Lekha Books

A+ A A-

யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது - Page 3

Yamunai ore sindhanaiyudan odik kondirukkiradhu

ரவி அதிர்ச்சியடைந்து திரும்பிப் பார்த்தான். அவளுடைய முகத்தில் சாந்தமும் உறுதித் தன்மையும் வெளிப்பட்டன. அவிழ்ந்து பறந்து கொண்டிருந்த தலைமுடியை பத்திரமாக பின்னால் கட்டிப் போட்ட அவள் தொடர்ந்து சொன்னாள்: 'எங்களுடைய திருமணத்திற்கு நீங்கள் வர வேண்டும். உங்கள் முன்னிலையில் நான் அவருடைய மனைவியாக ஆக வேண்டும்.'

ஒரு தாங்க முடியாத குளிர்! மரத்துப் போகச் செய்யும் ஒரு குளிர் அந்த அறை முழுவதும் பரவியது. ரவி எந்தவித அசைவுமில்லாமல் நின்றிருந்தான். அவன் அந்த குளிர்ச்சியில் மரத்துப் போனான். அவன் ஒரு சிலையைப் போல ஆகி விட்டான்.

'வரணும்... வருவீர்களா?'- அவள் உறுதியான குரலில் கேட்டாள்.

சிலையின் உதடுகள் அசைந்தன.

'அந்த... அந்தச் சம்பவத்திற்குப் பிறகா?'

'ஆமாம்...'- அவளுடைய குரலில் இருந்த உறுதித் தன்மை அதிகரித்தது. அவள் கட்டளை இடுவதைப் போல கூறினாள்: 'ஆமாம்... அந்தச் சம்பவத்திற்குப் பிறகு!- இந்த நதி அந்த கடலின் அலைகளுடன் கலந்த பிறகு!- உங்களுடைய கைகளுக்குள்...'- அவள் பாதியில் நிறுத்திக் கொண்டு, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். மீண்டும் முகத்தை உயர்த்தி வைத்துக் கொண்டு அவள் கட்டளையிட்டாள்:

'நீங்கள் வரணும். உங்களுடைய முன்னிலையில் எங்களுடைய திருமணம் நடக்கணும்.' -அவளுடைய தலை உயர்ந்தது. உயர்ந்த மார்பகங்கள் பெரிதாயின. அப்படி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தால் தோன்றும்- அவள் கடலின் அலைகளுடன் கலக்கவில்லை.... அந்த அலைகளின் தலையில் வெற்றி நடனம் ஆடிக் கொண்டிருக்கிறாள் என்று.

ரவியின்... இல்லை... சிலையின் முகத்தில் பார்வைகளைப் பதிய வைத்துக் கொண்டு, அவள் ஒரு பெரிய மந்திர சக்தி படைத்தவளைப் போல மெதுவாக அருகில் சென்றாள். அவள் புன்னகைத்தாள்.

அவள் கேட்டாள்: 'வருவீர்களா?'

சிலை முணுமுணுப்பான குரலில் கேட்டது: 'எங்கே? எதற்கு?'

அவள் சொன்னாள்: 'எங்களுடைய திருமணத்திற்கு...'

சிலையின் கை அசைந்தது. அந்த கை முகத்தில் அழுத்தி தடவியது. அந்த கண்களுக்கு பிரகாசம் உண்டானது. முகத்தில் உணர்ச்சிகள் தோன்றின. சிலை பேசியது:

'சில நிமிடங்களுக்கு முன்னால்... இந்த கடலின் அலைகளுடன் கலப்பதற்கு ஆர்வத்துடன் காத்து நின்ற... கட்டுப்படுத்த முடியாத ஆவேசத்துடன் என் கைகளுக்குள் தாவிக் குதித்த...'

'முழுமையடையாத வார்த்தைகள்...'- அவள் ஆழமாக புன்னகைத்துக் கொண்டே தொடர்ந்தாள்:

'சொல்லுங்க, ரவி. சொல்லுங்க... என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்தச் சம்பவத்தை... நான் காதலில் வெற்றி பெற்ற அந்த காட்சியை...'- உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவள் தொடர்ந்து சொன்னாள்:

'அதை வர்ணிப்பதற்கு... அதற்கு கலைத்தன்மை தருவதற்கு... அதற்கு சாகாவரம் அளிப்பதற்கு... ரவி, உங்களால் மட்டுமே அதைச் செய்ய முடியும். சொல்லுங்க ரவி, பாடணும்!'

ரவியின் சரீரம் நடுங்கியது. சாளரத்தின் கம்பியிலிருந்து பிடியை எடுத்த அவன் அவளையே வெறித்து பார்த்தான்.

'நான் சொல்லணும்... அப்படித்தானே? என் இதயத்தை மிதித்து நசுக்கி நீ காதலில் வெற்றி பெற்ற அந்த காட்சிக்கு நான் கலைத் தன்மை தரணும்... பாதப் புகழணும்... அப்படித்தானே?'- அவனுடைய முகம் கோபத்துடன் காணப்பட்டது. அவனுடைய பற்கள் நெரிந்தன. கர்ஜனை செய்யும் குரலில் அவன் தொடர்ந்து சொன்னான்:

'உன்னுடைய பாம்பைப் போன்ற அழகிற்கு... உன்னுடைய குரூர தன்மைக்கு... நான் சாகா வரம் தர வேண்டும். அப்படித்தானே?'

யமுனா மென்மையாக புன்னகைத்தாள். தத்துவ சிந்தனையாளனின் சாந்த நிலையும் கம்பீரமும் அவளுடைய முகத்தில் தெரிந்தன. வார்த்தைகளை எடை போட்டு பார்ப்பதைப் போல நிறுத்தி... நிறுத்தி, அவள் சொன்னாள்:

'ரவி... உங்களுடைய தார்மீகமான கோபம்... அந்த கோபத்தில் கலந்திருக்கும் கர்ஜனை- அது என்னை சந்தோஷம் கொள்ளச் செய்கிறது. வாழ்க்கையின் விமர்சகனும், வாழ்க்கையைப் பாடும் கவிஞனுமான நீங்கள், வாழ்க்கையை தார்மீகமானது என்றும் தார்மீகமற்றது என்றும் வேறுபடுத்துகிறீர்கள். வாழ்க்கையின் தார்மீக தன்மைக்கு மிகப் பெரிய அளவில் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் நீங்கள் தருகிறீர்கள். நானோ வாழ்க்கையை விமர்சனம் செய்பவள் அல்ல. வாழ்க்கையை, அது இருக்கும் நிலையிலேயே ஏற்றுக் கொள்ளக் கூடியவள். நான் வாழ்க்கையுடன் ஒட்டிச் சேர்ந்து நின்று கொண்டிருக்கிறேன். நான் வாழ்க்கை ஆகிறேன்... ரவி, நீங்கள் வாழ்க்கையின் போக்கை மாற்ற நினைக்கிறீர்கள். நீங்கள் ஓட்டத்திற்கு எதிராக நீந்துகிறீர்கள். நான் நீரோட்டத்துடன் சேர்ந்து நீந்துகிறவள். நானே நீரோட்டமாக ஆகிறேன். ரவி, நீங்கள் வாழ்க்கையை அலசி, ஆராய்ச்சி செய்கிறீர்கள். வாழ்க்கையின் போக்கை மாற்றுகிறீர்கள். நானோ... வாழ்க்கையை நிலை நிறுத்துகிறேன்.'

ரவி அசைவே இல்லாதவனாக ஆனான்... அவன் சிலையாக ஆனான். நிறைந்த அன்புடனும் அளவற்ற இரக்கத்துடனும் யமுனா தொடர்ந்து சொன்னாள்:

'ரவி... வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும் நீங்கள் பாருங்கள்... பாடிப் பாடி அழியுங்கள்... உங்களுடைய பாடல்கள் மட்டும் சாகா வரம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கட்டும். எனக்கு பாடுவதற்கு நேரமில்லை. நான் வாழ்க்கை... நான் வாழ வேண்டும்... கவிஞன் அல்ல... கணவன்தான் எனக்கு தேவை'- மூச்சை அடைப்பதைப் போல அவள் சற்று நெளிந்தாள். மீண்டும் சுவாசத்தை இழுத்து விட்டு, அவள் தொடர்ந்து சொன்னாள்:

'என்னை கவனம் செலுத்தி பார்த்துக் கொள்வதற்கும் கொஞ்சுவதற்கும் இயலக் கூடிய ஒரு ஆள்... என் குழந்தைகளின் தந்தையாக இருப்பதற்கும் என்னுடைய குடும்பத்தைப் பத்திரமாக பார்த்துக் கொள்வதற்கும் திறமை கொண்ட ஒரு ஆள்- அப்படிப்பட்ட ஒரு ஆள்தான் என்னுடைய வாழ்க்கைத் தோழனாக வர வேண்டும்'- அவள் தன் முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்தாள். தலை முடிகளை ஒதுக்கி விட்டாள். அவள் ரவியின் கையைப் பிடித்தாள். சிலை அசையவே இல்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel