
ஆனால் நாளடைவில் அச்சூழ்நிலைகள் மாறியபின் இவர்களுக்குள் ஒரு புரிந்து கொள்ளுதல் ஏற்படும். அச்சமயத்தில் இவர்களது வயதும் ஏறி இருக்கும். அதனாலென்ன? மனது கூடி விட்டால் வயது கூடுவதைப்பற்றிய கவலை ஏன்? அந்த வயதிலும் உள்ளத்தில் காதல் தோன்றி, மனைவியிடம் கணவனும், கணவனிடம் மனைவியும், நெருக்கமாக வாழத்துவங்குவார்கள். வெகு அந்நியமாக வாழ்ந்து வந்த தம்பதியினர் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மிக அந்யோன்யமாக வாழ ஆரம்பிப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு தம்பதியை நானே சந்தித்துள்ளேன். அவர்களது இந்த மாற்றம் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது குடும்ப சூழ்நிலைகள்தான் காரணம் என்று மனம் விட்டு கூறினார்கள்.
காதல் வயப்பட, வயது ஒரு வரைமுறை அல்ல. மனப் பக்குவம்தான் மிக முக்கியம். புரிந்து கொள்ளுதல், பால் உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட மனம் சார்ந்த உண்மை நேசம், தியாக மனப்பான்மை இவை அனைத்தும் அடங்கிய காதல்தான் உண்மையான காதல்.
உண்மையான காதல் என்றும் ஜெயிக்கும். ஜெயம் என்பது, எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோருடன் போட்டி போட்டு, வெற்றி கொள்வது அல்ல. எவருடைய மனதையும் நோக வைக்காமல், பொறுமையாகக் காத்திருந்து கல்யாணம் செய்து கொள்வதே காதலில் ஜெயம்!
நிரந்தரமான சந்தோஷத்திற்கு காதலும் அதன் வெற்றி மட்டுமே போதாது. காதலுக்கு வெற்றி, கல்யாணம். கல்யாணத்திற்கு வெற்றி... இருவரும் மனம் கலந்து ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டு, விட்டுக் கொடுத்து உயிர் உள்ளவரை சந்தோஷமாக வாழ்வதாகும்.
காதலிக்கும் பொழுது இருந்த அதே அளவு அன்பும், ஆசையும், பாசமும், உயிர் உள்ளவரை நிலைப்பது ஒன்றே நிஜமான காதல்! வாழ்வின் ஓர் முக்கியமான உணர்வு காதல்! காதலர்கள் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக பழகலாம். வாழலாம். ஆனால் ஒருவருக்காக மற்றவரோ அல்லது இருவருமோ தங்கள் உயிரைப் போக்கிக் கொள்ளும் முடிவு எடுப்பது உத்தமம் அல்ல. வாழ்வதற்காக காதலியுங்கள். காதலித்து வாழுங்கள். இதுவே காதலின் வேதம்!
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook