Lekha Books

A+ A A-

சிரிப்பின் விலை - Page 3

siripin vilai

செண்டையின் முழக்கம் நின்றது.

இளம்பெண், குள்ளன் திறந்து வைத்திருந்த மூட்டைக்குள்ளிருந்து ஒரு கிண்ணத்தை வெளியே எடுத்து பார்வையாளர்களை நோக்கி நடந்தாள். அவள் எதுவும் கூறவில்லை. எல்லாருக்கும் தெரியும். ஆட்கள் இரக்க குணம் கொண்டவர்கள். காலணா, அரையணா, இரண்டணா... அதிக இரக்க குணம் கொண்ட இளைஞர் கள் நான்கணா நாணயத்தைப் போட்டார்கள். காசு போடுபவர்கள் எல்லாரிடமும் அவளுடைய வியர்வை வழிந்துகொண்டிருந்த முகத்தில் மலர்ந்த புன்னகை நன்றி கூறியது.

காசு போட்டு முடிந்தவுடன், அவள் தான் கழற்றி வைத்திருந்த துணியையும் ரவிக்கையையும் எடுத்து அணிந்தாள்.

ஆட்கள் அங்கிருந்து பிரிந்து செல்ல ஆரம்பித்தார்கள்.

சில நிமிடங்கள்... பூங்கா ஆட்கள் யாருமே இல்லாமலானது. செண்டை அடிப்பவன் கிண்ணத்தில் விழுந்த பணத்தை எண்ணிக் கொண்டிருந்தான்... குள்ளன் இரும்பு வளையத்தையும் கத்திகளையும் எடுத்து மூட்டைக்குள் வைத்துக்கொண்டிருந்தான். இனி பார்ப்பதற்கு எதுவுமில்லை. நான் சுவரிலிருந்து கீழே இறங்கி சாலையில் நடந்தேன்.

டவுன் ஹாலிலிருந்து சத்தமாக ஒலித்துக்கொண்டி ருந்த அந்த சொற்பொழிவு காதில் வந்து விழாத ஏதாவதொரு இடத்தைத்தேடிப் போக வேண்டும்.

அப்போது அந்த எண்ணம் மட்டுமே மனதில் தோன்றியது.எந்தவொரு இலக்கும் இல்லாமல் நடந்தேன். இருட்டும் வரையில் இதேபோல தெருக்களில் நடந்துகொண்டிருப்பது என்பது எப்போதும் வாடிக்கையான ஒன்றுதான். முடிந்த வரையில் மாலையில், தங்கியிருக்கும் இடத்திற்கு வந்துசேருவதைத்தான் விரும்புவேன்.

தொலைபேசி இணைப்பகத்தையும், காவலர்களின் இருப்பிடங்களையும், கடைகளையும், திரை அரங்கையும் கடந்து நடந்தேன். வழியில் ஓரிரண்டு நண்பர்களைப் பார்த்தேன். அவர்களில் ஒருவர் உலகத்தை நன்றாக ஆக்க வேண்டும் என்பதற்காக வெளியே கிளம்பியிருக்கும்- நம்முடைய கொம்பு மீசையை வைத்திருக்கும் மனிதர். அவரை நிராகரித்தேன். அடுத்த மனிதனிடமிருந்து அவ்வளவு வேகமாகத் தப்பிக்க முடியவில்லை. வளர்வதற்கும், சிகிச்சை செய்வதற்கும் வசதியில்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன். கவிதைகள் எழுத ஆரம்பித்து ஏழு வருடங்களாகி விட்டன...

“இன துவேஷமும் ஜாதிக் கண்ணோட்டமும் உள்ள இந்த கொடூரமான பத்திரிகை ஆசிரியர்களும், அவர் களுக்காக கையிலிருக்கும் மணியை அடிக்கும்...''

இவ்வளவையும் கூறியவுடன், நான் சொன்னேன்.

“அன்பு நண்பனே! நான் போகட்டுமா? என்னைக் கொன்னுடாதே!''

அவனுக்கு அது பிடித்திருக்காது. நான் நடந்தேன். வயல் இருக்கும் இடத்திற்கு வந்தேன். ஆளரவமற்ற வயல். அதைக் கடந்து சுடுகாடு... வயலை ஒட்டி சாலை செல்கிறது. சாலையின் ஓரத்தில் மூன்று மாமரங்கள் இருந்தன. நான் அங்கிருந்த ஒரு சிறிய பாலத்தின்மீது உட்கார்ந்தேன்.

மீண்டும் நினைத்துப் பார்க்க ஆரம்பித்தேன்- தன்னுடைய மெலிந்து காணப்பட்ட கையில் பூக்கூடை யைத் தொங்கவிட்டுக் கொண்டு நடந்துவரும் அந்த குஜராத்தி இளம்பெண்ணைப் பற்றி...

“இங்கிருந்து போடா...''

ஒரு பெண்ணின் கோபக் குரல். சற்று தள்ளியிருக்கும் மாமரத்தின் நிழலிலிருந்து அந்தக் குரல் வந்தது. திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண்ணிடம் திட்டு வாங்கிய அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும்?

பார்த்தால்... சற்று முன்பு பூங்காவில் நிகழ்ச்சி நடத்திய சர்க்கஸ் குழு...

“எனக்கு இன்னும் இரண்டணா வேணும்.''

குள்ளன்தான்... வெறும் விளையாட்டுக்காகக் கூறவில்லை. அவன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

“இப்போ கொடுக்குறதே அதிகம்!''

“நான் ஏத்துக்க மாட்டேன்!''

“போய் என்ன பண்ணணுமோ பண்ணு!''

விஷயம் இதுதான். அவனுக்கு மேலும் இரண்டணா வேண்டும். அவள் கொடுப்பதற்குத் தயாராக இல்லை. அதாவது- அவளுடைய சம்மதம் இல்லாமல் செண்டை அடிப்பவன் தரமாட்டான் என்று அர்த்தம்.

குள்ளன் தன்னுடைய கஷ்டங்களை விளக்கிக் கூறிக்கொண்டிருந்தான். அதைக்கேட்டு, அவளிடம் எந்தவொரு அதிர்ச்சியும் உண்டாகவில்லை.

“உனக்கு நாலணாவுக்குமேல யாருடா தருவாங்க?''

“சொன்ன வார்த்தைக்கு நாணயமா நடக்கணும்.''

“ஓ... ஒரு நாணயக்காரன்! த்தூ...''

கெஞ்சல்களும், திட்டுதல்களும், வசையும்.

மீண்டும் கெஞ்சல்...

“இன்னைக்கு அதிகமா காசு கெடைச்சதுல்ல!''

“ஆமா... என் உடம்பை வேதனைப்படுத்தினதால...''

அவன் எதுவும் பேசவில்லை. அவலட்சணமான முகத்தையே நான் கூர்ந்து பார்த்தேன். அந்தக் கண்களில் நீர் இருக்கிறதோ? குள்ளன் அழுது கொண்டிருக்கிறான்...

பாதையில் நடந்து கொண்டிருந்தவர்களின் கவனம் அவர்களை நோக்கித் திரும்புகிறது என்பதைப் புரிந்துகொண்டவுடன், செண்டை அடிப்பவன் இளம்பெண்ணிடம் என்னவோ முணுமுணுத்தான்.

அவர்கள் எழுந்து நடந்தார்கள். மலையைப் போன்ற சுமையைச் சுமந்தவாறு அவர்களுக்குப் பின்னால் குள்ளன்...

...தூரத்தில் செண்டையின் சத்தம் கேட்டது. அங்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது.

“கிரி கிரி கிரி... கிரி கிரி...'' குள்ளனின் குரல்.

நான் பாலத்திலிருந்து எழுந்து மீண்டும் நடந்தேன்.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel