Lekha Books

A+ A A-

ஒரு முட்டாள்தனமான காதல் கதை - Page 2

Oru Muttalthanamana Kadhal Kathai

'அப்போ அவளும் வெடிகுண்டைத் திருப்பி எறியிறது மாதிரி முத்தத்தை அனுப்பியிருப்பா... இல்லே?'

'அதேதான் நடந்தது. ராமா, இது தினமும் நடக்குற ஒரு விஷயமாயிடுச்சு. இப்படி ஒவ்வொரு நாளும் விஷயம் நடந்துக்கிட்டு இருக்க, அவளுக்கு ஒரு கடிதம் எழுதினா என்னன்னு நினைச்சேன். கடிதம் எழுதறதைப் பற்றி நான் நீண்ட நேரம் உட்கார்ந்து யோசிச்சேன். கடிதத்தைத் தபால் மூலம் அனுப்புறது ரொம்பவும் ஆபத்தானதுன்னு பட்டது. சூப்ரெண்டோட கேம்ப் க்ளார்க்கோ இல்லாட்டி சூப்ரெண்டோ கூட அந்தக் கடிதத்தைப் பிரிக்க வேண்டி நேரிடலாம். அப்போ என்னதான் செய்யிறது? கொஞ்சமும் எதிர்பார்க்காம நான் ஒரு நாள் கோபியை ரோட்ல வச்சு பார்த்தேன். கோபி சின்னக் கடையில ஹோட்டல் தொழிலாளர்கள் யூனியன்ல இருந்த ஒரு ஆளு. எனக்கு நல்லா தெரிஞ்சவன். அவன் இப்போ...உன்னால யூகிக்க முடியுதா ராமா?'

'நீ சொல்லு... நான் கேக்குறேன்...'

'அவன் இப்போ போலீஸ் சூப்ரெண்டோட பங்களாவுல சமையல்காரன். காய்கறி வாங்குறதுக்காக ரோட்டுக்கு வந்திருந்தான். நான்தான் சொன்னேனே அவன் நம்மளோட ஆளுன்னு. சின்னக்கடை யூனியன்ல இருந்தான்னும் சொன்னேன்ல... நான் இதுக்கு மேல இதை நீட்டல. அவனை நான் கைக்குள்ளே போட்டுக்கிட்டேன். ஓணவிடுமுறை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலயே நான் ராதிகாவுக்கு என்னோட முதல் காதல் கடிதத்தை எழுதினேன். அந்தக் கடிதத்தைக் கோபி கையில கொடுத்தேன். அதுல என்னோட ஊர் அட்ரஸை எழுதியிருந்தேன். ஆச்சரியம்னுதாண்டா சொல்லணும். கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்காம அப்படி ஒரு காரியம் நடந்துச்சு. ராதிகா பதில் கடிதம் எழுதியிருந்தா. ஊர் முகவரிக்குத்தான். அதாவது - என்னோட வீட்டு அட்ரஸீக்கு. அதனாலதான் சொல்றேன் என் கண்கள்ல இன்னைக்கு ஒரு புது பிரகாசம் இருக்குன்னு...'

மாதங்கள் கடந்தன. ஹாஸ்டல் அறையின் ஜன்னல் வழியே சந்திரன் மாடியில் நின்றிருக்கும் ராதிகாவைப் பார்த்து கைகளை ஆட்டுகிறான். ஃப்ளையிங் கிஸ்ஸைப் பரிசாக அனுப்புகிறான். அவ்வப்போது கோபி மூலம் ராதிகாவிற்குக் கடிதங்களையும் அனுப்புகிறான்.

காதலின் வளர்ச்சியைப் பற்றி சந்திரன் நேரம் கிடைக்கிறபோது என்னிடம் கூறவும் மறக்கவில்லை.

ஒரு நாள் என்னுடைய அறைக்குச் சந்திரன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடி வந்தான். அவன் கையில் ஒரு கவர் இருந்தது. எனக்கு நேராக அதை நீட்டியவாறு அவன் சொன்னான் : 'ராதிகாவோட கடிதம்... படிச்சுப் பாரு!'

'வேண்டாம். உனக்கு அவ எழுதின காதல் கடிதத்தை நான் படிக்கிறது நல்லது இல்ல. அது மரியாதையான ஒரு விஷயமும் இல்ல...'

அவன் அந்தக் கடிதத்தை என் மூக்கிற்கு மிகவும் அருகில் வைத்தான். அருமையான ஒரு வாசனை அந்தக் கடிதத்தில் இருந்து வந்தது. ராதிகா தான் எழுதிய கடிதத்தில் ஏதோ ஒரு வாசனை திரவியத்தைத் தடவியிருக்கிறாள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

மீண்டும் சந்திரனைத் தேடி ராதிகாவின் கடிதங்கள் வந்தன. அவர்கள் இருவருக்குமிடையில் தூதனாகச் செயல்பட்டவன் கோபிதான்.

ஒரு நாள் நான் சந்திரனைப் பார்த்து கேட்டேன்: 'இதனால் என்ன பிரயோஜனம், சந்திரா? அவளை மிகவும் பக்கத்துல இருந்து பார்க்கவோ, தொடவோ, முத்தம் கொடுக்கவோ உன்னால இதுவரை முடிஞ்சிருக்கா?'

சந்திரன் நான் கேட்ட கேள்விக்கு சொன்ன பதில் மிகவும் சுவாரசியமாக இருந்தது. 'அதற்கான நேரம் இன்னும் வரல.  அவசரப்பட்டு விஷயம் ஆபத்துல போய் முடிஞ்சிடக் கூடாதே! இன்னொரு விஷயம்... நான் ஏன் அவசரப்படணும்? ராதிகாவும் நானும்தான் ஆழமான காதல்ல ஈடுபட்டிருக்கோமே! கல்யாணத்துக்குப் பிறகு நாங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கலாமே! கல்யாணம்ன்றதும் புரட்சி மாதிரிதாண்டா...! டைமிங்... அதாவது கரெக்ட் டைமிங்... அதுதான் இங்க முக்கியம்!"

காதல் நதி இப்படி ஓடிக் கொண்டிருந்தபோது, இரண்டு மூன்று மாணவர்கள் போராட்டங்கள் வந்தன. அவற்றிற்குத் தலைமை தாங்கியது சந்திரன்தான். அவன் கைது செய்யப்பட்டான். லாக் அப்பில் அடைக்கப்பட்டான். ஊர்வலங்கள் நடந்தன. கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.

'போலீஸ் எங்களுக்குப் புல்!

சங்கு வேண்டாம் சங்கரமேனன்

சங்கைத் துளைக்க நாங்கள் இருக்கோம்!’

நான் சந்திரனிடம் சொன்னேன். 'டேய், நீ சங்கரமேனனின் குறியில இருக்குற ஆளா இருந்தா, உன்னோட காதலுக்குப் பிரச்சனை வராதா?'

சந்திரன் கையைச் சுருட்டி விட்டவாறு சொன்னான்: 'காதலுக்குப் பிரச்சனை வருமா? அப்படி ஒரு பிரச்சனை வராத அளவுக்கு நான் பார்த்துக்குவேன். கோபி சொல்றான் - என் கூட வீட்டை விட்டு ஓடி வர்றதுக்குக் கூட ராதிகா தயாரா இருக்காளாம்....'

'கோபி சொன்னாப் போதுமா? அவ சொல்ல வேண்டாமா சந்திரா?'

'அவளும்தான் சொல்லியிருக்கா... அதாவது - குறிப்பா சொல்லியிருக்கா... அவ கடைசியா எழுதின கடிதத்துல! கடிதத்தை நீ பார்க்கணுமா? ஓ... இன்னொருத்தனுக்கு வர்ற காதல் கடிதத்தைப் படிக்க விரும்பாத மரியாதையான மனிதனாச்சே நீ! எது எப்படியோ அந்தக் கடிதத்தோட சேர்த்து அவ அனுப்பின ஒரு 'டோக்கன் ஆஃப் லவ்' வை நான் இப்போ உனக்கு காண்பிக்கிறேன்.

சந்திரன் தன்னுடைய அறைக்குச் சென்றான். திரும்பி வந்த அவன் கையில் ஒரு சிறு லாக்கெட் இருந்தது. அவன் அதைத் திறந்து காட்டினான்.

லாக்கெட்டிற்குள் ஒரு சுருண்ட முடி இருந்தது.

'அவளோட முடி....' சந்திரன் சொன்னான்.

'கோபியோட முடியாக ஏன் இது இருக்கக் கூடாது?'- நான் கேட்டேன்.

'ச்சீ... மனசுக்குத் தோணினபடியெல்லாம் பேசாதே' - சந்திரன் என்னைப் பார்த்துச் சொன்னான்.

ஒரு போலீஸ் ஜீப்பின் மேல் சில மாணவர்கள் கல்லெறிந்ததாக இரண்டு மூன்று வாரங்களுக்குப் பிறகு ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு போலீஸ்காரனின் கண் பார்வை பாதிக்கப்பட்டதன் விளைவாக ஆதாரங்கள் சரியாக இல்லாவிட்டால் கூட மாணவர் தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்றும் கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செய்திகள் பரவிக் கொண்டிருந்தன.

ஒரு மாலை நேரம்.

நான் ஹாஸ்டலில் சந்திரனின் அறையில் இருந்தேன்.

ஹாஸ்டல் வாசலில் பயங்கர சத்தத்துடன் போலீஸ் ஜீப்புகள் வந்து நின்றன.

ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவர்கள் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் திகைத்த நிலையில் இருந்தனர்.

நான் சந்திரனிடம் சொன்னேன் : ' நீ சரியா மாட்டிக்கிட்டேன்னு நினைக்கிறேன்.'

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel