Lekha Books

A+ A A-

ஒரு முட்டாள்தனமான காதல் கதை - Page 3

Oru Muttalthanamana Kadhal Kathai

ஒரு ஜீப்பை விட்டு போலீஸ் சூப்ரெண்ட் சங்கர மேனன் வேகமாக இறங்கினார். சந்திரனின் அறையை நோக்கி நடந்தார். அவர் முகத்தில் ஒரு கடுமை தெரிந்தது. இடுப்பில் ரிவால்வர் இருந்தது.

என்னையும் சந்திரனையும் மாறி மாறி பார்த்த சங்கரமேனன் வெடி வெடிக்கிற சத்தத்தில் கேட்டார் : ‘உங்கள்ல யாரு சந்திரன்?'

சந்திரன் சொன்னான்: 'நான்தான்.'

'ராஸ்கல்! நீ என் மகளுக்குக் கடிதம் எழுதினியாடா?'

சந்திரன் எதுவுமே பேசாமல் நின்றிருந்தான்.

'சொல்லுடா...'

'ஆமா...' - சந்திரன் சொன்னான்.

தன் யூனிஃபார்ம் பைக்குள் கையை விட்ட போலீஸ் சூப்ரெண்ட் அடுத்த நிமிடம் சுமார் இருபது கடிதங்களை வெளியே எடுத்தார்.

'நாயோட மகனே! இந்தா... நீ என் மகளுக்கு எழுதின கடிதங்கள். அவளும் உனக்குப் பதில் கடிதங்கள் எழுதியிருப்பான்றதை ஒரு தந்தைன்ற முறையில் என்னால புரிஞ்சிக்க முடியுது. ம்... அவ எழுதின கடிதங்களை எடு. வேகமா...'

புரட்சிவாதியும் காதலனுமான சந்திரன் போலீஸ் சூப்ரெண்டை எதிர்த்து ஏதாவது சொல்லுவான் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

சந்திரன் பெட்டியைத் திறந்து ராதிகா அவனுக்கு எழுதிய கடிதங்கள் அனைத்தையும் வெளியே எடுத்தான். சிவப்பு நிற ரிப்பன் ஒன்றால் அந்தக் கடிதங்கள் அனைத்தையும் அவன் கட்டி வைத்திருந்தான்.

சங்கரமேனன் அந்தக் கடிதங்களை வாங்கி தன் பைக்குள் வைத்தார்.

'அந்தக் கடிதங்களை கிழிச்செறி...' - சந்திரனிடம் திருப்பிக் கொடுத்த அவனின் கடிதங்களை ஒன்றுமே இல்லாமல் ஆக்க வேண்டும் என்பது சங்கரமேனனின் விருப்பம்.

சந்திரன் அவர் சொன்னபடி நடந்தான்.

'ராஸ்கல்! என் மகள் உனக்கு எழுதின கடிதங்கள் எல்லாத்தையும் என்கிட்ட திருப்பி தந்துட்டே இல்ல...? இல்லாட்டி இதுல ஏதாவது பாக்கி வச்சிருக்கியா?'

'இனி இருக்குறது இது மட்டும்தான்...' - பெட்டியைத் திறந்து சந்திரன் அந்த லாக்கெட்டை எடுத்தான். அதை போலீஸ் சூப்ரெண்டின் கையில் தந்தான்.

மேனன் அதைத் திறந்து பார்த்தார். அடுத்த நிமிடம் பயங்கரமாக சிரித்தார். வேகமாக அவர் ஊத, லாக்கெட்டில் இருந்த முடி மேலே பறந்து சென்றது. காற்றில் சில நொடிகள் பறந்த அது தரையில் அறையின் ஒரு மூலையில் அது கிடந்தது.

காலணிகளால் தரையில் ஓசை எழுப்பியவாறு சங்கரமேனன் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

கல்லெறிந்த சம்பவத்தை விசாரிப்பதற்காகத்தான் எஸ்.பி. அங்கு வந்திருந்தார் என்று கூறி தன்னுடைய மானத்தை மறைக்க சந்திரனால் முடியவில்லை.

உள்ளே என்ன நடந்தது என்பதை முழுமையாக வெளியே நின்றிருந்த மாணவர்கள் அறிந்து கொண்டார்கள்.

அறையை விட்டு வெளியே சென்றபோது, சந்திரனைப் பார்த்து அவர்கள் கூக்குரல் எழுப்பினார்கள்.

அடுத்த நாள் சந்திரன் காணாமலே போனான். போலீஸுக்குப் பயந்து அல்ல - மாணவர்களின் கேலி, கிண்டலுக்குப் பயந்துதான்.

அந்தக் காதல் கதை சங்கரமேனனுக்கு எப்படி தெரியவந்தது?

தெரியவில்லை.

எது எப்படியோ மேனனின் மரண செய்தியைப் படித்தபோது, சந்திரனையும் அவனின் முட்டாள்தனமான காதலையும் நினைத்துப் பார்த்தவாறு நான் நீண்ட நேரம் அப்படியே உட்கார்ந்து விட்டேன் என்பது மட்டும் உண்மை.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel