Lekha Books

A+ A A-

இருப்பவர்கள், இறந்தவர்கள் - Page 2

Iruppavargal, Irandhavargal

தோளில் ஒரு மண்வெட்டியுடன் கேளு அங்கே வந்தான். குழியை வெட்டி விட்டு வருகிறான் என்பதை நான் புரிந்து கொண்டேன். மண்வெட்டியின் நாக்கின் மீது புதிய மண் ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தபோதுதான் எனக்கு அது புரிந்தது. கேளு நாவிதர்களுக்கு அருகில் குத்த வைத்து அமர்ந்து, ஒரு பிடியைப் புகைத்தான். யாராவது மரணமடைந்தால், கேளுவிற்கு நல்லது. படி அரிசிக்கு வழி பிறந்ததாக ஆகி விடும்.

'குழிக்குள் இருந்த இரண்டு மண்டையோடுகளைத் தோண்டி எடுத்தேன். புதைக்கிறதுக்கும் இடம் இல்லாமப் போச்சு.'

கேளு கூறுவதை நான் கேட்டேன். அவனுடைய கண்களில் இரத்தம் காய்ந்து காணப்பட்டது.

'ஒவ்வொரு நாளும் இப்படி ஆளுங்க செத்துக் கொண்டிருந்தால், அவங்களை எங்கே புதைக்கிறது?'

'குஞ்சுராமன் முதலாளி இறந்து, ஐந்து நாட்கள் ஆகல.'

பட்டு துணியின் உரிமையாளர்களில் ஒருவன் சந்தோஷம் தரும் ஒரு நினைப்பில் புன்னகைத்தான். பணக்காரரான முதலாளி இறந்தபோது, பட்டுத் துணிகள் வந்து விழுந்து மலையென கிடந்தன.

'மகனே, நீ போய் அந்த நாணு நாயரைக் கொஞ்சம் சமாதானப்படுத்து.'

அதற்குப் பிறகும் மாஸ்டர் என்னுடைய தோளில் கையை வைத்தார். நாணு நாயரைச் சமாதானப்படுத்த, என்னையே சமாதானப்படுத்திக் கொள்ள இயலாத, என்னால் முடியாதே! எனினும், மாஸ்டர் கூறினார் என்ற காரணத்திற்காக நான் பெஞ்சிலிருந்து எழுந்து, செருப்புகளை ஓரத்திலிருந்த கல்லுக்கு அருகில் கழற்றி வைத்து விட்டு, உள்ளே நுழைந்தேன். ஒரு துணி நாற்காலியில் நரைத்த தலையை நெஞ்சில் வைத்துக் கொண்டு நாணு நாயர் அமர்ந்திருந்தார். முகத்தில் வெளுத்த உரோமங்களின் ஒன்றிரண்டு நாட்களுக்கான வளர்ச்சி இருந்தது. கண் இமைகள் வீங்கியிருந்தன. நான் ஓசை எதுவும் உண்டாக்காமல் நாணு நாயரின் அருகில் சென்று நின்றேன். அவர் என்னைப் பார்க்கவோ, அசையவோ இல்லை. என்ன கூறுவது என்று தெரியாமல் நான் நாற்காலியின் அருகில் நின்றிருந்தேன். வாசலில் இருந்தவாறு ராமன் மாஸ்டர் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் என்னை நாணு நாயரிடம் செல்லும்படி கூறி அனுப்பிய விஷயத்தில், மாஸ்டரின் மீது எனக்கு அதிருப்தி உண்டானது. நாணு நாயரின் அருகில் இருந்த நாற்காலியில் எதுவும் பேசாமல் நான் உட்கார்ந்தேன். அப்படி அங்கு அமர்ந்திருந்தபோது, தலை கனமாகிக் கொண்டு வருவதைப் போல எனக்கு தோன்றியது. மூச்சு விடுவதற்கு சிரமமாகவும் இருந்தது. மாஸ்டர் என்னுடைய இக்கட்டான நிலையைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். கையைக் காட்டி என்னைத் திரும்பி வரும்படி அழைத்தார். நான் நாணு நாயரின் முகத்தையே இன்னொரு முறை பார்த்தேன். முன்பைப் போலவே அமர்ந்திருந்தார். நான் எதுவும் பேசாமல் படிகளில் இறங்கி, மாஸ்டரின் அருகில் பெஞ்சின் மீது போய் அமர்ந்தேன்.

'ஆண் பிள்ளையாக இருந்தால், கொஞ்சம் தைரியமும் இருக்கணும்.'

மாஸ்டர் என்னைக் குறை கூறினாலும், அவருடைய முகத்தில் இரக்கமும் கவலையும் இருப்பதை நான் பார்த்தேன். எனக்கும் சந்திரசேகரனுக்குமிடையே இருந்த உறவு மாஸ்டருக்குத் தெரியுமே!

பட்டு துணிகள், வெற்றிலை ஆகியவற்றுடன் சந்திரசேகரனின் உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். இவ்வளவு நேரமாகியும், நான் அவனைப் போய் பார்க்கவில்லை. இறந்து கிடக்கும் அவனைப் பார்த்துக் கொண்டு நிற்பதற்கு என்னால் எப்படி முடியும் என்று எனக்கு தெரியவில்லை. அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாகும்போதெல்லாம், என்னுடைய நெஞ்சு தாளம் தவறி துடித்தது. எப்படியாவது உள்ளே நுழைந்து ஒரு தடவை பார்த்தால்கூட பரவாயில்லைதான். மூன்று மணிக்குப் பிறகுதான் பிணத்தை எடுப்பார்கள். அதற்கு முன்பு என்னுடைய பலவீனம் நீங்கி விடும் என்றும், சந்திரசேகரனைச் சென்று பார்க்கக் கூடிய தைரியம் எனக்கு வந்து சேரும் என்றும் நான் நினைத்தேன்.

அலுவலகங்களும், பள்ளிக் கூடங்களும் விடக் கூடிய நேரத்தில் வாசல் ஆட்களால் நிறைந்து விட்டிருந்தது. சந்திரசேகரனின் அலுவலகத்திலிருந்து அவனுடன் பணியாற்றுபவர்கள் பூச்செண்டுகளுடன் வந்தார்கள். நான்கு பேர் இருந்தார்கள். அவர்கள் நேராக உள்ளே செல்வதையும், திரும்பி வந்து நாணு நாயரை சமாதானப்படுத்துவதையும் நான் பார்த்தேன். அவர்களுக்கு இருந்த தைரியம் எனக்கு இருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்பட்டேன். பெஞ்சில் வந்து உட்கார்ந்தார்கள். மேஜையின் மீது வெற்றிலையும் சிகரெட்டும் பீடியும் இருந்தன. கிருபாகரன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து புகையால் வளையங்கள் உண்டாக்கினான்.

'பார்த்தால், கொஞ்சம் கூட புரியவே இல்லை. இப்படியெல்லாம் கூட மாறுதல் உண்டாகுமா?'

கிருபாகரன் என்னைப் பற்றி பேசுகிறானா அல்லது சந்திரசேகரனைப் பற்றி பேசுகிறனா என்று நான் சந்தேகப்பட்டேன்.

'முகத்தில் ஒரு துளி இரத்தம் இல்லை.'

'இறந்த மனிதனின் முகத்தில் எப்படி இரத்தம் இருக்கும்?'

'இறந்தவுடன் இரத்தம் வற்றிப் போய் விடுமா?'

கிருபாகரன் மற்றும் நண்பர்களின் பேச்சு முறை எனக்கு சிறிதும் பிடிக்கவில்லை. எது எப்படி இருந்தாலும்- அவர்களைக் குறை கூறுவதற்கு என்னால் முடியாது. அவர்கள் சந்திரசேகரனைப் போய் பார்த்து, அவனின் மீது மலர்களை வைத்து விட்டு, நாணு நாயருக்கு ஆறுதல் கூறவும் செய்தார்களே!  நானோ? நான் இந்த இடத்தில் உட்கார ஆரம்பித்து எவ்வளவு நேரமாகி விட்டது... !

'உன்னிடம் ஒரு விஷயம் கேட்கணும்.'

கிருபாகரன் எனக்கு அருகில் நகர்ந்து உட்கார்ந்தான்.

'அந்த போஸ்ட் மாஸ்டரின் இளைய மகள் பிரேமா, இருக்கால்ல... அவளுக்கும் சந்திரசேகரனுக்குமிடையே...'

நான் எதுவும் கூறவில்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel