Lekha Books

A+ A A-

வாழ்க்கை - Page 4

Vazhkkai

முன்பு மலைமே* இருக்கும்போது தன்னைப் பூச்சி கடித்தபோது, அவள் செய்த சிகிச்சையை பாலகிருஷ்ணன் அப்போது நினைத்துப் பார்த்தான்.

கோபாலனைப் பார்த்து அவன் சொன்னான்: “அரக்கா... இந்த ஒரு மகளை... என்னை வேதனைப்பட வச்ச உன்னைத் தண்டிச்சு ஒரு பிரயோஜனமும் இல்ல. நீ ஒரு மிருகம்...”

நாராயணி சொன்னாள்: “அவன் வந்தப்போ கஞ்சி தீர்ந்து போச்சுன்றதுக்காகத்தான் இதெல்லாம்...”

கோபாலன் பாலகிருஷ்ணனின் கால்களில் விழுந்தான். “அய்யா என்னை மன்னிக்கணும்.”

டாக்டர் பாலகிருஷ்ணனின் கையில் நெருப்புப் பட்ட இடம் ஒரு சிறிய சூலாயுதத்தைப் போல கறுத்து வெந்து போயிருந்தது. மாதவியின் கையிலும் அதே அடையாளம் அதைவிட பயங்கரமாக இருந்தது.

அதிக நாட்கள் ஆவதற்கு முன்பே, புதிதாக வேயாத அந்தக் குடிசை பாதிக்கப்பட்டு மோசமாகி, தளர்ந்து சொல்லப்போனால், ஒரு அடிமையான யானையைப் போல சாய்ந்தது. குணப்படுத்த முடியாத ஒரு பெரிய நோயைப் போல வறுமை அங்கு இறுக ஒட்டிக் கொண்டது.

கோபாலன் அந்தக் கிராமத்தை விட்டுப் போய் இரண்டு வருடங்களாகிவிட்டன. அவனைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.

கற்கடக மாதத்தில் ஒரு இருண்ட நாள். பலமாகக் காற்று வீசிக் கொண்டிருந்தது. புதிய நிலத்தின் அந்தக் குடிசையின் இருண்ட அறையில் இருந்த ஒரு வயதான பெண்ணின் இறந்த உடலுக்குப் பக்கத்தில் அனாதையான ஒரு சிறுமி உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அந்த அழுகைச் சத்தத்தைக் கேட்டு வெளியே வீசிகொண்டிருந்த காற்று மட்டும் அவளுக்கு ஆறுதல் கூறுவது மாதிரி மெதுவாக முனகியது.

5

காலச் சக்கரம் மீண்டும் சுற்றிக்கொண்டிருந்தது. வளர்ச்சியும், மாற்றங்களும் முறைப்படி நடந்துகொண்டிருந்தன.

டாக்டர் பாலகிருஷ்ணன் அரசாங்க மருத்துவமனையின் தலைமை மருத்துவர் என்ற பதவியிலிருந்து பென்ஷன் வாங்கி ஓய்வு பெறப் போகிறான். அவன் மனைவியை இழந்த ஒரு மனிதன். தனக்கென்று குழந்தை எதுவும் இல்லாதவன். ஏராளமாகப் பணம் சம்பாதித்திருந்தும், அதை அனுபவிக்க அவனுக்கு வாரிசு இல்லை.

மருத்துவமனையின் பிரசவ வார்டில் ஒரு சீரியஸ் கேஸ் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை ஆபரேஷன் முடிந்து மெத்தைமீது படுக்க வைத்திருந்தார்கள்.

உடனே டாக்டர் பாலகிருஷ்ணன் அங்கு வந்தான்.

தாய் இறந்து விட்டாள். குழந்தை உயிருடன் இருந்தது. சந்தேகத்துடன், தாயின் நாடியைச் சோதித்துப் பார்ப்பதற்காக டாக்டர் அவளுடைய கையைப் பிடித்தான். அந்தப் பெண்ணின் வலது உள்ளங்கையில் சூலாயுத வடிவத்தில் ஒரு கரிந்துபோன அடையாளம் இருப்பதைப் பார்த்து அவன் அதிர்ச்சியுற்றான்.

டாக்டர் பாலகிருஷ்ணன் அந்த இளம்பெண்ணின் முகத்தையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தான். பிறகு மெத்தையின் தலைப்பகுதியில் தொங்கவிடப்பட்டிருந்த அட்டையைப் பார்த்தான். ‘மாதவி’ என்று அவன் உரத்த குரலில் படித்தான்.

அவன் நர்ஸிடம் திரும்பிக் கேட்டான்: “இவள் கூட யாரும் வரலையா?”

“யாரையும் இதுவரை பார்க்கல... கணவன் இல்லாமலே உண்டான கர்ப்பம்...”

அந்தப் பெண் குழந்தையை டாக்டர் தத்தெடுத்தான். அந்தக் குழந்தைக்கு ராணி என்று அவன் பெயரிட்டான்.

அடுத்த வருடமே டாக்டர் அரசாங்க உத்தியோகத்திலிருந்து பென்ஷன் வாங்கி ஓய்வு பெற்றான். அதற்குப் பிறகு அந்தச் சிறிய கிராமத்தில் கொஞ்சம் சொத்துக்களை வாங்கி, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருக்க அவன் தீர்மானித்தான்.

6

தற்குப் பிறகு எட்டு வருடங்கள் கடந்தன.

ஓணக் காலம். குன்னத்து வீட்டின் ஒரு அறையில் ஒரு கிழவன் படுத்திருக்கிறான். மெலிந்து போய், எலும்புகள் வளைந்து, தோல் சுருங்கி, மூப்பு பிடித்த உடம்பு... தாளைப் போல வெளுத்த தலை முழுமையாக நரைத்துவிட்டிருந்தது. பாதி மூடிய - பார்வையை இழந்த கண்கள்... பற்கள் முழுவதும் விழுந்து கன்னங்கள் ஒட்டிப் போன முகம்... டாக்டர் பாலகிருஷ்ணனின் முதுமை அவனுடைய முகத்திலிருந்த அந்தப் பெரிய வளைந்த மூக்கிற்கு மட்டும் எந்தவொரு மாற்றத்தையும் உண்டாக்கவில்லை.

அறையின் கதவு திறக்கப்படும் ஓசையைக் கேட்டு கிழவன் கண்களைத் திறந்தான். “யாரு? ராணியா?” என்று கேட்டான்.

சுமார் ஒன்பது வயதான அழகான ஒரு சிறுமி அறைக்குள் வந்தாள். அவளுடைய கழுத்தில் ஒரு பூக்கூடை தொங்கிக் கொண்டிருந்தது.

அவள் கிழவனின் மெத்தைக்கு அருகில் வந்து நின்று சொன்னாள்: “அப்பா,” நான் பத்மநாபன்கூட மலைமேல பூப்பறிக்கப் போய் வரட்டுமா?

அந்தக் கிழவன் ஈறு முழுவதையும் வெளியே காட்டி சிரித்தான். பிறகு மிகவும் சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்து அவளைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு, நெற்றியில் முத்தமிட்டவாறு கேட்டான்: “ராணி, உனக்குப் பூப்பாட்டு தெரியுமா?”

“ம்... தெரியும்... கல்யாணி எனக்குப் பூப்பாட்டுப் சொல்லித் தந்தா.”

“ஒரே ஒரு பாட்டுப் பாடு. அப்பா கேக்குறேன்.”

அவள் முதலில் தயங்கினாள். பிறகு மெதுவாக ஒரு இனிய குரலில் அவள் பாடத் தொடங்கினாள்:

“காத்துல பூத்த இளங்கொடி வெற்றிலை

நாளைக்கு ஒரு கூடை பூ தருவாயா?

தும்பைப் பூவே, பூத்த இரவே,

நாளைக்கு ஒரு கூடை பூ தருவாயா?”

எத்தனையோ வருடங்களுக்கு முன்பு புதிய நிலத்தின் பாறைக்கு அருகில் இருந்துகொண்டு நாராயணி பாடிய அதே பாட்டு! அதே உருவம்!

கிழவனின் கைகளிலிருந்து விடுபட்ட ராணி உற்சாகத்துடன், சுதந்திரத் துடிப்புடன் வெளியே ஓடினாள். மலைச்சரிவில் அவளுடைய நண்பர்களும் தோழிகளும் அவளுக்காகக் காத்திருந்தார்கள். அவர்கள் கூட்டமாகப் பாட்டுப் பாடியவாறு மலைமீது ஏறினார்கள்.

பாலகிருஷ்ணன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். அவனால் எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. எனினும் அவன் மனதில் நினைத்தான்: “உலகமே! எல்லா விஷயங்களும் திரும்பத் திரும்ப நடக்குறது மாதிரி செய்யிறதுதான் உன் பழக்கமா? சரி... எனக்கு முன்னாடி நீ இதே செயலை எத்தனை முறை திரும்பத் திரும்பச் செய்திருப்பே!”

அந்த மலையும் நதியும் நடுவிலிருக்கும் அந்தப் பாறையும் இப்போதும் அங்குதான் இருக்கின்றன. அவற்றுக்கு அருகிலிருந்த புதிய நிலமும் அந்தப் புல்லாலான குடிசையும் இப்போது அங்கு இல்லை. அதற்குப் பதிலாக அந்த இடத்தில் ஒரு பெரிய மாந்தோப்பு இருக்கிறது.

அந்தப் பாறைக்கு அருகில் புற்களாலான புதரில் பாதி மறைந்து போயிருக்கும் ஒரு கல்லறையை நாம் பார்க்கலாம். அதன்மீது இப்படிப் பொறிக்கப்பட்டிருக்கிறது.

டாக்டர் பாலகிருஷ்ணன்

பிறப்பு: 1849

மரணம்  : 1930

மரணம் - உண்மையான தூக்கம்.

வாழ்க்கை - அந்தத் தூக்கத்தில் நிறைவேறாத கனவு.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel