
நமக்குத் தெரிந்த தனியார் நிறுவனங்களில் அவர்களது நிர்வாகத்திற்கு உதவிடும் விதமாக பணிகளை செய்யலாம். வீட்டின் அருகே உள்ள பிள்ளைகளுக்கு ட்யூஷன் எடுக்கலாம். ஸ்லோகங்கள் கற்றுக் கொடுக்கலாம். பிற மாநில மொழிகள் தெரிந்தவர்களாக இருந்தால் அதைக் கற்றுக் கொடுக்கலாம். கோயில்களில் விழாக்கள் நடைபெறும் பொழுது 'வாலன்டியர்' ஆக அங்கே சென்று தேவைப்படும் உதவிகள் செய்யலாம். சும்மா இருந்தால் தேவையற்ற சிந்தனைகள் சிதறும். ஏதாவது உபயோகமான வேலைகள் செய்து கொண்டு அவற்றில் ஈடுபடுத்திக் கொண்டால் எந்த வயதிலும் வாழ்வு சுகமானதாக இருக்கும்.
வீட்டில் சும்மா இருப்பவர்கள் எது பேசினாலும் தவறாகத் தெரியும். 'ரிட்டயர்ட் ஆபிஸர், வெட்டி ஆபிஸர்' என்ற பட்டங்கள் சூட்டப்படும். 'தொண தொண'ன்னு எப்பப்பார்த்தாலும் பேசிக் கிட்டு இருக்குது. 'மொக்கை' தாங்க முடியல. அறுக்கிறார்' என்று ஆண்களை மட்டுமா? பெண்களையும் பேசுவார்கள்.
'நாம் சம்பாதிக்கும் போது இருந்த மதிப்பு, மரியாதை இப்போது இல்லையோ?... நம்மை இளக்காரமாக நினைக்கிறார்களோ' என்ற தவறான எண்ணம் ஏற்பட்டு மனம் புண்படுவது மட்டுமல்ல, உள்ளுக்குள் தாழ்வு மனப்பான்மை ஏகமாய் உருவாகிவிடும்.
'எனக்கு வயசாயிடுச்சு. அதனால வீட்ல உள்ளவங்க என்னை மதிக்க மாட்டேங்கறாங்களோ? வயசான காலத்துல இப்பிடித்தான் அல்லாட வேண்டுமோ?' என்று சில பெரியவர்கள் தங்களுக்குள் உண்டாகும் இந்த தவறான கருத்தினால் குடும்பத்தினருடன் பழகுவதில் முரண்பாடு கொள்வார்கள். குடும்பத்தினர் சாதாரணமாக எது பேசினாலும் அவற்றைத் தவறான கோணத்திலேயே சிந்திப்பார்கள். இந்த சிந்தனையினால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை.
ஏன் எப்பொழுதும் தன்னிரக்கத்தால் (Self sympathy) தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ள வேண்டும்? வயோதிகத்தில் வாடிப்போகும் பெரியவர்களே, உங்கள் நிழலில் ஒதுங்கி குளுமை அடைந்த நபர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள். நீங்கள் பார்த்து படிக்க வைத்து முன்னேறியவர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள். உங்களது அயராத உழைப்பினால் உயர்ந்த இடத்திற்கு வந்த நிறுவனங்கள் இருக்கும். உங்கள் அனுபவத்தால் கூறிய ஆலோசனைகளால் சாதனை புரிந்தவர்கள் இருப்பார்கள். மற்றவர்களைத் தவிர, உங்கள் குடும்பத்தில் நீங்கள் மிகமிக அன்பும், அக்கறையும் கொண்டு வளர்த்து விட்ட உங்கள் பிள்ளைகள் அயல்நாட்டிலும், உள்நாட்டிலும் வெற்றிக் கொடி பிடித்தவர்களாக இருப்பார்கள்.
நீங்கள் பார்த்து கணக்கு சொல்லிக் கொடுத்த பக்கத்து வீட்டுப் பையன் ஆடிட்டராக உருவாகி இருப்பான். நீங்கள் பார்த்து ஊர் மெச்சும் விதமாக உங்கள் இல்லத்து திருமணங்களை திறம்பட நடத்தி இருப்பீர்கள். பேரன், பேத்திகளுக்கு ஆதரவு கொடுத்து, அவர்களது திறமை இருக்கும் துறையில் அவர்களை ஊக்குவித்து, அந்தத் திறமை வளர்வதற்குரிய ஏற்பாடுகளை செய்துக் கொடுத்து அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் வழிமுறைகளுக்கு ஒரு ஏணியாக இருந்திருப்பீர்கள்.
இப்படி எத்தனையோ வளமான நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் மூல காரணமாக இருந்திருப்பீர்கள். இதையெல்லாம் ஏன் மறந்து விடுகிறீர்கள்? பல பேரை வாழ வைத்ததை நினைத்து இன்புறாமல்... வயோதிகத்தை மட்டுமே மனதில் கொண்டு வீணாக ஏன் வருந்துகிறீர்கள்? முதுமைப் பருவத்தை அடையும் முன் எத்தனையோ புதுமைகளையும், புரட்சிகளையும் செய்துள்ளீர்கள் என்பதை நெஞ்சத்தில் நிலை நிறுத்துங்கள்.
'என்னால் இயன்ற நன்மைகளை செய்துள்ளேன். என்னாலான சாதனைகளை புரிந்துள்ளேன். வாழ்க்கையில் நான் வெற்றி பெற்றுள்ளேன்' என்ற எண்ணங்களை மனதில் உலவ விடுங்கள். சுய தம்பட்டம் அடிப்பதுதான் தவறு. சுயமாக நாம் செய்த நல்ல காரியங்களைப் பற்றி நினைத்து பெருமிதம் அடைவதில் எந்த தவறும் இல்லை. முதுமை அடைந்து விட்டதால் 'என்னால் எந்தப் பயனும் இல்லை' என்ற தாழ்வு உணர்ச்சிக்கு ஆளாகாதிர்கள். இந்த முதுமைப் பருவமே உங்கள் இளமை பருவத்தின் காலச் சுவடுகளைப் பதிக்கும் கௌரவப்பட்டம்.
முகத்திலும், உடலிலும் இயற்கை உண்டாக்கிய சுருக்கங்கள் ஒவ்வொன்றும் வாழ்வின் ஒவ்வொரு அனுபவங்கள்! அனுபவங்கள் இல்லாமல் அறிவுரை கூறும் தகுதி கிடையாது. தகுதியை அளிப்பது அனுபவங்கள் மட்டுமே.
பிறந்த உடனேயே அனுபவங்கள் கிடைத்து விடுமா? பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, ஒவ்வொரு பருவத்தையும் அடைந்து அனுபவித்துப் பார்த்தால்தான், வாழ்க்கை என்றால் என்ன? அந்த வாழ்க்கையில் மனிதர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் என்ன என்பது படிப்படியாக புரியும். வாழ்க்கை எனும் ஏணியில் ஒவ்வொரு படிக்கட்டிலும் ஏறிப் போவதற்கு கால அவகாசம் வேண்டும் அல்லவா? அந்தக் கால அவகாசம்தான் வயது.
எனவே வயது கூடிவிட்டது, முதுமை எட்டிவிட்டது என்று சங்கடப்படாமல், 'அனுபவங்கள் கிடைத்துள்ளன. அந்த அனுபவங்களால் அநேகம் பேருக்கு நன்மைகள் செய்துள்ளோம்' என்று சந்தோஷப்படுங்கள். சங்கடப்பட்டால், சங்கீதத்தில் ஸ்ருதி இறங்குவதைப் போல் சடுதியில் வாழ்க்கை இறங்கிவிடும். சந்தோஷப்பட்டால் சங்கீத ராகம், தேன் சிந்தும்.
உங்களால் நன்மை அடைந்தவர்களைப் பற்றி நினைத்துப் பார்த்து மகிழ்வது போல, நீங்கள் தீங்கிழைத்து அதனால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியும் நினையுங்கள். குறிப்பிட்ட காலத்தில் செய்யத் தவறிய வருந்துதலை இந்தக் கால கட்டத்திலாவது நினையுங்கள். வருந்துவது மட்டுமல்லாமல் உங்களால் பாதிப்பு அடைந்தவர்களைத் தேடிச் சென்று சந்தியுங்கள். உங்கள் வருத்தத்தை தெரிவியுங்கள். நீங்கள் செய்த தீங்கிற்கு ஒரு பரிகாரமாக அவரது தேவை என்னவென்று கேட்டு உதவி செய்யுங்கள்.
இதனால் இதயச்சிறையில் அடைபட்டுக் கிடக்கும் சுமையிலிருந்து சுகமான விடுதலை கிடைக்கும். மனம் மிகவும் லேஸாகி தன்னிச்சையாய் வானத்தில் பறக்கும் பறவை போல பறக்கும். வாலிபத்தில் இழைத்து விட்ட தீங்கினை வயோதி கத்திலாவது உணர்ந்து, வருந்துவது மிக நன்மைக்குரிய விஷயமாகும்.
இதுநாள் வரை, அலுவல்கள், வீட்டு வேலைகள், வீட்டு விசேஷங்களுக்குரிய பணிகள், வியாபார சம்பந்தமான பயணம் போன்றவற்றில் ஈடுபட்டு உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் அவற்றிலிருந்து விடுபட்ட இந்த நிலையில் பழைய நண்பர்களை/தோழிகளை தேடிக் கண்டுபிடிக்கலாம். உடன் வேலை பார்த்து, ஊர் மாற்றம் (Transfer) கிடைத்து, பிரிந்து போனவர்கள் பற்றிய தகவல் அறிந்து அவர்களைப் போய் சந்திக்கலாம். எத்தனையோ உறவினர்கள் நம்மை அன்புடன் அவர்களது இல்லத்திற்கு அழைத்தும் நம் இடைவிடாத பணிகள் காரணமாக போகமுடியாமல் ஆகி இருக்கலாம். அவர்களது இல்லத்திற்கு பரிசுப்பொருட்கள் வாங்கிக் கொண்டு அவர்களுடன் நிறைய பேசிவிட்டு வரலாம். 'இப்பொழுதாவது வந்தீர்களே' என்று அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரிக்கும் பொழுது உங்கள் உள்ளம் நெகிழ்ச்சி அடையும்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook