Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

பாஷு, தி லிட்டில் ஸ்ட்ரேஞ்சர்

Bashu, the Little Stranger

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

பாஷு, தி லிட்டில் ஸ்ட்ரேஞ்சர் - Bashu, the Little Stranger

(ஈரானிய திரைப்படம்)

1989ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஈரானிய திரைப்படம். பாரசீக மொழியில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் ஈரானின் வடக்கு பகுதிகளில் பேசப்படும் Gilaki என்ற மொழியும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பாரசீக மொழியில் வெளியாகும் 'Picture World' என்ற திரைப்படங்களுக்கான பத்திரிகையால் 'Best Iranian Film of all time' என்ற விருதை இப்படம் 1999 ஆம் ஆண்டில் பெற்றது. ஈரானைச் சேர்ந்த 150 விமர்சகர்களும், தொழில் வல்லுநர்களும் இந்த விருதுக்காக 'Bashu, the Little Stranger' படத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

Bahram Beizai இப்படத்தின் இயக்குநர். படத்தின் திரைக்கதையையும் அவரே எழுதியிருக்கிறார்.

Bashu என்ற 10 வயது சிறுவனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமிது.

ஈரானின் தெற்கு பகுதியில் இருக்கும் ஊர் Khuzestan. மிகவும் வறட்சி நிறைந்த பாலைவனத்தைப் போன்ற பகுதி அது. படத்தின் ஆரம்ப காட்சியில் அந்த ஊரிலிருக்கும் கட்டிடங்களின் மீது குண்டுகள் போடப்படுகின்றன. ஒவ்வொரு கட்டிடங்களாக இடிந்து விழுகின்றன. ஏராளமான வீடுகள் துண்டு துண்டாக சிதறுகின்றன. வானத்தில் பறந்து கொண்டிருக்கும் ஈராக்கிற்குச் சொந்தமான போர் விமானங்கள் அந்தப் பகுதியைச் சிறிது கூட விட்டு வைக்கவில்லை. மனித உயிர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் மேலே இருந்து குண்டு மழையைப் பொழிய வைக்கின்றன. மனிதர்கள் உடலில் நெருப்பு பற்றி, பயந்து ஓடுகிறார்கள் எங்கு பார்த்தாலும் ஒரே புகை மண்டலம்... சாம்பல் நிறத்தில் புகை வெட்ட வெளியை நிரப்பிக் கொண்டிருக்கிறது. போரின் அவலம் பார்க்கும் இடங்களிலெல்லாம் தெரிகிறது.

மனித நடமாட்டமே இல்லாத ஒரு சிறிய பாதையில், குண்டுகள் வெடித்து பரவியிருக்கும் புகை மண்டலத்திற்கு மத்தியில் ஒரு பழைய ட்ரக் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. அதை ஒரு இடத்தில் நிறுத்தும் இளைஞனான ஓட்டுநர், கீழே இறங்கி டயர்கள் சரியாக இருக்கின்றனவா என்று கையால் தட்டிப் பார்க்கிறான். அப்போது ஒரு 10 வயது சிறுவன் (அவன்தான் பாஷு) சோளக் கதிர்களுக்கு மத்தியிலிருந்து வருகிறான். அரைக்கால் சட்டையும், சிவப்பு நிற சட்டையும் அணிந்திருக்கும் அவன் பரட்டைத் தலையுடன் இருக்கிறான். முகத்தில் கவலை, பதைபதைப்பு, பயம், பரபரப்பு அனைத்தும் நிறைந்திருக்கின்றன.

கறுத்துப் போய் காணப்படும் அந்தச் சிறுவன் ஓட்டுநருக்குத் தெரியாமல் ட்ரக்கின் பின் பகுதியில் ஏறி, அங்கிருக்கும் பொருட்களுக்கு மத்தியில் தன்னை மறைத்துக் கொள்கிறான். பையன் ஏறியதைப் பார்க்காத ஓட்டுநர், ட்ரக்கைக் கிளப்புகிறான்.

ட்ரக் செழிப்பே சிறிதும் இல்லாத, பாலைவனத்தைப் போன்று வறண்டு கிடக்கும் மலைப் பகுதியிலும், சமவெளியிலும் பயணித்து போய்க் கொண்டிருக்கிறது. ஒரு இடத்தில் ட்ரக் நிற்கிறது. அதிலிருந்து இறங்கிய ஓட்டுநர் ஓரத்திலிருந்த ஒரு காபி கடையில், காலை உணவாக ரொட்டி வாங்கி சாப்பிடுகிறான்.

அப்போது பின் பக்கத்திலிருந்து எழுந்த சிறுவன் பாஷு, தார்ப்பாயை நீக்கி பார்க்கிறான். ஆள் நடமாட்டமில்லாத ஒரு இடத்தில் ட்ரக் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கும் அவன் அதிலிருந்து கீழே இறங்குகிறான். அப்போது ஒரு வெடிச் சத்தம் கேட்கிறது. அவ்வளவுதான்- பயந்து, நடுங்கும் சிறுவன் மனம் போன படி ஓடுகிறான். காபி கடைக்காரர் ஓட்டுநரிடம் உரையாடுவதிலிருந்து அந்த வெடிச் சத்தம், சுரங்கம் அமைக்கும் வேலை நடைபெறும் இடத்திலிருந்து வருகிறது என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம்.

ஈராக் விமானங்களின் குண்டுச் சத்தங்களை மட்டுமே தொடர்ந்து கேட்டு வாழ்ந்த சிறுவன் பாஷு, அதையும் போர் விமானங்கள் போடும் குண்டு முழக்கம் என்று தவறுதலாக நினைத்து ஓடுகிறான். புதர்கள், செடிகள், வயல்கள் என்று சிறுவன் ஓடிக் கொண்டே இருக்கிறான்.

இறுதியில் சோளக் கதிர்கள் வளர்ந்து நிற்கும் ஒரு வயலுக்குள் அவன் மறைந்து நிற்கிறான். வயலில் ஒரு சிறுவனும், சிறுமியும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சோளக் கதிர்களுக்குள் மறைந்து நின்று கொண்டிருக்கும் சிறுவன் பாஷுவைப் பார்த்து விடுகிறார்கள். அவ்வளவுதான்- பயந்து போய் தங்களுடைய தாயிடம் போய் விஷயத்தைக் கூறுகிறார்கள். சோளக் காட்டிற்கு நடுவில் இருக்கும் வீட்டிலிருந்து வேகமாக வருகிறாள் அந்தச் சிறார்களின் அன்னை Nai.

அவள் தன் பிள்ளைகளுடன் அருகில் வர, சிறுவன் பாஷு பயந்து, வரப்பின் வழியாகவும், சோளக் கதிர்களுக்கு மத்தியிலும், நெற் கதிர்களுக்கு நடுவிலும் வேகமாக ஓடுகிறான். அவனை Nai விரட்டுகிறாள். ஆனால், அவனோ பிடி கொடுக்காமல் ஓடுகிறான்.

இப்போது - தன் மகனையும், மகளையும் அழைத்து, தன் கையிலிருந்த துணி பொட்டலத்தைத் திறந்து கோதுமை ரொட்டியை எடுத்து அவர்களுக்குச் சாப்பிட தருகிறாள் Nai. பிள்ளைகள் சாப்பிட, அதையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் அந்த அன்னை. அவள் மட்டுமல்ல- அவர்கள் சாப்பிடுவதை சற்று தூரத்தில் நின்று கொண்டு பாஷுவும் பார்க்கிறான். 'யார் இந்த கறுத்த பையன்? எங்கிருந்து வந்தான் இவன்?' என்ற குழப்பத்துடன் இருக்கும் Nai, அவனை அருகில் வருமாறு அழைக்கிறாள். ஆனால், அவனோ எதுவும் பேசாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறான். அவனிடம் ரொட்டியைக் காட்டி 'வா... இதைச் சாப்பிடு' என்கிறாள் Nai. ஆனால் அவனோ பயத்துடன் இருப்பதால் அருகிலேயே வராமல் அங்கேயே நின்று கொண்டிருக்கிறான்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version