
ஏற்கெனவே எங்கள் வீட்டில் இருந்த இனத்தைச் சேர்ந்தவைதாம் நான் நட்ட பெரும்பாலான செடியின் கொம்புகள். ஆரம்பத்தில் இங்கு செடிகள் வளர்க்க ஆரம்பிக்கும்போது, தினந்தோறும் காலையில் அவற்றுக்கு நீர் ஊற்றுவேன். நூறு குடம் தண்ணீர் தினமும் தேவைப்படும். தூரத்தில் இருந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வரவேண்டும். நானும் என் மனைவியும்தான் தினமும் நீர் எடுத்துக்கொண்டு வருவோம். ஒரு ஆள் நீர் எடுத்துக்கொண்டு வர இன்னொரு ஆள் அதைச் செடிகளுக்கு ஊற்ற வேண்டும். செடிகளுக்கு மட்டுமல்ல; கத்திரிக்காய், வெண்டை, பாகற்காய், பச்சை மிளகாய், கருவேப்பிலை, வாழை, மிளகு, மா, சப்போட்டா, கொய்யா, பப்பாளி, பாக்கு, தென்னை- எல்லாவற்றுக்கும்தான் தினமும் நீர் ஊற்ற வேண்டும். இதுபோக, சீமைக்கொன்றை மரம் வேறு. அதற்கும்தான் நீர் வேண்டும். எல்லாம் தெய்வத்தின் அருளால் நன்றாகவே வளர்கின்றன. நாட்கள் நல்ல நிலையில் இப்படி நீங்கிக் கொண்டிருக்க, நம்முடைய நூற்றியொரு நாக்குக்காரிக்கு திடீரென்று ஒரு எண்ணம் உதித்தது. சூரிய பகவான் "சுள்” என்று காய்ந்து கொண்டிருக்கிறான். அவனுடைய வெப்பத்தில் நாங்கள் ஊற்றுகிற தண்ணீர் சில நிமிடங்களிலேயே ஆவியாகிப் போய்விடுகிறது. சூரியனின் ட்யூட்டி டைம் பகல்தானே! இரவு நேரத்தில் அவன் இருக்கப் போவதில்லை. அதனால் செடிகளுக்கும் மரங்களுக்கும் நீர் ஊற்றும் வேலையைப் பேசாமல் இரவில் வைத்துக்கொண்டால் என்ன? சரிதான். அவளின் எண்ணம் உண்மையிலேயே பாராட்டக் கூடியதுதான். பெண் என்றால் இவளல்லவா பெண்! அப்போது சாயங்காலம் நான்கு மணி இருக்கும். சூரிய பகவான் இப்போது விடை பெற்றுக் கிளம்பிக் கொண்டு இருக்கிறான். செடிகளுக்கும் மரங்களுக்கும் நீர் ஊற்ற வேண்டுமே! நான் என் மனைவியை அழைத்தேன். குடங்கள் எல்லாம் தயாராக இருந்தன. “அடியே... தண்ணி ஊத்தணும்ல?''
அப்போது என் மனைவி உரத்த குரலில் சொன்னாள்:
“எனக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கு. சோறு ஆக்கணும். குழம்பு வைக்கணும். பால் கறக்கணும். குழந்தையைக் குளிப் பாட்டணும். சாயா தயார் பண்ணனும். பிறகு...''
அவள் சொல்வதும் நியாயம்தான். அன்று முதல் நீர் கொண்டு வருவது, அதைச் செடிகளுக்கும் மரங்களுக்கும் ஊற்றுவது - எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டிய நிலை. அதோடு நின்றால் பரவாயில்லை. சமையலறைக்குத் தேவைப்படுகிற நீரையும் நானேதான் எடுத்துக் கொண்டு வரவேண்டும். அடடா... என்ன அருமையான ஐடியா! எல்லாவற்றையும் மனதில் அசை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும்போது, செல்ல மகள் வந்து என்னிடம் சொன்னாள்:
“டாட்டா... அம்மா என்னை சின்ன நாக்கின்னு சொல்லுது...''
சரிதான். சின்னநாக்கி, பெரிய நாக்கி, நாக்கம்மா, நாக்கும்மா, நாக்காக்ஷி- இப்படி நாக்கிகளில் எத்தனையோ வகைகள்! பெரிய வாயாடிப் பெண்ணை ஆயிரம் நாக்கி என்று அழைக்கலாம்.
அப்போது என் மகளுக்கு ஒரு சந்தேகம்-
“டாட்டா... நெறைய நாக்கு இருக்கா? அம்மா சொன்னாங்க...''
“அடியே... பெரிய நாக்கி...'' இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தில் சகல மரங்களும், செடிகளும், பசுக்களும், கோழிகளும், பூனைகளும் கேட்கிற மாதிரி உரத்த குரலில் நான் அழைத்தேன். அவள் எங்கோ இருந்து கர்ஜனை வருவது மாதிரியான குரலில் சொன்னாள்:
“என்ன...?''
நான் மகளிடம் சொன்னேன்: “மகளே, நீ போய் டாட்டாவுக்கு ஒரு டம்ளர் சாயா கொண்டு வரச் சொல்லு. மெதுவா போனா போதும். வேகமா ஓடி விழுந்திடக் கூடாது. தெரியுதா?''
மகள் போனபிறகு, நான் சில டயலாக்குகளை நினைத்துப் பார்த்தேன்:
1. "இன்னைக்கே அனுப்பிடணும்.”
2. "அதை இன்னைக்கு அனுப்பிடுறோம். இன்னொண்ணை நாளைக்கு'.
3. "மறந்திடக் கூடாது!''
4. "மறக்க முடியுமா?'
பெண்மணிகள் பேசிய டயலாக்குகள்தாம். இது எதைப் பற்றி வேண்டுமென்றாலும் இருக்கலாம். சிறிய குண்டூசி முதல் ஹைட்ரஜன் குண்டு வரை எது வேண்டுமானாலும் இருக்கலாம். "இன்னைக்கு அனுப்பிடணும்' என்றால் அது எதைப் பற்றி இருக்கும்? ஏதாவது ப்ளவுஸைப் பற்றி இருக்குமோ? நான் இப்படி நினைக்கக் காரணம் என்னவென்றால் நம்முடைய பெரிய நாக்கிக்கு ஒரு தையல் மெஷின் சொந்தத்தில் இருக்கிறது. தையல் கலையில் சொல்லப்போனால் பெரிய பாண்டித்யம் உள்ளவள் என்றுதான் இவளைச் சொல்ல வேண்டும். ப்ளவுஸை வெட்டித் தைப்பதில் பி.எச்.டி. பாஸ் ஆகியிருக்கிறாள். பேக் ஓப்பன், சைடு ஒப்பன், பேக்கும் சைடும் ஒப்பன், எந்தவித ஓப்பனும் இல்லாதது, முழுவதும் ஒப்பனாக இருப்பது என்று பலவிதப்பட்ட துணிகளையும் அவளுக்கு தைக்கத் தெரியும். தன்னுடைய சினேகிதிகளுக்கு ஒரு புதிய மாடல் ப்ளவுஸை வெட்டி தைத்துக் கொடுக்க அவள் திட்டமிட்டிருக்கலாம். ரைட்... இல்லாவிட்டால் பிரúஸியர்களாக இருக்குமோ? புதிய மாடல் இங்கிலீஷ் மார்புக் கச்சையாக இருக்கலாம். எது வேண்டுமானாலும் இருக்கட்டும். இதைப் பற்றி சிந்தித்துப் பார்த்து நமக்கென்ன ஆகப் போகிறது? ஆனால், தையல் மெஷினைப் பற்றி சிந்தித்துப் பார்த்தபோது எனக்கு இலேசாக சிரிப்பாக வந்தது. சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு சிரிக்கவும் செய்தேன். தையல் மெஷின் வாங்கி நாட்கள் அதிகமாகிவிட்டதால், அதற்கு ஏகப்பட்ட நோய்கள். அவனுக்கு சில உறுப்புகள் இல்லவே இல்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால் அவன் ஒரு நோயாளி. இருந்தாலும் அவன் தம் பிடித்து நடந்து கொண்டிருக்கிறான். மொத்தத்தில் அவன் ஒரு தைரியசாலி என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு பழைய லாரி. அதில் இரும்பு சாமான்களும், மண் பானைகளும் ஏற்றப்பட்டி ருக்கின்றன. நான்கைந்து காலி மண்ணெண்ணெய் பீப்பாய்கள் கயிறு கொண்டு கட்டப்பட்டிருக்கின்றன. சாலையில் உடைந்த மண் பானைத் துண்டுகள் கிடக்கின்றன. அதன்மேல் லாரி ஏறிப் போகும்போது என்ன சத்தம் உண்டாகுமோ, அந்தச் சத்தம்தான் என் மனைவியின் தையல் மெஷின் ஓடும்போது உண்டாகும். இந்தத் தையல் மெஷின் என் மனைவியுடையது அல்ல. இவளின் தந்தைக்கு நன்கு தெரிந்த ஒரு பள்ளி ஆசிரியைக்குச் சொந்தமானது இது. இவளின் தந்தை மரணமடைந்துவிட்டார். அவர் ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தவர். உடன் பணியாற்றிய சக ஆசிரியரின் மகளல்லவா? நன்றாகத் தையல் கலையைக் கற்றுக்கொள்ளட்டும் என்று சௌபாக்கியவதி யசோதா டீச்சர் நல்ல ஒரு எண்ணத்துடன் கொடுத்தனுப்பிய தையல் மெஷின் இது. அதற்குப் பிறகு இவளைக் கையில் பிடிக்க முடியுமா? தையல் விஷயத்தில் மிகவும் தீவிரமாக மூழ்கிவிட்டாள் இவள். இங்கு ஏகப்பட்ட பெண் பிள்ளைகள் வருவார்கள். சிலர் புத்தகங்கள், மாத இதழ்கள் வாங்குவதற்காக வருவார்கள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook