Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

காதல்

rasikkathane azhagu-kadhal

காதல் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல. பூமியில் பிறந்ததும் பெற்ற அன்னையைக் காதலிக்கிறோம். அன்னை அவள் 'இதோ உன் அப்பா' என்று காட்டும் பொழுது தகப்பனைக் காதலிக்கிறோம். உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவைக் காதலிக்கிறோம். நமக்குத் தேவையானவற்றை விரும்புகிறோம். நம்மை சேர்ந்தவர் களைக் காதலிக்கிறோம். ஆரம்பத்தில் நம் தேவைகளை விரும்ப ஆரம்பிக்கிறோம். அதன்பின் விருப்பமானவற்றை தேர்ந்தெடுக்கின்றோம்.

வாழ்க்கையில் பொருட்களை விரும்புகிற நாம்,

நம் உறவுகளை பெரிதும் விரும்புகிறோம். 'அம்மா என்றால் எனக்கு உயிர்' என்கிறோம். 'எனக்கு எங்க அப்பாதான் ரொம்ப பிடிக்கும்' என்கிறோம். இப்படி கூறுவதற்குப் பின்னணி யானது நாம் அவர்கள் மீது கொண்டுள்ள அன்பு.

பெற்றோர் தவிர உடன்பிறப்புகள், மாமா, சித்தி போன்ற உறவுகள் மீது அன்பு வைத்து நேசிக்கிறோம். இந்த அன்பிற்கும் பெயர் காதல். அன்பு என்றால் காதல். காதல் என்றால் அன்பு. காதல் என்பது அன்பைக்குறிக்கும் ஒரு பொதுவான சொல். ஆனால் ஒரு ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புவது மட்டுமே காதல் என்று குறிப்பிடப்படுவது வழக்கமாகி விட்டது.

ஆணிற்கும், பெண்ணிற்கும் இடையே தோன்றும் காதல் பலவிதமானது. கண்டதும் காதல், பேசிப் பழகிய பின் காதல், கல்யாணத்தில் முடியும் காதல், நினைத்தது கை கூடியதும் கைகழுவிவிடும் காதல், காமத்திற்காக மட்டுமே காதல், கல்யாணமாகியபின் மனைவி / கணவன் மீது ஏற்படும் காதல், கருணையினால் ஏற்படும் காதல், பணத்திற்காக வலிந்து உருவாக்கிக் கொள்ளும் காதல், ஜாதி வேறுபட்ட காதல், மதம் மாறுபட்ட காதல், ஓடிப்போகும் காதல், ஒதுங்கி நிற்கும் காதல், போராடும் காதல், கண்ணீரில் நீராடும் காதல், ஜெயித்து நிற்கும் காதல், தோல்வியில் துவண்டுபோன காதல், எதிர்ப்புகள் நிறைந்த காதல், ஆதரவுடன் வளரும் காதல், முளையிலேயே கிள்ளி எறியப்பட்ட காதல். இப்படி... வெவ்வேறு ரூபங்களில் காதல் தன் சுயரூபத்தைக் காட்டுகிறது.

இப்படி..... காதலில் பல விதம் உண்டு. காமம் இல்லாத காதலே கிடையாது. உடல்ரீதியான ஈர்ப்புதான் உள்ளரீதியான காதலை உருவாக்குகிறது. தொட்டுப் பழகும் காதலிலும் உண்மை உண்டு. விரல்நுனி கூட படாமல் பழகும் காதலிலும் உண்மை இருக்கும். உண்மையே இல்லாமல் காதலும் உண்டு.

ஒருத்தியுடன் பழகி, அவளது அழகைப் பருகி, அவளது இளமைப் பருவத்தை ஆசைதீர  அனுபவித்து விட்டு அப்படியே விட்டு விலகிவிடும் காதலும் உண்டு. அன்பு மட்டும் போதும் என்று அளவோடு பழகும் காதல், 'காதலை கல்யாணத்தால்தான் ஜெயிப்பேன்' என்று உறுதி கொள்ளும் காதல்.... இவ்விதம் விதம்விதமான காதல்கள், மனிதரிடையே பரந்துள்ளது.

கண்களால் பேசும் காதல் மெள்ள, வாய்மொழியில் பேச ஆரம்பிக்கும். (காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அது வேறு விஷயம்.) அதன்பின்  காதலை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். எதிர்பார்த்த சந்தர்ப்பம் கிடைத்ததும் தங்கள் காதலை ஒருவருக்கொருவர் வெளிப் படுத்திக் கொள்வார்கள்.

'என் உயிரே நீதான்; என் உலகமும் நீதான்; நீ இன்றி நான் இல்லை. உன்னைப் பார்த்த அந்த வினாடியே எனக்கு உன் மேல் காதல் வந்துருச்சு' இப்படிப்பட்ட வசனங்களைப் பேசி, தங்கள் காதல் செடிக்கு நீரூற்றி வளர்ப்பார்கள். அது வேரூன்றி நின்றதும் கல்யாணம் பற்றிய கவலையும் தங்கள் காதல் பற்றி வீட்டில் எப்படி சொல்வது என்பதைப் பற்றிய பயமும் இவர்களைப் பற்றிக் கொள்ளும். நீண்ட விவாதம் நடக்கும். இருவரும் கலந்து பேசியபிறகு அவரவர் வீட்டில் தெரிவித்தபின் கலகம் பிறக்கும் அல்லது சுமுகமாக முடியும்.

கல்யாணத்தில் முடியும் காதலில் பிரச்சனைகள் கிடையாது. கல்யாணம் முடிந்த பிறகுதான் பிரச்சனைகள் துவங்கும். ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாமையினால் ஏற்படும் பிரச்சனைகள் கல்யாணத்திற்கு பிறகுதான் வெடிக்கும்.

காதலிக்கும் பொழுது  'ஹனி' 'ஹனி' என்று அழைத்த காதலன், கல்யாணத்திற்குப் பின் 'சனி' 'சனி' என்று திட்டுவான்.

காதல் பல யுக்திகளைக் கொண்டது. பொய்களைக்கூட உண்மைகள் போல் நம்ப வைப்பது. 'நீதான் எனக்கு எல்லாம்' என்று பேசி பெண்ணை நம்ப வைப்பது காதலில் ஒரு யுக்தி. இந்தக் காதலில் நேர்மை இல்லை. நம்ப வைத்து அவளது அழகையோ பணத்தையோ அனுபவித்து முடித்தபின் அவளிடமிருந்து நழுவிவிடும் அழுக்கான குணம் கொண்ட ஒருவனது காதல், தந்திரங்கள் நிறைந்தது. இப்படிப்பட்டவனின் காதலில் விழுந்த பெண்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

இவர்களிடம் அவனைப்பற்றிய தகவல்களை கூறி எச்சரித்திருந்தாலும் நம்பியிருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நம்பிக்கைக்கு உரியவனாய் அவளிடம் நாடகம் ஆடி இருப்பான். பின்னாளில் ஏமாந்து நிற்கும் போதுதான் தெரியும் அவனிடம், தான் ஏமாந்து விட்டோம். 'அவன் எச்சரித்தானே... அவள் சொன்னாளே...' என்று மிகவும் தாமதமாக நினைத்துப் பார்ப்பதில் எந்தப்பயனும் இன்றி திருவிழாக்கூட்டத்தில் தொலைந்து போன குழந்தையாய் திசையறியாது நிற்பாள் ஏமாந்து போன பெண்.

கைக்கு எட்டும் வரை கை கோர்த்து  திரிந்து, கைக்கு கிட்டியபின் கைவிட்டுவிட்டு பிரிந்து சென்று விடும் கயவர்களின் சாகஸ வலையில்  மாட்டிக்கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருந்து கொண்டால், வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும்.

'காதல் என்பது எது வரை?....

கல்யாண காலம் வரும் வரை...

கல்யாணம் என்பது எது வரை?...

கழுத்தினில் தாலி விழும் வரை...

கண்ணுக்கு அழகு எது வரை?...

கையில் கிடைக்கும் நாள் வரை...'

காதல் எனும் உணர்வில் உள்ள யதார்த்தத்தைக் கவிஞர் எவ்வளவு எளிமையாக தன் பாடல் வரிகளில் தெளிவாக்கி யுள்ளார்?!

காதலில் தோல்வி அடைந்த சிலர் 'என்னோட காதல் நினைவுகளே எனக்குப் போதும். அந்த நினைவுகள் என் சோகத்திற்கு சுகம் தரும் இதமாகும்' என்று விரக்தியுடன் கூறுவார்கள். இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அந்த நினைவுகள் நீங்கும் விதமாக நெஞ்சில் வேறொரு காதல் புகுந்து கொள்ளுமாயின், பழைய காதல் தோல்வியின் சுவடுகள் கூட அறியாமல் புதிய காதலில் மூழ்கி, மகிழ்ந்து திளைப்பார்கள்.

தோல்வி அடைந்த அனைவருமே இவ்விதம் அல்ல. ஆனால் பெரும்பாலோர் இப்படித்தான். காதலித்தவனை/காதலித்தவளை மட்டுமே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நியதி இருக்குமானால் ஏகப்பட்ட காதலர்கள் கல்யாணமே செய்து கொள்ளாமல் தனித்து வாழ வேண்டுமே?

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version