ஒரு இலையுதிர் கால மாலை வேளை - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5042
'உன்னை யார் அடித்தது?'- நான் அவளிடம் கேட்டேன். பெரிய அளவில் எதையும் மனதில் நினைக்க வேண்டுமென்றோ, அல்லது அவளிடம் ஏதாவது கூற வேண்டுமென்றோ நான் நினைக்வில்லை.
'பாஸ்கா...'- அவள் அதிர்வு கலந்த குரலில் கூறினாள்.
'அவன் யார்?'
'என் காதலன்... ரொட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவன்.'
'அவன் உன்னை அடிக்கடி அடிப்பானா?'
'எப்போதெல்லாம் மது அருந்துகிறானோ, அப்போதெல்லாம் அவன் என்னை அடிப்பான்.'
திடீரென்று என்னை நெருங்கி வந்த அவள் தன்னைப் பற்றியும் பாஸ்காவைப் பற்றியும், அவர்களுக்கிடையே நிலவிய உறவைப் பற்றியும் என்னிடம் கூற ஆரம்பித்தாள். அவள் ஒரு ஏழை இளம் பெண். ரொட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவன் சிவப்பு நிற மீசையைக் கொண்ட ஒரு இளைஞன். ஹார்மோனிக்காவை மிகவும் அருமையாக இசைப்பான். அவன் அவளுடைய வீட்டிற்கு வந்தான். அவன் மிகவும் தமாஷாக பேசக் கூடியவன் என்பதாலும், சுத்தமாக ஆடைகள் அணியக் கூடியவன் என்பதாலும், அவனை அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது அவன் பதினைந்து ரூபிள்கள் விலை மதிப்புளள ஒரு கோட்டையும் அக்கார்டியன் இசை ஒலிக்கும் ஷூக்களையும் அணிந்திருப்பான். இந்த காரணங்களுக்காக அவள் அவனுடைய காதல் வலையில் விழுந்தாள். அவன் அவளுடைய 'ஆளாக' ஆனான். அந்த அளவிற்கு தனகென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, அவன் மற்ற விருந்தாளிகள் இனிப்புகள் வாங்குவதற்காக அவளிடம் கொடுத்திருந்த பணத்தைத் தொடர்ந்து எடுக்க ஆரம்பித்தான். அந்த பணத்தைக் கொண்டு மது அருந்தி விட்டு, அவளை அவன் அடிக்க ஆரம்பித்தான். இதை விட மோசமான விஷயம் என்னவென்றால், அவளுடைய கண்களுக்கு எதிரிலேயே அவன் மற்ற இளம் பெண்களுடனும் பழகிக் கொண்டிருந்தான்.
'அந்தச் செயல்கள் என்னை காயப்படுத்தாதா? மற்றவர்களை விட நானொன்றும் மோசமல்ல. அவன் என்னை முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அயோக்கியப் பயல்! முந்தா நாள் நான் எஜமானி அம்மாவிடம் கூறி விட்டு 'வாக்கிங்' கிளம்பினேன். நான் அவனுடைய இடத்திற்குச் சென்றேன். துன்கா அவனுடன் உட்கார்ந்து, மது அருந்திக் கொண்டிருக்கிறாள். அவனும் முழு போதையில் இருந்தான். நான் அவனைப் பார்த்து சொன்னேன்- 'நீ அயோக்கியன்... நீ போக்கிரி'ன்னு. அவன் எனக்கு ஏராளமான அடிகளைக் கொடுத்தான். அவன் என்னை கால்களால் உதைத்தான். என்னுடைய தலை முடியைப் பிடித்து இழுத்தான். இது இல்லாமல், இன்னும் என்னென்னவோ... இவ்வளவும் செய்த பிறகும் கூட, நான் அவற்றைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பேன். ஆனால், அவன் என் ஆடைகளைக் கிழிக்க ஆரம்பிச்சான். இப்போ நான் என்ன செய்வது? இந்தக் கோலத்தோட நான் எஜமானி அம்மாவுக்கு முன்னால் எப்படி போய் நிற்பது? அவன் என் ஆடையில இருந்த ஒவ்வொண்ணையும் பிடிச்சு தாறுமாறாக கிழிச்சான். என் ஜாக்கெட்... அது இப்போதான் வாங்கியது. என் தலையில இருந்த கைக்குட்டையைப் பிடிச்சு இழுத்தான். கடவுளே! இப்போ என் நிலைமை என்ன?'- திடீரென்று அவள் ஒரு ஆவேசமான, உடைந்த குரலில் அழ ஆரம்பித்தாள்.
காற்று ஓசை உண்டாக்கியவாறு, பலமாக வீசிக் கொண்டிருந்தது. குளிர் அதிகமாகவும், கூர்மையாகவும் தொடங்கியது. என் பற்கள் தாளம் போட ஆரம்பித்தன. அவளும் குளிரில் பயங்கரமாக நடுங்கிக் கொண்டிருந்தாள். அவள் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்து கொண்டு அழுத்தினாள். அதனால் அந்த இருட்டில் அவளுடைய பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்களை என்னால் பார்க்க முடிந்தது.
'நீங்க ஆம்பளைங்க எல்லாரும் எந்த அளவிற்கு துஷ்டர்களாக இருக்கீங்க! நான் உங்களை மிதிக்க நினைக்கிறேன். நான் உங்களை ஊனமாகக்க விரும்புறேன். உங்களில் யாராவது ஒருத்தன் சத்தம் போட்டு வெடித்தால், நான் எந்தவித இரக்கமும் இல்லாமல் அவன் மேல காறித் துப்புவேன். கேவலமான... ஈனப் பிறவிகள்! நீங்க இனிக்க இனிக்க பேசுவீங்க. நீங்க உங்களோட வால்களை கேவலமான பிறவிகளைப் போல ஆட்டிக்கிட்டு திரியிறது! நாங்க எங்களையே ஒரு முறை முட்டாள்தனமா தந்திட்டோம்னா, அதற்குப் பிறகு எங்க கதை... அவ்வளவுதான்! எங்களை விட்டு விலகி ஓடிடுங்க. நீங்க... கீழ்த் தரமான ஊர் சுற்றிப் பசங்க!'
அவள் சத்தம் போட்டு சாபமிட்டாள். ஆனால், அவள் கருவின விஷயங்கள் பலமில்லாமல் இருந்தன. இப்படி இருக்கக் கூடிய கீழ்த் தரமான ஊர் கூற்றிகளின்' மீது அவளுக்கு பொறாமையோ, அல்லது வெறுப்போ... நான் கேட்ட வரையில், இருப்பது மாதிரி தெரியவில்லை. அவளுடைய குரலின் தொனி அதற்குக் காரணமான விஷயத்திலிருந்து விலகி காணப்பட்டது. அவள் மிகவும் அமைதியாக பேசினாள். அவளுடைய குரலில் எந்தவித மாறுபாடும் இல்லை. ஆனால், என் வாழ்க்கையில் நான் வாசித்த மிகவும் அருமையான, எனக்குப் பிடித்த புத்தகங்களையும், எதிர்மறையாக பேசக் கூடிய சொற்பொழிவாளரின் சொற்பொழிவுகளையும் விட அவளுயை குரல் என்னை மிகவும் பலமாக தாக்கியது. நீங்கள் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். மரணத்தைப் பற்றி மிகவும் கச்சிதமாகவும், அழகியல் உணர்வுடனும் விளக்கங்கள் கூறிக் கொண்டிருப்பதைவிட, மரணத்தைப் பற்றிய உண்மையான பயம்தான் அதிக இயல்புத் தன்மை கொண்டதாக இருக்கும்.
எனக்கு அருகில் இருந்த அந்த இளம் பெண்ணின் வார்த்தைகளைவிட, சிறிதும் சந்தேகமே இல்லாமல்- அங்கு நிலவிக் கொண்டிருந்த குளிரால் நான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டேன். நான் மெதுவாக முனகினேன். என் பற்களால் தாளம் போட்டேன்.
உடனடியாக என் மீது இரண்டு சிறிய குளிர்ந்த கைகள் விழுந்தன. ஒரு கை என் கழுத்தைத் தொட்டது. இன்னொரு கை என் முகத்தைத் தொட்டது. அதே நேரத்தில் - ஒரு மென்மையான, ஆர்வம் கொண்ட வாஞ்சையான குரல் ஒலித்தது:
'என்ன விஷயம்?'
இந்தக் கேள்வியை வேறு யாரோ கேட்கிறார்கள்- நிச்சயம் நடாஷா அல்ல என்று நான் நினைத்தேன். எல்லா ஆண்களும் துஷ்டர்கள் என்றும், அவர்கள் எல்லோரும் அழிந்து, இல்லாமற் போவதைப் பார்ப்பதற்கு தான் மிகவும் ஆவலுடன் இருப்பதாகவும் சிறிது நேரத்திற்கு முன்புதானே அவள் தீர்மானமான குரலில் சொன்னாள்! ஆனால், அவள் அவசர அவசரமாக பேசினாள்:
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,