Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

சிரிப்பின் விலை - Page 2

siripin vilai

அவள் தளர்ந்த நிலையில் மெதுவாக புல் பரப்பில் உட்கார்ந்திருந்தாள். மாநிறத்தில், நல்ல உடல்நலத்தைக் கொண்ட ஒரு இளம்பெண்... ஊஞ்சலில் தொங்கி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் குள்ளனைச் சுற்றி வந்து நின்றார்கள். அவன் தன் முகத்தை வைத்து என்னவோ கோமாளித்தனத்தைக் காட்டியிருக்க வேண்டும்- குழந்தைகள் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்கள். குழந்தைகள் சூழ்ந்து நின்றுகொண்டிருந்ததால் அவன் என்ன செய்கிறான் என்பதைப் பார்க்க முடியவில்லை.

இளைஞன் செண்டையைத் தரையிலிருந்து எடுத்து தன் தோளில் தொங்கவிட்டு, முழக்க ஆரம்பித்தான். ஆட்கள் சுற்றிலும் கூடவேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால், யாரும் சுவரை விட்டுக் கீழே இறங்கவில்லை. கிண்டல் கலந்த பார்வைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

அவள் அப்போதும் தளர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள்...

செண்டையின் சத்தம் படிப்படியாக உயர்ந்தது. குழந்தைகளுக்கு மிகுந்த ஆர்வம் உண்டானது. என்ன நடக்கப் போகிறது? சுவரின்மீது அமர்ந்திருந்த ஆட்களுக்கும் ஆர்வமிருந்தது. ஆனால், அதை அங்கு வெளியே காட்டிக்கொள்ள முடியாதே! செண்டையின் சத்தம் உச்சநிலையை அடைந்ததும் திடீரென்று நின்றது. அப்போது தளர்ந்து உட்கார்ந்திருந்த இளம்பெண் ஒரு பூனைக்குட்டி எழுந்திருப்பதைப்போல வேகமாக எழுந்தாள்.

சாலையை நோக்கி அமர்ந்திருந்தவர்கள்கூட தாங்கள் அமர்ந்திருந்த முறையை மாற்றினார்கள்.

அவள் நிமிர்ந்து நின்று இரண்டு முறை தன்னுடைய கைகளை மடக்கி நீட்டினாள். தொடர்ந்து மெதுவாக ரவிக்கையை... ஆமாம்... ரவிக்கையை அவிழ்த்தாள்.

ஆட்களுக்கு, நான் உள்ளிட்ட ஆட்களுக்கு சுவாரசியம் உண்டானது. ரவிக்கைக்குள் இறுக்கமாக இருந்த இன்னொரு ரவிக்கையும் இருந்தது. அடர்த்தியான சிவப்பு நிறம்... இப்போது நிலவிக்கொண்டிருந்த நிமிடங்களில் ஆர்வம் நிறைந்து நின்றிருந்தது. பூங்காவின் நடுப்பகுதியை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்த கண்களில் கிண்டல் இல்லை.

தொடர்ந்து அவள் தன் இடுப்பில் சுற்றியிருந்த துணியை அவிழ்த்தாள். அடர்த்தியான சிவப்பு நிறத்தில் அது இருந்தது. கால்களோடு இறுக்கமாக ஒட்டியிருந்த நிக்கர் ஒன்றை உள்ளே அவள் அணிந்திருந்தாள்.

இப்போது யாருக்கும் கவனம் இல்லை. ஒரு கலை நிகழ்ச்சி ஆரம்பமாகப் போகிறது.

செண்டை மீண்டும் முழங்கியது.

தைரியம் கொண்ட சிலர் முதலில் கீழே இறங்கினார்கள்.

அப்போதுதான் மற்ற ஆட்களுக்கு தன்னம்பிக்கை வந்தது. நிகழ்ச்சி நடத்தப் போவோரைச் சுற்றி ஒரு அரை வட்ட வடிவத்தில் ஆட்கள் சூழ்ந்து நின்றார்கள். கிட்டத்தட்ட சுவர்ப்பகுதி ஆட்கள் யாருமே இல்லாமல் ஆகிவிட்டது. குஜராத்தி இளம்பெண்ணைப் பற்றிய விஷயம் இப்போதைக்கு நிற்கட்டும். நானும் கீழே இறங்கினேன்.

செண்டையின் தாளத்திற்கு ஏற்றபடி, பார்வையாளர் களின் வரிசைக்கு மத்தியில் விடப்பட்டிருந்த இடத்தில், அவள் துள்ளிக்கொண்டே இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தாள். பிறகு... நினைக்காத நேரத்தில் சட்டென்று நின்று கைகளைத் தட்டிக்கொண்டே நின்றபடியே ஒருமுறை குட்டிக்கரணம் போட்டாள்.

செண்டை அடிப்பவன் உரத்த குரலில் கத்தினான்.

“ஹாய்!''

மக்கள் கைகளைத் தட்டினார்கள். நானும் வெறுமனே இருக்கவில்லை. கூர்ந்து கவனித்தபடி இருந்தேன். அவள் தொடர்ந்து இரண்டு முறை மூன்று முறை குட்டிக்கரணம் போட்டாள். ட்ரெமண்டஸ்!

தொடர்ந்து கைத்தட்டல்கள்!

“சபாஷ்... சபாஷ்

கிரி.. கிரி... கிரி...''

மக்கள் பார்த்தார்கள்... ஓ... குள்ள மனிதனின் நுழைவு. இதுவரை நண்பன் எங்கே போயிருந்தான்? காலில் பெரிய ரப்பர் ஷூக்கள் இருந்தன. வேட்டியின் இடத்தில் மிகப்பெரிய பைஜாமாவை அணிந்திருந்தான். தலையில் பதிந்திருக்கும் தொப்பி... முகத்தில் அரிசி மாவால் வரைந்திருந்தான். கையில் ஒரு கழி...

“கிரி... கிரி... கிரி...''

ஆட்கள் சிரித்தார்கள். குள்ளன் பற்களை இளித்துக் கொண்டு, ஒரு குரங்கைவிட மிகவும் அருமையாக வக்கனை காட்டிக்கொண்டிருந்தான்.

இடையில் தன்னுடைய பின்பகுதியைச் சொறிந்து, கீழே விழப்போவதைப் போல ஓரிரு முறை தட்டுத் தடுமாறியவாறு இருந்த அந்த நடையை ஆட்கள் ரசித்தார்கள்.

“கிரி... கிரி... கிரி...''

தொடர்ந்து அந்த அழைப்பும்...

“ஏய்... தங்கச்சீ!''

குள்ளன் இளம்பெண்ணை அழைத்தான்.

“என்ன?''

இளம்பெண் அழைப்பைக் கேட்டாள்.

“இது என்ன வேலை?''

“சர்க்கஸ் வேலை.''

“ரொம்ப மோசம்... சரியான சர்க்கஸ் வேலைன்னா என்ன தெரியுமா? நான் காட்டப்போறேன்.''

பழைய ரப்பராலான ஷூக்களை வீசி எறிந்துவிட்டு, கைகளை வீசிக்கொண்டே பார்வையாளர்களை வணங்கியவாறு குள்ளன் சொன்னான்:

“மதிப்பிற்குரிய மனிதர்களே... கண்கட்டு வித்தையல்ல. ஜாலவித்தையல்ல. வெறும் உடற்பயிற்சி. சர்க்கஸைப் பாருங்க... ஹாய் ஜமா!''

குட்டிக்கரணம் போடுவதாக பாவனை பண்ணி, குள்ளன் தரையில் உருண்டான்.

ஆட்கள் உரக்கக் கூவினார்கள்.

குள்ளன் கோபம் வருவதைப்போல நடித்தான். தன்னுடைய கால்களுக்கு அவனே தண்டனை தந்தான்.

“அண்ணா...''

இளம்பெண் அழைத்தாள்.

வேதனையுடன் அழைப்பைக் கேட்டுக்கொண்டே-

“என்ன தங்கச்சி?''

“ரொம்ப மோசம்?''

“என்ன மோசம்.''

“நான் பிரமாதமான வேலையைக் காட்டப் போறேன்.''

“என்ன வேலை?''

“இதோ பார்..''

மீண்டும் சத்தமாக செண்டை முழங்கியது. அவள் தரையிலிருந்து ஒரு இரும்பாலான வளையத்தை எடுத்து, அது எந்த அளவிற்கு சிறியதாக இருக்கிறது என்பதைப் பார்வையாளர்களிடம் புரியவைப்பதற்காக அதை உயர்த்திக் காட்டினாள். தொடர்ந்து ஒரு கையையும் தலையையும் அதற்குள் நுழைத்து, தன்னுடைய சரீரத்தை நுழைப்பதற்கு முயற்சி செய்தாள்.

“கிரி... கிரி... கிரி... கிரி... கிரி...''

குள்ளன் கேலி செய்துகொண்டே வக்கனை காட்டினான்.

அவளுடைய தடிமனான சரீரத்தின் வழியாக இரும்பாலான வளையம் படிப்படியாக நுழைவதைப் பார்த்தவாறு ஆட்கள் திகைப்புடன் நின்று கொண்டிருந் தார்கள்.

இரும்பு வளையத்தைவிட்டு வெளியே வந்தவுடன் ஆட்கள் கைகளைத் தட்டினார்கள்.

அவள் பாராட்டிற்கு தலையை குனிந்து நன்றியை வெளிப்படுத்தினாள்.

குள்ளன் நிகழ்ச்சியைச் செய்வதற்காக வந்துநின்றான்.

ஒரு பெரிய வளையத்தை எடுத்து, சிரமம் இருப்பதைப் போல நடித்துக்கொண்டே, உடலே படாமல் அதை நகர்த்திக்கொண்டு வந்து, நிம்மதியாக பெருமூச்சு விட்டான். வளையத்தைக் கீழே வைத்துவிட்டு, நெற்றியிலிருந்து வியர்வையைத் துடைப்பதாகக் காட்டியவாறு பார்வையாளர்களைப் பார்த்தான். பாராட்டு கிடைக்க வில்லை. தானே கைகளைத் தட்டிக்கொண்டு தன்னைத்தானே அவன் பாராட்டிக்கொண்டான்.

அப்போது ஆட்கள் சிரித்தார்கள்.

இளம்பெண் வில்லைப்போல வளைந்து நின்றாள்.

செண்டை அடித்துக் கொண்டிருந்தவன் அவளுடைய வயிற்றின்மீது ஏறி நின்றான். என்ன ஒரு மகா அற்புதக் காட்சி! ஆட்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். குள்ளன் தன்னுடைய ஒரு கண்ணை மூடியவாறு உரத்த குரலில் கூப்பாடு போட்டான்:

“அய்யோ... என் தங்கச்சியைக் கொன்னுடாதே!''

இரண்டு அரிவாள்களைக் கையில் வைத்துக்கொண்டு ஆடுவதுதான் இறுதி நிகழ்ச்சியாக இருந்தது. குள்ளன் அந்த நிகழ்ச்சியை தமாஷாக ஒரு மரக்குச்சியை வைத்துக்கொண்டு செய்தான்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version