
என்ன செய்வதென்று தெரியாமல், அங்கிருந்து தன் பிள்ளைகளுடன் கிளம்புகிறாள் Nai., போவதற்கு முன்பு தன் கையிலிருந்த கோதுமை ரொட்டியை அங்கிருக்கும் ஒரு கழியின் உச்சியில் வைத்து விட்டுச் செல்கிறாள்- சிறுவன் பாஷுவிற்காகத்தான். அவர்கள் எல்லோரும் அங்கிருந்து கிளம்பிய பிறகு பாஷு மெதுவாக அருகில் வந்து, அந்த ரொட்டியை வேக வேகமாக சாப்பிடுகிறான். பாவம்- அவனுக்குத்தான் எவ்வளவு பசி இருக்கும்!
இரவு நேரம்- சுற்றிலும் இருட்டு. வீட்டிற்குச் சற்று தள்ளி சிறுவன் பாஷு நின்று கொண்டிருக்கிறான். அவனை அருகில் வரும்படி அழைக்கிறாள் Nai. ஆனால் அவனோ பயத்தில் வர மறுக்கிறான். அவனை அவள் அருகில் போய் அழைக்க, அவன் தப்பித்து ஓடுகிறான். அவளும் விடுவதாக இல்லை. விரட்டுகிறாள். இறுதியில் அகிலிருந்த ஷெட்டிற்குள் நுழைகிறான். அவ்வளவுதான்- கதவை இழுத்து மூடி விடுகிறாள் Nai. சிறுவன் உள்ளே இருந்தவாறு கதவைத் தட்டுகிறான். ஆனால், அவள் அதைத் திறக்கவில்லை.
நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. Nai தன் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, வெளியே உணவுடன் வருகிறாள். ஷெட் கதவைத் திறக்கிறாள். சிறுவன் உள்ளேதான் இருக்கிறான். சற்று தூரத்தில் தட்டில் கொண்டு வந்த உணவை வைக்கிறாள். பின்னர் ஒரு குவளையில் நீரும் கொண்டு வந்து வைக்கிறாள்.
அவள் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு, பாஷு ஷெட்டை விட்டு வெளியே வந்து, Nai வைத்து விட்டுச் சென்ற உணவைச் சாப்பிடுகிறான். நீரைப் பருகுகிறான்- வெறித் தனமாக.
அந்தந்த வேளைக்கு சாப்பாடு கொண்டு வந்து வைப்பதும், அதை பாஷு சிறிது நேரத்திற்குப் பிறகு வந்து சாப்பிடுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாஷுக்கு மட்டுமல்ல- வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகளுக்கும் கூட Nai இரை வைக்கிறாள். உயிர்களை நேசிக்கும் அன்பு இதயத்திற்குச் சொந்தக்காரி அவள்.
அவனை எங்கிருந்தோ வந்திருக்கும் கறுப்பு சிறுவன் என்று ஆரம்பத்தில் நினைக்கும் Nai, படிப்படியாக அவன் மீது அன்பு செலுத்த ஆரம்பிக்கிறாள். ஆரம்பத்தில் Naiஐயும், பிள்ளைகளையும் பார்த்து, பயந்த பாஷு இப்போது தன்னை மாற்றிக் கொள்கிறான். சிறிது சிறிதாக அவர்களிடம் அவன் நெருங்கி வருகிறான்.
'உன் பெயர் என்ன?' என்று கேட்கிறாள்- தான் பேசும் Gilaki மொழியில் Nai. பாஷுக்கு அவள் என்ன கேட்கிறாள் என்பது தெரியவில்லை. அப்போது 'என் பெயர் Nai' என்று இருமுறை கூறுகிறாள். அதைத் தொடர்ந்து அவன் தன் பெயர் 'Bashu' என்று கூறுகிறான். அவன் பேசும் Arabic மொழி அவளுக்குப் புரியவில்லை. அவள் பேசும் 'Gilaki' மொழி அவனுக்குப் புரியவில்லை.
அப்போது வானத்தில் பறந்து கொண்டிருக்கும் ஜெட் விமானத்தின் சத்தத்தைக் கேட்டு பதறி ஓடுகிறான் பாஷு. தன்னுடைய ஊரில் ஈராக் போர் விமானங்கள் வீசிய குண்டுகளின் சத்தம், அவனிடம் உண்டாக்கியிருக்கும் விளைவு அது. எந்த பலத்த சத்தத்தைக் கேட்டாலும், அவனுக்கு குண்டு போடும் சத்தமாகவே கேட்கிறது. பாவம்... அந்தச் சிறுவன்!
அவனை விரட்டிப் பிடிக்கும் Nai, அவன் ஓடியதற்கான காரணத்தைக் கேட்கிறாள். அவன் கூறும் வார்த்தைகளிலிருந்தும், காட்டும் சைகைகளிலிருந்தம் அவன் போரின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவன் என்பதையும், அவனுடைய தாய், தந்தை இருவருமே குண்டுகளின் பாதிப்பால் இறந்து விட்டார்கள் என்பதையும், அவர்களுடைய வீடு குண்டு விழுந்து நெருப்புக்கு இரையாகி விட்டது என்பதையும், அவனுக்கென்று உலகத்தில் யாருமே இல்லை என்பதையும், அனாதையான அவன் ட்ரக்கில் ஏறி ஊரிலிருந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறான் என்பதையும் அவள் தெரிந்து கொள்கிறாள்.
அவ்வளவுதான்- அவன் மீது அவளுக்கு அளவற்ற பாசம் உண்டாகிறது. தன் பிள்ளைகளுடன், இன்னொரு பிள்ளையாக அவனை வைத்துக் கொள்ள அவள் தீர்மானிக்கிறாள்.
தன் பிள்ளைகளுடன் அவள் கடைத் தெருவிற்குச் செல்கிறாள். அப்போது அவர்களுக்குப் பின்னால், பாஷுவும் ஓடி வருகிறான். கடையில் வீட்டிற்குத் தேவையான பல பொருட்களையும் வாங்கும் Nai, இரண்டு சோப்புகளை வாங்குகிறாள். அவற்றில் ஒரு சோப் பாஷுவிற்கு. கடைக்காரன் 'பையன் என்ன இந்த அளவிற்கு கறுப்பாக இருக்கிறானே!' என்று சொல்ல, 'சோப் போட்டால் சரியாகி விடுவான்' என்று கூறுகிறாள் Nai.
தன் பிள்ளைகளை தன்னுடைய வீட்டிற்கு அருகில் 'சளசள'த்து ஓடிக் கொண்டிருக்கும் வாய்க்காலில் குளிப்பாட்டுகிறாள் Nai, பாஷுவையும் குளிப்பாட்டுவதற்கு முயற்சிக்கிறாள். ஆனால், அவனோ வாய்க்காலில் இறங்க மறுக்கிறான். ஆனால், Nai விடுவதாக இல்லை. அவனை வலிய இழுத்துச் சென்று, வாய்க்காலில் இறக்கி, குளிக்க வைக்கிறாள். அவனுக்கு அவளே சோப் போட்டு விடுகிறாள். அப்போதும் அவன் வெள்ளை நிறத்திற்கு மாறுவதாக இல்லை. கறுப்பாகத்தான் இருக்கிறான். குண்டுகள் விழுந்து எழுந்த புகைப் படலம்தான் அவன் மீது ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று இதுவரை அவள் நினைத்திருந்தாள். ஆனால், அவனுடைய நிறமே அதுதான் என்பதைப் பார்த்ததும், அவளுக்கு ஏமாற்றமாகிறது.
பாஷுக்கு வீட்டிலிருந்த ஒரு சட்டையைக் கொடுத்து, அதை அணியும்படி அவனிடம் கூறுகிறாள் Nai. தன் அளவை விட சற்று பெரிதாக இருக்கும் அந்தச் சட்டையை அணிந்து கொண்டு, சிரித்துக் கொண்டே ஓடுகிறான் பாஷு.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook