நிலவைப் பார்க்கிறபோது... - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6395
"விஷயம் இதுதானா? நீ வெற்றி பெறுகிறாயா இல்லாட்டி நான் பெறுகிறேனான்னு பார்த்துடுவோம். என்ன சரியா?"
நான் சைக்கிளை உயரத் தூக்கினேன். தோளில் அதை வைத்துக் கொண்டு வேகமாக நடந்தேன். எனக்குப் பின்னால் கடலின் இரைச்சல் சத்தத்துடன், இன்னொரு சத்தமும் சேர்ந்து ஒலிக்கக் கேட்டேன். அது - சுமார் இருபது பெண்கள் ஒன்று கூடிக் குலவையிடும் சத்தம். தொடர்ந்து என்மீது மண் வந்து விழுந்தது.
நான் திரும்பியே பார்க்கவில்லை. காற்றும், மண்ணும், கடலின் இரைச்சல் சத்தமும், அந்தக் குலவை ஒலிகளும்... நான் நடந்துகொண்டே இருந்தேன். ஷூவுக்குள் மண் நுழைந்து விரல்களின் மேல்தோல் படாத பாடு பட்டுக்கொண்டிருந்தது. நான் நடந்துகொண்டே இருந்தேன். இப்படியே பல மணி நேரங்கள் என் நடை தொடர்ந்தது. மின் விளக்குகள் எரிந்துகொண்டிருந்த தனிமையான சாலையை நான் அடைந்தேன். அங்கே போய் பின்னால் திரும்பிப் பார்த்தேன்.
"இதன் அர்த்தம் என்ன?" - எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன். எனக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. சிறிது நேரம் கழித்து, நான் சைக்கிளில் ஏறிப் படு வேகமாக அதை செலுத்தினேன். வீட்டை அடைந்ததும், அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி, நீரில் மூழ்க வைத்துவிட்டு நான் ஆசை தீரக் குளித்தேன். தோய்த்து வைத்துப்பட்டிருந்த வேறு ஆடைகளை அணிந்தேன். அப்போதும் என் மனதில் எழுந்த கேள்வி இதுதான் - இதன் அர்த்தம் என்ன?
காலம் கடந்தோடியது. நாடு விடுதலை பெற்றது. எவ்வளவோ மாற்றங்கள் இங்கு வந்தன. கடலுக்கு எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அங்கு இருந்த கறுத்த பாறைகளுக்கும் எந்தவித மாற்றமும் உண்டாகவில்லை. எப்போதாவது அந்த சம்பவத்தை நான் நினைத்துப் பார்ப்பேன். பெரும்பாலும் - நிலவைப் பார்க்கிறபோது.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,