Lekha Books

A+ A A-

இருப்பவர்கள், இறந்தவர்கள் - Page 3

Iruppavargal, Irandhavargal

'விருச்சிக மாதத்தில் திருமணம் நடக்க இருந்ததாக கேள்விப்பட்டேன். உண்மையா? நீ சந்திரசேகரனின் நெருக்கமான நண்பனாயிற்றே! உனக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்குமே! அதனால்தான் கேட்கிறேன். தவறாக நினைக்காதே.'

'உண்மைதான்.'

சந்திரசேகரன்தான் நிரந்தமாக போய் விட்டானே! இனி இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசி என்ன பிரயோஜனம் என்று கிருபாகரனிடம் கேட்க வேண்டுமென நான் நினைத்தேன். அவன்... அவன் இனிமேலும் கேள்விகள் எதுவும் கேட்காமல் இருக்கட்டும். என்னுடைய முகத்தை வாசித்ததாலோ என்னவோ, அதற்குப் பிறகு கிருபாகரன் என்னிடம் எதுவும் உரையாடவில்லை.

ஆட்களுக்கு மத்தியில் ஒரு சலசலப்பு உண்டானது. எல்லோரும் தெருவைப் பார்ப்பதைப் பார்த்தேன். நானும் அந்தப் பக்கம் பார்த்தேன். இரண்டு பணியாட்கள் பிணத்தைத் தூக்கிச் செல்லும் கட்டிலைச் சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் என்னுடைய மனம் பதறி விட்டது. நான்கு பக்கங்களிலும் பலகைகளைக் கொண்ட மாமரத்தால் செய்யப்பட்ட அந்தக் கட்டிலைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு இப்படிப்பட்ட உணர்வு உண்டாகும். பணியாட்கள் வாசலுக்கு வந்தபோது, கேளுவும் நாவிதர்களும் உதவினார்கள். பிணக் கட்டிலை வாசலில் இறக்கி வைத்து விட்டு, ஓய்வு எடுத்தார்கள்.

ஐந்து நாட்களுக்கு முன்பு, இதே கட்டிலில்தான் குஞ்சுராமன் முதலாளி பயணமானார்.

ஒரு ஆள் ஒரு பெரிய சொம்பில் எலுமிச்சை நீர் கொண்டு வந்தார். கண்ணாடி டம்ளரை மூழ்கச் செய்து, ஒவ்வொருவருக்கும் கொடுக்க ஆரம்பித்தார். எலுமிச்சை நீரைப் பருகி விட்டு, கிருபாகரனும் நண்பர்களும் எழுந்து உள்ளே நுழைந்தபோது, நான் பின்னால் சென்றேன். வாசலைத் தாண்டி உள்ளே கால் வைத்தபோது, பெண்களின் அழுகைச் சத்தம் காதில் விழுந்தது. தாழ்ந்த கூரையைக் கொண்ட கூடத்தில் ஆட்கள் நெருக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். கால் விரல்களில் நின்று கொண்டு, அவர்களுடைய தோள்களின் மேல் பகுதி வழியாக நான் சந்திரசேகரனை எட்டிப் பார்த்தேன். குத்து விளக்கின் வெளிச்சத்தில், சாம்பிராணி புகையில், குளித்து, புதிய சட்டையும் வேட்டியும் அணிந்து அவன் படுத்திருந்தான். அறை முழுவதும் புகையும், புகையின் வாசனையும் நிறைந்திருந்தன.

கிருபாகரனும் நண்பர்களும் என்னிடம் விடை பெற்றுக் கொண்டு வாசலை நோக்கி சென்றார்கள். அவர்கள் அலுவலகத்திற்குத் திரும்பச் செல்ல வேண்டுமே! வெளியே செல்வதற்கு முன்பு, அவர்கள் ஒவ்வொரு சிகரெட்டாக எடுத்து பற்ற வைத்து புகையை விட்டார்கள். கிருபாகரன் புகை விடுவது வளையங்களாகத்தான்.

அடர்த்தியான நிறத்தைக் கொண்ட பட்டுத் துணிகளைக் கொண்டு சுற்றி, சந்திரசேகரனை சவக் கட்டிலில் வைத்தார்கள். கூடத்தில் இருட்டிற்குள்ளிருந்து அழுகைச் சத்தத்தைக் கேட்டதும், என்னுடைய கண்கள் எரிவதைப் போலவும், கண்ணீரால் நிறைவதைப் போலவும் எனக்கு தோன்றியது. வாசலிலும் திண்ணையிலும் அமர்ந்திருந்தவர்கள் எழுந்தார்கள். ராமன் மாஸ்டரும் அப்புண்ணி நாயரும் கெ.ஸி.பணிக்கரும் ஶ்ரீதரனும் சவ மஞ்சத்தைத் தூக்கினார்கள். அவர்களுக்குப் பின்னால் நாணு நாயரும் அவருடைய நிழலில் நானும் நடந்தோம். பாதையெங்கும் நின்று கொண்டு சந்திரசேகரனின் ஊரைச் சேர்ந்தவர்கள் அவனை வழி அனுப்பி வைத்தார்கள். பலரும் உள்ளங்கையால் கண்களைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்தேன்.

கேளு வெட்டிய ஆறடி நீளத்தையும் நான்கடி ஆழத்தையும் கொண்ட குழிக்குள் சந்திரசேகரனை இறக்கினார்கள். தேங்காய் உடைந்தது. நாணு நாயரும் பணியாட்களும் மூன்று மூன்று பிடி மண்ணை சந்திரசேகரனின் முகத்தில் தூவினார்கள். ராமன் மாஸ்டர் கூறி, நானும் மூன்று பிடி மண்ணை அவனுடைய முகத்தில் தூவினேன்.

பிண அடக்கம் முடிவடைந்து, ஆட்கள் பிரிந்து சென்ற பிறகு, நாணு நாயரிடமும் மாஸ்டரிடமும் விடை பெற்றுக் கொண்டு நான் வீட்டை நோக்கி நடந்தேன். வீட்டிற்குப் பதிலாக நான் கடற்கரைக்குச் சென்று விட்டேன். வெப்பம் தணிந்திராத மணலில் முழங்கால்களுக்கிடையில் முகத்தை அழுத்தி வைத்துக் கொண்டு நான் அமர்ந்தேன். அப்படியே எவ்வளவு நேரம் இருந்தேன் என்று எனக்கு ஞாபகத்தில் இல்லை. சந்திரசேகரனின் குரல் கேட்டு நான் தலையை உயர்த்தினேன்.

'வள்ளிக்காடு வரை கொஞ்சம் போய் விட்டு வந்தேன்.'

ஒரு திருட்டுச் சிரிப்புடன் அவன் சொன்னான். நான் முற்றிலும் பதைபதைத்துப் போனேன். என் தலைக்கு இரும்பின் கனம் உண்டானது. நானா, சந்திரசேகரனா... இறந்தது யார் என்று எனக்கு சந்தேகம் வந்து விட்டது. என்னுடைய குழப்பத்தைப் பார்த்ததால் இருக்க வேண்டும்- அவன் எனக்கு அருகில் மணலில் அமர்ந்தான். அப்போது கடலிலிருந்து வந்து கொண்டிருந்த காற்றிற்கு மதுவின் வாசனை இருந்தது.

'நான் இப்படியெல்லாம் சாக மாட்டேன்டா... நான் மட்டுமல்ல. அந்த...'

என் தோளில் கையை வைத்தவாறு சந்திரசேகரன் தொடர்ந்து சொன்னான்:

'இந்த உலகத்தில் எதுவுமே இறப்பதில்லை. எதுவும் அழிவதில்லை...'

சந்திரசேகரன் கூறியது சிறிதும் எனக்கு புரியவில்லை. அவனுடைய அறிவோ, விஷயங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய புத்தியோ எனக்கு இல்லை. எது எப்படி இருந்தாலும், அவன் இறக்கவில்லை என்பதைப் பார்ப்பதில் எனக்கு அளவற்ற சந்தோஷம் உண்டானது.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel