Lekha Books

A+ A A-

வெற்று முரசு - Page 4

vettrumurasu

சிப்பாய்கள் அவனிடம் சொன்னார்கள்: 'சிப்பாய்களா ஆன நாள்ல இருந்து நாங்க எங்கேன்னு தெரியாம போய்க்கிட்டு இருக்கோம். எதுன்னு தெரியாததைத் தேடிக்கிட்டு இருக்கோம். ஆனா, இதுவரை நாங்க அதைக் கண்டுபிடிக்கல. அதுனால உனக்கு நாங்க உதவ முடியாது!

எமெல்யான் சிப்பாய்களுடன் சிறிதுநேரம் உட்கார்ந்து விட்டு புறப்பட்டான். அவன் நீண்ட தூரம் நடந்து, கடைசியில் ஒரு காட்டை அடைந்தான். அந்தக் காட்டில் ஒரு குடிசை இருந்தது. அந்தக் குடிசை முன்னால் மிகவும் வயதான ஒரு பாட்டி உட்கார்ந்திருந்தாள். அவள்தான் சிப்பாய்களின் தாய் என்பதை அவன் புரிந்து கொண்டான். அந்தக் கிழவி எதையோ பின்னியவாறு, அழுது கொண்டிருந்தாள். பின்னும்போது, அவள் ஈரமாக்குவதற்காக தன் விரல்களை வாயில் வைக்கவில்லை. மாறாக, விரல்களை தன் கண்ணில் வைத்து கண்ணீரால் நனைய வைத்தாள். எமெல்யானைப் பார்த்ததும் அவள் அழுதவாறு 'நீ எதுக்காக இங்கே வந்திருக்கே?' என்று கேட்டாள். எமெல்யான் தன் கையிலிருந்த நூற்கண்டை அவளிடம் கொடுத்து அதை தன் மனைவி கொடுத்தனுப்பியதாகச் சொன்னாள்.

அந்த வயதான கிழவி அழுவதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்து கேள்வி கேட்க ஆரம்பித்தாள். எமெல்யான் தன்னுடைய முழு வாழ்க்கைக் கதையையும் சொன்னான். அந்த கிராமத்து இளம் பெண்ணை தான் திருமணம் செய்தது, நகரத்தில் இருவரும் போய் வாழ்க்கை நடத்தியது. தான் வேலை செய்தது, அரண்மனையில் தான் செய்த காரியங்கள், தான் தேவாலயத்தைக் கட்டியது, ஆறு உண்டாக்கியது, அதில் கப்பல்களை ஓட விட்டது. அதற்குப் பிறகு தன்னை அரசன் எங்கு என்று கூறாத இடத்திற்குப் போகச் சொன்னது, தன்னை எது என்று சொல்லாமலே ஒரு பொருளை கொண்டு வரச் சொன்னது- இப்படி எல்லா விஷயங்களையும் அவன் அந்தப் பாட்டியிடம் கூறினான்.

பாட்டி கடைசிவரை அவன் சொன்னதைக் கேட்டு, அழுவதை நிறுத்தினாள். அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்: 'அதற்கான நேரம் வந்திடுச்சு' பிறகு அவனைப் பார்த்து சொன்னாள்: 'சரி... மகனே, உட்காரு, நான் உனக்கு சாப்பிடுறதுக்கு ஏதாவது தர்றேன்.'

எமெல்யான் சாப்பிட்டான். பிறகு அந்தப் பாட்டி அவனிடம் என்ன செய்ய வேண்டுமென்று கூறினாள்: 'இங்கே... - அவள் சொன்னாள்: 'உருண்டையா நூல் இருக்கு. இதை உனக்கு முன்னாடி உருட்டிக்கிட்டே அதைப் பின்பற்றி நீ போ. கடலுக்கு அருகில் போறது வரை நீ போய்க்கிட்டே இருக்கணும். அங்கு போய் சேர்ந்தவுடனே, ஒரு பெரிய நகரம் இருப்பதை நீ பார்ப்ப. நகரத்துக்குள்ளே நுழைஞ்சு ஒருநாள் இரவு தங்கிட்டுப் போறதா எல்லையில இருக்குற வீட்டுல போய் சொல்லு. நீ எதைத் தேடுறியோ, அங்கே அது இருக்கும்.

'அதைப் பார்த்தவுடனே, அதுதான் நான் தேடிக்கிட்டு இருக்குறதுன்றது எனக்கு எப்படி தெரியும் பாட்டி?'- அவன் கேட்டான்.

'பெற்ற தாய் தந்தையை விட மனிதர்கள் மிகவும் மரியாதை செலுத்தக் கூடியது என்ன இருக்கோ, அதுதான் அந்தப் பொருள். அதை எடுத்து அரசன்கிட்ட கொண்டு போ. அதைப் பார்த்தவுடனே அரசன் தான் கேட்ட பொருள் அது இல்லைன்னு, சொல்லுவான். அப்படின்னா அதை உடைச்சு எறிஞ்சிடுவோம்னு நீ சொல்லு. சொன்னதோடு நிற்காம நீ அதை அடிச்சுக்கிட்டே ஆற்றுக்குப் பக்கத்துல கொண்டு போகணும். அங்கே போயி அதை துண்டு துண்டா உடைச்சு, நீருக்குள்ளே எறியணும். அப்போ உன் மனைவி உனக்குக் கிடைப்பா. என் கண்ணீரும் அப்போ முழுசா நின்னுடும்!- கிழவி சொன்னாள்.

எமெல்யான் கிழவியிடம் விடை பெற்றுக் கொண்டு பந்தை தனக்கு முன்னால் உருட்டிக் கொண்டே சென்றான். அது உருண்டு உருண்டு கடைசியில் ஒரு கடலுக்கு அருகில் வந்தது. கடலுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய நகரம் இருந்தது. நகரத்தின் எல்லையில் ஒரு பெரிய வீடு இருந்தது. அங்கு எமெல்யான் ஒருநாள் மட்டும் தான் தங்கிச் செல்ல அனுமதிக்க முடியுமா என்று கெஞ்சிக் கேட்டான். அவனுக்கு அனுமதி தரப்பட்டது. அவன் அங்கு படுத்து உறங்கினான். மறுநாள் காலையில் அவன் படுக்கையை விட்டு எழுந்தபோது ஒரு வயதான மனிதர் தன் மகனை எழுப்பி அடுப்பு எரிப்பதற்கு விறகு கொண்டு வரும்படி சொன்னார். தந்தை சொன்னதை மகன் கேட்கவில்லை. 'இப்போ என்ன அவசரம்?'- மகன் சொன்னான்: 'இன்னும் எவ்வளவோ நேரம் இருக்கு...' அப்போது பையனின் தாய் சொன்ன வார்த்தைகள் எமெல்யானின் காதுகளில் விழுந்தன. 'போ, மகனே... உன் அப்பா உடம்பு வலிக்குதுன்னு படுத்திருக்கார். நீ அவரைப் போகச் சொல்றியா? இப்பவே நீ போனாத்தான் சரியா இருக்கும்.’

ஆனால், அவர்களுடைய மகன் என்னவோ முணுமுணுத்தானே தவிர, எழாமல் மீண்டும் தூக்கத்திலேயே அவன் ஆழ்ந்துவிட்டான். அவன் நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, தெருவில் ஏதோ அதிரும் சத்தம் கேட்டது. அவ்வளவுதான்- குதித்து எழுந்த பையன் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு வேகமாக தெருவை நோக்கி ஓடினான். எமெல்யானும் வேகமாக எழுந்து பெற்ற தாய், தந்தையைக் கூட மதிக்காத ஒருவன் அவர்களை விட ஏதோ ஒன்றுக்கு கீழ்ப்படிகிறான் என்றால் அது என்ன என்பதைப் பார்ப்பதற்காக அவனுக்குப் பின்னால் தெருவை நோக்கி ஓடினான். தெருவில் ஒரு மனிதன் வயிற்றோடு சேர்த்து கட்டிய ஒரு பொருளை குச்சியால் ஓங்கி ஓங்கி அடித்தவாறு நடந்து போய்க் கொண்டிருந்தான். அதன் சத்தம்தான் இடி முழக்கம் போல அப்படி கேட்டது. அந்த ஒலிக்குத்தான் அந்த மகன் அப்படி கீழ்ப்படிந்து நடந்திருந்தான். எமெல்யான் அந்தக் காட்சியைப் பார்த்தான். அந்த ஒலி உண்டாக்கிய பொருள் வட்ட வடிவத்தில் ஒரு சிறு தொட்டியைப் போல இருந்தது. அதன் இரு பக்கங்களிலும் தோல் இழுத்து கட்டப்பட்டிருந்தது. அவன் அந்தக் கருவியின் பெயர் என்ன என்று கேட்டான்.

அதற்கு பதில் வந்தது: 'முரசு...'

'அது காலியாவா இருக்கு?'

'ஆமா... காலியாத்தான் இருக்கு.'

அதைக் கேட்டு எமெல்யான் ஆச்சரியமடைந்தான். அவன் அதைத் தன்னிடம் தரும்படி கேட்டான். அதற்கு அவர்கள் மறுத்து விட்டார்கள். அதனால் எமெல்யான் அதைக் கேட்பதை நிறுத்திவிட்டு, முரசு அடித்துக் கொண்டிருந்த ஆளை பின்பற்றினான். முழு நாளும் அவன் அந்த மனிதனைப் பின்தொடர்ந்து நடந்தான். கடைசியில் ஒரு இடத்தில் முரசு அடிக்கும் ஆள் படுத்துத் தூங்க, அந்த முரசை எடுத்துக் கொண்டு எமெல்யான் ஓடினான்.


அவன் ஓடினான்... ஓடினான்... ஓடிக் கொண்டே இருந்தான். கடைசியில் தன்னுடைய சொந்த ஊரை அவன் அடைந்தான். அவன் தன் மனைவியைத் தேடி வீட்டிற்குச் சென்றான். அப்போது அவனுடைய மனைவி வீட்டில் இல்லை. அவன் கிளம்பிய மறுநாள் அரசன் அவளை வீட்டிலிருந்து கொண்டு போய்விட்டான். அதனால் எமெல்யான் அரண்மனைக்குச் சென்று மன்னனுக்கு செய்தி சொல்லி அனுப்பினான். 'அவன் எங்கு என்று தெரியாத ஊருக்குப் போய்விட்டு திரும்பி வந்திருக்கிறான். எது என்று தெரியாத பொருளைக் கொண்டு வந்திருக்கிறான்'- இதுதான் அவன் சொல்லிவிட்ட செய்தி.

அவர்கள் மன்னனிடம் போய் செய்தியைக் கூறினார்கள். மறுநாள் அவனை வரும்படி சொல்லி மன்னன் பதிலுக்கு செய்தி கூறி அனுப்பினான்.

அதற்கு எமெல்யான் சொன்னான்: 'அரசரிடம் சொல்லுங்க- இன்னைக்கு நான் இங்கேதான் இருக்கப் போறேன்றதை. அவர் என்ன வேணும்னு விரும்பினாரோ, அதைக் கொண்டு வந்திருக்கேன். அவரை இங்கே வந்து என்னைப் பார்க்கச் சொல்லுங்க. இல்லாட்டி நான் அவரைப் பார்க்க உள்ளே வந்திடுவேன்.'

அவ்வளவுதான்- அடுத்த சில நிமிடங்களில் அரசன் அங்கு வந்தான். வந்தவுடன் அவன் 'இவ்வளவு நாட்களும் எங்கே போயிருந்தே?' என்று கேட்டான்.

எமெல்யான் சொன்னான்.

'அது நான் நினைத்த இடம் இல்ல...'- அரசன் சொன்னான். 'சரி... நீ என்ன கொண்டு வந்தே?'

எமெல்யான் முரசைச் சுட்டிக் காட்டினான். மன்னன் அதைப் பார்க்கவேயில்லை.

'நான் நினைத்தது இது இல்ல...'

'நீங்க நினைச்சது இது இல்லைன்னா, இதை உடைச்சு எறிய வேண்டியதுதான். சாத்தானுக்கு வேணும்னா இதை எடுத்துக்கட்டும்'- எமெல்யான் சொன்னான்.

எமெல்யான் அரண்மனையை விட்டு கிளம்பினான். போகும்போது முரசை தன் மீது தொங்கவிட்டு, அடித்துக் கொண்டே சென்றான். அவன் முரசை அடிக்க அடிக்க, அரசனின் ராணுவ வீரர்கள் வெளியே எமெல்யானைப் பின்பற்றி நடக்க ஓடி வந்தார்கள். அவர்கள் அவனைப் பார்த்து 'சல்யூட்' அடித்தார்கள். அவனுடைய கட்டளைகளுக்காக அவர்கள் காத்திருந்தார்கள்.

அரசன் ஜன்னல் வழியாக அந்தக் காட்சியைப் பார்த்து ராணுவ வீரர்கள் எமெல்யானைப் பின்தொடர்ந்து செல்லக் கூடாது என்று உரத்த குரலில் கத்தினான். மன்னன் சொன்னதை அவர்கள் காதிலேயே வாங்காமல், எமெல்யானைப் பின்பற்றி நடந்தார்கள்.

அதைப் பார்த்த அரசன் எமெல்யானின் மனைவியை அவனிடமே திருப்பி அனுப்ப தான் தயாராக இருப்பதாகவும், பதிலுக்கு முரசை எமெல்யான் தன்னிடம் தரவேண்டுமென்றும் செய்தி சொல்லி அனுப்பினான்.

'அது முடியாது...' - எமெல்யான் சொன்னான்: 'இதைச் சுக்கு நூறா உடைக்கச் சொல்லி எனக்குக் கட்டளை போடப்பட்டிருக்கு. நான் இதை உடைச்சு ஆத்துல போடப் போறேன்.'

சொன்னதோடு நிற்காமல் எமெல்யான் ஆற்றை நோக்கி முரசுடன் நடக்க, ராணுவ வீரர்கள் அவனைப் பின் தொடர்ந்தார்கள். ஆற்றின் கரையை அவன் அடைந்ததும், எமெல்யான் முரசை உடைத்து நொறுக்கி ஓடிக் கொண்டிருந்த நீரில் அதை விட்டான். அங்கிருந்த ராணுவ வீரர்கள் அடுத்த நிமிடம் அங்கிருந்து ஓடினார்கள்.

எமெல்யான் தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்குச் சென்றான். அதற்குப் பிறகு அவனுக்குத் தொல்லைகள் தருவதை மன்னன் நிறுத்திக் கொண்டான். எமெல்யானும், அவனுடைய மனைவியும் அதற்குப் பிறகு நிரந்தர மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel