Lekha Books

A+ A A-

பிறகும் ஒரு மாலை நேரம் - Page 2

Piragum Oru Maalai Nerum

கிழவியின் மேல் காரித்துப்பிவிட்டு, பேலம்மா வாசல் கதவைத் திறந்து உள்ளே போனாள். முகம் பார்க்கும் கண்ணாடியின் உடைந்து போன ஒரு சிறு துண்டை தனக்கு முன்னால் பிடித்துக் கொண்டு கொஞ்சம் பவுடர் போட்டு கண்மை இட்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள். உதடுகளை நாக்கால் தடவியவாறு, சில நிமிடங்கள் கண்ணாடியையே பார்த்தவாறு நின்றிருந்தாள். பிறகு... மீண்டும் வெளியே வந்தாள்.

வாசலில் அமர்ந்து சுற்றிலும் கண்களால் மேய்ந்தாள். ஏற்கனவே பார்த்த விஷயங்களையே மீண்டும் பார்க்க மனம் ஒப்பவில்லை. யாராவது ஆள் கிடைக்க மாட்டானா என்று எதிர்பார்த்து எல்லா மண் குடிசை வாசல்களிலும், முனைகளிலும், சந்துக்களிலும் மறைந்து நின்றிருக்கும் உருவங்களை அவள் பார்த்தாள். தானும் ஒரு காத்திருப்பவள்தானே என்று அவள் மனதிற்குள் எண்ணினாள்.

“வேகமாகப் போ... யாரையாவது ஒரு ஆளை பிடிச்சிட்டு வா...” - கிழவியிடம் சொன்னாள்.

சிறிது தூரத்தில் மங்கலான வெளிச்சத்தில் சுவரோடு சேர்ந்து நின்றிருந்த ஒரு பெண் இப்போது தெருவில் இறங்கி நடந்தாள்.

இரண்டு கைகளையும் முன்பக்கம் கட்டியவாறு கவலை தோய்ந்த முகத்துடன் நாலா பக்கங்களிலும் பார்த்தவாறு அவள் நின்றாள். கிழவியின் பல் இல்லாத பொக்கை வாய் அவளைப் பார்த்து கெட்ட வார்த்தைகளால் திட்டியது. சாபமிட்டது.

பேலம்மா கால்களைச் சொறிந்தவாறு மங்கலான வெளிச்சத்தில் தன் கால்களில் இருந்த ஒன்றிரண்டு புண்களை குனிந்து பார்த்தாள். நாசம்! இதைப் பார்த்தால் வருபவன் என்ன நினைப்பான்? நாளை வைத்தியனைப் போய் பார்க்க வேண்டும். அவளுக்கு சங்கடம் தோன்றவில்லை. ஒன்றுமே தோன்றவில்லை. பொதுவாக மனம் முழுவதுமே மரத்துப் போனது போல் இருந்தது. தெருவில் நின்றிருந்த பெண்ணையே அவள் சிறிது நேரம் வெறித்துப் பார்த்தாள். மரத்துப் போயிருந்த மனதில் பழைய நினைவுகள் நிழலாடின.

பேலம்மா தான் தெருவின் நடுவில் இப்படி நின்றிருந்த காலத்தை நினைத்துப் பார்த்தாள். அதற்கும் முன்னால் இருந்த நாட்களை அவள் நினைத்துப் பார்த்தாள். புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களையும், கவலை நிறைந்த மனதுடன் ஒரு இருட்டு அறைக்குள் படுத்தவாறு அடுத்த அறையில் இருந்து வரும் புரிந்து கொள்ள முடியாத முணுமுணுப்புக்களையும், சிணுங்கல்களையும் காதால் கேட்க நேர்ந்த அந்த நாட்களை அவள் நினைத்துப் பார்த்தாள். எல்லாவற்றையும் ஆச்சரியத்துடன் பார்த்த கண்கள், அவை பார்த்த காட்சிகள், வியப்பு, பதைபதைப்பு, நீங்கிக் கொண்டிருந்த வருடங்கள்... பூரிப்படைந்து கொண்டிருந்த சரீரம்... மனதில் நான்கு விஷயங்கள் தெரிய ஆரம்பித்தது... தெருவில் நின்றது... உடலில் புண்கள்... காத்திருப்பு.

பேலம்மாவின் தலை தூக்கக் கலக்கத்தில் ஆடியது. புன்னகையுடன் நின்று கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான கிழவிகளையும் தாண்டி தெருவில் பந்தாவாக ஒரு குதிரை வண்டியில் போய்க் கொண்டிருந்தாள் பேலம்மா. இருளடைந்து போயிருந்த ஒரு அறையில் நடுங்கிக் கொண்டிருந்த கைகள் அவளின் மேனியைத் தடவிக் கொண்டிருந்தன. திரும்பி வந்தபோது தெரு முழுக்க ஏகப்பட்ட கைகள் அவளை நோக்கி நீண்டன.

“பணம் எங்கே?”

“இல்ல... இல்ல... இல்ல...” உரத்த குரலில் அலறியவாறு பேலம்மா ஓடினாள்.

அடுத்த நிமிடம் அவள் கண்களைத் திறந்து பார்த்தாள். கிழவி என்ன செய்து கொண்டிருக்கிறாள்? தெருமுனையில் அவள் கூன் விழுந்து உட்கார்ந்தவாறு மெதுவான குரலில் அழைத்துக் கொண்டிருந்தாள்: “வாங்க... வாங்க...” சிலர் திரும்பிப் பார்த்தவாறு நடந்தார்கள். சிலர் தங்களின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு சுற்றிலும் பார்த்தவாறு நின்றுவிட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தார்கள். வேகமாகப் போய்க் கொண்டிருந்த சேட்டுமார்கள், பெரிய தலைப்பாகையைக் கையில் வைத்துக்கொண்டு ஆடி அசைந்து நடந்து கொண்டிருந்த குஜராத்திகள், அழுக்கடைந்து நாற்றமடிக்கு கிராமத்து மனிதர்கள்.

பேலம்மா தெருவில் நின்றிருந்த பெண்ணை அருகில் அழைத்தாள்:

“மகளே... வீட்டுக்குப் போ...”

அவள் உற்றுப் பார்த்தாள்.

“கொஞ்ச நேரம் போகட்டும். இங்க பாரு...” - புடவையை உயர்த்தி காலில் இருந்த புண்களைக் காட்டினாள்.

வெறுப்புடன் அவள் திரும்பவும் போய் அதே இடத்தில் நின்றாள். பேலம்மா அவளையே பார்த்தாள். ஒன்றிரண்டு தைரியசாலியான இளைஞர்கள் அவளின் உடலை உரசிப் பார்த்தார்கள். அர்த்தமே இல்லாத ஒரு ஓசையை உண்டாக்கியவாறு அவர்கள் முகத்தில் புன்சிரிப்பு தவழ அங்கேயே நின்றிருந்தார்கள். பேலம்மா அந்த இளைஞர்களில் ஒருவனை கையைக் காட்டி அழைத்தாள். ஒருமுறை திரும்பிப் பார்த்த அவன் அடுத்த நிமிடம் அந்தப் பக்கம் இருந்த சாலையில் இறங்கி மறைந்தான். பேலம்மா சிரித்தாள். சில மாணவர்கள் கைச்சிள்களைத் தள்ளியவாறு நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மெதுவான குரலில் ஏதோ பேசிக்கொண்டு, அர்த்தம் பொதிந்த பார்வைகளை சுற்றிலும் பாய்ச்சியவாறு, நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களை யாரும் அழைக்கவில்லை. பேலம்மா நினைத்தாள். அவர்கள் அருகில் நெருங்கி வந்தபோது, பேலம்மா எழுந்து தலையால் ஆட்டியவாறு அறையின் உள்பக்கத்தைக் காட்டினாள். அவர்கள் அதைப் பார்த்து சிரிப்பார்கள் என்று அவள் நினைத்தாள். அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, இதுவரை பேசிக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, பந்தாவாக முகத்தை வைத்துக் கொண்டு அவர்கள் வேகமாக ஓடி மறைந்தார்கள்.

இப்போது ஒருவன் அந்தப் பெண்ணிடம் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தான். அவள் வெட்கப்படுவது போல் நடித்தாள். பிறகு வழியைக் காட்டியவாறு இருளடைந்துபோன ஒரு மூலையை நோக்கி நடந்தாள். அந்தப் பெண்ணின் ஒவ்வொரு சலனத்தையும், அவளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பேலம்மா நினைத்துப் பார்த்தாள். அவளின் செயல்கள் ஒவ்வொன்றும் அவள் முன்பு செய்ததைப் போலவே இருந்தது. அந்தப் பெண்ணுக்குள் தான் இப்போது இருப்பதைப் போல அவள் உணர்ந்தாள்.

ஒரு மூலையில் இருந்த கடையில் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் தொங்கியவாறு காற்றில் ஆடிக்கொண்டிருந்த மாமிசத் தொடைகளையே அவள் கண்கள் வெறித்துப் பார்த்தன. அப்போது அவள் மனதில் ஒரு ஏக்கம் தோன்றியது. பெரிய ஏக்கம்தான். மாமிசம் சாப்பிட வேண்டுமென்றால், பணம் வேண்டுமே! தலைமுடியை இலேசாக ஒதுக்கியவாறு, கால்களை மேலும் வெளியே தெரியும்படி செய்து கொண்டு, அவள் உட்கார்ந்திருந்தாள்.

கிழவியிடம் ஒருவன் மெதுவான குரலில் என்னவோ கேட்பதைப் பார்த்ததும் பேலம்மா எண்ணங்களில் இருந்து விடுபட்டாள். இயந்திரத்தனமாக எழுந்து அவர்களுக்கு அருகில் நடந்தாள். கிழவி தலையால் ஆட்டியவாறு அந்த மனிதனிடம் சாடை காட்டினாள் - “அதுதான்...” பேலம்மா நின்றவாறு முணுமுணுத்தாள்: “மெதுவா உள்ளே வா...” அவன் சுற்றிலும் பார்த்தான். தாழ்ந்த குரலில் கேட்டான்:

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel