Lekha Books

A+ A A-

யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது - Page 2

Yamunai ore sindhanaiyudan odik kondirukkiradhu

மது நல்ல வசதி படைத்தவன். இளைஞன். நல்ல உடல் நலத்தைக் கொண்டவன். அழகான தோற்றத்தைக் கொண்டவன். அவன் அவளுக்காக படைக்கப்பட்டவன் என்று தோன்றும். அவள் அவனுக்கென்றே என்றும்.

அவர்களுடைய தந்தைகளும் தாய்களும் ஒருவரோடொருவர் கலந்தாலோசித்தார்கள். திருமண நிச்சயமும் செய்யப்பட்டு விட்டது.

அந்தத் தகவல் கல்லூரியில் பரவியது. யாருக்கும் ஆச்சரியம் உண்டாகவில்லை. அவர்களுடைய காதல் வெற்றி பெற்றதற்காக நண்பர்களும் பேராசிரியர்களும் அவர்களை வாழ்த்தினார்கள். எல்லோரும் அந்த கவிதையைப் பாடினார்கள்- 'யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.'

தேர்வு முடிவடைந்தது. வெற்றி பற்றிய எதிர்பார்ப்புகளுடனும், தோல்வியைப் பற்றிய கவலைகளுடனும் நூறு... நூறு நினைவுகளுடனும் ஒவ்வொருவராக அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தார்கள்.

ரவிக்கும் ஏராளமான நினைவுகள் இருந்தன-  இனிக்கக் கூடியதும், கசக்கக் கூடியதுமான நினைவுகள்! சிரிக்க வைக்கக் கூடியதும், அழ வைக்கக் கூடியதுமான நினைவுகள்!

சோகம் நிறைந்த ஒரு பாடலின் பல்லவியைச் சீட்டியடித்தவாறு, ரவி பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான். புத்தகங்களையும் ஆடைகளையும் ட்ரங்க் பெட்டிக்குள் வைத்தான். படுக்கையைக் கட்டி வைத்தான். எதையோ மறந்து விட்டதைப் போன்ற ஒரு தோணல்!

அவன் சாளரத்தின் அருகில் போய் நின்றான்.

தூரத்தில்... கரும் நீல நிறத்தில் கிழக்கு திசையிலிருக்கும் மலைகள், நீல நிறத்தில் நிர்மலமாக இருந்த வானத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தன. அந்த கரும் நீலத்திற்கும் எல்லையற்ற முழு நீல நிறத்திற்குமிடையே இருந்த காதல் உறவை கூர்ந்து பார்த்தவாறு ரவி எந்தவித அசைவும் இல்லாமல் நின்று கொண்டிருந்தான்.

அடைக்கப்பட்டிருந்த கதவில் மெதுவாக ஒரு தட்டும் சத்தம்!- தொடர்ந்து மூன்று நான்கு முறை தட்டல்கள்! ரவி மெதுவாக கதவின் அருகில் சென்று, திறந்தான். அவன் சற்று அதிர்ச்சியடைந்தான்.

'யாரு?'- அவனுடைய இதயம் வாய்க்கு வந்து விட்டது. 'யமுனா!'- கனவு காண்பதைப் போல அவன் முணுமுணுத்தான்.

அவன் பின்னோக்கி நடந்தான். அவன் சாளரத்தின் அருகில் சென்று நின்றான்.

'யமுனா!... யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது....'- அவன் அதற்குப் பிறகும் முணுமுணுத்தான்.

அவள் அறைக்குள் வந்தாள். அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில் வியர்வை அரும்பி விட்டிருந்தது. கட்டி வைத்திருந்த தலைமுடி அவிழ ஆரம்பித்திருந்தது.

உள்ளங்கையால் வியர்வையைத் துடைத்து விட்டு, தலை முடிகளை விலக்கி விட்டு அவள் ஊன்று கோலைப் போல மேஜையில் கையை ஊன்றி நின்றிருந்தாள். கனவுகள் நிறைந்த அந்த கண்கள், பூமியில் காண முடியாத அழகை வெளிக்காட்டுவதைப் போல மலர்ந்தன. அடக்கி வைக்கப்பட்ட புன்னகை, சற்று விலகியிருந்த அதரங்களுக்கு இடையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

'யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது'- கனவில் இருப்பதைப் போல ரவி மீண்டும் முணுமுணுத்தான்.

யமுனா முகத்தை உயர்த்தினாள். அந்த நதியில் பாடல் முணுமுணுப்பாக கேட்டது.

'அப்படி ஓடி... ஓடி  அந்த நதி... இதோ, கடலின் அலைகளுடன் கலப்பதற்காக காத்து நின்று கொண்டிருக்கிறது.'- அவள் நீண்ட பெருமூச்சை விட்டாள். அவளுடைய அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருந்த கூந்தல், பின் பகுதிக்குக் கீழே வட்டங்கள் உண்டாக்கியது.

சாளரத்தின் கம்பியை இறுக பிடித்துக் கொண்டு ரவி சொன்னான்:

'நதியையும் கடலையும் நான் வாழ்த்துகிறேன்.'

யமுனா நெற்றியைச் சுளித்தாள். அவள் தெளிவான குரலில் சொன்னாள்:

'நான் இங்கே வந்திருப்பது வாழ்த்து வாங்குவதற்காக அல்ல.'

'கடலின் அலைகளுடன் கலப்பதற்கு... மதுவின் கைகளுக்குள் நிம்மதி தேடுவதற்கு... அப்படித்தானே?'- அவன் புன்னகைத்தான். வருத்தப்படுகிற குரலில் அவன் தொடர்ந்து சொன்னான்:

'ஆனால், இப்போது மது இங்கே இல்லை.'

'அதனால்தான் நான் இங்கே வந்தேன்'- அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

ரவியின் சரீரம் நடுங்கியது. அவன் முணுமுணுத்தான்:

'யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.'

'கடலை நோக்கி...! கடலின் அலைகளை நோக்கி...'- ஆர்வத்துடன் அவள் ரவிக்கு நேராக முகத்தை உயர்த்தினாள்.

'இந்த சிறிய அறையில்...'- ரவி பாதியில் முடித்துக் கொண்டான். அவன் சாளரத்தின் கம்பியை இறுக பற்றிக் கொண்டான்.

'ஆமாம்... இந்தச் சிறிய அறையில் கடல், அலைகளைக் கொண்டு மோதிக் கொண்டிருக்கிறது'- அவள் பதிலுக்கு கூறினாள். திடீரென்று முகத்தைக் குனிய வைத்துக் கொண்டு, ரவியை ஓடக் கண்ணால் பார்த்துக் கொண்டே அவள் தொடர்ந்து சொன்னாள்:

'கடலின் அலைகளுடன் கலப்பதற்கு... அந்த கைகளுக்குள்...'- அவளுக்கு மூச்சு விட முடியவில்லை.

'யமுனா!'? ரவியின் தொண்டை தடுமாறியது. அவனுடைய பாதங்கள் முன்னோக்கி நகர்ந்தன. ஆனால், சாளரத்தின் கம்பியிலிருந்து அந்த பிடியை விடவேயில்லை.

'ரவி...!'- அவளுடைய குரலில் பதற்றம் இருந்தது.

ஒரு மின்னல்! அவள் ரவியின் கைகளுக்குள் இருந்தாள். நதி கடலின் அலைகளுடன் கலந்தது.

ஒரு பேரமைதி! ஒரு அசைவற்ற நிலை!

அவர்களுடைய முகங்கள் நெருங்கின. அவளுடைய மூச்சுக் காற்றின் வாசனையை அவன் சுவாசித்தான். அவர்களுடைய உதடுகள் ஒன்று சேர்ந்தன.

அவள் புன்னகைத்தாள்- திரையை விட்டு வெளியே வந்த நிலவின் பிரகாசம்!

அவன் புன்னகைக்கவில்லை. அவனுடைய முகம் சுருங்கிப் போய் காணப்பட்டது.

அவர்கள் விலகினார்கள்- அவள் மேஜையின் அருகிலும், அவன் சாளரத்தை நோக்கியும்.

அவளுடைய கண்களில் முழுமையான திருப்தி தெரிந்தது. அந்த கண்களின் கனவு வயப்பட்ட தன்மை மாறி விட்டது. சாதாரணமான ஒரு பிரகாசம்! அவை வெற்றியை வெளிப்படுத்தும் அடையாளக் கொடிகள்!

'ரவி!'- அவளுடைய மணி ஒலிப்பதைப் போன்ற குரல் அந்த பேரமைதியைக் கலைத்தது.

அவன் அதை காதிலேயே வாங்கவில்லை. அந்தச் சாளரத்தின் கம்பிகள் வழியாக எங்கோ தூரத்தைப் பார்த்துக் கொண்டு, எந்தவித அசைவுமில்லாமல் நின்று கொண்டிருந்தான். கிழக்கு திசையிலிருந்த மலைகள் வானத்தின் விளிம்பைத் தொட்டுக் கொண்டிருந்தன. கரும் நீலம் எல்லையற்ற முழு நீலத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தது.

அவளுடைய மணி ஒலிப்பதைப் போன்ற குரல் மீண்டும் அந்த பேரமைதியைக் கிழித்தது: 'எங்களுடைய திருமணத்திற்கு நான் உங்களை அழைக்கிறேன்.'

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel