Lekha Books

A+ A A-

இப்படிக்கு, என்றும் இளமையுடன்... முதுமை ! - Page 5

rasikkathane azhagu-ippadikku-endrum-ilamaiyudan-mudumai

'துள்ளுவதோ இளமை; தேடுவதோ தனிமை' என்று பாடாவிட்டாலும் 'மனதை அள்ளுவதோ இளமை நினைவு, இன்று அது தருவதோ இனிமை' என்று பாட முடியும். உணர முடியும். 'நான், எனது, நான் இப்படித்தான்' என்று ஒதுங்கக்கூடாது. தனிமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஓர் ஓரமாய் உட்கார்ந்து  ஓராளாய் ஒதுங்கி இருந்து, முதுமை உணர்வை மிகைப்படுத்திக் கொள்வதை விட பலருடன் கூடி இருந்து, மனம் விட்டுப் பேசி மகிழ்ந்து கலகலப்பான சூழ்நிலையில் ஆழ்ந்திடும் போது வயது எங்கே ஞாபகம் வரும்? முதுமை எங்கே முகம் காட்டும்?! இளமை உணர்வு அல்லவா இருகரம் நீட்டும்?!

வயது கூடிவிட்டால் உடல் ஓய்ந்து விட்டது என்பது நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் தவறான கருத்தாகும். சரீர உழைப்பு என்பது எப்போதும் இருக்க வேண்டும். இளமைக்காலம் போல் ஓடியாடி உழைக்கும் உழைப்பபைக் குறிப்பிடவில்லை. நம்மால் இயலக்கூடியது எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு நாள் இரவு முடிந்து மறுநாள் காலையில் பொழுது விடிந்துவிட்டால், அந்த விடிவைத் தரும் இயற்கைக்கு, முன்தினம் பற்றிய நினைவும் இல்லை. கவலையும் இல்லை. அந்த இயற்கை போல நாமும் முந்தின நாள் நடைபெற்ற தேவையில்லாத விஷயங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்காமல் அன்றைய புதிய நாளின் நிகழ்ச்சிகளை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள நம்மை தயார் செய்துக் கொள்ள வேண்டும்.

‘Time is the best medicine’ என்று கூறப்படுவதுண்டு. காலம் செல்லச் செல்ல மனிதர்களின் மனதிலுள்ள காயம் ஆறுகிறது. துன்பத்தின் சுமை குறைகின்றது. அன்றைய பூதாகரமான பிரச்னையை இன்று நினைத்துப் பார்த்தால் வெகு சாதாரணமான ஒன்றாக தோன்றுகிறது. இது முதுமையின் மூலம் கிடைக்கும் நன்மை. அதாவது, காலம் என்பது நம் வயதை மட்டும் மாற்றுவது அல்ல. நம் மனதையும்தான் அது ஒரு மந்திரம் போல் மாற்றுகிறது. ஆதலால் காலம்  தன் காலடியை நம் மீது பதித்தால் நமக்கு நன்மைதானே தவிர எந்தவித தீமையும் அல்ல.

வயது ஏறுவதால் உலகம் பழமையாகவே இருக்கிறதா? அது புதிது புதிதாக பலவற்றைப் படைத்துக் கொண்டிருக்கிறது. எத்தனையோ மாற்றங்கள்! முன்னேற்றங்கள்! எத்தனையோ இறக்கங்கள், உயர்வுகள்! சரிவுகள்! அனைத்தையும் பார்க்கிறோம். அனுபவங்கள் பெறுகிறோம். நாம் சந்தோஷமாக வாழ்ந்தாலும் வயது கூடுவது நிற்கப் போவதில்லை. சோகமான வாழ்க்கை வாழ்ந்தாலும் வயது கூடுவது நிற்கப் போவதில்லை.

இளமைத் துடிப்பில் அதன் எக்காளத்தில் 'எனக்கு மிஞ்சியவன் யாருமில்லை'. 'நான்தான் பெரியவன்; நான்தான் சாதித்தவன்' என்ற சுயபிரதாப எண்ணங்கள் (Self superior thought) தோன்றுகின்றன. இதனால் அகங்காரமும் உருவாகிறது. இளமைச் செருக்கில் அகங்காரம் கொண்ட மனிதன், காலத்தின் போக்காலும், வயதின் காரணமாகவும் அடக்கமான மனிதனாய் உருமாறுகின்றான். இதற்காகத்தான் சான்றோர்கள் இளமை நிலையற்றது என்ற அறிவுரையை வலியுறுத்தி வருகின்றனர்.

'ஆடிய ஆட்டமென்ன?! தேடிய செல்வமென்ன?!

கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?'

என்று பாடினார் கவியரசு கண்ணதாசன்.

எனவே இளமையோ, முதுமையோ எந்தப் பருவத்திலும், எந்தக் காலத்திலும் நாம் நல்லன மட்டுமே செய்ய வேண்டும்.

பெரிய பதவியில் இருந்து இளைப்பாறியவர்கள் சிலர் (Retired Persons) வயது கூடி விட்ட போதும் தங்கள் உயர் பதவி அளித்த ஆணவம், அகங்காரம், அலட்சியம் இவற்றை விடுவதில்லை. பதவியை விட்டு இவர்கள் விலகிய பின்னரும் கூட, அந்த பதவி கொடுத்த பதவிசை எக்காரணம் கொண்டும் விட்டுவிட மாட்டார்கள். 'நான் அதிகாரி, எல்லாம் என் கைக்குள்'  என்ற மமதை, வயது முதிர்ந்த பின்பும் மனதைவிட்டு அகலாது.

ஒரு பிரயாணத்தில் Retired Officer ஒருவரை சந்திக்க நேரிட்டது. அவர், தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பயணிக்கு போதுமான இடம் தராமல் பந்தாவாக தலையணை மீது சாய்ந்து உட்கார்ந்திருந்தார். உடன் பயணித்த வேறொரு பயணி, வேண்டுகோள் விடுத்தும் அந்த ஓய்வு பெற்ற அதிகாரி, சிறிதும் நகராமல் அப்படியே தலையணை மீது ஒரு தோரணையாக உட்கார்ந்திருந்தார். அவ்வளவு ஏன்? அந்த அதிகாரி, தன் மனைவியைக் கூட பொது இடத்தில் மரியாதையாக நடத்தவில்லை. ஒரு அடிமை போல அவரது மனைவியை நடத்தினார்.

இந்த முதுமையிலேயே இப்படி என்றால் அந்த அதிகாரி தன் இளமையில் எப்படி இருந்திருப்பார்? அவரது மனைவி எத்தனை பாடுபட்டிருப்பாள் அந்த மனிதரிடம்?... வயது... முதுமை... இரண்டும் நம்மை பதப்படுத்தும், பக்குவப்படுத்தும், என்பார்கள். ஆனால் அவரை எதுவும் மாற்றவில்லை.  சில நேரங்களில் சில மனிதர்கள்!

பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு (Menopause) நின்றுவிடுவது முதுமையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இது தவறு. அவரவர் உடல் ஆரோக்கியத்தின் தன்மைக்கு ஏற்ப இயற்கை நியதியின் விளைவுதான் மாதவிலக்கு நின்று விடுதல்.

பெண்களுக்கு மாதவிலக்கு நின்ற பிறகு மனரீதியாக ஏற்படும் பாதிப்புகள் நிறைய. ஹார்மோன் மாற்றங்களின் விளைவால் ஏற்படும் பாதிப்புகள் பெண்களைப் படுத்தும் பாடு மிகக் கொடுமையானது. சிலருக்கு உதிரப்போக்கு மிக அதிகமாக இருப்பதால் அவதிப்படுவார்கள். சிலருக்கு மாதவிலக்கு நின்ற பிறகும் அது தொடர்பான உடல்வலி, குறுக்கு வலி, களைப்பு, டென்ஷன் இவை கட்டுக்கு அடங்காமல் இருக்கும்.

குடும்பத்தினர்கள் சற்று கோபமாக பேசினாலோ, பிடிக்காத விஷயத்தை செய்தாலோ எரிச்சல் வரும். இதை வெளிப்படுத்தும் பொழுது குடும்பப் பிரச்சனை பூதாகரமாகிறது. இதற்குக் காரணம், பெண்களின் இந்த பிரச்சனை பற்றி யாரும் தெரிந்து கொள்வது இல்லை. உடல் ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களினால்தான் எரிச்சல் படுகிறார்கள் என்று புரிந்து கொள்ளாமல் பிரச்சனை மேலும் பெரிதாகிறது. மாதவிலக்கு நின்று விட்ட பெண்மணிகளும் தங்கள் பாதிப்புகள் பற்றி யாரிடமும் வெளிப்படையாகப் பேசுவது இல்லை.

பொதுவாக சொல்லப்போனால் பெண்களின் இந்தக் காலகட்டத்தில் ஏற்படும் உடல் வேதனைகள், உளரீதியான மாற்றங்கள் இவை பற்றிய அறிவோ, விழிப்புணர்வோ நம்மிடையே இல்லை. ஐம்பது வயது வரை தன் குடும்பத்திற்காக வீட்டிலும், ஆபிஸிலும் உழைத்துக் கொண்டிருக்கும் அவள், இந்த (Menopause) காலகட்டத்தில் தன் மீது குடும்பத்தினர் மிகுந்த அன்பு செலுத்த வேண்டும், அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று  எதிர்பார்ப்பாள். தன் கணவனின் அருகாமையை மிகவும் நாடுவாள், கணவன் தன்னிடம் ஆறுதலாக பேச வேண்டும் என்று நினைப்பாள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel