Lekha Books

A+ A A-

சிரிப்பின் விலை

siripin vilai

பூங்காவின் சுவரில் சாய்ந்துகொண்டு நின்றிருந்தேன்.

பூங்கா என்று கூறும்போது, கொடிகளாலான குடில்களும் பூத்துக் குலுங்கும் செடி, கொடிகளும் உங்களுடைய ஞாபகத்தில் வரலாம். அவை எதுவுமே இல்லை. வெறும் புல்தரை மட்டுமே இருந்தது. ஒரு மூலையில் குழந்தைகள் விளையாடக்கூடிய ஊஞ்சல் தொங்கிக்கொண்டிருந்தது. அதற்கு மிகவும் அருகிலேயே ஒரு சறுக்குமரம் இருந்தது.

அதைச் சுற்றி பத்து பன்னிரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

வெளிச்சுவருக்கு மேலே நான்கு பக்கங்களிலும் ஆட்கள் இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மாலைவேளையை மகிழ்ச்சியாக செலவழிக்க அவர்கள் அங்கு வந்திருந்தார்கள். வேண்டிய அளவிற்கு கையில் பணம் இருக்கும்பட்சம், அங்கு வாழ்க்கை மிகவும் சந்தோஷமானதாக இருக்கும். கடற்கரை இருக்கும் காரணத்தால்தான் எனக்கு இந்த நகரத்தின்மீது விருப்பம் உண்டானது. நிலவு வெளிச்சம் இருக்கும் இரவு வேளைகளில், இரைச்சலிட்டுக் கொண்டிருக்கும் அரபிக்கடலின் அழகைப் பார்த்துக்கொண்டே அந்த மணல் வெளியில் மல்லாந்து படுத்துக்கிடப்பதில் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. நிலவு வெளிச்சத்தில் கடற்கரை புன்னகை புரியும்போது என்னுடைய ஞாபகத்தில் வருவது... வேண்டாம்... அது இன்னொரு கதை...

குளிர்ச்சியான காற்று இருக்கிறது. வளைந்து நெளிந்து காட்சியளிக்கும் காங்க்ரீட் பாதைகள்... கட்டடங்கள்... நிழல் தரும் மரங்கள்... எல்லாவற்றையும் பார்த்தவாறு நான் வெறுமனே உட்கார்ந்திருந்தேன். ஒருமுகப்படுத்தி சிந்திக்கக்கூடிய சில காரியங்கள் மனதில் இருக்கின்றன. ஆனால், எதுவுமே தெளிவாக இல்லை.

அந்தப் பக்கம் இருக்கும் பெரிய மைதானத்தில் சாதாரண கால்பந்து போட்டிகள் நடக்கும். அதைப் பார்ப்பதற்கு ஏராளமான ஆட்களும் இருப்பார்கள். இன்று விளையாட்டு இல்லை. அதனால் பாதையில் நடைபெறும் காட்சிகளை மட்டும் பார்த்து திருப்திப் பட்டுக்கொண்டு ஆட்கள் பூங்காவின் அரைச்சுவரில் இடம்பிடித்து உட்கார்ந்திருந்தார்கள்.

தூரத்தில் டவுன்ஹாலிலிருந்து  ஒலிபெருக்கியின் வழியாக யாருடைய சொற்பொழிவோ உரத்துக் கேட்டுக்கொண்டிருந்தது. இடி முழங்கியதைப் போன்ற குரல். நேற்றும் அதற்கு முந்தைய நாளும் அங்கு நாடகம் நடைபெற்றது. இன்று சொற்பொழிவு. சொற்பொழிவே நாடகத்தைப் பற்றித்தான் என்று யாரோ சொன்னார்கள். எது எப்படி இருந்தாலும் அது பிரச்சினையில்லை. சொற்பொழிவுகளில் இப்போது எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு மிகச்சிறந்த சொற்பொழிவின் மூலம் உலகத்தையே நாம் நல்லதாக ஆக்கிவிட முடியும் என்ற கருத்து முன்பு எனக்கிருந்தது.

கலாச்சாரத்தின் புதிய அலைகள் எழுந்து உயர்ந்து கொண்டிருக்கின்றன.

"பண்டைக் காலத்திலிருந்தே, பிரபஞ்சத்தில் நிலவிக் கொண்டிருக்கும் எண்ணங்களை..'

ஒலிபெருக்கி உரத்து ஒலிக்கச் செய்துகொண்டிருந்த அந்தக் குரல் என்னைச் சுற்றி ஒலித்துக்கொண்டிருப் பதைப்போலத் தோன்றியது...

நான் அரைச் சுவரின்மீது ஏறி உட்கார்ந்தேன். கீழே, பூங்காவிலிருந்த புல்லைத் தின்றுகொண்டே திமிலைக் காட்டியவாறு ஒரு காளை நடந்து போய்க் கொண்டி ருந்தது.

தனிமைச் சூழல் கிடைக்கவில்லை. வெளியே வந்ததே சிறிது வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்துதான். வேலை என்றாலே ஒரு வகையான மனரீதியான பிரசவ வேதனைதான்... எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை. எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? ஆரம்பம் தான் சிரமமே... ஆரம்பித்து விட்டால் வெற்றிபெற்ற மாதிரிதான். அழகான மலர்களைவிட மென்மையான உடலை விற்று, நடந்து திரியும் அந்த குஜராத்தி இளம்பெண்தான் கதாநாயகி. ஒரு செம்பு வியாபாரம் செய்யும் மனிதனின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தங்கச் சங்கிலி, மஞ்சள் நிறத்தில் திரைச்சீலை இடப்பட்டிருக்கும் ஒரு சாளரம், கண்ணாடி அணிந்து, தொப்பையுடனிருக்கும் ஒரு நவநாகரீக மனிதன்- இவர்கள் எல்லாரும் பின்னால் வருகிறார்கள்.

காளையின் ஆடிக்கொண்டிருக்கும் திமிலைப் பார்த்தவாறு நான் உட்கார்ந்திருந்தேன்.

"கிஹி... கிஹி...'

இனிமையான ஒரு கூட்டச் சிரிப்பு.மூன்று இளப்பெண்கள். அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து அது கேட்டது. அவர்கள் எதற்காக சிரித்தார்கள் என்பது தெரியவில்லை. என்னைப் பார்த்துக் கிண்டல் செய்து சிரித்திருப்பார்களோ?

கடவுளே! அப்படி இருக்க வாய்ப்பில்லை. இளம்பெண்களே, நீங்கள் சிரிப்பதைப் பார்க்கும்போது எனக்கு வெறுப்பு உண்டாகிறது. நீங்கள் அழுங்கள்...

அழும்போதுதான் அவர்கள் மிகவும் அழகானவர்களாக இருப்பதைப்போல எனக்குத் தோன்றுகிறது. இதயத்தில் சந்தோஷமும் உண்டாகும்.

மெலிந்த கையில் தொங்கிக்கொண்டிருக்கும் பூக்கூடையை ஆட்டிக்கொண்டு, நெளிந்து நெளிந்து நடந்துகொண்டிருக்கும் அந்த குஜராத்தி இளம்பெண்.... அவளுக்கு எப்போதும் சிரிப்போ சிரிப்புதான். அவள் அழுவதைப் பார்க்கவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

புளிய மரங்கள் நிழல் பரப்பிவிட்டிருக்கும் காங்க்ரீட்டிலான பாதையைப் பார்த்தபோது, ஒரு வினோதமான கூட்டம் வந்துகொண்டிருப்பதை கவனித்தேன். மூன்று பேர்தான். முன்னால் கறுத்து மெலிந்து காணப்பட்ட ஒரு இளைஞன். தோளில் ஒரு செண்டை தொங்கிக்கொண்டிருந்தது. பின்னால் தடித்து, சதைப் பிடிப்புடன் இருந்த ஒரு இளம்பெண்... அதற்குப் பின்னால் கடவுளின் கொடூரமான நகைச்சுவை உணர்விற்கு சாட்சியம் கூறுவதைப்போல, குள்ளமான தோற்றத்தைக் கொண்ட ஒரு மனிதன். அவனுடைய தோளில் மலையைப்போல பெரிதாக இருந்த ஒரு சுமை... மிகவும் நெருக்கமாக அவர்கள் வர... வர... குள்ள மனிதனின் அவலட்சணமான உருவம் நன்கு தெரிந்தது. பெரிய தலை. எலும்புகள் துருத்திக்கொண்டு நிற்கும் அசிங்கமான முகம். அழகற்ற தோற்றத்தை மிகைப்படுத்திக் காட்டும் சிரிப்பு. மெலிந்த கைகளும், கால்களும்... அந்த நடையைப் பார்த்தாலே, யாரும் பார்த்தவுடன் சிரித்துவிடுவார்கள். பிறகு பார்க்கலாம்... ஓ... பிறகு ஒன்றுமில்லை.

பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் நின்று, அவர்கள் தங்களைச் சுற்றிலும் பார்த்தார்கள். அந்த இளைஞன், இளம்பெண்ணிடம் மெதுவான குரலில் என்னவோ முணுமுணுத்தான். அவள் தலையை ஆட்டினாள்.

அவர்கள் பூங்காவுக்குள் நடந்து வந்தார்கள்.

பூங்காவின் நடுப்பகுதிக்கு வந்ததும், அந்த இளைஞன் செண்டையைக் கீழே வைத்தான். குள்ள மனிதன் சுமையைத் தரையில் இறக்கி வைத்தான். அவள், சுற்றியிருந்த சுவரில் இடம்பிடித்திருந்த ஆட்கள் எல்லாரையும் அலட்சியமாக ஒருமுறை பார்த்தாள். ஓ... ஆட்களின் கவனம் அவர்களை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது.

குள்ளன் மூட்டையை அவிழ்த்து பலவற்றையும் வெளியே எடுத்தான்.

நான்கு இரும்பு வளையங்கள், ஒரு கழி, ஒரு புட்டி, இரண்டு வெட்டுக் கத்திகள்- இப்படி பல...

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel