Lekha Books

A+ A A-

இப்படிக்கு, என்றும் இளமையுடன்... முதுமை ! - Page 6

rasikkathane azhagu-ippadikku-endrum-ilamaiyudan-mudumai

கணவனுடன் தனித்திருக்க வேண்டும், என்று மனரீதியாகவும், தாம்பத்திய சுகம் பெற வேண்டும் என்று உடல் ரீதியாகவும் பெரிதும் விரும்புவாள். ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம் அறியாது வெட்கப்படுவாள். மாதவிலக்கு நின்றுவிட்டால் பெண் என்பவள் தாம்பத்திய வாழ்க்கைக்குத் தகுதி இல்லாதவள் என்ற தவறான மனப்பான்மை இருப்பதால் மிகவும் கஷ்டப்படுகிறாள் பெண். வெகு அபூர்வமாக இந்தக் காலகட்டத்தில் அவளையும், அவளது பிரச்சனைகளையும், புரிந்து கொண்ட கணவன், அவளுடன் அன்பாக பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு 'இந்த வயசுல என்ன கொஞ்சல் வேண்டி இருக்கு? பொண்டாட்டியை தாங்கிக்கிட்டு இருக்கான்  பாரு' என்று விகற்பமாக பேசி, குத்திக்காட்டும் நபர்கள்தான் இங்கே அதிகம்.

அமெரிக்காவில் உள்ள இந்திய தமிழ் பெண்மணி எனக்கு பரிச்சயமான லேடி டாக்டர். அவரது பெயர் திருமதி. லதா வெங்கடேஷ்.  "பெண்களுக்கு மாதவிலக்கு நின்ற பிறகு தாம்பத்ய சுகம் நாடும் உணர்வு மிக அதிகம். இது பற்றிய அறியாமை இருப்பதால் பல பிரச்சனைகள் உருவாகின்றன" என்று இவர் கூறினார். இதற்காக இவர் தனது சொந்தப் பணத்தில் குறும்படம் ஒன்று தயாரித்துள்ளார். மற்ற நோய்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுப்பது போல இது குறித்த அறியாமை நீங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். மாதவிலக்கு நின்றுவிட்ட பிரச்சனைகளால் ஏற்படும் மன வேறுபாடுகளால் பாதிக்கப்பட்டு, கணவனாலும் பிள்ளைகளாலும் அலட்சியப்படுத்தப்படும் பெண்மணிகளுக்காக தன்னால் இயன்றதை செய்ய வேண்டும் என்று பொதுநல அக்கறையாக அவர் பேசியது கேட்டு அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது.

 பொதுவாகவே பெண்கள் ஒரு ஜூரம், தலைவலி, ஜலதோஷம் காரணமாக என்றோ ஒரு நாள் மிக அரிதாக படுத்துக் கொண்டால் கூட வீட்டில் உள்ளவர்கள் 'ஏன் படுத்தே இருக்க? எழுந்திருச்சு வேலையைப் பார்' என்பார்கள். சலித்துக் கொள்வார்கள். மாத விலக்கு நின்று விட்ட பெண் என்றால் கேட்க வேண்டுமா? அவளது தளர்ச்சியையும், அயர்ச்சியையும் பார்த்து அனுதாபப்பட்டு ஆவன செய்யாமல் 'இவள் இனி அவ்வளவுதான். எதற்குமே லாயக் இல்லாதவளாயிட்டா' என்று முடிவு கட்டி அந்தப் பெண்ணின் மனநிம்மதியை முறியடிப்பார்கள்.

பெண்களும் இது குறித்த ஆலோசனைகளை தகுந்த டாக்டரிடம் கேட்டு அறிந்து கொள்ளவேண்டும். முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்வதற்கு டாக்டர்கள் கூறும் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். விழிப்புணர்வுடன் அதற்குரிய வழிமுறை களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் செய்து கொள்ளாமல் 'இந்த நிலையில் என்னை யாரும் கவனிப்பது இல்லை, நான் படும் பாடு யாருக்குத் தெரியும்' என்று சலித்துக் கொள்வதால் பலன் இல்லை.

 இன்னொரு விஷயம்.... மனம் விட்டு வெளிப்படையாக தன் பிரச்சனைகளைக் கூற வேண்டும். இருபது வருடத்திற்கு மேலாக கூடி வாழ்ந்த கணவனிடம் இது பற்றி  பேசுவதற்கு ஏன் வெட்கப்பட வேண்டும்? ஆறு மாதத்திற்கு ஒரு முறை வெளியூர் சென்று ஒரு வாரம் தங்கி விட்டு வரலாம். குடும்பக் கூட்டை விட்டு சற்று வெளியே சென்று இளைப்பாறி, கணவருடன் பழங்கதைகள் பேசி மகிழலாம். தினமும் வெளியே போக முடியாவிட்டால் வாரம் ஒரு முறை பீச், சினிமா என்று போய் வரலாம்.

உணவு முறைகளை சீரமைத்துக் கொள்வதும் அவசியம். நிறைய பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. நெல்லிக்காய் சாறு, எலுமிச்சை சாறு இவற்றுடன் தேன் கலந்து தினமும் ஒரு முறை குடித்து வரலாம்.  தினமும் காலையில், வெறும் வயிற்றில் மூன்று தேக்கரண்டி எள் சாப்பிட்டு வரலாம். எலும்பு தேய்மானத்தை தடுக்கும் விதமாக கால்ஷியம் நிறைந்த உணவுகளான பால், தயிர் இவற்றை தினமும் சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில் மிக முக்கியமாக, தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உடல் பயிற்சியும் அவசியம்.

உடல்ரீதியான பிரச்சனைகளுக்கு டாக்டரின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடந்து கொள்வது மிகமிக முக்கியம். மனம் சார்ந்த எதிர்பார்ப்புகளுக்கு  குடும்பத்தினரிடம் வெளிப்படையாக தங்களது எண்ணங்களைப் பற்றி பேச வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை, இளம் தாய்களுக்கு ஆலோசனை, குழந்தை வளர்ப்பிற்கு ஆலோசனை என்று அங்கங்கே மையங்கள் இருப்பது போல பெண்களின் இந்த மாதவிலக்கு நின்று போகும் சமயம், நின்று விட்ட பிறகு உள்ள சமயம் (Post Menopausal Syndrome)  இவை குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். அரசு கவனிக்கும் என்று நம்புகிறேன்.

கை, கால்கள், ஆரோக்கிய ரீதியாக திடமாக இருக்கும் வரை இயன்ற வேலைகளை, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு மிஷின் சதா சர்வமும் இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருந்தால் மிக விரைவில் தேய்ந்து விடும். அதே சமயம் அந்த மிஷின் ஓடாமலே இருந்தால் துரு பிடித்துப் போகும். அது போலத்தான் மனிதர்களும். இயன்ற வேலைகளை செய்து கொண்டிருந்தால் உடல்நலம் நன்றாக இருக்கும். உடல்நிலை அறிந்து அதற்கேற்ற பணிகளை மட்டுமே செய்வதும் கூடாது. சக்திக்கு மீறிய வேலைகளை இழுத்துப் போட்டு செய்வது கூடாது.

என் தாயின் எழுபத்தி ஏழாவது வயதிலும் தன் துணிகளை தானே துவைப்பது, சமைப்பது போன்ற வேலைகளை அவர்களே செய்து வருகிறார்கள். கைத்தையல் முறையினால் அழகிய எம்பிராய்டரி வேலைகள் செய்து வருகிறார்கள்.  தன் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொண்டு, முடிந்த வேலைகள் செய்து கொண்டு, மனச்சோர்வு (Stress & Depression) இல்லாமல் இருக்கிறார்கள். பிறருக்கு உதவியாய் இருக்கிறார்கள். ஆகவே அவர்களது மனநிலையும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உடல் நலமும் நன்றாக இருக்கிறது.

எனது தாய்மாமாவின் வயது எழுபத்தி நான்கு. இன்னமும் அவரே எங்கு சென்றாலும் காரை ஓட்டிச் செல்வார். சென்னை நகரின் எப்படிப்பட்ட போக்குவரத்து நெரிசலிலும் கொஞ்சம் கூட டென்ஷன் ஆகாமல் பொறுமையாகவும், திறமையாகவும் காரை ஓட்டுவதில் வல்லவர். சென்னையில் மட்டுமல்ல, அமெரிக்காவில் இருக்கும் தன் மகளது இல்லத்திற்கு போய் ஆறு மாதங்கள் தங்கும் பொழுது தன் பேத்தியைக் காரில் கொண்டு போய் பள்ளியில் விடுவது உட்பட, மகளின் குடும்பத்திற்கு ஏகமாய் சேவைகள் செய்து வருகிறார்.

 இன்னொரு உறவினர், பணிக்கால ஓய்வு பெற்ற பிறகு, தனியார் நடத்தும் மருத்துவமனையின் நிர்வாகத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது திறமையான நிர்வாகம், அம்மருத்துவ மனையின் உரிமையாளருக்கு பெருமளவு உதவியாக இருக்கிறது என்பதை சொல்லத் தேவை இல்லை.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel