Lekha Books

A+ A A-

வாழ்க்கை - Page 2

Vazhkkai

அவன் கிழவன் உட்கார்ந்திருந்த இடத்தில் சர்க்கரையைச் சிதறி விடுவான். எறும்புகள் வந்து கிழவனை ஒரு வழி பண்ணுவதை அவன் ரசித்துக் கொண்டிருப்பான்.

பாலகிருஷ்ணன் ராணிக்கு நல்ல படங்களைப் பரிசாகத் தருவான். அதற்குப் பதிலாக அவள் அவனுக்கு இலஞ்சிப் பூ மாலை கட்டித் தருவாள்.

ஒருநாள் அவள் மாலை தந்தபோது ஆனந்தமடைந்த அவன் அவளுடைய கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.

உடனே முகத்தை ஒரு மாதிரி ‘உம்’ என்று வைத்துக்கொண்டு அவள் சொன்னாள்: “ம்... வேண்டாம். நான் என் மாமாகிட்ட சொல்லிடுவேன்.”

பாலகிருஷ்ணன் அதைக் கேட்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். “நீ என்ன சொல்வே?”

“ம்... நான் செல்வேன்...”

அவன் அவளை மீண்டுமொரு முறை முத்தமிட்டான்.

அவனை ஒரு தட்டுத் தட்டிவிட்டு அவள் ஓடிமறைந்தாள்.

ஓண விடுமுறை முடிந்து, பாலகிருஷ்ணன் தன் சொந்த வீட்டிற்குப் புறப்பட்டான். அவன் குதிரை வண்டியில் நகரத்திற்குத் திரும்பிச் செல்லும்போது, நாராயணி தன் தலையில் ஒரு பெரிய சுமையை வைத்துக்கொண்டு எதிரில் வந்து கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் இரவிக்கை மட்டும் மேலே அணிந்திருந்த அவளுடைய மார்புப் பகுதி இலேசாகக் கூசியது. தோள்வரை தொங்கிக் கொண்டிருந்த அந்தத் தென்னை நார்கள் வழியாக அவளுடைய இரண்டு பெரிய கறுத்த கண்களும் பிரகாசித்தன. அவள் சற்று ஓரத்தில் தயக்கத்துடன் நின்றாள். பிறகு மெதுவாக அங்கிருந்து நடந்தாள்.

வண்டிக்காரன் குதிரையை அடித்தான். அவள் சிறிது தூரம் சென்றாள். பிறகு அந்தச் சுமையுடன் அவள் திரும்பிப் பார்த்தாள்.

பாலகிருஷ்ணன் அணிந்திருந்த கோட்டின் நீல நிறத்தை மட்டும் வண்டி திருப்பத்தில் திரும்புவதற்கு முன்பு அவள் பார்த்தாள்.

2

று வருடங்கள் கடந்தன.

பாலகிருஷ்ணன் இப்போது ஒரு கல்லூரி மாணவன். அவன் அந்தக் கிராமத்திலிருந்த சொந்தக்காரரின் இல்லத்தில் பதினைந்து நாட்கள் தங்கும் திட்டத்துடன் வந்திருந்தான்.

அவன் புதிய நிலத்திற்குச் சென்று பார்த்தான். அந்தக் கிழவனையும் நாராயணியையும் காணவில்லை. கிழவன் இறந்து விட்டான். நாராயணிக்குத் திருமணம் ஆகிப் போய்விட்டாள்.

அவன் தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் மறுநாள் வேட்டையாடப் புறப்பட்டான். மதியநேரம் ஆனபோது அவர்கள் மிகவும் களைப்படைந்துவிட்டார்கள். மிகவும் தளர்ந்துபோய் ஆறு மைல் தூரத்திலிருந்த ஒரு மலைச்சரிவை அடைந்தார்கள்.

அருகில் வீடுகள் எதுவுமில்லை. அந்த வயலின் எதிர் கரையில் ஒரு குடிசை இருப்பதை அவர்கள் பார்த்தார்கள். எல்லோரும் அந்த வீட்டை நோக்கி நடந்தார்கள்.

வாசலில் விரிக்கப்பட்டிருந்த ஒரு பனை ஓலையாலான பாயில் குழந்தையொன்று படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. வேறுயாரும் அங்கு இல்லை.

பாலகிருஷண்ன் உரத்த குரலில் “ஏய்... ஏய்...” என்று அழைத்தான். உள்ளேயிருந்து முண்டும் ரவிக்கையும் அணிந்த ஒரு கர்ப்பிணி வெளியே வந்தாள்.

அவள் பாலகிருஷ்ணனையே உற்றுப் பார்த்தாள். பிறகு உள்நோக்கி நடந்தாள்.

ஒரு புல்லாலான பாயுடன் அவள் மீண்டும் வெளியே வந்தாள். அப்போது அவளுடைய மார்புப் பகுதியை ஒரு கிழிந்துபோன அழுக்குத் துணி மறைத்திருந்தது.

“உட்காருங்க” - அவள் ஒரு புன்சிரிப்புடன் பாலகிருஷ்ணனைப் பார்த்துச் சொன்னாள். சொல்லிவிட்டுத் திரும்பவும் உள்பக்கமாக ஒதுங்கி நின்றாள்.

அந்த முகத்தை முன்பு எங்கோ பார்த்ததைப் போல பாலகிருஷ்ணனுக்குத் தோன்றியது. அடுத்த நிமிடம் புரிந்துவிட்டது - ராணி!

“யாரு அது? ரா... ராணிதானே? பார்த்தவுடன் எனக்குப் புரியல. கொஞ்சம் வெளியே வா.”

தன்னுடைய நாகரிகமற்ற தோற்றத்தை வெளிக்காட்டும் வெட்கத்துடன் அவள் கதவுக்கு அருகில் பாதி மறைந்து நின்றுகொண்டிருந்தாள்.

தலையில் ஒரு கட்டு மரவள்ளிக் கிழங்குடனும் கையில் ஒரு கோவா மீனுடனும் ஒரு ஆள் வாசலில் வந்து நின்றான். வாசலில் உட்கார்ந்திருந்தவர்களை உற்றுப் பார்த்தவாறு அவன் வீட்டுக்குள் நுழைந்தான்.

ஐந்து நிமிடங்கள் சென்ற பிறகு, அவன் வாசலுக்கு வந்து பாலகிருஷ்ணனுக்கு முன்னால் பணிவாக நின்றுகொண்டு சொன்னான்: “ நாராயணி சொன்னப்போதான் எனக்கே தெரிஞ்சது...”

பாலகிருஷ்ணன் கேட்டான்: “நீங்க நாராயணியோட கணவரா?”

“ஆமா... அவள் என்கிட்ட எல்லா விஷயங்களையும் சொல்லியிருக்கா. அதிகாரியின் வீட்டில் கஞ்சி குடிச்சித்தான் வளர்ந்தோம்னு சொல்லியிருக்கா...”

“உங்க பேரு...”

“ராமன்.”

பாலகிருஷ்ணன் ராமனையே சிறிது நேரம் பார்த்தான்.

தடிமனான, நல்ல உடல் நலத்துடன் உள்ள, சுமார் முப்பத்தைந்து வயது மதிக்கக்கூடிய, பரவாயில்லை என்று சொல்லும்படியான தோற்றத்தைக் கொண்ட ஒரு இளைஞன்.

“எங்களுக்குத் தாகமா இருக்கு. கொஞ்சம் பச்ச தண்ணி கிடைச்சா நல்லா இருக்கும்.”

ராமன் அருகிலிருந்த நிலத்திற்குச் சென்றான். பத்து நிமிடங்கள் சென்றிருக்கும். ஐந்தாறு இளநீர்க் காய்களுடன் திரும்பி வந்தான்.

தாகம் அடங்கியவுடன் அவர்கள் அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்கள்.

ராமன் கேட்டான்: “இங்கே சாப்பிடுறதுல ஏதாவது பிரச்சினை இருக்கா?”

பாலகிருஷ்ணனும் அவனுடைய நண்பர்களும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

அவர்கள் எல்லோருக்கும் நல்ல பசி எடுத்தது.

இறுதியில் பாலகிருஷ்ணன் சொன்னான்: “எங்கக்கிட்ட வேட்டைக்குப் போனப்போ கிடைச்ச கொஞ்சம் பறவைகள் இருக்கு. அதைச் சமையல் செய்து கொடுக்குறதா இருந்தா, நாங்க காத்திருக்கிறோம்.”

“ரொம்ப சந்தோஷம்.”

அன்று சாயங்காலம் ஆகும் வரை சாப்பிட்டும் குடித்தும் ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ராமன் ஒரு பரமரசிகன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

விடைபெற்றுப் புறப்பட்டபோது பாலகிருஷ்ணன் அந்தக் குழந்தையின் கையில் ஒரு ரூபாய் கொடுத்தான்.

பாலகிருஷ்ணன் பார்வையிலிருந்து மறையும் வரை சமையலறையிலிருந்த ஜன்னல் வழியாக இரண்டு பெரிய கண்கள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தன.

3

தற்குப் பிறகு ஆறு வருடங்கள் ஓடின.

பாலகிருஷ்ணன், டாக்டர் பாலகிருஷ்ணனாக ஆனான். அதிகாரியின் சஷ்டியப்த பூர்த்தி நாள். அவன் அந்தக் குன்னத்து கிராமத்திற்குச் சென்றான். அன்று சாயங்காலம் அந்த நதிக் கரைக்கு நடந்து சென்றான். ஆற்றின் அருகிலிருந்த ஒரு பெரிய குழியில் அவன் தவறி விழுந்து விட்டான். உரத்த குரலில் சிரித்தவாறு அருகிலிருந்த ஒரு புதருக்குள்ளிருந்து ஒரு குறும்புக்கார பையன் அவனுக்கு முன்னால் வந்து நின்றான். அதைப் பார்த்து புதிய நிலத்திலிருந்து ஒரு பெண் ஓடி வந்து, ஒரு பெரிய கழியை எடுத்து அந்தச் சிறுவனை அடிப்பதற்காக ஓங்கினாள். அந்தப் பெண் - நாராயணி.

டாக்டர் பாலகிருஷ்ணன் புதிய நிலத்திற்குச் சென்றபோது நாராயணி தேம்பித் தேம்பி அழுதாள்.

அவள் இப்போது ஒரு விதவை. இரண்டு வருடங்களுக்கு முன்பு ராமன் தென்னை மரத்தின் உச்சியிலிருந்து விழுந்து இறந்து போய் விட்டான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel