Lekha Books

A+ A A-

வெற்று முரசு

vettrumurasu

மெல்யான் ஒரு கூலித் தொழிலாளி. அவன் ஒரு முதலாளியிடம் வேலை பார்த்தான். ஒருநாள் ஒரு மைதானம் வழியே அவன் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தபோது, அவனுக்கு முன்னால் ஒரு தவளை குதித்துப் போய்க் கொண்டிருந்தது. அதன் மீது தன் கால் பட்டுவிடாமல் பார்த்துக் கொள்வதற்குள் அவனுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. அப்போது திடீரென்று அவனுக்குப் பின்னாலிருந்து அவனை யாரோ அழைத்தார்கள்.

எமெல்யான் சுற்றிலும் பார்த்தான். ஒரு அழகான இளம் பெண் அவனுக்குப் பின்னால் நின்றிருந்தாள். அவள் அவனைப் பார்த்துக் கேட்டாள்: "நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல, எமெல்யான்?"

‘நான் எப்படி கல்யாணம் பண்ண முடியும், பெண்ணே?- அவன் சொன்னான்: ‘நான் போட்டிருக்க ஆடைகளைத் தவிர, என்கிட்ட எதுவும் இல்ல. என்னை யாரு கணவனா ஏத்துக்குவாங்க?’

'என்னை மனைவியா ஏத்துக்குறியா?'- அவள் கேட்டாள்.

எமெல்யானுக்கு அந்த இளம்பெண்ணை மிகவும் பிடித்திருந்தது. 'உன்னைக் கல்யாணம் பண்ண வாய்ப்பு கிடைச்சா நான் ரொம்பவும் சந்தோஷப்படுவேன்'- அவன் சொன்னான்: 'ஆனா நாம எப்படி, எங்கே வாழ்றது?'

'அதைப் பற்றி என்ன கவலை?'- அந்த இளம்பெண் சொன்னாள்: 'கஷ்டப்பட்டு நல்லா வேலை செய்யணும். ஆனா, ரொம்பவும் குறைவான நேரமே தூங்கணும். அப்படி இருந்தா உணவு, உடை எதுக்குமே பிரச்னை இருக்காது.'

'அப்படின்னா நாம கல்யாணம் பண்ணிக்குவோம்'- எமெல்யான் சொன்னான்: 'நாம எங்கே போகலாம்ன்ற?'

'நாம நகரத்துக்குப் போவோம்.'

எமெல்யானும் அந்த இளம்பெண்ணும் நகரத்திற்குச் சென்றார்கள். அவனை அவள் நகரத்தின் எல்லையில் இருந்த ஒரு சிறிய குடிசைக்கு அழைத்துச் சென்றாள். இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.

ஒருநாள் நகர்வலம் வந்த மன்னன் எமெல்யானின் குடிசையைத் தாண்டி வந்தான். அப்போது எமெல்யானின் மனைவி மன்னனைப் பார்ப்பதற்காக வெளியே வந்தாள். மன்னன் அவளைப் பார்த்து, ஆச்சரியத்தின் உச்சிகே போய்விட்டான்.

'இந்த அளவுக்கு அழகு இவளுக்கு எப்படி வந்துச்சு?' என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்ட மன்னன் தான் வந்த ஊர்தியை நிறுத்திவிட்டு, எமெல்யாவின் மனைவியை அழைத்து கேட்டான்: 'நீ யார்?'

'விவசாயி எமெல்யானின் மனைவி'- அவள் சொன்னாள்.

'இந்த அளவுக்கு அழகு படைத்த பெண்ணான நீ ஏன் ஒரு சாதாரண விவசாயியை திருமணம் செஞ்சே?'- மன்னன் சொன்னான்: 'நீ ஒரு அரசியா இருக்க வேண்டியவ...'

'உங்களோட நல்ல வார்த்தைகளுக்கு நன்றி'- அவள் சொன்னாள். 'ஆனா, ஒரு விவசாயியோட மனைவியா இருக்குறதே எனக்குப் போதும்!

மன்னன் அவளுடன் சிறிது நேரம் பேசிவிட்டு, மீண்டும் ஊர்தியைச் செலுத்தினான். அவன் தன் அரண்மனைக்குத் திரும்பி வந்தான். அதற்குப் பிறகும் எமெல்யானின் மனைவியை அவனால் மறக்க முடியவில்லை. இரவு முழுவதும் அவன் சிறிது கூட தூங்கவில்லை. அவளைத் தனக்கு சொந்தமாக்குவது எப்படி என்பதைப் பற்றியே இரவு முழுவதும் சிந்தித்துக் கொண்டிருந்தான். எவ்வளவு சிந்தித்தும் அவனால் ஒரு தெளிவான முடிவுக்கே வர முடியவில்லை. அதனால் அவன் தன் பணியாட்களை அழைத்து தனக்கு ஒரு வழி கண்டு பிடித்து கூறும்படி சொன்னான்.

மன்னனின் பணியாட்கள் சொன்னார்கள்: 'எமெல்யானை அரண்மனைக்கு வேலைக்கு வரச் சொல்லுங்க. நாங்க அவனுக்கு ரொம்பவும் கடுமையா இருக்குற மாதிரி வேலைகளைத் தர்றோம். அந்த வேலைகளைச் செய்ய முடியாமல் அவன் செத்துப் போயிடுவான். அதுக்குப் பிறகு அவன் மனைவி விதவை ஆயிடுவா. நீங்க அவளை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டியதுதான்!

மன்னன் அவர்கள் சொன்ன அறிவுரையின்படி நடந்தான். எமெல்யான் அரண்மனைக்கு வந்து உடனே வேலை செய்ய வேண்டும் என்றும், அவன் தன் மனைவியுடன் அரண்மனையில் தன்னுடன் வந்து வாழ வேண்டும் என்றும் மன்னன் கட்டளை பிறப்பித்தான்.

தூதுவர்கள் எமெல்யானைத் தேடி வந்து மன்னன் அனுப்பியிருந்த தகவலைக் கொடுத்தார்கள். எமெல்யானின் மனைவி சொன்னாள்: 'போ எமெல்யான். பகல் முழுவதும் அங்கே வேலை செஞ்சிட்டு, இரவு நேரத்துல வீட்டுக்கு வந்திடு!'

அவள் சொன்னபடி எமெல்யான் வேலை செய்வதற்காக அரண்மனைக்குப் புறப்பட்டான். அவன் அரண்மனைக்குள் நுழைய முற்பட்டபோது அங்கிருந்த மன்னனின் சேவகன் அவனைப் பார்த்துக் கேட்டான்: 'என்ன நீ மட்டும் தனியா வர்ற! உன் மனைவி எங்கே?'

'நான் ஏன் அவளை இழுத்திட்டு வரணும்?'- எமெல்யான் சொன்னான். 'இருக்குறதுக்கு அவளுக்கு வீடு இருக்கு!’

மன்னனின் அரண்மனையில் அவர்கள் எமெல்யானுக்கு இரண்டு மடங்கு வேலைகளைக் கொடுத்தார்கள். அந்த வேலைகளை முடிக்க முடியும் என்ற நம்பிக்கையே இல்லாமல் அவன் வேலையை ஆரம்பித்தான். ஆனால், மாலை நேரம் வந்தபோது அவன் எல்லா வேலைகளையும் ஒழுங்காக செய்து முடித்திருந்தான். அவ்வளவுதான்- அவனுக்கு மறுநாள் நான்கு மடங்கு வேலைகளைத் தருவது என்று அங்கிருப்பவர்கள் தீர்மானித்தார்கள்.

எமெல்யான் தன் வீட்டிற்குத் திரும்பினான். வீட்டில் எல்லா விஷயங்களும் முறையாக செய்யப்பட்டு, வீடு படு சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. அடுப்பு எரிக்கப்பட்டு, அவனுக்கு இரவு சாப்பாடு தயார் பண்ணி வைக்கப்பட்டிருந்தது. அவனுடைய மனைவி மேஜைக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு எதையோ பின்னியவாறு அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் வந்ததும் அவனை அன்புடன் அவள் வரவேற்றாள். உணவைப் பறிமாறினாள். பருகுவதற்கு தந்தாள். பிறகு அவனுடைய வேலையைப் பற்றி ஆர்வத்துடன் விசாரித்தாள்.

'அதை ஏன் கேக்குற! எனக்கு கடுமையான வேலைகளைத் தந்து ஒரு வழி பண்ணிட்டாங்க. என்னோட சக்திக்கு மேல இருந்தது அவங்க தந்த வேலை. வேலையைக் கொடுத்தே என்னைச் சாகடிக்கலாம்னு அவங்க நினைக்கிறாங்கன்னு என் மனசுல படுது.'

'வேலையைப் பற்றி கவலையே படாதே'- அவள் சொன்னாள்: 'வேலை செய்யிறப்போ முன்னாடியோ பின்னாடியோ பார்க்கவே வேண்டாம். எவ்வளவு வேலையை நாம செஞ்சு முடிச்சிருக்கோம்னோ இன்னும் எவ்வளவு வேலை செய்ய வேண்டியதிருக்கோன்னோ பார்க்கவே வேண்டாம். எப்பவும் செய்யிற வேலையில மட்டுமே கவனம் இருக்கணும். எல்லாம் சரியாகும்!'

எமெல்யான் படுத்து உறங்கினான். மறுநாள் காலையில் அவன் மீண்டும் வேலை செய்வதற்காகக் கிளம்பினான். சுற்றிலும் எதையும் பார்க்காமல் வேலை செய்வதில் மட்டுமே கவனமாக இருந்தான். ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும் மாலை நேரம் வரும்போது அவன் எல்லா வேலைகளையும் செய்து முடித்திருந்தான். பொழுது இருட்டுவதற்கு முன்பே தன் வீட்டிற்கு அவன் வந்து விட்டான்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel