Lekha Books

A+ A A-

பிறகும் ஒரு மாலை நேரம் - Page 3

Piragum Oru Maalai Nerum

“எவ்வளவு?”

“வா... வா... உள்ளே வா...”

“எவ்வளவு?”

“அஞ்சு ரூபா கொடு...”

“வேண்டாம். நான் போறேன்...”

“கையில இருக்குறதைக் கொடு...”

“வேண்டாம்... வேண்டாம்...” - அவனின் கண்களில் இனம் புரியாத ஒரு பதட்டம் தெரிந்தது. முகத்தில் பயம் நிழலாடியது.

“ஒரு ரூபா கொடு... எட்டணா...”

அவனின் அருகில் சென்று, அவனின் கைகளைத் தொட்டு, அவனின் முகத்தைக் கண்களை உயர்த்தி பார்த்தவாறு சொன்னாள்:

“வா...”

மரத்துப் போயிருந்த மனம் உருகி சரீரம் முழுவதும் என்னவோ பரவுவதுபோல் உணர்ந்தாள் அவள். அவளின் உடல் எதையோ எதிர்பார்த்தது. மனதில் இருந்த விருப்பங்கள், ஏக்கங்கள் - எல்லாவற்றையும் தானே மறப்பது போல் அவள் உணர்ந்தாள். அப்போது மங்கலான வெளிச்சத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாமிசத் துண்டுகள் அவளின் ஞாபகத்தில் வந்தன. கிழவியின் பிரகாசமான கண்களில் ஒரு எதிர்பார்ப்பு தெரிந்தது. உடலும் மனதும் பனிக்கட்டியைப் போல் ஆனது. அந்த மனிதன் என்ன நினைத்தானோ, அடுத்த நிமிடம் நடந்து மறைந்தான். தலையை உயர்த்தியவாறு, நடுங்கும் கால்களுடன், வறண்டு போன உதடுகளுடன் அவன் வேகமாக நடந்து சென்றான். அந்தப் பக்கம் தெரிந்த வெளிச்சத்தைப் பார்த்து கிழவி அவனுக்குப் பின்னால் கெட்ட வார்த்தைகளால் என்னவோ திட்டினாள். அவன் சாலையில் இருந்த வெளிச்சத்திலும் மனிதக் கூட்டத்திலும் சங்கமமாகி காணாமலே போனான்.

திரும்பி வந்து உட்கார்ந்தபோது இருட்டுக்கு மத்தியில் ஒரு அழுக்கடைந்த உருவம் கையில் இருந்த சாட்டையைச் சுழற்றியவாறு பக்கத்தில் வந்தது. குதிரை வண்டிக்காரன். அவன் பணத்தைப் பற்றி கேட்டான்.

“போ... இப்போ இல்ல...”

பரவாயில்லை. அதற்கு பதிலாக மற்ற விஷயம் நடந்தால்கூட போதும் என்ற எண்ணத்துடன் அவன் புன்னகைத்தான்... கறை படிந்த பற்களும் கண்களும் இருட்டில் ‘பளிச்’ என தெரிந்தன. அவன் அருகில் வந்து அவளின் தோளைத் தொட்டான். பேலம்மாவிற்கு மனமே செத்துப் போனதுபோல் இருந்தது. தாங்க முடியாத அளவிற்கு கவலையும் வெறுப்பும் ஒரே நேரத்தில் உண்டாயின. நாவால் அதற்குமேல் வெறுமனே இருக்க முடியவில்லை. வேகமாக எழுந்து குதிரை வண்டிக்காரனின் முகத்தில் காரித் துப்பினாள். பலமாக கத்தியவாறு அவனின் முகத்தில் அடித்தாள். கையில் இருந்த சாட்டையால் அதைத் தடுக்கப் பார்த்தான் அந்த ஆள். பேலம்மா சாட்டையைப் பிடுங்கி அதைக் கொண்டு அடித்தாள். முகம், உடம்பு, கால் - எல்லா இடங்களிலும் கண் மண் தெரியாமல் அடித்தாள். வாய்க்கு வந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லி திட்டினாள். அவள் கண்களில் கண்ணீர் ஆறாக ஒழுகியது. கதவுகளும் ஜன்னல்களும் வேகவேகமாகத் திறந்தன. பல தலைகளும் வெளியே தெரிந்தன. நகச் சாயம் பூசிய கால்கள் தெருவில் வேகமாக நடந்தன. ஆட்கள் சுற்றிலும் கூடினார்கள். வண்டிக்காரன் சாட்டையைக் கையில் வாங்கிக் கொண்டு ஓடினான். கூடிய ஆட்கள் கலைந்தனர். ஒரு போலீஸ்காரன் வந்து கேட்டான்:

“என்னம்மா?”

பேலம்மா வீட்டிற்குள் சென்று நாலணா எடுத்துக் கொண்டு வந்து அவன் கையில் தந்தாள். அவன் இடத்தை விட்டு நீங்கி அடுத்த தெருவை நோக்கி போனான். ‘அடுத்த தெருவில் இருந்த இந்தத் தெருவிற்கு வரும் புழுக்கள்...’ பேலம்மா மனதிற்குள் நினைத்தாள். அவள் மீண்டும் காத்திருந்தாள்... உட்கார்ந்தாள்... கால்கள் வலித்தன. உடலில் பயங்கர வேதனை இருப்பதுபோல் வலித்தன. அப்போது ஒருவன் அவளின் தோளைத் தொட்டான். மவுனமாக அவனின் முகத்தை அவள் பார்த்தாள். வாசல் கதவைத் திறந்து உள்ளே சென்றாள். அவன் பின் தொடர்ந்தான். கதவை மூடத் தொடங்கியபோது, கிழவியின் குரல் பலமாகக் கேட்டது. தொடர்ந்து தெருவில் ஓடும் கால்களின் சத்தங்கள்... அவன் எந்தவிதமான அசைவும் இன்றி வாசல் கதவையே பார்த்தவாறு நின்றிருந்தான். கதவைத் திறந்து ஒரு பெண் வேகமாக உள்ளே நுழைந்தாள். பேலம்மா திகைத்துப் போய் நின்றாள். அந்தப் பெண் இருவரின் கண்களையும் மாறி மாறி பார்த்தவாறு முறைத்தாள். அவள் அவனின் மனைவி என்பதை பேலம்மா புரிந்து கொண்டாள். அந்தப் பெண்ணின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஒழுகியது. பேலம்மாவின் மனதில் படங்கள் ஓடின. திறக்கின்ற கேட்டுகள்... புன்னகை தவழ காட்சியளிக்கும் குழந்தைகள்... அழகான முகங்களுடன் காப்பி கப்புகளை நீட்டும் மனைவிமார்கள்...

கண்களை மூடியவாறு, தலையைக் குனிந்து கொண்டு அந்தப் பெண் தரையில் அமர்ந்தாள். பேலம்மா அசையாமல் நின்றிருந்தாள். அவன் மெதுவாக அருகில் வந்து தன் மனைவியின் தோள்களில் கையை வைத்து அவளை எழுந்திருக்கச் செய்து கண்ணீரைத் துடைத்தான். அவள் பர்ஸைத் திறந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து பேலம்மாவிடம் நீட்டினாள். அதையே சிறிது நேரம் உற்று நோக்கிய பேலம்மா, கையால் தடுத்து வேண்டாம் என்றாள். தரையில் அமர்ந்து கைகளால் கண்களை மூடிக்கொண்டு கேவிக் கேவி அழுதாள். அவர்கள் வெளியே இறங்கி நடந்தார்கள்.

பேலம்மா வாய்விட்டு அழுதவாறு தரையில் புரண்டாள். வெளியே வாசல் படிமேல் கூன்விழுந்த முதுகுடன் அமர்ந்திருந்த கிழவி பாதி தூக்கத்தில் யாரிடம் என்றில்லாமல் தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருந்தாள்:

“வாங்க... வாங்க...”

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel