Lekha Books

A+ A A-

வெற்று முரசு - Page 2

vettrumurasu

மீண்டும் மீண்டும் அவர்கள் எமெல்யானின் வேலையை அதிகமாக்கினார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் மாலை நேரத்திற்குள் எவ்வளவு கடுமையான வேலைகளைக் கொடுத்தாலும், அவன் அதை முழுமையாக முடித்து விட்டு இரவு வருவதற்குள் தன் வீட்டிற்குத் திரும்பி விடுவான். ஒரு வாரம் ஓடி முடிந்தது. கடுமையான வேலைகளைக் கொடுத்து எமெல்யானைத் துன்புறுத்தி அழித்து விடலாம் என்று கணக்குப் போட்டிருந்த மன்னனின் பணியாட்களின் எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டது. அதனால் திறமை தேவைப்படுகிற வேலையாக அவனுக்குக் கொடுக்க அவர்கள் தீர்மானித்தார்கள். தச்சு வேலை, பூச்சு வேலை, கூரை வேய்தல்- இப்படி எந்த வேலையைக் கொடுத்தாலும், எமெல்யான் உரிய நேரத்திற்குள் அந்த வேலையைச் செய்து முடித்து விடுவான். இரவில் வீட்டிலிருக்கும் தன் மனைவியைத் தேடி போய் விடுவான். இப்படியே இரண்டாவது வாரமும் ஓடி முடிந்தது.

மன்னன் தன் பணியாட்களை அழைத்து சொன்னான்: 'ஒண்ணுமே செய்யாம இருக்குறதுக்கா நான் உங்களுக்கு சோறு போட்டு வளர்க்கிறேன்! ரெண்டு வாரங்கள் ஓடி முடிஞ்சிடுச்சு. நீங்க எதையும் உருப்படியா செய்ததா தெரியல. எமெல்யானுக்குக் கடுமையான வேலைகளைத் தந்து, அவனைக் களைப்படைய வைக்கணும்னு நீங்க முயற்சிக்கிறீங்க. ஒவ்வொரு நாள் சாயங்காலமும் அவன் சந்தோஷத்தோட பாட்டுப் பாடிக்கிட்டு வீட்டுக்குப் போறதை நான் ஜன்னல் வழியா பார்த்துக்கிட்டு இருக்கேன். என்னை முட்டாளாக்கப் பார்க்குறீங்களா?'

பணியாட்கள் மன்னனிடம் தங்களை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். 'நாங்க கடுமையான வேலைகளைத் தந்து அவனை ஒரு வழி பண்ணணும்னு நினைச்சோம்'- அவர்கள் சொன்னார்கள்: 'ஆனா, அவனுக்கு எதுவுமே கஷ்டமா இல்ல. அவன் எந்த வேலையைக் கொடுத்தாலும் துடைப்பத்தால தூசியைத் துடைக்கிற மாதிரி சர்வ சாதாரணமா எதையும் செஞ்சிட்டுப் போயிடுறான். அவனை எங்களால சோர்வடையச் செய்யவே முடியல. அதனால திறமை தேவைப்படுகிற வேலைகளா பார்த்து நாங்க அவனுக்குத் தந்தோம். அந்த வேலைகளைச் செய்யிறதுக்கான திறமையும், புத்திசாலித்தனமும் அவனுக்கு இருக்குன்னு நாங்க நினைக்கல. ஆனா, அந்த வேலைகளையும் அவன் நல்லாவே செய்தான். எந்த வேலையைக் கொடுத்தாலும், அவன் அதை முழுமையா செய்து முடிக்கிறான்றது ஒரு பக்கம் இருக்கட்டும். அதை அவன் எப்படிச் செய்து முடிக்கிறான்றதுதான் எங்களுக்கு ஆச்சரியமான ஒரு விஷயமா இருக்கு. அவனோ அவன் மனைவியோ தங்களுக்கு உதவக் கூடிய அந்த மறைபொருளை கட்டாயம் தெரிஞ்சு வச்சிருக்கணும். அவனோட செயல்களைப் பார்த்து நாங்களே ஒரு மாதிரி ஆயிட்டோம். எந்த வகையில பார்த்தாலும் செய்யவே முடியாத வேலையா பார்த்து நாங்க அவனுக்கு தர தீர்மானிச்சிருக்கோம். ஒரே நாள்ல ஒரு தேவாலயத்தைக் கட்டி முடிக்கணும்னு அவன்கிட்ட சொல்லப் போறோம். அரண்மனைக்கு முன்னாடி ஒரே நாள்ல ஒரு தேவாலயத்தை கட்டி முடிக்கணும்னு ஆள் அனுப்பி விட்டு எமெல்யானை வரவழைச்சு, அவனுக்குக் கட்டளை போடுங்க. அப்படி அவனால ஒரு தேவாலயத்தை ஒரே நாள்ல கட்ட முடியாமப் போனா, சொன்ன வார்த்தையைச் செய்யலைன்ற குற்றத்தைச் சுமத்தி அவனோட தலையை வெட்டிடுங்க!'

மன்னன் எமெல்யானை வரும்படி சொல்லி ஆள் அனுப்பினான். எமெல்யான் வந்தான். 'நான் சொல்லப்போற கட்டளையைக் கேள்'- அவன் சொன்னான்: 'என் அரண்மனைக்கு முன்னாடி இருக்குற சதுக்கத்துல நீ ஒரு புது தேவாலயத்தைக் கட்டணும். நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள அந்த தேவாலயம் தயாராகணும். இந்தக் கட்டளையை ஒழுங்கா செய்து முடிச்சா, உனக்கு நான் பரிசு தருவேன். அப்படிச் செய்து முடிக்கலைன்னா, உன் தலையை நான் வெட்டிவிடும்படி ஆணை பிறப்பிப்பேன்!'

எமெல்யான் மன்னன் போட்ட கட்டளையைக் கேட்டு அதிர்ச்சியடைந்து வீட்டிற்குத் திரும்பி வந்தான். 'என் முடிவு நெருங்கிடுச்சு'- அவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். மனைவியிடம் வந்து அவன் சொன்னான்: 'என் அருமை மனைவியே, தயாராகு. நாம உடனே இங்கிருந்து கிளம்பியாகணும், இல்லாட்டி எந்தத் தப்பும் செய்யாமலே என்னை நான் இழக்க வேண்டியது வரும்.'

'எதனால இப்படி பயப்படுற?'- அவள் கேட்டாள்: 'நாம ஏன் இங்கேயிருந்து ஓடணும்?'

'நான் எப்படி பயப்படாம இருக்க முடியும்? நாளைக்கு ஒரே நாள்ல ஒரு தேவாலயத்தை நான் கட்டித் தரணும்னு மன்னர் கட்டளை போட்டிருக்காரு. நான் அதைக் கட்டலைன்னா, என் தலையை தனியா துண்டிச்சு அவர் எடுத்துடுவாரு. ஒரே ஒரு விஷயம்தான் இப்போ செய்ய முடியும். நேரம் இன்னும் இருக்கு- நாம இங்கேயிருந்து ஓடிடுவோம்!

ஆனால், அவனுடைய மனைவி அவன் சொன்னதை காதிலேயே வாங்கவில்லை. 'மன்னன்கிட்ட நிறைய வீரர்கள் இருக்காங்க'- அவள் சொன்னாள்: 'நாம எங்கே இருந்தாலும் அவங்க நம்மைப் பிடிச்சிடுவாங்க. அவர்கிட்ட இருந்து நாம தப்ப முடியாது. அதைவிட உடம்புல பலம் இருக்குற வரைக்கும் அவருக்குக் கீழ்ப்படிஞ்சு நடக்குறதுதான் நல்லது!

'செய்யச் சொல்ற வேலை என்னோட பலத்தை விட பெருசா இருக்குறப்போ, நான் எப்படி அவர் சொல்றபடி நடக்க முடியும்?'

'நல்ல மனிதனே, மனம் தளரக் கூடாது. இப்போ இரவு உணவைச் சாப்பிட்டு முடிச்சு நீ போய் படு. காலையில் சீக்கிரம் எழுந்திரு. எல்லாம் சரியா நடக்கும்.'

அவள் கூறியபடி எமெல்யான் படுத்து தூங்கினான். மறுநாள் அதிகாலையில் அவனுடைய மனைவி அவனை எழுப்பினாள். 'சீக்கிரம் புறப்படு...' - அவள் சொன்னாள்: 'தேவாலயத்தைச் சீக்கிரம் கட்டி முடிக்கணும். இதோ ஆணி, சுத்தியல் எல்லாம் இருக்கு. ஒரு நாள்ல சாதாரணமாக இதை செய்து முடிக்க முடியும்!

எமெல்யான் நகரத்திற்குள் நுழைந்து அரண்மனைக்கு முன்னாலிருந்த சதுக்கத்தை அடைந்தான். அங்கு முற்றிலும் முடிவடையாத நிலையில் ஏற்கெனவே ஒரு பெரிய தேவாலயம் இருந்தது. எது தேவையோ, அதை மட்டும் எமெல்யான் உட்கார்ந்து செய்தான். மாலை வரும்போது முழுமையாக தேவாலயம் உருவாக்கி முடிக்கப்பட்டிருந்தது.

மன்னன் படுக்கையை விட்டு எழுந்து அரண்மனைக்குள்ளிருந்து பார்க்கும்போது, வெளியே தேவாலயம் கம்பீரமாக நின்றிருந்தது. எமெல்யான் இங்குமங்குமாய் ஏதோ சில ஆணிகளை அடித்துக் கொண்டிருந்தான். தேவாலயம் அங்கு நின்றிருப்பதை, சொல்லப் போனால்- மன்னன் விரும்பவேயில்லை. எமெல்யானுக்குத் தண்டனை தந்துவிட்டு, அவனுடைய மனைவியைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற தன்னுடைய ஆசை நிறைவேறாமற் போனது குறித்து அவன் மிகவும் வருத்தமடைந்தான். அவன் மீண்டும் தன்னுடைய பணியாட்களை அழைத்தான். 'எமெல்யான் இந்த வேலையையும் ஒழுங்கா செய்து முடிச்சிட்டான்'- மன்னன் சொன்னான்: 'அவனைச் சாகடிக்கலாம்ன்ற விஷயம் இதுலயும் நிறைவேறாமப் போச்சு. இதுவும் அவனுக்குக் கஷ்டமில்லாத ஒரு வேலையா ஆகிப் போனதுதான் ஆச்சரியமான விஷயம்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel