிமை இருக்கா இல்லையான்னு இப்போ காட்டுறோம். தைரியமிருந்தா நீ இன்னொரு தடவை கொத்து, பார்ப்போம்’ என்பது மாதிரி பூனை நின்றது.

“உம்மா, இதைப் பார்த்தீங்களா?” என்று உரத்த குரலில் கேட்டவாறு அந்தக் கூட்டத்திற்கு என்னுடைய கடைசி தம்பி அபுபக்கர், துவைத்து தேய்த்த ஆடைகள், நன்கு வாரிவிடப்பட்ட தலைமுடி, ஓசை உண்டாக்கும் செருப்புகள் ஆகியவற்றுடன் வந்தான். அவன் வெறும் ‘அபு’வாக நடந்து திரிகிறான். அவன் இடது சாரி கொள்கைகளைப் பின்பற்றக் கூடியவன் என்றொரு பேச்சு இருக்கவே செய்கிறது. நாளொன்றுக்கு இரண்டு முறை அவன் ஆடைகளை மாற்றுவான். அவனிடம் அறுபது ஜோடி செருப்புகள் இருக்கின்றன என்று உம்மாவே கூறியிருக்கிறாள். அவன் பார்ப்பதற்கு நூலைப் போல இருப்பான். இருப்பினும், அவன் நடக்கும் விதத்தைப் பார்க்க வேண்டுமே! எப்போதும் மிடுக்காகவே அவன் காட்சியளிப்பான். நான் வந்தவுடன் அவனை வெளியே போக வைத்துவிட்டேன். வீட்டிலிருந்த எனக்குச் சொந்தமான அறையில் ஒரு அரசனைப் போல் அவன் வாழ்ந்து கொண்டிருந்தான். அந்த அறை நானும் அப்துல்காதரும் இருந்து படிப்பதற்காக வாப்பா முன்பு வீட்டோடு சேர்த்து உண்டாக்கியது. அந்தச் சமயத்திலேயே அப்துல்காதரை அந்த அறையை விட்டு நான் வெளியேற்றிவிட்டேன். அதற்குப் பிறகு அவன் உம்மாவுடன் படுத்துக் கொள்வான்.

அப்துல் காதரின் தலை இப்போது நரைத்துவிட்டது. பார்ப்பதற்கு அவன் என்னுடைய அண்ணனைப் போல இருப்பான். அவன் என்னுடைய பழைய அறையைப் போலவே வேறொரு அறையை வீட்டின் இன்னொரு பகுதியில் அமைத்துக் கொண்டான். அதில்தான் ஹனீஃபாவும் அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் இரவில் படுப்பார்கள். அபுவை நான் அறையை விட்டு வெளியே போகச் சொன்னபோது தன்னுடைய பெட்டிகள், புத்தகங்கள், விளக்கு, படுக்கை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவன் ஹனீஃபாவின் அறைக்குப் போய் விட்டான்.

அபுவின் சத்தத்தைக் கேட்டதும் பூனைகள் ஓடத் தொடங்கின. காகங்கள் பறந்தன. கோழிகள் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடின. பாத்தும்மாவின் ஆடு அப்பாலிருந்த பெண்களைத் தேடி ஓடியது. குழந்தைகள் அழுவதை நிறுத்தினார்கள். பருந்துகள் எந்தவித ஓசையும் உண்டாக்காமல் எங்கோ ஒளிந்துகொண்டன. பெண்கள் பேசிக்கொண்டிருந்ததை நிறுத்தினார்கள். வீடு அமைதியாக இருந்தது.

அபுவின் குரல் உரத்துக் கேட்டது.

“பெரிய அண்ணன் இது எல்லாத்தையும் அனுமதிக்கிறாரே! பூனை, குழந்தைங்க, கோழி, காக்கா, ஆடு! ஆட்டுக்குத் தீனி போட்டு வளர்க்க ஒரு இடம்! எல்லாத்தையும் நான் சமையல் பண்ணுறேன். உம்மா, அந்தக் கம்பையும் கத்தியையும் எடுத்துட்டு வாங்க...”

பாத்தும்மா அடுத்த நிமிடம் கவலை தோய்ந்த குரலில் சொன்னாள்:

“கதீஜா, நம்ம ஆட்டைக் கூப்பிடு. நமக்கு இந்த வீட்டுல உரிமை எதுவும் இல்லைன்றது தெளிவா தெரிஞ்சு போச்சு... வா, போகலாம்... என் தங்க உம்மாவே, நாங்க போறோம்.”

அபு உரத்த குரலில் சொன்னான்: “எனக்கு இந்த வீட்ல ஏதாவது உரிமை இருக்கான்னு நானும் பார்க்றேன். இன்னைக்கு நான் ஹனீஃபா அண்ணனையும் அவரோட பொண்டாட்டியையும் பிள்ளைகளையும் வீட்டை விட்டு வெளியேற்றப் போறேன்.”

நானும் உரத்த குரலில் கத்தினேன். பெரிய கத்தல்தான். “டேய், இந்த வீட்ல உன் சத்தம் கேட்கக் கூடாது. உன் எலும்பை உடைச்சிடுவேன். நூலு மாதிரி இருந்துக்கிட்டு என்னவெல்லாம் பேசற! உன்னோட பெரிய தொந்தரவா போச்சு... டேய் அபு, அப்படின்னா ஹனீஃபாவும் மத்தவங்களும் எங்கே போய் இருப்பாங்க?”

அபு மெதுவான குரலில் சொன்னான்: “வேணும்னா ஹனீஃபா அண்ணன் எஸ்டேட்ல ஒரு வீடு கட்டி அங்கே இருக்கட்டும்.”

அது சரிதான். அப்படி ஒரு செய்தியும் உலவிக் கொண்டிருந்தது. வீடு கட்டும் விஷயத்தைப் பற்றி ஹனீஃபா என்னிடம் ஏற்கனவே சொல்லியிருந்தான். இரண்டு மைல் தூரத்தில் மலைச் சரிவில் சாலைக்கு அருகில் நல்ல நிலமாகப் பார்த்து எண்பது சென்ட் விலைக்கு வாங்கியிருந்தான். அதில் இப்போது நேந்திர வாழையும், மரவள்ளிக்கிழங்கும், மாமரங்களும் வைத்திருந்தான். அந்த இடத்தில் ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்பது அவனுடைய திட்டம். அதற்கு வேண்டிய உதவிகளை அவன் என்னிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்ற விஷயத்தையும் அவன் என்னிடம் கூறியிருந்தான். அவன் அதிகாலை நான்கு மணிக்கு படுக்கையை விட்டு எழுந்து சென்று வாழைக்கும் மற்ற மரங்களுக்கும் நீர் பாய்ச்சி முடித்துவிட்டு ஒரு மணிக்கு வீட்டிற்கு வருவான். பிறகு அபியையும் லைலாவையும் அழைத்துக் கொண்டு ஆற்றிற்கு குளிக்கச் செல்வான். வாப்பாவும் பிள்ளைகளும் எப்போதும் மிக நெருக்கமாக இருப்பார்கள். அவர்களின் இடத்தில் வீடு கட்டும்போது என்னை அங்கு அழைத்துப் போவதாக லைலாவும் அபியும் சொல்லியிருக்கிறார்கள். அதே மாதிரிதான் ஸையது முஹம்மதும் சொல்லியிருக்கிறான். அவனும் அவனுடைய உம்மா ஆனும்மாவும் வாப்பா சுலைமானும் வசிப்பதற்காக வீட்டிற்கு மிகவும் அருகிலேயே இருக்கும் நிலத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான மர வேலைகளெல்லாம் முடிந்துவிட்டன. கற்களை இறக்கி வைத்திருக்கிறார்கள். இந்த வேலைகள் எதையும் ஹனீஃபா செய்யவில்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel