Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

வெற்று முரசு - Page 3

vettrumurasu

இதைவிட புத்திசாலித்தனமான ஏதாவதொரு திட்டத்தைத் தீட்டுங்க. இல்லாட்டி அவன் தலையை மட்டுமில்ல. உங்க எல்லாருடைய தலைகளையும் நான் வெட்டிடுவேன்.'

அவ்வளவுதான்- மன்னனின் பணியாட்கள் வேறொரு புதிய திட்டத்தைச் சிந்தித்து அறிவித்தார்கள். அதன்படி எமெல்யான் மன்னனின் அரண்மனையைச் சுற்றி ஓடுகிற மாதிரி ஆறு ஒன்றை உருவாக்க வேண்டுமென்றும், அந்த ஆற்றில் கப்பல்கள் பயணம் செய்ய வேண்டுமென்றும் அவர்கள் சொன்னார்கள். மன்னன் எமெல்யானை அழைத்து வரும்படி ஆட்களை அனுப்பினான். அவன் வந்தவுடன் மன்னன் அவனிடம் அந்த வேலையை ஒப்படைத்தான்.

'ஒரே இரவுல உன்னால ஒரு தேவாலயத்தைக் கட்ட முடியும்னா, இதையும் உன்னால செய்ய முடியும். நாளைக்கே எல்லாம் முடிஞ்சாகணும். இல்லாட்டி நான் உன் தலையைத் தனியா துண்டிச்சு எடுத்திடுவேன்...'

எமெல்யான் முன்பு இருந்ததை விட மிகுந்த கவலைக்குள்ளானான். அவன் மனக் கவலையுடன் தன் மனைவியைத் தேடி வந்தான்.

'ஏன் இந்த அளவுக்கு கவலையா இருக்குற'- அவனுடைய மனைவி கேட்டாள்: 'மன்னர் இப்போ புதுசா ஏதாவது வேலை சொல்லியிருக்கிறாரா என்ன?'

எமெல்யான் நடந்த விஷயத்தை அவளிடம் சொன்னான். பிறகு அவன் தொடர்ந்து கூறினான்: 'நாம இங்கேயிருந்து ஓடிர்றதுதான் சரி.'

அதற்கு அவனுடைய மனைவி சொன்னாள்: 'மன்னரோட ஆளுங்கக்கிட்ட இருந்து நாம தப்பவே முடியாது. நாம எங்கே போனாலும், அவங்க நம்மைப் பிடிச்சிடுவாங்க. அதனால மன்னரோட கட்டளைக்குக் கீழ்ப்படியிறதைத் தவிர வேற வழியே இல்ல...'

'நான் எப்படி அதைச் செய்ய முடியும்?'- கவலையுடன் முணுமுணுத்தான் எமெல்யான்.

'முடியும், நல்ல மனிதனே!'- அவள் சொன்னாள்: 'தேவையில்லாம மனம் தளரக் கூடாது. இப்போ இரவு உணவைச் சாப்பிட்டுட்டு படுக்கப் போ. காலையில சீக்கிரம் எழுந்திடு. எல்லா விஷயங்களும் நல்லபடியா நடக்கும்...'

மனைவி சொன்னபடி எமெல்யான் படுத்துத் தூங்கினான். அதிகாலையில் அவனுடைய மனைவி அவனை எழுப்பினாள்: 'போ...'- அவள் சொன்னாள்: 'அரண்மனையில எல்லாம் தயாரா இருக்கு. அரண்மனைக்கு முன்னாடி ஒரே ஒரு மண் மேடு மட்டும் இருக்கும். அதை ஒரு கரண்டியை எடுத்து சரி பண்ணி விட்டா போதும்.'

மன்னன் படுக்கையை விட்டு எழுந்தபோது இதற்கு முன்பு அங்கு இருந்திராத ஒரு ஆறு இருப்பதைப் பார்த்தான். கப்பல்கள் மேலும் கீழுமாக போய்க் கொண்டிருந்தன. எமெல்யான் ஒரு கரண்டியால் அங்கிருந்த மண் மேட்டைச் சமன் செய்து கொண்டிருந்தான். மன்னனுக்கு உண்டான ஆச்சரியத்திற்கு அளவேயில்லை. ஆறோ, கப்பல்களோ அங்கு இருந்ததற்காக அவன் மனதில் சந்தோஷப்படவில்லை. எமெல்யானைத் தண்டிக்க முடியவில்லையே என்பதற்காக அவன் மிகவும் கவலைப்பட்டான். 'உலகத்துல எந்த விஷயமும்...'- மன்னன் நினைத்தான்: 'அவன் செய்ய முடியாததா இல்ல. இப்போ என்ன செய்யிறது? அடுத்த நிமிடம் அவன் தன் பணியாட்களை அழைத்து அவர்களுடைய அறிவுரையை மீண்டும் கேட்டான்.

'வேறு ஏதாவது யோசனை பண்ணுங்க...'- மன்னன் சொன்னான்: 'எமெல்யான் இந்தத் தடவை தப்பவே கூடாது. நாம எதைத் திட்டம் போட்டாலும், அவன் அதை முழுமையா முடிச்சிடுறான். நான் அவன்கிட்ட இருந்த அவனோட மனைவியைப் பறிக்கவே முடியல...'

மன்னனின் பணியாட்கள் தீவிர சிந்தனையில் மூழ்கினார்கள். கடைசியில் அவர்கள் மனதில் ஒரு திட்டம் உதித்தது. அவர்கள் அரசனிடம் வந்து சொன்னார்கள்: 'எமெல்யானை வரச் சொல்லி ஆள் அனுப்புங்க. வந்தவுடன் அவன்கிட்ட 'அங்கே போ... எங்கேன்னு சொல்ல மாட்டேன்... வர்றப்போ அதை எடுத்துட்டு வா... எதைன்னு சொல்ல மாட்டேன்'னு சொல்லுங்க. இந்தத் தடவை அவன் உங்கக்கிட்ட இருந்து தப்பவே முடியாது. அவன் எங்கே போனாலும், சரியான இடத்துக்குப் போகலைன்னு நீங்க சொல்லிடுங்க. பிறகென்ன? அவன் தலையை வெட்டி எடுத்துட்டு, அவன் மனைவிகூட நீங்க வாழ வேண்டியதுதானே!'

அதைக் கேட்க மன்னனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 'நீங்க இப்போ சொன்னது சரியான யோசனை' என்றான் அவன். தொடர்ந்து அவன் ஆட்களை அனுப்பிவிட்டு எமெல்யானை அழைத்து வரச் செய்தான். வந்து நின்ற எமெல்யானிடம் அவன் சொன்னான்: 'போ... எங்கேன்னு நான் சொல்ல மாட்டேன். வர்றப்போ அதைக் கொண்டு வா. எதைன்னு நான் சொல்ல மாட்டேன். நீ அதைக் கொண்டு வரலைன்னா, நான் உன் தலையை வெட்டுறதைத் தவிர வேற வழியில்லை...'

எமெல்யான் தன் மனைவியிடம் திரும்பி வந்தான். அவளிடம் மன்னன் கூறியதைச் சொன்னான். அவனுடைய மனைவி தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தாள்.

'விஷயம் அப்படிப் போகுதா?'- அவள் சொன்னாள்: 'உன்னை எப்படி பிடிக்குறதுன்னு அரசனுக்கு அவர்கள் சொல்லித் தந்திருக்காங்க. நாம இப்போ ரொம்பவும் புத்திசாலித்தனமா நடக்கணும்.' அவள் அமர்ந்து, தீவிர சிந்தனையில் மூழ்கி கடைசியில் தன் கணவனைப் பார்த்து சொன்னாள்: 'நீ ரொம்ப தூரம் பயணம் செய்து அந்த விவசாயம் செய்யிற பாட்டியைப் போய் பார்க்கணும். அவங்களோட உதவியை நீ கேட்கணும். அவங்க ஏதாவது உனக்கு உதவினாங்கன்னா, அதோட நீ நேரா அரண்மனைக்குப் போகணும். நான் அங்கே இருப்பேன். அவங்கக்கிட்ட இருந்து இந்த முறை என்னால நம்ப முடியாது. அவங்க பலவந்தப்படுத்தி என்னை எப்படியும் கொண்டு போயிருவாங்க. ஆனா, நீண்ட நாட்கள் என்னை அவங்க வச்சிருக்க முடியாது. பாட்டி என்ன சொல்றாங்களோ, அதன்படி நடந்தா என்னை மிகவும் சீக்கிரத்திலேயே நீ காப்பாத்திடலாம்.'

அவனுடைய மனைவி அவன் புறப்படுவதற்கான ஆயத்தங்களைச் செய்தாள். அவள் அவனிடம் ஒரு கைக்குட்டையையும் நூற்கண்டையும் தந்தாள். 'இவற்றை பாட்டிக்கிட்ட கொடு'- அவள் சொன்னாள்: 'இந்த அடையாளங்களை வச்சு நீதான் என் கணவன்றதை அவங்க புரிஞ்சிக்குவாங்க.' அவன் போகவேண்டிய பாதை எது என்பதை அவளே காட்டினாள்.

எமெல்யான் புறப்பட்டான். அவன் நகரத்தைத் தாண்டி வேறொரு இடத்திற்கு வந்தான். அங்கு சில சிப்பாய்கள் எதையோ தோண்டிக் கொண்டிருந்தார்கள். எமெல்யான் அங்கு நின்று அவர்களையே பார்த்தான். தோண்டிக் கொண்டிருந்த சிப்பாய்கள் களைத்துப் போய் ஓய்வெடுப்பதற்காக உட்கார்ந்தார்கள். எமெல்யான் அவர்களிடம் போய் கேட்டான். 'சகோதரர்களே, எங்கேன்னு சொல்ல முடியாத இடத்துக்கு எப்படி போறது? எதுன்னு தெரியாத பொருளை எப்படி வாங்குறது?'

சிப்பாய்கள் தங்களுக்குள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டார்கள். 'யார் உன்னை இங்கே அனுப்பி வச்சது?'- அவர்கள் கேட்டார்கள்.

‘மன்னன்...’ – அவன் சொன்னான்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version