Lekha Books

A+ A A-

காதல் - Page 3

rasikkathane azhagu-kadhal

'நீ காதலிக்கும் பெண் நம்ம மதம் இல்லை; நம்ம ஜாதி இல்லை. நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகாது.... நாங்க தற்கொலை பண்ணிக்குவோம்; உன்னை தலை முழுகிடுவோம்' என்று பெற்றோர் மறுத்துப் பேசும் பொழுது, தங்கள் பெற்றோர் மற்றும் தங்கைக்காக காதலையும், காதலியையும் தியாகம் செய்து வாழும் மகன்கள்/ மகள்கள் பலர் உள்ளனர்.

இதயத்தில்  இருத்தி ஈருயிர் கலந்த காதலை குடும்பத்தில் இருக்கும் ரத்த உறவுகளுக்காக தியாகம் செய்து வாழும் அவர்களின் உயிர் பிரியும்வரை  அந்தக் காதலை மறக்க இயலாமல் தவிப்புடனேயே தங்கள் வாழ்நாட்களைக் கடத்துவார்கள். காதலை விட்டுக் கொடுத்த மகனுக்கு தங்கள் விருப்பப்படி ஒரு திருமணமும் செய்து வைத்து ஏதோ சாதித்து விட்டதாக எண்ணி பெற்றோர், சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருக்க, மனைவி எனும் ஸ்தானத்திற்கு வந்தவளிடம் கடந்த கால காதலை சொல்லாமல் மூடி மறைத்துக் கொண்டு சஞ்சலத்துடன் சோக வலையில் வீழ்ந்து கொண்டிருப்பான் மகன். மகனது தியாகம் அவர்களுக்கு லாபம். மகனுக்கோ..... அது துன்பமெனும் ஓடம்!

காதலை தியாகம் செய்வது ஆணோ.... பெண்ணோ.... அவர்களது மனதில் ஆழ்ந்து போன அந்தக் காதல் நினைவுகள், ஆயுட்காலம் வரை இதயத்தை சூழ்ந்திருக்கும். வேறொருவரை. கைப்பிடித்து, பேரன், பேத்தி, என்று குடும்பம் பெருகியபின்னும் அந்தக் காதலின் ஞாபகங்கள் அவனது / அவளது இதயத்தைப் பிடித்து உலுக்கியபடியே இருக்கும். காதல் என்பது மதம் பார்த்து வருவதல்ல. மனம் பார்த்து வருவது.

ஜாதியையும், மதத்தையும் உருவாக்கிய மனிதன், அதனாலேயே சிலவற்றை இழக்கிறான். இன்றைய கால கட்டத்தில், கலப்பு திருமணங்கள் பெருகி விட்ட முன்னேற்ற  நிலை ஒரு பக்கம் இருக்க, இன்னமும் பல குடும்பங்கள் ஜாதி, மத பேதத்தினால் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் பொழுது, அவர்களுக்கு உதவி செய்ய யாரும் முன் வருவதில்லை. எந்த உதவியும் இன்றி, எவர் தயவும் இன்றி கஷ்டப்பட நேரிடுகின்றது. காதலிக்கும் பொழுது இருந்த தைரியமும், திடமும் கல்யாணமான பின் ஏற்படும் கஷ்டங்களில் காணாமல் போய்விடுகிறது. காதலில் இது ஒரு பரிமாணம்!

பெற்றோர் பார்த்து தோந்தெடுத்து செய்து வைத்து திருமணத்தில் பிரச்சனைகள் வந்தால், அந்த பிரச்சனை களுக்குரிய தீர்வை செய்ய பெற்றோர் முன்வருவார்கள். பெற்றோரை எதிர்த்து செய்து கொள்ளும் காதல் திருமணத்திற்கு அங்கீகாரமும் இருக்காது. அரவணைப்பும் இருக்காது. வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட வைக்கும் காதல் இது.

 ஒருத்தி, ஒருவனை நினைத்துவிட்டு குடும்ப சூழ்நிலைகளால் அவனை மறக்க நேரிட்டு,  இன்னொருவனை மணக்க நேரிடும் இக்கட்டான சூழ்நிலையில் அவளது மனம் படும் பாடு சொல்லில் விவரிக்க இயலாதது. கடந்த கால நினைவுகளை முழுவதுமாக மறந்து, வாழவும் முடியாமல் அதையே நினைத்து சாகவும் முடியாமல் இருதலை கொள்ளி எறும்பாகத் துடிக்கும் அவளது பெண்மனம். வேறொருவன் கணவனாக வந்தபின் காதலித்தவனை நினைக்கும் குற்ற உணர்வில் தவிப்பாள். மறக்க முடியாத மனதை உருவாக்கும் சக்தி நிறைந்தது காதல்!

காதல் வயப்பட்டவர்கள், தங்களை மேம்படுத்திக் கொள்ள விழைவார்கள். காதலியை மனைவியாக்கிய பிறகு அவள் கஷ்டப்படாமல் வாழ்வதற்குரிய வழிமுறைகளை அறிவதிலும், அதன்படி செயல்படுவதிலும் நாட்டம் கொள்வார்கள். காதலனுக்கு ஒரு லட்சியம் இருந்தால் அந்த லட்சியம் நிறைவேற காதலி, அவனுக்காக பாடு படுவாள், நடைமுறை வாழ்க்கை பற்றி சிந்தித்து செயல்படும் காதலும் உண்டு; அதைப்பற்றி கவலையே படாத கண்மூடித்தனமான காதலும் உண்டு.

'அவளை அடைந்தே திருவேன்' என்று காதலே இல்லாத காமம் மட்டுமே நிறைந்த வெறித்தனமான காதலும் உண்டு.  உண்மையான காதல் உலகை வெல்ல வைக்கும். பொய்யான காதல் உயிரைக் கொல்ல வைக்கும். காதலுக்காக தங்கள் ராஜ்யத்தையே இழந்த பழம் பெரும் மன்னர்களின் காதல் வரலாறுகள் உள்ளன. காதலுக்காக தாஜ்மஹால் எனும் அடையாளச் சின்னம் எழுப்பிய ஷாஜஹான் மன்னன் பெயரை இன்னமும் கூறிக் கொண்டிருக்கிறோம்.

அவர் எழுப்பிய அந்தக் காதல் மாளிகை உலக அதிசயங்களுள் ஒன்றாகத் திகழ்வதையும் அறிகிறோம். சரித்திரக்காலம் தொட்டு இன்றைய காலம் வரை காதல் எனும் உணர்வு மனிதர்களின் மனங்களை ஆட்டி வைக்கும் சக்தி வாய்ந்தது. காதல் ஏழைகளுக்கு வரலாம். ஆனால் கோழைகளுக்கு வரக்கூடாது.

 செல்வந்தர்களின் காதல் செல்லாக் காசாகும் நிலைமையும் உண்டு. வறுமைக் கோட்டிற்குள் வாடுபவர்களின் காதல், வளமாவதும் உண்டு. இதற்கு காதலின் உள்நோக்கம் காதலாக மட்டுமே இருக்க வேண்டும்.

'காதல் போயின் சாதல்' என்றார் பாரதி. அது அந்தக் காலம்! காதல் போயின் இன்னொரு காதல்!.... இது இந்தக் காலம்.

நிம்மதியைத் தருவதும் காதல். அதைத் தொலைப்பதும் காதல். சந்தோஷத்தை அள்ளித் தருவதும் காதல். அதே சந்தோஷத்தை கிள்ளி எறிவதும் காதல்! கண்களால் பேச வைப்பதும் காதல்! அதே கண்களை கண்ணீரால் நனைப்பதும் காதல் ! காதலுக்கு தூது போன நபரே, அந்தக் காதல் அழிவதற்குக் காரணமாக இருப்பதும் நடக்கின்றது. 'கொலையும் செய்வாள் காதலி' என்று நம்ப வைத்த சம்பவம் சமீபத்தில் நடந்த ஒரு கொலைக்குற்றம்.

சமீபத்தில் விஜய் டி.வியில் வெளிவரும் நீயா? நானா? நிகழ்ச்சியில் காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்கள், தங்கள் சுற்றம், சொந்த பந்தம், உறவினர்களின் அன்பும் ஆதரவும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக வேதனையுடன் கூறினார்கள். இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணம் ஜாதி, மத பேதம். இன்றைய மாறிவிட்ட நவநாகரீக யுகத்திலும் கூட ஜாதி, மத பேதம் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை ஆதங்கத்துடன் இந்நிகழ்ச்சியில் வெளியிட்டனர். இவர்களுள் ஒரு ஜோடி கூறிய தகவல் என்னை மிகவும் பாதித்தது. பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகன் இருப்பதாகவும், அவன் 'என் கூட படிக்கும் பையன்கள் எல்லோருக்கும் தாத்தா பாட்டி இருக்காங்க, எனக்கு மட்டும் ஏன் இல்லை?' என்று கேட்பதாக அவர்கள் கூறிய தகவல் மிகவும் வேதனை அளிப்பதாக இருந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel