யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4959
அவளுடைய முகத்திலிருந்த கம்பீரத் தன்மை மறைந்து போனது. பூமியில் பார்க்க முடியாத ஒரு அழகு அவளுடைய கண்களில் நிறைந்து நின்றது.
'ரவி... நான் போகட்டுமா? எங்களுடைய திருமணத்திற்கு வருவீர்களா?'- அவளுடைய குரல் மீண்டும் இசையைப் போல ஒலித்தது.
சிலை பேசவில்லை. அசையவுமில்லை.
அவள் பின்னால் திரும்பி ஒரு அடி முன்னோக்கி வைத்தாள். திடீரென்று அவள் மீண்டும் திரும்பினாள்.
'இன்னொரு முறை... இன்னொரு முறை...'- ஆவேசத்துடன் சிலையை கட்டிப் பிடித்தாள்.
'இன்னொரு முறை... இன்னொரு முறை...'- அவள் அவளுடைய முகம் நெருங்கியது. அவர்களுடைய உதடுகள் ஒன்று சேர்ந்தன.
திடீரென்று அவள் பிடியை விட்டாள். ஓசையை உண்டாக்கிக் கொண்டு அவள் அறையை விட்டு ஓடினாள்.
சிலை அசைந்தது. அவன் கதவை நோக்கி நடந்தான்.
பூச்செடிகளுக்கு மத்தியில் யமுனை ஓடிக் கொண்டிருந்தது. அந்த நதி கேட்டைக் கடந்து சாலையின் ஓரத்தில் மெதுவாக... மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது. அவ்வாறு ஓடி... ஓடி... அந்த நதி சாலையின் திருப்பத்தில் மறைந்தது.
'யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது'- ரவி முணுமுணுத்தான். அவன் இருட்டையே வெறித்து பார்த்தான். சிறிது நேரம் அதே இடத்தில் நின்று விட்டு, அவன் கதவை அடைத்து தாழ்ப்பாள் போட்டான். அவன் சாளரத்தின் அருகில் வந்து நின்றான்.
அவனுடைய உதடுகள் ஈரமாக இருப்பதைப் போன்ற ஒரு தோணல்... அவன் தன் பாக்கெட்டிற்குள்ளிருந்து கைக் குட்டையை எடுத்தான். உதடுகளை அழுத்தி துடைத்து விட்டு, அவன் கைக் குட்டையை பிரித்து பார்த்தான். மீண்டும் உதடுகளை அழுத்தித் துடைத்தான். கைக்குட்டையைச் சுருட்டி, கம்பிகளுக்கு இடையிலிருந்த இடைவெளிகளின் மூலமாக வெளியே வீசியெறிந்தான்.
அவன் தூரத்தை நோக்கி பார்த்தான். எதையும் பார்க்க முடியவில்லை. அவனுடைய கண்களில் கண்ணீர் நிறைந்து நின்றிருந்தது. அவன் தன் பாக்கெட்டிற்குள் கையை விட்டான். அங்கு கைக்குட்டை இல்லை.
நிறைந்து நின்றிருந்த கண்ணீர், கன்னங்களின் வழியாக வழிந்தது. கண்கள் தெளிந்தன. அவன் தூரத்தை நோக்கி பார்த்தான். கரும் நீலம், எல்லையற்ற சுத்த நீலத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தது.
கவிஞன் புன்னகைத்தான்- சோகம் நிறைந்த ஒரு புன்னகை!
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,