
அந்த கெஞ்சுகிற கண்களுடன் வ்ரஜலால் தொடர்ந்து என்னை நெருங்கினார். எனக்கு பயம் அதிகமானது.
"தொடாதீங்க... என்னைத் தொட்டால் நான் சத்தம் போட்டுக் கத்துவேன்.'' நான் பயமும் பதைபதைப்பும் கலந்த ஒரு கலக்கத்துடன் கட்டளையிட்டேன்.
வ்ரஜலால் அதே இடத்தில் சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றுவிட்டார்.
"நீ என்னைக் கொன்று விடுவாய். நான் இதயம் வெடித்து இறந்து விடுவேன்''. அந்த வார்த்தைகளை ஒரு தாழ்ந்த குரலில் கூறி விட்டு, அமைதியாக ஒரு பிணத்தைப் போல அவர் வெளியேறினார்.
நான் கதவை அடைத்துத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு, பாதி சுயஉணர்வுடன் படுக்கையில் போய் விழுந்தேன். அன்றைய இரவைப் போன்ற ஒரு பயங்கரமான இரவு என் வாழ்க்கையில் இருந்ததே இல்லை என்றுகூட கூறலாம். என் இதயத்தில் பயங்கரமான ஒரு சூறாவளி அடித்துக் கொண்டிருந்தது. என் சிந்தனைகள் சிதறிப் போய் குத்திக் கொண்டிருந்தன. எதிர்பார்ப்புகள் முழுமையாக எரிந்து சாம்பலாகிவிட்டிருந்தன. கூடுகள் இல்லாமற் போன பறவைகளைப் போல நினைவுகள் சிதறிப் பறந்தன. நினைத்துப் பார்த்திராத பல பயங்கரமான கனவுகளும் என்னுடைய மனதில் நிறைந்திருந்தன. இருள், இருளுக்குள் பலமாக நுழைந்தது. வெளியிலும் இருட்டுத்தான்.
அந்த அடர்த்தியான இருட்டிற்குள் ஊளை இட்டவாறு எங்காவது போய் மறைந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஒரு வெறி உண்டானது.
நான் நின்று கொண்டிருந்த கரையை ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி அரித்துத் தின்பதைப் போல எனக்குத் தோன்றியது. எங்கே வழுக்கி விழப் போகிறோம் என்று எனக்குத் தெரியவில்லை.
இனியொரு முறை வ்ரஜலாலிற்கு முன்னால் உறுதியான மனதுடன் நிற்பது என்பது சாத்தியமில்லாத ஒரு விஷயம் என்று எனக்குத் தோன்றியது.
ஒரு பெண்ணின் இதயத்தை எந்தவொரு மனோதத்துவ நிபுணராலும் புரிந்து கொள்ள முடியாது. அடுத்த நிமிடத்தில் நடக்கப் போவது என்ன என்பது அந்த இதயத்தின் உரிமையாளருக்குக் கூட தெரியாது.
பயம் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த உண்மையை என்னிடமிருந்து என்னால் மறைத்து வைக்க முடியவில்லை. வ்ரஜலாலை என் இதயத்தின் அடி நீரோட்டம் என்னை நோக்கி இழுத்துக் கொண்டிருக்கிறது என்பதை- என்னையே அறியாமல் வ்ரஜலாலை நான் காதலிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்பதை- அந்தக் "காதல் கொலைகாரன்” என்னை எப்படியோ வசீகரித்திருக்கிறார் என்பதை! ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் மீது இருக்கும் காதலில் எழுபத்தைந்து சதவிகிதம் இரக்கமோ பரிதாப உணர்ச்சியோ கலந்ததாக இருக்கும். இன்னொரு உண்மையையும் கூறுகிறேன். ஒரு ஆண் காதலிப்பது பெண்ணின் அழகையோ அல்லது அவளுடைய ஆழமான தனித்துவத்தையோ இருக்கலாம். ஆனால், ஒரு பெண் காதலிப்பது ஆணை அல்ல- அவனுடைய காதலை. வ்ரஜலாலின் பரிதாபம் நிறைந்த பார்வைகளும் அமைதியான கெஞ்சல்களும் என் இதயத்தைக் குத்திக் கீறிவிட்டன. என் நினைவுகளை காயப்படுத்தின.
என்னுடைய உறுதியின் ஆபத்தான வளர்ச்சியை நினைத்து நான் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாளேன். தப்பிப்பதற்கு வழி இல்லாமல் நான் அந்த வலைக்குள் அகப்பட்டுக் கொண்டேன்.
அதற்கேற்றாற் போல என்னுடைய சிந்தனைகளும் மாறத் தொடங்கின. வ்ரஜலால் என்னிடம் எந்தவொரு தவறையும் செய்ததில்லை. பிறகு... நான் எதற்கு அவரை வெறுக்கிறேன்? "உமாவிடம் என்னை ஈர்க்கிற அளவிற்கு நான் எதையும் பார்க்க வில்லை. அது என்னுடைய குற்றமா?” என்ற அவருடைய வார்த்தைகள்... அந்தக் கேள்விகூட நியாயமானதே. அப்படியென்றால் என்னிடம் அவரை ஈர்க்கிற மாதிரி என்னவோ இருக்கிறது. அந்த உணர்வு எனக்கு மிகுந்த ஒரு ஆனந்தத்தை அளித்தது.
வ்ரஜால் இப்படி திடீரென்று எனக்கு அடிமையாக ஆவார் என்று நான் கனவில்கூட நினைத்திருக்கவில்லை. அவருடைய முன்கோபமும் ஆணவமும் சேர்ந்து என்னிடம் பயங்கரமான ஒரு போராட்டத்திற்கு அவரைத் தூண்டிவிடுவதாக நான் நினைத்தேன். ஆனால், நடந்ததோ நேர் எதிராக இருந்தது. அந்த வீழ்ச்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை.
அன்று இரவு எனக்கு சிறிதுகூட தூக்கம் வரவில்லை. மறுநாள் பொழுது புலர்ந்தவுடன் என் பெற்றோரின் இல்லத்திற்குச் செல்ல வேண்டும் என்று நான் தீர்மானித்தேன்.
பொழுது விடிந்தது. எனக்கு அங்கிருந்து செல்வதற்கு மனம் வரவில்லை. ஏதோ ஒரு சக்தி என்னை அங்கேயே தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது.
"சமேலி”யின் கையெழுத்துப் பிரதியை முன்னால் எடுத்து வைத்துக்கொண்டு, எழுதுவதற்கு முயற்சித்தேன். ஆனால், புதிதாக ஒரு வரிகூட தோன்றவில்லை.
மதியம் உணவு சாப்பிட்டு முடித்து நான் சிறிது நேரம் தூங்குவதற்காகப் படுத்தேன்.
ஏதோ தெளிவற்ற ஒரு கனவைக் கண்டு நான் கண் விழித்து விட்டேன். வ்ரஜலால் எனக்கு அருகில் மெத்தைமீது வந்து உட்கார்ந்திருந்தார்.
"ரமா... ரமா... என் தேவி, என்னை மன்னிக்க மாட்டாயா?''
அவர் என்னை இறுக அணைத்துக் கொண்டார். என்னால் ஒரு வார்த்தைகூட கூற முடியவில்லை. வெறும் ஒரு பழைய துணிக் கட்டைப் போல அந்தக் கைகளின் அணைப்பிற்குள் நான் சிக்கிக் கிடந்தேன்.
எங்களுடைய அந்த தாம்பத்ய வாழ்க்கையைப் பற்றி அதிகமாக எதுவும் கூறப் போவதில்லை. வ்ரஜலால் என்னை ஒரு தேவதையைப் போல வழிபட்டார். அலுவலகத்திற்குச் செல்லாமல், எப்போதும் என்னுடனே இருப்பதற்கு அவர் ஆசைப்பட்டார். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைக்கு பதிலாக, என்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் அவரிடம் இருந்தது.
அந்த தாம்பத்திய வாழ்க்கையின் போதையில் நானும் மாற ஆரம்பித்தேன். ஒரு கவிதை எழுதும் பெண்ணின் கனவுகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டன. ஒரு இல்லத்தரசியின் உண்மைத்தன்மைக்குள் நான் கால்களைப் பதித்தேன். என்னை வழிபடும் ஒரு கணவர், சுதந்திரம், பணம்- இவற்றுக்கு மேலே என்ன சுகம் வேண்டும்? எனினும், எனக்கு சந்தோஷம் உண்டாகவில்லை
என்பதை நான் கூறுவதற்குக் காரணம்- உண்மையைக் கூற வேண்டும் என்பதற்காகத்தான்.
அப்படியே மூன்று வருடங்கள் கடந்தோடின. உமாவின் புகைப்படத்தை கட்டிலுக்கு மேலே இருந்த பீடத்திலிருந்து அகற்றி பெட்டிக்குள் வைத்துப் பூட்டினேன். அந்த முகத்தைப் பார்க்கும்போது என்னுடைய மனதில் அசாதாரணமான ஒரு பயம் தோன்றிக் கொண்டிருந்தது. "சமேலி”யை நான் முழுமை செய்யவில்லை. ஒரே நேரத்தில், ஒரு இல்லத்தரசியாகவும் கவிதாயினியாகவும் இருப்பது என்பது இயலாத விஷயம். உமாவைதான் முற்றிலுமாக மறந்து விட்டேன். பிரேமாவை நான் வெறுக்கவில்லை. ஆனால், ஒரு தாயின் பாசத்தை அவளிடம் செலுத்த என்னால் முடியவில்லை. அவள் எனக்குப் பிறந்தவள் அல்ல என்ற ஒரு சிந்தனை என்னை அலட்டிக் கொண்டிருந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook